பல நிலைகளில் பல இடங்களில் கால்பதித்துக் கொண்டிருக்கும் ஈஷாவில் நடந்தவற்றை இங்கே உங்களுக்காக பதிகிறோம்...

கோபிசெட்டிபாளையத்தில் லிங்கபைரவி திருப்பணி தொடக்க விழா!

ஈரோடு - கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள 'அக்கரை கொடிவேரி'யில் லிங்கபைரவி கோவில் திருப்பணி தொடக்க விழா ஜூன் 26ம் தேதி நடைபெற்றது. காலை 6 மணிக்கு அக்கரைக் கொடிவேரியில் உள்ள கோவில் வளாகத்தில் குரு பூஜை நடைபெற்றது. தொடர்ந்து மாலை 5 மணிக்கு கோபி சீதா கல்யாண மண்டபத்தில் தேவி உற்சவம் தொடங்கியது. அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் லிங்கபைரவி வைக்கப்பட்டு, பக்தர்கள் மாவிளக்கு எடுத்து ஊர்வலமாக வந்தனர். மாலையில் தேவி ஆரத்தி நடைபெற்றது. பின்னர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்களுக்கு தேவி பிரசாதம் வழங்கப்பட்டது.

சத்குருவுடன் டாக்டர். தேவி பிரசாத் ஷெட்டி


ஜூன் 28ம் தேதி பெங்களூரூ செயின்ட் ஜோசப் கல்லூரி வளாகத்தில், சத்குருவுடன் டாக்டர்.தேவி பிரசாத் ஷெட்டி அவர்கள் உரையாடலில் கலந்துகொண்டார். "In Coversation with the Mystic" என்ற தலைப்பில் நடந்த இந்நிகழ்ச்சியில், உடல் நலனின் இயக்கமுறைகள் பற்றி டாக்டர்.தேவி ஷெட்டி சத்குருவுடன் விவாதித்தார். டாக்டர்.தேவி ஷெட்டி அவர்கள், பெங்களூரூவின் புகழ்பெற்ற மருத்துவமனையான நாராயண ஹிருதயாலயாவின் தலைவரும், இருதய அறுவை சிகிச்சை நிபுணரும் ஆவார். மருத்துவத் துறையில் இவர் ஆற்றிய பணிக்காக இந்திய அரசின் பதம்பூஷன் விருது பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பதக்கம் வென்ற 'ஈஷா தற்காப்புக் கலைக்குழு!'

KarateChampionship-1

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

KarateChampionship-2
ஜூன் 7, 8ம் தேதிகளில் நாக்பூர் மற்றும் மும்பையில் நடைபெற்ற "தேசிய கராத்தே சேம்பியன்ஷிப் 2014" போட்டியில் ஈஷா தற்காப்புக் கலைக்குழுவினர் கலந்துகொண்டு வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளனர். தேசிய ஷொட்டகன் கராத்தே அசோசியேஷன் (Shotakan Karate Association, India) மூலம் நடைபெற்ற இந்த போட்டியில், தமிழ் நாட்டின் சார்பில் கோவையை அடுத்துள்ள தொண்டாமுத்தூர் ஒன்றியத்திலுள்ள நரசிபுரத்தைச் சேர்ந்த திரு.கார்த்திக் 57.1 kg to 59kg எடை (சீனியர் ஆண்கள்) பிரிவில் கலந்துகொண்டு வெண்கலப்பதக்கம் வென்றார். அதே பகுதியிலுள்ள தேவராயபுரத்தைச் சேர்ந்த திரு.ராஜன் 61.1 kg to 70 kg எடை (சீனியர் ஆண்கள்) பிரிவில் வெண்கலப்பதக்கம் வென்றார்.

இவர்கள் இருவரும் ஈஷா யோகா மையத்தின் சார்பில் தற்காப்பு கலைப் பயிற்சி பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. யோகா மற்றும் ஆன்மீகம் சார்ந்த பணிகள் மட்டுமல்லாது, பாரம்பரியம் கலை சார்ந்த அம்சங்களை மீட்டெடுக்கும் நோக்கில் பல சமூக நலத் திட்டங்களை செயல்படுத்தி வரும் ஈஷா, வெள்ளியங்கிரி மலையோர கிராமங்களில் மகத்தான பல மாற்றங்களைக் கொண்டுவந்துள்ளது.

