பரதநாட்டியத்துடன் சிறப்புற்ற ஒன்பதாம் நாள் நவராத்திரி
லிங்கபைரவியில் நடைபெற்ற 9 நாட்கள் நவராத்திரி கொண்டாட்டத்தில், இறுதி நாளான இன்றைய கொண்டாட்ட நிகழ்வுகள், இங்கே ஒரு பார்வை!
லிங்கபைரவியில் நடைபெற்ற 9 நாட்கள் நவராத்திரி கொண்டாட்டத்தில், இறுதி நாளான இன்றைய கொண்டாட்ட நிகழ்வுகள், இங்கே ஒரு பார்வை!
9 நாட்கள் திருவிழாவில், இறுதி நாளான இன்றைய ஒன்பதாம் நாள் கொண்டாட்டத்தில் திவ்யா நாயர் அவர்களின் பரதநாட்டியம் நிகழ்ச்சி நடைபெற்றது. மாலை 5.30 மணியளவில் ஈஷா யோகா மையத்திலுள்ள சூரியகுண்டம் முன்பாக துவங்கிய இந்நிகழ்ச்சியை ஆயிரக் கணக்கான மக்கள் கண்டுகளித்தனர்.
ஷீஜித் கிருஷ்ணாவின் சிஷ்யையான திவ்யா நாயர் அவர்கள், கலாக்ஷேத்ரா நுண் கலை கல்லூரியின் பகுதிநேர மாணவியாக நடனத்தின் அடிப்படைகளைக் கற்றவர். இந்தியாவிலும், அமெரிக்காவிலும் பல அரங்கங்களில் நடனநிகழ்ச்சிகள் செய்துள்ள திவ்யா நாயர் அவர்கள், நியூ ஜெர்ஸி, பரதகலா நடனப் பள்ளியின் இயக்குனராக இருக்கிறார். நடனக் கலையில் முழுமையாக தன்னை ஈடுபடுத்திக் கொள்ளும் பொருட்டு அமெரிக்காவிலிருந்து சென்னைக்கு குடி பெயர்ந்துள்ள இவர், சென்னையில் சஹ்ராத்யா நடனப்பள்ளியில் தனது கலைபயணத்தை தொடர்ந்து கொண்டிருக்கிறார்.
நிகழ்ச்சியின் முதலாவதாக ‘நாகேந்திர ஹாராய...’ எனத் துவங்கும் பாடலுக்கு தனது அழகிய முக அபிநயங்களால் சிவனின் குணங்களை வெளிப்படுத்திய திவ்யா நாயர் அவர்கள், தொடர்ந்து சில அழகிய பாடல்களுக்கு தனது அற்புத நடனத்தை வழங்கினார். பார்வையாளர்களின் ரசனைக்கு விருந்தான அந்த நாட்டிய நிகழ்ச்சியைத் தொடர்ந்து, லிங்கபைரவி தேவி உற்சவ மூர்த்தியின் ஊர்வலம் கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது.
நவராத்திரி விழாக் காலங்களில் லிங்கபைரவி, முதல் மூன்று நாட்கள் குங்கும அலங்காரத்திலும் அடுத்த மூன்று நாட்கள் மஞ்சள் அலங்காரத்திலும், இறுதி மூன்று நாட்கள் சந்தன அலங்காரத்திலும் பக்தர்களுக்குக் காட்சியளிப்பாள். ஒன்பதாம் நாளான இன்று, சந்தன அலங்காரத்தில் காட்சியளித்த லிங்கபைரவி தேவி, பக்தர்களுக்கு அருளை வாரிவழங்கினாள்.
Subscribe