பரதநாட்டியத்தில் திளைத்த மூன்றாம்நாள் நவராத்திரி கொண்டாட்டம்!
ஈஷா யோக மையத்தில் வெகுசிறப்பாக நடைபெற்ற மூன்றாம்நாள் நவராத்திரி கொண்டாட்டம்... ஒரு பார்வை!
ஈஷா யோக மையத்தில் வெகுசிறப்பாக நடைபெற்ற மூன்றாம்நாள் நவராத்திரி கொண்டாட்டம்... ஒரு பார்வை!
ஈஷா யோகா மையத்தில் நவராத்திரி திருவிழா 9 நாட்கள் (அக்டோபர் 2 முதல் 10 வரை) விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. பாரம்பரிய இசை, பரதநாட்டியம் என்று மட்டுமல்லாமல், நாட்டுப்புற கலை வடிவங்களும் அரங்கேறவிருக்கிறது. 9 நாட்கள் திருவிழாவில், நேற்றைய மூன்றாம் நாள் கொண்டாட்டத்தில் திரு.P.பிரவீன் குமார் அவர்களின் பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது.
மாலை 6.45 மணியளவில் ஈஷா யோகா மையத்திலுள்ள சூரியகுண்டம் முன்பாக துவங்கிய இந்நிகழ்ச்சியை நூற்றுக்கணக்கான மக்கள் கண்டுகளித்தனர். நுட்பமான முகபாவங்களுடன் பல்வேறு நளினமான அபிநயங்களை வெளிப்படுத்தி பல அழகிய கீர்த்தனங்களுக்கு பிரவீன் குமார் அவர்கள் வழங்கிய அந்த பரதநாட்டிய நிகழ்ச்சி அனைவரையும் கவர்ந்தது.
திரு.P.பிரவீன் குமார் அவர்களைப் பற்றி...
பாரம்பரிய கலைப் பரம்பரையிலிருந்து வந்துள்ள இவருக்கு, இளம் வயதிலேயே இசை மற்றும் நடனம் மீது நாட்டம் வந்தது ஆச்சரியத்திற்குரிய விஷயமல்ல. எனினும், பெங்களூரூவைச் சேர்ந்த அவரது குரு, மறைந்த திருமதி.நர்மதா அவர்களிடம் பயிற்சி பெற்றபிறகு, திரு.பிரவீன் குமார் பரதநாட்டியத்தின் ஆழங்களையும் அழகையும் உணர்ந்து, தன் வாழ்க்கையை இந்த நடனத்திற்கு அர்ப்பணிக்க முடிவுசெய்தார்.
பரதநாட்டியத்தின் பாரம்பரிய நுட்பங்களை உறுதியாகப் பின்பற்றும் இவர், தற்போது புகழ்பெற்ற் குருவான முனைவர்.C.V.சந்திரசேகர் அவர்களிடம் பயிற்சி பெற்றுவருகிறார். நட்டுவாணராகவும் நடன இயக்குனராகவும் இருக்கும் திரு.பிரவீன் குமார், பல அற்புதமான நடனங்களை வடிவமைத்தமைக்கு பாராட்டுகளையும் பெற்றுள்ளார். இந்தியாவிலும் உலகம் முழுவதும் பரவலாகப் பயணம் செய்து, பல பிரசித்திபெற்ற இசை மற்றும் நடனத் திருவிழாக்களில் கலந்துகொண்டு, பெங்களூருவில் சித்கலா நடனப் பள்ளியையும் நடத்தி வருகிறார்.
Subscribe
இந்திய கலாச்சார தொடர்புகளின் அமைப்பின் அங்கீகரிக்கப்பட்ட கலைஞரான ப்ரவீன் குமார், தொலைக்காட்சியில் ‘A’ கிரேடு கலைஞராவார்.
2010ல் புதுடில்லி மத்திய சங்கீத நாடக அகாடமியிடமிருந்து “உஸ்தாத் பிஸ்மிலா கான் யுவபுரஸ்கர்” விருதினைப் பெற்றுள்ளார், மோகன் கோக்கர் விருது(2010) பெற்ற முதல்நபர் என்ற பெருமைக்குரியவர் இவர்.
