சின்னஞ்சிறு கைகளின் உன்னத முயற்சி - ‘பசுமை பள்ளி இயக்கம்’
பசுமைக்கரங்கள் திட்டத்தின் ஒரு சிறிய முயற்சி, தமிழகத்தில் 486 பள்ளிகளிலுள்ள மாணவர்கள் தமிழ்நாடு முழுவதிலும் சுமார் 35 லட்சம் மரக்கன்றுகள் நடுவதற்கு காரணமாகியுள்ளது என்பது நம்ப இயலாததாக இருக்கலாம்! தொடர்ந்து படியுங்கள், இது எப்படி சாத்தியமாயிற்று என தெரியும்!
பசுமைக்கரங்கள் திட்டத்தின் ஒரு சிறிய முயற்சி, தமிழகத்தில் 486 பள்ளிகளிலுள்ள மாணவர்கள் தமிழ்நாடு முழுவதிலும் சுமார் 35 லட்சம் மரக்கன்றுகள் நடுவதற்கு காரணமாகியுள்ளது என்பது நம்ப இயலாததாக இருக்கலாம்! தொடர்ந்து படியுங்கள், இது எப்படி சாத்தியமாயிற்று என தெரியும்!
ஈஷா பசுமைக் கரங்களின் பசுமைப் பள்ளி இயக்கம் துவங்கப்பட்டு தற்போது 6வது ஆண்டு வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது! தமிழ்நாடு அரசின் கல்வித்துறையுடன் இணைந்து செயல்படும் இத்திட்டம் மூலம் 2,200 பள்ளிகளில் படிக்கும் சுமார் ஒரு லட்சம் மாணவர்கள் இதில் ஈடுபட்டுள்ளனர். இந்த இயக்கமானது குழந்தைகளுக்கு இயற்கையோடு தொடர்பிலிருக்கும் வாய்ப்பினை தருவதோடு, அவர்களை சிறப்புமிக்க தலைமுறையாய் உருவாக்கி, இன்று 35 லட்சம் மரக்கன்றுகளை நடச் செய்துள்ளது.
இளவரசன் எனும் மாணவர், தன் வாழ்வில் இந்த மரக்கன்று எப்படி முக்கிய அம்சமாக மாறி தன்னை வளப்படுத்தியுள்ளது என்பதை நம்மிடம் இங்கே பகிர்ந்து கொள்கிறார். ஆதரவற்ற குழந்தைகளுக்கான சத்குரு சேவா ஆசிரம காப்பகத்தில் தங்கியபடி, கோவை தேவாங்கர் மேல்நிலைப் பள்ளியில் படித்துவரும் இளவரசனுக்கு வயது 12.
ஒரு மரக்கன்று நிகழ்த்திய அற்புதம்!
“எங்களது NGC ஆசிரியர் தனசேகரன் சார், ஒரு நாள் மாலை 5 மணி வாக்கில் மரக்கன்றுகள் வளர்ப்பது குறித்து நாங்கள் கற்றுக்கொள்ளப் போகிறோம் என்று தெரிவித்தார். எனக்கு 5 மணி எப்போது வரும் என்றிருந்தது! சரியாக 5 மணிக்கு நாங்கள் பள்ளி மைதானத்தில் கூடினோம். தனசேகரன் சாருடன் ஈஷாவிலிருந்து ஒரு அண்ணாவும் அங்கு வந்திருந்தார். ஒரு விதையிலிருந்து மரக்கன்று எப்படி முளைபெற்று வெளிவருகிறது என்பது முதல், அது முழுமையான மரமாவது எத்தகைய ஒரு நுட்பமான செயல்முறை என்பது வரை விளக்கினார். எங்கள் ஒவ்வொருவருக்கும் மண்ணை நிரப்புவதற்கான கவரும், எங்களுக்கான விதையும் கொடுக்கப்பட்டது. எனக்கு ஆர்வம் தொற்றிக்கொண்டது. நான் ஏற்கனவே கனவுலகிற்கு சென்று நான் விதைத்த விதை முளைத்து வெளிவருவதை பார்க்கத்துவங்கியிருந்தேன்.
