ஈஷாவில் நடந்தவை...
மலைச்சாரலில் மையம் கொண்டிருக்கும் மையத்தில் மட்டுமல்லாமல், வெளியே நிரம்பிக்கிடக்கும் ஈஷாவிலும், நடந்த சில நெகிழ்வான நிகழ்வுகள், இங்கே உங்கள் பார்வைக்காக...
இயற்கை விழிப்புணர்வு முகாம்
ஆண்டுதோறும் கோடையில் நடைபெறும் குழந்தைகளுக்கான இயற்கை விழிப்புணர்வு முகாம், இந்த ஆண்டு மே 13-17 மற்றும் மே 20-24 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இதில் 180 குழந்தைகள் கலந்துகொண்டு பறவைகள், விலங்குகள், இயற்கைப் பற்றின விழிப்புணர்வு பெற்றுச் சென்றனர்.
விவசாயிகள் விழிப்புணர்வு முகாம்
மே 16ம் தேதியன்று, சேலம் அரங்கனூர் கிராமத்தில் நடந்த விவசாயிகளுக்கான விழிப்புணர்வு முகாமில் கலந்துகொண்ட 200 விவசாயிகளுக்கு, ஈஷா பசுமை கரங்கள் சார்பில், மரம் நடுவதன் முக்கியத்துவத்தைப் பற்றின விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து, 1000 மரக்கன்றுகளும் நடப்பட்டது.
Subscribe
ரத ஊர்வலம்
விவேகானந்தரின் 150வது பிறந்தநாளை கொண்டாடும் விதமாக, ராமகிருஷ்ண மடம் சார்பில், விவேகானந்தர் உருவம் தாங்கிய ரதம் பல ஊர்களுக்கு சென்றுவிட்டு, மே 23ம் தேதி ஈஷா யோகா மையம் வந்தது. வலம் வந்த மகானை மையத்தினர் இசைக் கரங்களுடன் வரவேற்றனர்.
சவுண்ட்ஸ் ஆப் ஈஷாவின் புதிய இணையதளம்
ஈஷாவின் இசை விரும்பிகளுக்கு ஒரு இனிய செய்தி. ஈஷாவின் அனைத்து பாடல்களைக் கேட்கவும், டவுன்லோட் செய்துகொள்ளவும், புதிதாக ஒரு இணையதளத்தை சவுண்ட்ஸ் ஆப் ஈஷா அறிமுகம் செய்துள்ளது. நீங்கள் விரும்பும் பாடலைக் கேட்க www.soundsofisha.org 'ஐ க்ளிக் செய்யுங்கள்.
9வது ஈஷா வித்யா
இன்ஃபோஸிஸ் நிறுவனத்தின் உபயத்தில், ஈஷா வித்யாவின் 9வது பள்ளி, தர்மபுரி - சாமிசெட்டிப்பட்டி கிராமத்தில் தொடங்கப்பட்டுள்ளது. முதல் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை நடைபெறும் நிலையில், ஏற்கனவே 420 குழந்தைகள் ஆவலோடு பள்ளியில் சேர்ந்துள்ளனர்.
வெள்ளியங்கிரி பக்தர்களுக்கு நீர்மோர்
தென்கையிலாயமாம் வெள்ளியங்கிரி மலைக்கு, ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் சித்திரை மாதம் மலையேறுவது வழக்கம். அப்படி ஏறுவோரின் தாகத்தை தணிக்க, கடந்த ஒரு மாதகாலமாக இயங்கிக் கொண்டிருக்கிறது ஈஷா - தென்கையிலாய பக்திப் பேரவையின் நீர்மோர் பந்தல்.
ஈஷாவில் புத்த பூர்ணிமா
புத்தர் ஞானமடைந்த நாளாகிய புத்த பௌர்ணமி, ஈஷா யோகா மையத்தில் மே 25ம் தேதி கொண்டாடப்பட்டது. மந்திர உச்சாடணையில் தொடங்கி, இசை நிகழ்ச்சி மற்றும் குரு பூஜையுடன் நிறைவுபெற்ற இந்த மாலைப் பொழுதில் 1000 அன்பர்கள் கலந்துகொண்டு அருள் பெற்றனர்.