லிங்க பைரவி ஊர்வலம்...
நவராத்திரியின் மூன்றாம் நாளான நேற்று, லிங்கபைரவி தேவி உற்சவ மூர்த்தியின் ஊர்வலம் கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. லிங்கபைரவியிலிருந்து துவங்கும் இந்த ஊர்வலத்தில், தியானலிங்கம் முன் நடைபெறும் ஆரத்தியில் அக்னி நடனமாடுவது உள்ளம்கவர் அம்சமாக இருக்கும். ஊர்வலம் முடிந்த பின்னர் ஒவ்வொருநாளும் பக்தர்களுக்கு ஈஷா மையம் சார்பில் அன்னதானம் வழங்கப்படுகிறது.
கொலு...
நவராத்திரி விழாக்காலங்களில் பாரம்பரியமாக வைக்கப்படும் கொலு கண்காட்சியானது, சூரியகுண்டத்தின் மேற்புற பிரகாரத்தில் தேவியின் பலவித ரூபங்களை குறிப்பிடும்படியாக பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.
நவராத்திரி விழாக் காலங்களில் லிங்கபைரவி, முதல் மூன்று நாட்கள் துர்கை அம்சமான குங்கும அலங்காரத்திலும் அடுத்த மூன்று நாட்கள் மஹாலஷ்மி அம்சமான மஞ்சள் அலங்காரத்திலும், இறுதி மூன்று நாட்கள் சரஸ்வதி அம்சமான சந்தன அலங்காரத்திலும் பக்தர்களுக்குக் கண்கொள்ளா விருந்தாக காட்சியளிப்பாள்.
இந்த 9 நாட்களில், தேவிக்கு சிறப்பு அர்ப்பணிப்புகளாக நெய்தீபம், மாங்கல்ய பலசூத்ரா, அபிஷேகம், சமர்ப்பணம் போன்ற அர்ப்பணைகளை செய்வதன் மூலமும், ஒவ்வொரு நாள் மாலை நடக்கவிருக்கும் மஹா ஆரத்தி, ஊர்வலம், மற்றும் சிறப்பு மந்திர உட்சாடனைகளில் பங்குபெறுவதன் மூலமும் அளப்பரிய நன்மைகளைப் பெற முடியும். நவராத்திரி காலத்தில் தேவியை வழிபடுவது, ஒருவர் உலக வாழ்வில் நல்வாழ்வு என்று நினைக்கும் அனைத்தையும் பெற உறுதுணை புரியும். அதனுடன் ஆன்மீகத்தின் உயர்ந்த பரிமாணங்களை எட்டவும் ஒரு வாய்ப்பாக இருக்கும்.
இந்த ஒன்பதுநாட்கள் நவராத்திரி திருவிழாவில் கலந்துகொள்ள, பொதுமக்கள் அனைவருக்கும் அழைப்புவிடுத்துள்ள ஈஷா யோக மையம், கோவையிலிருந்து ஈஷாவிற்கும், நிகழ்ச்சி முடிந்தவுடன் ஈஷாவிலிருந்து கோவைக்கும் இடையிலுள்ள கிராமங்களுக்கும் இலவசப் பேருந்து சேவையையும் வழங்கியுள்ளது.
இன்று (05-10-2016)
- நான்காம் நாள் விழாவான இன்று திரு.ஸ்ருதிசாகர் மற்றும் செல்வி.கீர்த்தனா ஆகியோரின் குரலிசை மற்றும் புல்லாங்குழல் இசை நிகழ்ச்சி நிகழவுள்ளது.
- நவராத்திரி நாட்களில் அக்டோபர் 2,5,8 ஆகிய நாட்களில் மாலை 5:30 முதல் 6:10 வரை லிங்கபைரவியில் நடைபெறும் நவராத்திரி சிறப்பு பூஜையின் நேரடி இணைய ஒளிபரப்பில் இணைந்து, தேவியின் அருள்மழையில் நனைந்திடுங்கள்!