நாங்கள் பள்ளி இடைவேளைகளிலெல்லாம் வந்து தண்ணீர் ஊற்றுவதும் அதனை கவனமாய் பார்த்துக்கொள்வதுமாய் இருந்தோம். முதல் இலை துளிர்விடுவதைக் காண பெரும் ஆர்வம் கொண்டிருந்தேன். அந்த மரக்கன்று முளைத்து வெளிவந்த முதல் நாளை என்னால் எப்போதும் மறக்கமுடியாது. நான் மிகவும் மகிழ்ச்சியாக உணர்ந்தேன்!
அதன்பின்னர், நாங்கள் ஒரு குழுவாகப் பிரிந்து மரக்கன்றுகளைப் பராமரித்தோம். மரக்கன்றுகள் குறிப்பிட்ட அளவிற்கு வளர்ந்த பின்னர், எங்கள் பள்ளியில் ஆளுக்கொரு மரக்கன்றை நட்டோம். மீதமிருந்த மரக்கன்றுகளை மற்ற குழந்தைகளுக்கும், அருகிலிருந்த கடைகளிலும் விநியோகம் செய்தோம். குழந்தைப் பருவத்திலிருக்கும் நான் இத்தகையதொரு மாற்றத்தை உருவாக்க உதவியாய் இருப்பதில் பெருமைப்படுகிறேன்.”
இன்னொரு புறம், கோபிச்செட்டிபாளையம் அரசு பள்ளியில் எட்டாம் வகுப்பு பயிலும் அனிதா மற்றும் இந்திரா ஆகிய இரு மாணவிகளும் இந்த இளம் வயதிலேயே, காடுகள் அழிவதைத் தடுக்கும் ஒரு எளிமையான மாற்று மரம் நடுவதே என்பதைப் புரிந்துகொண்டுள்ளனர். பசுமைக் கரங்களின் விழிப்புணர்வு நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட பிறகு, இந்த மாணவிகள் பள்ளியின் மாணவர்களையும் ஆசிரியர்களையும் ஒருங்கிணைத்து பள்ளிக்கென ஒரு நாற்றுப்பண்ணையை உருவாக்கும் கோரிக்கையை முன்வைத்தனர். இந்த முயற்சியில் அவர்கள் வென்றனர்! 2011 டிசம்பரில் அவர்கள் பண்ணையின் நாற்றுப்பண்ணையில் சுமார் 2000 மரக்கன்றுகள் உற்பத்தி செய்யப்பட்டன.
Subscribe
ஒரு மண்டலத்திலுள்ள 6 மாவட்டங்களில் உள்ள 2,200 பள்ளிகளில் பயிலும் 1 லட்சம் மாணவர்களில் ஒருவராக இளவரசன், அனிதா மற்றும் இந்திரா ஆகியோர் உள்ளனர். அவர்களின் கரங்கள் வேண்டுமானால் சிறியதாக இருக்கலாம், ஆனால் அவர்கள் ஒன்றிணைந்து இன்றுவரை உற்பத்தி செய்துள்ள மரக்கன்றுகளோ 10 லட்சத்திற்கும் மேல் என்பது குறிப்பிடத்தக்கது.
இது ஒரு புத்தக பாடமல்ல!
சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி என்றதும், ஆசிரியரின் விரிவுரையோடு 1 மணிநேர வகுப்பு என்றோ அல்லது புவிவெப்பமயாமதலின் விளைவு பற்றிய அறிவியல்பூர்வமான வகுப்பு என்றோ நீங்கள் நினைக்கலாம்! இத்தகைய உரைகள் தற்காலிகமாக நம்மில் பலருக்கு ஒரு குற்றவுணர்வை ஏற்படுத்தி, ஒன்றோ அல்லது இரண்டோ மரக்கன்றுகளை வைப்பதற்கு உந்துதல் தரும்! ஆனால், அதற்குமேல் வேறொன்றும் செய்வதில்லை!
ஆனால், ஈஷா பசுமைக் கரங்கள் திட்டம் தமிழக அரசின் பள்ளிக்கல்வித் துறையுடன் இணைந்து துவங்கிய ‘பசுமை பள்ளி இயக்கம்’ பள்ளி மாணவர்களின் மத்தியில் பசுமை விழிப்புணர்வை கொண்டுவரும் நோக்கில் செயல்படுகிறது. மரக்கன்றுகளை உருவாக்கும் பயிற்சிகள் மூலம் இன்னொரு உயிரின் வளர்ச்சியைப் பார்க்கும் அனுபவத்தை வழங்கி அதன்மூலம் அவர்களை மேம்பட்ட மனிதர்களாகவும் ஆக்குகிறது!