மலை மேல் உருவாகிய பசுமை பரப்பு !

ProjectGreenHandsInKanchipuram-1

ProjectGreenHandsInKanchipuram-2

காஞ்சிபுரம் ஸ்ரீரங்கநாதன் கோவில் செயளாளர் திரு.வெற்றிவேல். கோவில் அமைந்திருக்கும் மலையை எப்படி பசுமையாக்கினார் என்பதை விவரிக்கிறார். "நான் 2011ல் ஈஷா வகுப்பு செய்தபின், ஈஷா பசுமைக் கரங்களுக்கு அறிமுகமானேன். காஞ்சி ரங்கநாதர் கோவில் அமைந்திருக்கும் மலைக்குன்றானது, மரங்கள் ஏதுமின்றி வறண்ட காடாக இருந்தது. இதை வளப்படுத்த வேண்டும் என்பதுதான் என்னுடைய வெகு நாளைய கனவு. இதற்கு கைகொடுத்தது ஈஷா பசுமைக் கரங்கள். அவர்களுடன் நாங்கள் 15 பேரும், அருகில் உள்ள பள்ளி மாணவர்களும், அரிமா சங்கத்தின் உதவியுடனும் 1120 குழிகள் தோண்டி மரக்கன்றுகள் நட்டோம். இதை 2 வருடங்களூக்கு நீர் ஊற்றி பாதுகாப்பதுதான் மிக முக்கியம், எனவே கோவில் நிர்வாகத்தின் துணையுடன் தண்ணீரை கோவில் வளாகத்திலிருந்து ஏற்படுத்தி மரங்களுக்கு நீர் பாய்ச்சப்பட்டது. இப்படி செய்ததால் இப்போது 94% மரங்கள் நன்றாக வளர்ந்து நிற்கின்றன. தினமும் நான் காலையில் மலையேறி மரங்களின் வளர்ச்சியை கண்காணிக்கிறேன். எனது கனவை மெய்ப்படச் செய்த ஈஷாவிற்கு எனது நன்றிகள்.

ஈஷாவில் முதல் "இளம் தலைவர்கள்" நிகழ்ச்சி

"ஈஷா லீடர்ஷிப் அகாடெமி" சார்பாக கடந்த ஜூன் 24ம் தேதியன்று இளம் தலைவர்களுக்கான பயிற்சி முகாம் ஈஷாயோகா மையத்தில் நடத்தப்பட்டது. நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வந்திருந்த இளம் தொழில்முனைவோர் 30 பேர் இதில் கலந்துகொண்டனர். காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், தொழில்துறையில் ஏற்படும் சவால்கள், அதை எதிர்கொள்ளும் உக்திகள் ஆகியைவகள் விரிவாக விவாதிக்கப்பட்டன. அடுத்த 6 மாதங்களுக்கு இவைகளை அவர்கள் தினசரி வாழ்வில் பயன்படுத்தும் கருவிகளும் அளிக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில், அனைவருக்கும் ஈஷாவின் "உபயோகா" பயிற்சி கற்றுக்கொடுக்கப்பட்டது.

ஈஷா வித்யாவில் மரம் நட்ட பொறியாளர்கள்!

கோவை சாந்தி கியர்ஸ் நிறுவனத்தில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள பொறியாளர்கள், கோவை ஈஷா வித்யா பள்ளியில் மரம் நடுவதற்காக ஜூன் 18ம் தேதியன்று ஒரு விஸிட் செய்தனர். பள்ளி வளாகத்தில் 20 மரக்கன்றுகளை இவர்கள் நட்டனர். இந்நிகழ்ச்சியை, "Project Kalpavriksh Society" என்ற அமைப்பு ஏற்பாடு செய்திருந்தது.

