இசையே எல்லாம்!
16ம் நூற்றாண்டின் தான்சேன் பரம்பரையைச் சேர்ந்தவர், இவர் குடும்பம் கடந்த 400 வருடங்களாக இந்த இசைப் பாரம்பரியத்தில் மூழ்கியுள்ளது. நேற்றைய யக்ஷா கலைஞர் திரு. நிஷாத் கான் அவர்களின் இசை படைப்பிலிருந்து சில துளிகள்...
16 ஆம் நூற்றாண்டின் வரலாற்றுப் புகழ் பெற்ற இசை மேதை தான்சேனை தொடர்ந்து ஒவ்வொரு பரம்பரையிலும் இசைக்கு தன்னை அர்ப்பணித்த ஒரு இசைக் குடும்பத்திலிருந்து வரும் நிஷாத் கான் அவர்களின் இசை அனுபவத்தை கேட்போம்.
“பல வருடங்களாக நான் சிதார் வாசித்துக் கொண்டிருக்கிறேன். ஆனால் இன்று ஈஷா யோகா மையத்தில் நான் வாசிப்பதை மிகவும் பெருமையாக எண்ணுகிறேன்,” என்று ஈஷா ஹோம் ஸ்கூல் மாணவர்களுக்காக அவர் வாசித்த அனுபவத்தை கூறும் இவர் பின்னர் தியானலிங்கத்தில் நிகழும் நாத ஆராதனாவில் சிதார் வாசித்தார்.
Subscribe
“இங்கே வாசிக்கும் போது இசை மட்டும்தான் இருந்தது. இசையே எல்லாமுமாக இருந்தது. இசை என்னை முழுமையாக ஆக்ரமித்து என்னை கட்டுப்படுத்தும் தெய்வீக அனுபவமாக இருந்தது,” என்று கூறி தியானலிங்கத்தின் அதிர்வுகளில் திளைத்தவராய் மாலை யக்ஷாவுக்கு தயாரானார்.
நூற்றுக்கணக்கான விளக்குகள் பின்னணியில்! லிங்கபைரவியின் சக்திவட்டத்தில் அரங்கம் கண்ணெதிரில்!
நிஷாத் கான் அவர்களது சிதாரிலிருந்து மெல்லிய இசை கேட்பவர் செவிகளை மென்மையாக வருட சிறிது நேரத்தில் இசையின் அதிர்வுகள் வேகத்தின் உச்சத்தை எட்டிட அனைவரும் இசையுடன் கலந்தனர்.
மேடையில் இசையை வாசித்துக் கொண்டிருந்தவர் இசையாய் மாறிப் போன காட்சியில் அரங்கம் கட்டுண்டு இருந்த வேளையில் தீடீரென அவரது சிதாரின் நாண் அறுந்து விழுந்திட, எதிர்பாராத இந்த தருணத்தில் அனைவரும் மௌனமாகிட... அந்த நரம்பை மீண்டும் கோர்த்து அவர் தனது இசையை தொடர்ந்த விதத்தில் தொடப்பட்ட பார்வையாளர்கள் மிகுந்த கரவொலியுடன் அவர்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
தொடர்ந்து 6வது நாளாய் இன்று மற்றுமொரு இசை சங்கமம் நடைபெற உள்ளது. இன்று நமக்கு இசை விருந்து அளிப்பவர் சுப்ரா குஹா, ஹிந்துஸ்தானி வாய்ப்பாட்டு இசைக் கலைஞர். இசைந்திருப்போம்!
யக்ஷா நிகழ்ச்சிகளை நேரடி ஒளிப்பரப்பின் மூலம் உங்கள் கணினித் திரையில் கண்டு களிக்க கீழே உள்ள லிங்க்கில் பதிவு செய்து கொள்ளவும்.