ஒவ்வொரு படிநிலையாக மேற்கொள்ளும் பணிகள்:
முதல் நிலை: இத்திட்டம் ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு மாவட்டத்தை மையப்படுத்தி செயல்படுகிறது. முதலில் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியிடம் (CEO) பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களை சந்திப்பதற்கான அனுமதி பெறப்படுகிறது.
இரண்டாம் நிலை: இந்த சந்திப்பு கூட்டங்களில் இத்திட்டத்தின் நோக்கம் மற்றும் அடிப்படை அம்சங்கள் குறித்து விளக்கப்படுகிறது.
மூன்றாம் நிலை: விருப்பமுள்ள பள்ளிகள், பசுமைக் கரங்களுடன் இணைந்து பசுமைப்பள்ளி இயக்கத்தின் அங்கமாகின்றன. வழக்கமாக, இத்திட்டத்தில் இணையும் பள்ளிகளில் ஏற்கனவே தேசியப் பசுமைப்படை NGC இருக்கும்..
நான்காம் நிலை: பசுமைக் கரங்களின் தன்னார்வத் தொண்டர்கள், இந்த பள்ளிகளின் தேசியப் பசுமைப் படை மூலமாக, ஒவ்வொரு பள்ளியிலிருந்தும் 2 மாணவர்கள் மற்றும் ஒரு ஒருங்கிணைப்பாளரைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு ஒரு நாள் முழுவதும் நாற்றுப்பண்ணை அமைப்பது குறித்து அனைத்து நுணுக்கங்களையும் கற்றுத் தருகின்றனர்.
ஐந்தாம் நிலை: பயிற்சிக்குப் பிறகு, 2000 மரக்கன்றுகளை உருவாக்குவதற்குத் தேவையான விதைகள் மற்றும் உறைகளை ஒவ்வொரு பள்ளிக்கும் பசுமைக்கரங்கள் வழங்கும். NGCன் அனைத்து உறுப்பினர்களையும் பயிற்றுவிப்பதே இதன் நோக்கம்.
குழந்தைகள், மண்ணில் தங்கள் கரங்களால் விதைப்பது முதல் மரக்கன்றுகள் உருவாக்குதல் வரை, அனைத்து செயல்களையும் தாங்களாகவே மேற்கொண்டு 2000 மரக்கன்றுகள் உருவாவதை இறுதியாக பார்ப்பது ஒரு அற்புத அனுபவமாகும். 4 முதல் 6 மாத காலங்களுக்கு குழந்தைகள் இந்த செயல்முறையில் ஈடுபடுவார்கள்!
மரக்கன்றுகளுடன் அவர்கள் கொண்டிருக்கும் ஈடுபாடு என்பது பார்ப்பதற்கு உண்மையான மனநிறைவை வழங்கும்.
வெற்றுப் பேச்சாக அல்லாமல் இத்திட்டம் செயல்படுகிறது!
கோவை மற்றும் ஈரோடு ஆகிய மாவட்டங்களில் 2011 ஆம் வருடத்திலிருந்து 2012 ஆம் வருடத்திற்குள் முதன்முதலில் பசுமை பள்ளி இயக்கம் துவங்கப்பட்டது. இதன் வெற்றியைத் தொடர்ந்து கீழ்க்கண்ட மாவட்டங்களில் அடுத்தடுத்து இத்திட்டம் செயல்படுத்தப்பட்டது.
2011-12: கோயம்புத்தூர் மற்றும் ஈரோடு
2012-13: கோயம்புத்தூர், ஈரோடு, கிருஷ்ணகிரி மற்றும் பாண்டிச்சேரி
2013-14: திருச்சி
2014-15: சேலம்
2015-16: விழுப்புரம்
2016-17: விழுப்புரம் (நடப்பு திட்டம்)
புள்ளிவிவர ஆர்வலர்களுக்காக...
