"ஒவ்வொரு இலையும் ஒரு கதை சொல்கிறது; அது உதிரும்போது கதை முடிகிறது" என்ற கவிதை ஏதோ ஒரு சோகத்தை நமக்குள் தெளித்தாலும், உண்மையில், இலைகளுக்குள் எந்த சோகமும் இருப்பதில்லை. இலைகள் உதிர்ந்தாலும் அதனை நாம் உரமாக பயன்படுத்த முடியும். உதிர்ந்த சருகுகளால் உருவாக்கப்படும் மூடாக்கு முறையைப் பற்றி இங்கே சொல்கிறோம் கேளுங்கள்!

இலை என்று சொன்னதும், காலை நேரப் பனித்துளியுடன் எடுக்கப்பட்ட ஒரு புகைப்படமோ, தலைவாழை இலைச் சாப்பாடோ பலரின் கண்களுக்கு வந்துசெல்லலாம். ஆனால் இயற்கையின் அதிசயப் படைப்புகளில் ஒன்றுதான் இந்த இலைகள். ஒவ்வொரு மரமும் செடியும் தங்களுக்கென தனிப்பட்ட வடிவில், தன்மையில் இலைகளைக் கொண்டுள்ளன.

பெரும்பாலும் தாவரங்கள் ஒளிச்சேர்க்கை செய்வதற்கான தளமாக உள்ள இந்த இலைகள், குறிப்பிட்ட சிலநாட்களில் பழுத்து, பின் உதிர்வது வழக்கம். உதிர்ந்த இலைகள் சருகாக மாறி மண்ணில் மட்கும். வெறுமனே மண்ணில் விழுந்து மட்கிப் போகும் இலைகளை உரமாக்குவது எப்படி?!
3


மூடாக்கு போடுவது எப்படி?!

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

10 அடிக்கு 1 மரம் என்ற விகிதத்தில் டிம்பர் வேல்யூ உள்ள மரங்களை நட்டு வேளாண்காடுகளை உருவாக்கியுள்ளீர்கள் என்றாலும் சரி, அல்லது வீட்டின் கொல்லைப் புறத்திலோ அல்லது முன்புறத்திலோ ஓரிரு மரங்களை நட்டு வளர்க்கிறீர்கள் என்றாலும் சரி, இந்த மூடாக்கு முறையானது மிகவும் நல்ல பலனைத் தரும்.

மரத்தைச் சுற்றி தண்ணீர் தேங்குவதற்காக வட்டப் பாத்தி ஏற்கனவே நீங்கள் அமைத்திருப்பீர்கள். அதில் ஒரு ஜான் உயரத்திற்கு மரத்தைச் சுற்றி விழுந்து கிடக்கும் காய்ந்த இலைதழைகள் சருகுகளை நிரப்புவதுதான் மூடாக்கு. இதில் வேறு என்னென்ன நுணுக்கங்கள் உள்ளன என்று நீங்கள் கேட்டால், வேறு ஒன்றும் இல்லை என்பதே பதில். ஏனென்றால் வீணாக மண்ணோடு மண்ணாக மட்கும் இலைச் சருகுகளை மரத்தைச் சுற்றி நீங்கள் நிரப்பப் போகிறீர்கள், அவ்வளவுதான். ஆனால், இலைகளைப் போட்டு அதன் மேல் மண் தூவுதல் கூடாது.
1


மூடாக்கு போடுவதின் பயன்கள்

இது மரத்திற்கு நல்ல உரமாக இருப்பதோடு மரத்தின் வேர்ப்பகுதியில் 4 டிகிரி அளவிற்கு வெப்பத்தை குறைக்கிறது. வெப்பத்தையும் காற்றையும் மரத்தின் தரைப்பகுதியில் தடுப்பதால், மரத்திற்கு பாய்ச்சப்படும் நீர் ஆவியாகாமல் காக்கிறது. இந்த மூடாக்கு, மண்புழுவிற்கு நல்ல வீடாக அமைவதால் மண்வளமும் மேம்படுகிறது.

ஈஷா பசுமைக் கரங்கள்

தமிழகத்தின் பசுமைப் பரப்பை அதிகரிப்பதற்காக, சத்குரு அவர்களின் வழிகாட்டுதலில் ஈஷா அறக்கட்டளையானது, ஈஷா பசுமைக் கரங்கள் என்ற திட்டத்தின் மூலம் பல மகத்தான செயல்களை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் ஈஷா பசுமைக் கரங்கள், மண்ணிற்குத் தகுந்த மரக்கன்றுகளை மிகக் குறைந்த விலையில் (1 மரக்கன்று - ரூ.5.00) வழங்கி வருகிறது. ஈஷாவின் வேளாண் வல்லுனர்கள், மரக்கன்றுகள் நடுவதற்கு ஆலோசனைகளையும் மரம் வளர்ப்பதற்குத் தேவையான வழிமுறைகளையும் களைகளை கட்டுப்படுத்துவதற்கான நுட்பங்களையும் நேரில் வந்து அளிப்பதோடு மூடாக்கு போடுவதையும் வலியுறுத்துகிறார்கள்.
2

உருவாக்கப்படும் வேளாண் காடுகள்

நிலத்தில் நீர் இல்லை; வேலைக்கு ஆட்கள் இல்லை; விற்ற பொருட்களுக்கு விலை இல்லை, இப்படி பல்வேறு காரணங்களால் விவசாயத்தை கைவிட நினைக்கும் விவசாயிகளுக்கு ஒரு அற்புத வாய்ப்பாக ஈஷா பசுமைக் கரங்கள் திட்டம் வேளாண் காடுகளை உருவாக்கித் தருகின்றன. மரங்கள் நட்டு, வேளாண் காடுகள் அமைக்க விரும்புபவர்களுக்கு விலை மதிப்புள்ள தேக்கு, குமிழ், மகிழம், செஞ்சந்தனம், வேங்கை, கருமருது, காயா, வெண் தேக்கு, தான்றிக்காய், மஞ்சள்கடம்பை, மலைவேம்பு, பூவரசு, வாகை போன்ற வகைகளில் தரமான மரக்கன்றுகள் வழங்கப்படுகிறது. இதன் மூலம், நீடித்த, நிலைத்த வருவாய் பெறுவதற்கு ஏதுவாகிறது.

பசுமைக் கரங்களைத் தொடர்புகொள்ள

தமிழகமெங்கும் 50கி.மீ. சுற்றளவிற்கு ஒன்றென, மொத்தம் 85 நாற்றுப் பண்ணைகளை 'ஈஷா பசுமை கரங்கள் திட்டம்' அமைத்துள்ளது. உங்கள் ஊருக்கு அருகிலுள்ள ஈஷா நாற்றுப் பண்ணைகளில் மரக்கன்றுகளைப் பெறுவதற்கும், ஈஷா பசுமைக் கரங்களின் பிற செயல்பாடுகள் குறித்து மேலும் தகவல்களைப் பெறவும் கீழ்க்கண்ட எண்ணைத் தொடர்பு கொள்ளவும்.
தொ. பே. 94425 90062

Walt Stoneburner, Davie Heuts, wwarby @flickr