எனதருமைக் கண்களே!
கம்யூட்டர் மயமாகிப் போன இன்றைய உலகில், நம் கண்களுக்கு பல விஷயங்கள் விருந்தாய் அமையும் அதே சமயம், பல பல விஷயங்கள் கண்களுக்கு எதிரியாய் மாறிப் போய்விடுகின்றன. கம்யூட்டர் வரமா சாபமா? 3டி எஃபெக்ட் கண்ணாடிகள் வரமா சாபமா? மின் விளக்குகள் வரமா சாபமா? என பட்டியலை நாம் வளர்த்துக் கொண்டே செல்லலாம். சரி, கண்களை எப்படி காப்பது? டாக்டர் பவானி பாலகிருஷ்ணன் சொல்கிறார்...
அக்டோபர் மாதம் 9-ம் தேதி... உலகமெங்கும் கண் பார்வை தினமாகக் கொண்டாடப்படுகிறது. கண்கள் பற்றிய விழிப்புணர்வு இல்லாததாலேயே, பலவித பார்வைக் கோளாறுகளால் அவதிப்படுகின்றனர் பலர். மக்கள் கண் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வைப் பெறுவதற்காக அர்ப்பணம் இந்தக் கட்டுரை...
டாக்டர். பவானி பாலகிருஷ்ணன்
நமது உறுப்புகளில் மிக முக்கியமான உறுப்புகளில் ஒன்று கண்கள். ஒரே ஒரு நாள்... கண்களை மூடிக்கொண்டு வாழ்ந்து பாருங்கள். அப்போது தெரியும் கண்ணின் அருமை. ஆனால், எத்தனை பேர் முறையாகக் கண்களைப் பாதுகாக்கிறோம்?
ஓடும் பேருந்தில், மங்கலான வெளிச்சத்தில் படிப்பது, நிறைய நேரம் இமைக்காமல் டிவி பார்ப்பதெல்லாம் நாம் தெரிந்தே செய்யும் தவறுகள். கண் பாதுகாப்பில் சரியான கவனம் செலுத்தாத காரணத்தால்தான் பார்வைக் கோளாறுகள் வருகின்றன.
கண்கள் இயற்கை நமக்கு அளித்துள்ள அற்புத கேமரா. நம் மூளைக்கு 5ல் 4 பங்கு தகவல்கள் கண்கள் வழியாகத்தான் செல்கின்றன. அதுவே உணர்ச்சிகளாக வெளிப்படும்போதுகூட கண்கள் வழியாகத்தான் அதிகம் வெளிப்படுகிறது. சிரிப்பு, துக்கம், அழுகை, மகிழ்ச்சி, பயம், பதற்றம் எதுவானாலும் சரி... கண்களே காட்டிக் கொடுக்கும்.
Subscribe
பார்வைக் குறைகள்
பல காரணங்களால் கண் பார்வை பாதிக்கப்படலாம். ஆனால், கிட்டப் பார்வை, தூரப் பார்வை, வயது காரணமாக வரும் பார்வைக் குறைவு ஆகிய மூன்றும்தான் மிகவும் அதிகமாகக் காணப்படும் பார்வைக் குறைகள். இதுபோன்ற குறைகள் கண் தசைகளில் தொய்வு ஏற்பட்டு, அதன் காரணமாக ஏற்படும் ஒளிவிலகல் குறைகளால் ஏற்படுகின்றன.
அப்போது, கண்ணாடி அணிந்து விழித்திரையின் பின் உள்ள ரெட்டினாவில் பார்வையை சரியாக விழச்செய்து, ஒளிவிலகல் குறையைச் சரிசெய்துவிடுகிறோம். ஆனால், கண்ணாடியால் சரிசெய்ய முடியாத குறைகளும் ஏற்படுகின்றன.
முக்கால் பங்கு பார்வைக் கோளாறுகளை ஏற்கெனவே தடுத்திருக்கலாம் அல்லது சிகிச்சையில் குணப்படுத்தியிருக்கலாம். வயதாவதாலேயே பார்வை குறையவேண்டும் என்பது இல்லை என்பதை உணருங்கள்.