விபரங்கள் | 11-12 | 12-13 | 13-14 | 14-15 | 15-16 | Total |
---|---|---|---|---|---|---|
பள்ளிகளின் எண்ணிக்கை | 486 | 593 | 437 | 526 | 170 | 2,212 |
மரக்கன்றுகள் உற்பத்தி | 6,40,107 | 8,90,577 | 7,45,589 | 9,03,487 | 3,47,900 | 35,27,660 |
பள்ளிகளில் நடப்பட்டவை | 36,364 | 36,097 | 23,227 | 44,696 | 22,766 | 1,63,150 |
மாணவர்களுக்கு வழங்கப்பட்டது | 4,42,413 | 6,02,854 | 5,17,031 | 7,06,993 | 2,62,450 | 25,31,741 |
பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது | 1,61,330 | 2,37,701 | 2,05,331 | 1,51,798 | 62,684 | 8,18,844 |
நேரடியாக உற்பத்தியில் ஈடுபட்ட மாணவர்கள் | 19,440 | 30,955 | 17,480 | 23,670 | 6800 | 98,345 |
மரக்கன்றுகள் விநியோகத்தில் ஈடுபட்ட மாணவர்கள் | 2,10,560 | 2,82,979 | 2,36,954 | 1,13,376 | 76708 | 9,20,577 |
இயக்கத்தை பற்றி...
நோக்கம்
பள்ளிப் பருவத்தில் ஒரு மாணவர் சுற்றுச் சூழல் விழிப்புணர்வைப் பெற்றுவிட்டால், சுற்றுச்சூழலை பாதுகாக்கச் செய்ய வேண்டியவற்றை அம்மாணவர் நிச்சயம் செய்ய முன்வருவார். இந்நோக்கத்தில், ஈஷா பசுமைக் கரங்கள் திட்டம் தமிழக அரசின் பள்ளிக்கல்வித் துறையுடன் இணைந்து பசுமைப்பள்ளி இயக்கத்தை ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு மாவட்டத்தில் செயல்படுத்தி வருகிறது.
செயல்திட்டம்
பசுமைப்பள்ளி இயக்கத்தில் இணைந்துள்ள பள்ளி மாணவர்கள் தாங்களாகவே நாற்றுப் பண்ணைகளை உருவாக்குகின்றனர். புத்தகப் பாடமாக கற்பிக்கப்படாமல், விதைகளைச் சேகரித்து மண்ணில் ஊன்றுவதிலிருந்து, அது கன்றாக வளர்ந்து மரமாகும் வரை தாங்களே பராமரித்து வளர்ப்பதால், அந்த மாணவர்களுக்கு மரங்கள் உற்ற தோழனாகி விடுகின்றன. இதனால் அவர்களிடம் மரங்களை வெட்டக் கூடாது என அறிவுறுத்த வேண்டிய அவசியமிருக்காது.
நமது செயல்பாடுகள்:
- தேவையான விதைகள், பிளாஸ்டிக் பைகள், தொழில்நுட்ப உதவிகள் ஆகியவை, ஈஷா பசுமைக் கரங்களால், பங்கேற்கும் பள்ளிகளுக்கு வழங்கப்படுவது.
- ஆகஸ்ட் முதல் டிசம்பர்/ஜனவரி வரை அந்தந்த பள்ளிகளின் தேசீயப் பசுமைப் படையின் (NGC) 2 மாணவர்கள் மற்றும் 1 ஒருங்கிணைப்பாளருக்கு பயிற்சி வகுப்புகள் வழங்குவது.
- நாற்றுப்பண்ணை உபகரணங்கள், மாணவர்களுக்கான குறிப்பேடுகள் மற்றும் குறுந்தகடுகள் CDs போன்றவை வழங்குவது.
- தொழில்நுட்ப உதவி, கள பிரச்சனைகளை நிவர்த்திசெய்வது போன்ற தொடர் கண்காணிப்பானது வாரந்தோறும் அர்ப்பணிப்புமிக்க ஈஷா பசுமைக் கரங்களின் குழுவினரால் நேரடியாக வழங்கப்படுகிறது.
- இளம் தலைமுறையினரிடத்தில் சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வையும் ஆர்வத்தையும் ஏற்படுத்தி அதற்கான வழிமுறைகளை வழங்குவதே ஈஷா பசுமைக் கரங்களின் பசுமைப் பள்ளி இயக்கத்தின் நோக்கமாகும்.
இத்திட்டத்தில் தங்களது பங்களிப்பையும் வழங்க விரும்பினால் info@projectgreenhands.org என்ற இமெயில் முகவரிக்கு தொடர்புகொள்ளவும்!