விவசாயிகளின் நன்கொடையால் விளையும் அன்பு: வைரஸை வெல்வோம் - ஈஷா டைரி - பாகம் 11
தங்கள் நிலத்தில் விளைந்தவைகளை தாராளமாய் கொடையாக அளிக்கும் நம் விவசாயிகள், இந்த ஊரடங்கு காலத்தில் பட்டினிக்கு எதிரான போரில் முன்னின்று அனைவருக்கும் நல்லுதாரணமாக செயல்படுகிறார்கள். ஆலந்துறை பஞ்சாயத்தில் ஒவ்வொரு வாரமும் 100 கிலோ பூசணிக்காய் அளிப்பதாக ஒரு விவசாயி உறுதியளித்துள்ளார். மேலும், தொண்டாமுத்தூர் மற்றும் இருட்டுப்பள்ளத்தில் இருக்கும் விவசாயிகள், சுரைக்காய், பலா மற்றும் மாம்பழங்களை வழங்கியுள்ளனர்.
பரந்த மனமுடைய நன்கொடையாளர்கள்
உலகப் பொருளாதாரத்தை பலவீனப்படுத்திய இந்த நோய்த்தொற்று பரவல், நம் விவசாயிகளின் உறுதியை குலைக்கவில்லை. அவர்கள் வைரஸை வெல்வோம் என்ற பெரும் உறுதியோடு செயல்பட்டு வருகிறார்கள். ஈஷா தன்னார்வலர்களோடு சேர்ந்து உணவு விநியோகிப்பது மற்றும் மக்களுக்கு உதவுவது ஆகிய பணிகளில் ஈடுபடுவதோடு மட்டுமல்லாமல், தங்கள் பெருங்கருணையை தாராளமான கொடையாக அளித்து, பாதிக்கப்பட்ட சமூகத்திற்கு தங்கள் பேரன்பைக் காட்டி வருகிறார்கள்.
கொரோனா வைரஸ்சுக்கு எதிரான இந்த யுத்தத்தில் விவசாயிகள் காய்கறிகளை நன்கொடையாக அளித்து, உள்ளூர் சமூகத்தினரிடம் நிலையான ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றனர். அவர்களின் தேவைக்குக் குறைவான பொருட்களே இருந்தாலும், அதைப் பொருட்படுத்தாமல் இந்த நன்கொடையாளர்கள் வழங்கும் தாராளமான நன்கொடை, நம் தான்னார்வலர்களையும், பெரும் உற்சாகத்தோடு தங்கள் பணிகளை மேற்கொள்ளச் செய்கிறது. கோவை கிராமங்களில் யாரும் பட்டினியில் இருக்கக்கூடாது என்ற முனைப்போடு அவர்கள் அனைவருக்கும் உணவு வழங்கி வருகிறார்கள்.
தொண்டாமுத்தூர் கிராமத்தில் முருகேசன் என்ற சிறு விவசாயி சமீபத்தில் 15 கிலோ சுரைக்காயை நன்கொடையாக அளித்துள்ளார். இருட்டுப்பள்ளத்தைச் சேர்ந்த இன்னொரு விவசாயி 25 கிலோ பலாப்பழமும் 14 கிலோ மாம்பழமும் வழங்கியுள்ளார்.
Subscribe
மேலும், அஸ்ஸாமில் இருந்து கோவைக்கு வந்திருக்கும் பல புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு முருகேசன் தன் பண்ணையில் தங்க இடமளித்துள்ளார். அவர்கள் இந்த ஊரடங்கு காலத்தில் இருக்க இடமின்றி தவித்து வந்தவர்கள். அந்த விவசாயி தன் பண்ணையில் அவர்களுக்கு தங்க இடம் அளித்துள்ள சூழலில், நம் தன்னார்வலர்கள் அந்த தொழிலாளர்களுக்கும், அவர் குடும்பத்தினருக்கும் தினமும் உணவளித்து வருகின்றனர்.
இத்தகைய பரிவான நிகழ்வுகள் ஏதோ ஒன்றிரண்டு அல்ல. கோவை கிராமங்களில் பெரும்பாலான இடங்களில் இத்தகைய கருணையின் வெளிப்பாடாகும் செயல்கள் அதிகரித்த வண்ணம் உள்ளன. ஆலாந்துறையைச் சேர்ந்த விவசாயி ஒருவர் ஒவ்வொரு வாரமும் 100 கிலோ பூசணிக்காய் கொடுப்பதாக உறுதியளித்துள்ளார். மேலும், உள்ளூர் விவசாய உற்பத்தியாளர் அமைப்பைச் சேர்ந்த இளங்கோ கருவேப்பிலையும் தேங்காயும் நன்கொடையாக வழங்கியுள்ளார்.
தீனாம்பாளையத்தைச் சேர்ந்த கனகராஜ் என்ற வழக்கறிஞர் 36 கிலோ வெண்டைக்காய் அளித்துள்ளார். தொண்டாமுத்தூர் பகுதியில் உள்ள காளியண்ணன்புதூரைச் சேர்ந்த ஈஸ்வரமூர்த்தி 16.5 கிலோ கொத்தமல்லி கொடுத்துள்ளார்.
இந்த நன்கொடைகள் உணவில் சுவை கூட்டுவதோடு மட்டுமல்லாமல், நம் தன்னார்வலர்களும் உள்ளூர் மக்களும் ஒன்றிணைந்து தன்னலமற்ற முறையில் செயல்படும் வகையில் உத்வேகப்படுத்தி உள்ளது.
மருந்தளித்த மனிதர்
நரசீபுரத்தில் வாழ்ந்து வரும் 55 வயது பெண் சம்பூர்ணம், மருத்துவரின் அறிவுறுத்தலின் படி தன் நோய்க்காக தினமும் மருந்து உட்கொண்டு வந்துள்ளார். இந்த ஊரடங்கு காலத்தில் அந்த மருந்து தீர்ந்துவிடவே, உள்ளூர் மருந்துக்கடைகளும் இயங்காத நிலையில், செய்வதறியாது தவித்துப் போனார். பின்னர், ஈஷா தன்னார்வலர் ஜெயக்குமாரை அணுகி உதவி கோரினார். அடுத்த நாள் ஜெயக்குமார் அந்த மருந்துகளை வாங்கி வந்து கொடுத்து அந்த பெண்ணின் கவலையை போக்கினார்.
கிராமத்தினரையும் ஈஷா தன்னார்வலர்களையும் அன்பெனும் சூட்சுமக் கயிறு பிணைத்துள்ளது. நம் தன்னார்வலர்களின் அயராத உழைப்பும் சேவையும் மக்களுக்கு அவர்கள்மீது அன்பு உருவாக காரணமாகிறது. மருந்து, உணவு அல்லது வேறெந்த உதவிக்கும் மக்கள் இப்போது தன்னார்வலர்களைத்தான் நாடுகிறார்கள்.
இதுபோன்ற சவாலான காலங்களில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவும் முயற்சியில், நமது ஈஷா அவுட்ரீச் வீரர்கள் தினமும் கடுமையான புறச்சூழல்களை தைரியத்துடன் எதிர்கொள்கிறார்கள். அவர்களின் உடல்நலம் பாதிக்கப்படும் வாய்ப்பு இருந்தாலும், அதுகுறித்து அச்சம்கொள்ளாமல் செயலாற்றுகிறார்கள். pic.twitter.com/VtvFM4Ikcm
— Project GreenHands (@PGH_Isha) May 2, 2020