ஈஷாவில் நடந்தவை...
சீனர்களுடன் ஒரு சுமுக உறவு, ஆடிப் பெருக்கில் ஆற்றில் கலந்த உள்ளங்கள், மாணவர்களுக்கு அமைதியைத் தரும் தியானம் என சிறப்பு செய்திகளுடன் விரிகிறது இந்த வார ஈஷாவில் நிகழ்ந்தவை. அனைத்தும் நாம் மகிழ்ந்தவை...
ஈஷாவிற்குள் ஊடுருவிய சீனர்கள்
குரு பௌர்ணமி (ஜூலை 22) அன்று ஆரம்பித்த பிரத்தியேகமான 3 நாள் ஈஷா வகுப்பில் சீனாவிலிருந்து வந்திருந்த 26 பேர் கலந்துகொண்டனர். இது ஆங்கில வகுப்பாக இருப்பினும், தங்களுடன் ஒரு மொழிபெயர்ப்பாளரையும் அழைத்துக்கொண்டு வந்து வகுப்பில் ஈடுபட்டனர். வகுப்பின் அளப்பரிய அனுபவம் ஒருபுறம் இருக்க, அவர்கள் மையத்தில் இருந்த நாட்களை முழுமையாக பயன்படுத்திக்கொண்டனர்.
ஈஷா வித்யா பள்ளிக்கு ஒருநாள் விஸிட், மலையேற்றம், பௌர்ணமி பூஜை போன்றவற்றிலும் ஈடுபட்டனர். பாம்பென்றால், படையும் நடுங்கும், அதில் சீனப் படை ஒன்றும் விதிவிலக்கல்ல. அப்படி நடுங்கிய படையை, நண்பர்களாக்கிவிட்டனர் நம் ஈஷா சர்பென்ட் அமைப்பினர். தேசங்கள், மொழிகள் தாண்டி பரவிவரும் ஈஷாவிற்கு இது ஒரு மைல் கல், ஏன் சீன ஈஷா குடும்பத்திற்கும்தான்!
Subscribe
பொறியியல் கல்லூரியில் ஈஷா கிரியா
கோவை நரசிபுரத்தில் உள்ள ரங்கநாதன் பொறியியல் கல்லூரியைச் சேர்ந்த முதல் மற்றும் இரண்டாம் ஆண்டு மாணவ மாணவியருக்கு ஈஷா கிரியா தியானம் இலவசமாக கற்றுக் கொடுக்கப்பட்டது. ஆகஸ்ட் 2ம் தேதி நடந்த இந்த வகுப்பில், 160 மாணவர்கள் கலந்துகொண்டனர்.
ஈஷா வித்யாவில் ஆடிப் பெருக்கு
ஆடிமாத மழை நம் பூமியை நனைத்ததோடு நம்மையும் நனைத்துச் சென்றுள்ளது. அந்த மகிழ்ச்சியில் உள்ளம் குளிர்ந்த கோவை ஈஷா வித்யா பள்ளி மாணவர்கள், ஆடிப் பெருக்கை முன்னிட்டு ஆடல் பாடலுடன் அருகில் உள்ள ஆற்றிற்கு சென்று மலர்கள் தூவி கொண்டாடினர்.