ஈஷாவில் நடந்தவை…
ஈஷாவில் கொண்டாடப்பட்ட "உலக பூமி தினம்", ஈஷா பசுமைக் கரங்களின் நடவடிக்கைகள் என விரிகிறது இந்த வார ஈஷாவில் நடந்தவை...
ஈஷாவில் கொண்டாடப்பட்ட "உலக பூமி தினம்", ஈஷா பசுமைக் கரங்களின் நடவடிக்கைகள் என விரிகிறது இந்த வார ஈஷாவில் நடந்தவை...
உலக பூமி தினமான ஏப்ரல் 22ஆம் தேதியன்று ஈஷா யோகா மையத்தில் மண்மனம் கமழும் கிராமத்து விளையாட்டுப் போட்டிகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடந்தேறின. மாலை 4.30 முதல் 5.45 மணி வரை நடைபெற்ற விளையாட்டுப் போட்டியில், ஈஷா தன்னார்வத் தொண்டர்கள் மற்றும் ஆசிரமவாசிகள் திரளாகப் பங்குபெற்றனர்.
ஆத்து மண், களி மண், கிணற்று மண் என மண்ணின் பெயரில் போட்டியாளர்கள் பலக் குழுக்களாகப் பிரிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. சாணத்தை எருவாகச் செய்யும் வரட்டி தட்டும் போட்டி, வைக்கோல் சுமந்து செல்லுதல், ஒற்றைப் பாக்குமரப் பாலத்தில் நடந்து ஓடையைக் கடத்தல் என இயற்கையோடும் பூமியோடும் தொடர்புடைய விளையாட்டுகள் மக்களுக்கு இயற்கையின் மகத்துவத்தை உணர்த்துவதாய் அமைந்தன. விளையாட்டு போட்டிகளில் பெரியவர்கள் மட்டுமல்லாது சிறுவர் சிறுமியரும் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
Subscribe
“EARTH DAY” என்ற சொற்களை இயற்கை பொருட்களால் அமைத்ததும், பனை மரத்திலிருந்து கிடைக்கும் நுங்கினால் வண்டி செய்து சிறுவர்களால் கிராமங்களில் விளையாடப்படும் நுங்கு வண்டியை, நுங்கு காய்களையும் குச்சிகளையும் இணைத்து பங்கேற்பாளர்கள் உருவாக்கிய காட்சி நிகழ்ச்சிக்கு சுவாரஸ்யம் சேர்த்தது.
ஈஷா யோக மையத்தில் அமைந்துள்ள மரங்களின் பெயர்கள் மூலிகைச் செடிகளின் பெயர்களை மையமாக வைத்து நடத்தப்பட்ட வினாடி வினா நிகழ்ச்சி சுவாரஸ்யமாக அமைந்ததோடு செடிகொடிகள் மற்றும் மரங்களைப் பற்றிய விழிப்புணர்வையும் ஏற்படுத்தியது. இரவு 8 மணியிருந்து 9.45 வரை நடைபெற்ற நிகழ்ச்சியில், இயற்கையையும் சுற்றுச் சூழலையும் பற்றி சத்குரு ஆற்றிய உரையின் வீடியோ ஒளிபரப்பப்பட்டது. இயற்கை வேளாண்மை, தண்ணீர், சூரிய ஒளியை மையமாக வைத்து சிறுவர்களால் அரங்கேற்றப்பட்ட குறுநாடகம் நிகழ்ச்சிக்கு முத்தாய்ப்பாய் அமைந்தது.
தொடக்கத்தில் மிகச் சிறிய அளவில் ஆரம்பிக்கப்பட்ட செங்கல்பட்டு ஈஷா பசுமைக் கரங்கள் நர்சரி இப்போது பெருமளவில் வளர்ந்துள்ளது. இதுவரையில் 40.000 மரக்கன்றுகள் இங்கிருந்து விநியோகிக்கப்பட்டுள்ளன. கடந்த ஏப்ரல் 20ம் தேதியன்று புதிதாக "சத்குரு சந்நிதி" இங்கே பிரதிஷ்டை செய்யப்பட்டது. இதில் 200 தன்னார்வத் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
தஞ்சை பேராவூரணியில் 9ம் வகுப்பு படித்து வரும் மாணவி, தியானா. அவரது தந்தை திரு.பாலசுப்ரமணியம் அவர்களால் அவர்கள் வீட்டில் ஈஷா பசுமைக் கரங்கள் நர்சரி ஆரம்பிக்கப்பட்டது. அவரால் தொடர்ந்து அதனைக் கவனிக்க முடியாமல் போனதால், அதை மூடிவிடலாம் என்ற முடிவிற்கு வந்தபோது, தியானா அதைத் தடுத்து, தானே இனிமேல் நர்சரியை பராமரித்து கொள்வதாகவும் இனிமேல் இதற்காக அவர் வருத்தப்பட வேண்டாம் என்றும் உறுதியளித்தார். அந்த நாளிலிருந்து தினமும் மரக்கன்றுகளுக்கு நீர் ஊற்றி பராமரித்து வருவது மட்டுமில்லாமல், ஒவ்வொரு மரக்கன்றின் வளர்ச்சியைப் பற்றியும் பதிவு வைத்து வருகிறார். இங்கே மரக்கன்றுகள் வாங்க வருபவர்கள், மரக்கன்றுகளின் மேல் இவர் கொண்டிருக்கும் அன்பையும், ஈடுபாட்டையும் கண்டு வியக்கின்றனர்.