கண் பாதுகாப்பில் யோகா
கண் பாதுகாப்பில் யோகா முக்கியப் பங்கு வகிக்கிறது. கண்ணுக்கான யோகப் பயிற்சிகள், கண்களின் தசையை உறுதிப்படுத்துவதால் பல பார்வைக் கோளாறுகள் குணப்படுத்தப்படுகின்றன. சில குறிப்பிட்ட யோகப் பயிற்சிகள் அனைத்து பார்வைக் குறைகளையும் குணப்படுத்துகின்றன.
கண்களுக்கான யோகப் பயிற்சிகளின்போது, அதன் தசைகள் அதிக ஓய்வுநிலைக்கு உட்படுத்தப்படுவதால் பார்வை விரைவில் சீராகிறது. தொடர்ந்து பயிற்சி செய்த பலருக்கு மேற்கொண்டு கண்ணாடியின் அவசியம் தேவையில்லாமல் போய்விட்டது. வழக்கமான சிகிச்சைகளோடு யோகப் பயிற்சிகளையும் சேர்த்துச் செய்யும்போது, கிட்டப்பார்வை உள்ளவர்களுக்கு அதன் அறிகுறிகள் குறைவதாகவும், கம்ப்யூட்டர் தொடர்ந்து பயன்படுத்துபவர்களுக்கு யோகப் பயிற்சிகள் மிகவும் உதவுவதாகவும் விவேகானந்த கேந்திரா யோகா சிகிச்சை மற்றும் ஆய்வு மையம் தெரிவிக்கிறது.
கண்களுக்கும் மூளைக்கும் ஆழமான தொடர்பு உண்டு. மூளையின் செயல்திறனில் பார்வை மட்டுமே 40 சதவிகிதத்தை ஆக்கிரமித்திருக்கிறது. எனவே, நாம் கண்களை மூடும்போது, மூளையில் இயல்பாக ஓய்வுநிலை தூண்டப்படுகிறது. எந்த அளவுக்கு கண் ஓய்வு நிலையில் இருக்கிறதோ, அந்த அளவுக்கு கண் நலம் பாதுகாக்கப்படுகிறது. மேலும் கண் அசைவுகள் மற்றும் சில குறிப்பிட்ட பார்வைத்திறன்கள், ஓய்வு நிலை மற்றும் விழிப்பு உணர்வுடன் தொடர்புடையதாக இருக்கின்றன. சில குறிப்பிட்ட யோகப் பயிற்சிகள் ஓய்வு நிலையோடு, விழிப்பு உணர்வையும் அளிக்கிறது. இந்த மாதிரியான ஓய்வு நிலை, பார்வையில் மிகுந்த முன்னேற்றத்தை தருகிறது. யோகப் பயிற்சிகளைத் தொடர்ந்து செய்பவர்கள் மனம் குவித்து வேலை செய்வதோடு, ஓய்வு நிலையையும் அனுபவிக்கிறார்கள்.
கண்கள், மூளையுடன் தொடர்புகொண்டுள்ளதால், கண்களில் ஏற்படும் அழுத்தம் நம் மொத்த உணர்விலும் தொற்றிக்கொள்வது இயல்பானது. எப்படியெனில், கண்களில் ஏற்படும் அழுத்தம், கண் தசைகளில் உள்ள நரம்புகளில் அழுத்தத்தை ஏற்படுத்தி, இந்த அழுத்தம் பார்வை நரம்புகள் மூலமாக மூளையைத் தாக்குவதால் நமக்கு மொத்தமாகவே அழுத்தமும் பரபரப்புமான நிலை ஏற்படும். எனவே, கண்களுக்கான யோகப் பயிற்சிகள் கண் தசைகளில் உள்ள அழுத்தத்தைக் குறைக்கும்போது, நம்மீது உள்ள பொதுவான அழுத்த நிலையும் குறைகிறது.
சரியான பயிற்சிகள் மூலம் நம் கண்களைப் பாதுகாப்பதோடு வேறு பல நலன்களும் பெறமுடியும்!