சென்னையில் ஹிந்து ஆன்மீக கண்காட்சி

IshaInChennaiSpiritualFair

IshaInChennaiSpiritualFair1

சென்னையில் 6வது வருடமாக அகில உலக ஹிந்து ஆன்மீக மற்றும் சேவைக் கண்காட்சி (Hindu Spiritual and Service Fare) ஜூலை 8ம் தேதியிலிருந்து நடந்து வருகிறது. திருவான்மியூர் ராமச்சந்திரா மருத்துவ கல்லூரி வளாகத்தில் நடந்துவரும் இக்கண்காட்சியில் நாட்டின் பல்வேறு ஆன்மீக அமைப்புகள் கலந்துகொண்டுள்ளன.

"வனம் மற்றும் வனவிலங்குகளைப் பாதுகாத்தல், சுற்றுச்சூழலை பராமரித்தல், நாட்டுப்பற்றை வளர்த்தல், ஜீவராசிகளைப் பேணுதல், பெண்மையைப் போற்றுதல், பெற்றோர் ஆசிரியர் மற்றும் பெரியோர்களை வணங்குதல்" போன்ற 6 பண்புகளை மையமகக் கொண்டு நடந்து வருகிறது இக்கண்காட்சி. இதன் ஒரு அம்சமாக, விவேகானந்தர் ரதமானது ஜூன் 30 - ஜூலை 9 வரை, சென்னையில் உள்ள 1000 பள்ளிகளுக்கு சென்று, இந்தப் பண்புகளை எடுத்துரைத்து கண்காட்சிக்கு வரவேற்றனர். 5555 மாணவர்கள் ஜூலை 5ம் தேதி விவேகானந்தர் வேடம் அணிந்து கடற்கரையில் பேரணி மேற்கொண்டனர். 1008 தமிழ் பண்டிதர்களுக்கு மாணவர்கள் குரு வணக்கம் செலுத்தினர்.

இந்தக் கண்காட்சியில், ஈஷாவின் செயல்பாடுகளான ஈஷா வித்யா, ஈஷா ஆரோக்யா, பசுமைக்கரங்கள் போன்றவைகளைப் பற்றி காட்சியப்படுத்தப்பட்டுள்ளது. ஈஷா மையத்தில் அமைந்துள்ள லிங்கபைரவியைப் போல தேவியை வடிவமைத்து வைக்கப்பட்டுள்ளது. ஈஷா சமஸ்கிருதி மாணவர்களின் இசை நிகழ்ச்சியும் அங்கே நடந்தது குறிப்பிடத்தக்கது. ஜூலை 14ம் தேதி வரை இந்தக் கண்காட்சி அங்கே நடைபெறும்.

ஈஷா யோகா மையத்தில் இலவச களரி மற்றும் பரதநாட்டியப் பயிற்சி!

கோவை ஈஷா யோகா மையத்தைச் சுற்றியுள்ள கிராம மக்கள் பலன் பெறும் வகையில் "ஈஷா கிராம புத்துணர்வு இயக்கம்" சார்பாக இலவச களரி மற்றும் பரத நாட்டியப் பயிற்சி அளிக்கப்படவிருக்கிறது. கடந்த ஞாயிற்று கிழமை (ஜூலை 6) முதல் துவங்கிய இந்த பயிற்சி வகுப்புகள் ஒவ்வொரு ஞாயிறு அன்றும் (வாரம் ஒருமுறை) நிகழவிருக்கிறது. களரி பயிற்சிக்கு 10 முதல் 25 வயதுக்கு உட்பட்டவர்களும், பரத நாட்டிய பயிற்சிக்கு 10 முதல் 20 வயது வரை உள்ளவர்களும் தகுதியுடைவர்கள். பரதநாட்டியப் பயிற்சிக்கு 113 மாணவிகளும், களரி பயிற்சிக்கு 118 மாணவர்களும் முறையே தீட்சை பெற்றனர். இவர்கள் அனைவரும், ஈஷா மையத்திச் சுற்றியுள்ள நரசிபுரம், தொண்டாமுத்தூர், செம்மேடு, ஆலந்துறை மற்றும் பல கிராமத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.