ஈஷாவில் நடந்தவை...
ஈஷா ஹிந்தி வகுப்பு, ஹோம் ஸ்கூல் குழந்தைகளின் சுற்றுலா, பசுமையை நில்லாமல் பெருக்கிக் கொண்டிருக்கும் பசுமைக் கரங்கள் திட்டம் என விரிகிறது இந்த வார ஈஷாவில் நடந்தவை...
ஈஷா ஹோம் ஸ்கூல் சுற்றுலா
ஈஷா ஹோம் ஸ்கூலின் ஜூனியர் பள்ளி குழந்தைகள் ஆகஸ்ட் 2ம் தேதி கேரள மாநிலம் பாலக்காட்டில் அமைந்துள்ள மழம்புழா அணைக்கு சுற்றுலா மேற்கொண்டனர். அங்கிருந்த பூங்கா, ரோப் கார் போன்றவைகளில் தங்கள் நேரத்தை செலவழித்ததோடு மட்டுமல்லாமல், பாலக்காடு கோட்டையைப் பற்றின தகவல்களையும் கற்றறிந்து கொண்டனர்.
Subscribe
ஈஷா யோகா ஹிந்தி வகுப்பு
ஈஷா யோகா வகுப்பு கடந்த சில வருடங்களாக ஹிந்தியிலும் நடந்து வருகிறது. வட மாநிலங்களில் இது பரவலான வரவேற்பைப் பெற்றிருந்தாலும், ஜூலை 17 - 23ம் தேதி வரை குஜராத்தின் அஹமதாபாத் நகரில் நடந்த வகுப்பில் இதுவரை நடந்த ஹிந்தி வகுப்புகளிலேயே அதிக எண்ணிக்கையில் 134 பேர் பங்கேற்றனர். நம் தன்னார்வத் தொண்டர்களின் பெரும் முயற்சியாலும் அர்ப்பணிப்பாலும் இந்த வகுப்பில் இத்தனைப் பேர் கலந்துகொண்டு ஷாம்பவி தீட்சை பெற்றனர்.
பசுமையை பெருக்கும் பசுமைக் கரங்கள்
ஆகஸ்ட் 3ம் தேதி, சென்னை திருநின்றவூரில் அமைந்துள்ள திருமதி கிருஷ்ணா மூல்சந்த் மஹேஷ்வரி விவேகானந்தா வித்யாலயாவின் பள்ளி நிகழ்ச்சியில், ஈஷா பசுமைக் கரங்கள் சார்பாக மரம் நடுவதைப் பற்றின விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு, 100 மரக்கன்றுகள் விநியோகிக்கப்பட்டது. பள்ளி மாணவர்கள் அனைவரும் மரக்கன்றுகளை பேணி வளர்ப்போம் என்று உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
சென்னையில் உள்ள கார்பரேட் நிறுவனங்கள் சில, மரக்கன்றுகளுக்காக நன்கொடை வழங்குவதோடு மட்டுமல்லாமல், தங்களின் நிறுவன ஊழியர்களையும் இது போன்ற சமூகநல திட்டங்களில் ஈடுபடுத்த, ISR (Individual Social Responsibility) என்ற நடைமுறையை ஆரம்பித்துள்ளனர். இந்தத் திட்டத்தில், சென்னையின் ஹனிவெல் நிறுவனத்தின் ஊழியர்கள், ஈஷா பசுமைக் கரங்கள் திட்டத்துடன் இணைந்து அருகிலுள்ள பள்ளிகளுக்குச் சென்று, மாணவர்களுக்கு மரங்களின் முக்கியத்துவத்தை எடுத்துரைப்பதோடு மட்டுமல்லாமல், பள்ளிகளில் மரக்கன்றுகளும் நடுகின்றனர். இதன்படி, சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள ஜெயகோபால் கரோடியா அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு, இவர்கள் 500 மரக்கன்றுகளை கடந்த வாரம் வழங்கினர். பள்ளி வளாகத்திலும் மரக்கன்றுகள் நடப்பட்டன.
இலவச கண் பரிசோதனை முகாம்
ஆகஸ்ட் 8ம் தேதி, ஞாயிறு ஈஷா கிராம மருத்துவமனை, லோட்டஸ் கண் மருத்துவமனை மற்றும் தொண்டாமுத்தூர் ரோட்டரி சங்கம் இணைந்து இலவச கண் பரிசோதனை முகாம் ஒன்றை, தொண்டாமுத்தூர் அருகிலுள்ள தேவராயபுரம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் நடத்தினர். நிகழ்ச்சியை ஊராட்சி மன்ற தலைவர் திருமதி.ராதாமணி துவக்கி வைத்தார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை "ALL IS WELL" ரத்ததானம் மற்றும் சமூகசேவை இயக்கம் செய்திருந்தது. 101 பேருக்கு கண் பரிசோதனை செய்யப்பட்டதில் 21 பேருக்கு கண் நோய் இருப்பது கண்டறியப்பட்டது.