இந்த வார சத்குரு ஸ்பாட்டில், 8 மாநிலங்கள், 5000 கிமீ தூரத்தினை ரேலி கடந்துவிட்டதைப் பற்றி பதிவுசெய்யும் சத்குரு அவர்கள், வழிநெடுக தான் கண்டு நெக்குறுகிய காட்சிகளையும் நம்முடன் பகிர்ந்துகொள்கிறார். பிரதிபலன் பாராது தன்னுடன் செயல் செய்துவரும் முட்டாள்கள் பற்றியும் நம்முடன் பேசுகிறார்...

ரேலி ஃபார் ரிவர்ஸ் சாகசத்தில், பாதி தூரத்தை கடந்துவிட்டோம். மக்களின் ஏகோபித்த ஆதரவினை பெற்று, மிக அற்புதமான ஒரு ஓட்டமாக இது இருந்திருக்கிறது. எண்ணியதுபோல், இது மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தேசம் தழுவிய இயக்கமாக மாறி இருக்கிறது. பல்வேறு கட்சிகள், கொள்கைகளைச் சேர்ந்த தலைமைகள், அழுத்தமாக தங்கள் ஆதரவினை "நதிகள் மீட்பு" இயக்கத்திற்கு வழங்கி இருக்கிறார்கள்.

நாம் இதுவரை கடந்து வந்திருக்கும் 8 மாநிலத்தைச் சேர்ந்த முதல்வர்கள் தங்கள் ஆதரவினை முழுமையாய் வழங்கியுள்ளனர். இதில் சிலர், சற்று முன்னோக்கிச் சென்று, நாம் கொடுக்கக்கூடிய திட்டத்தின் அடிப்படை அம்சங்களை நடைமுறைப்படுத்த தேவையான நடவடிக்கைகளையும் அறிவித்திருக்கின்றனர்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

ஒரு நிலையில், இவை அனைத்தும், நம் இந்திய நதிகளின் இக்கட்டான நிலைக்கான ஒரு தீர்வுதான். பொதுவாய் மக்களைப் பிரித்து வைக்கும் அம்சங்களைத் தாண்டி, மக்களை இந்த நோக்கம் இணைத்திருக்கிறது. மக்கள் தங்கள் பிரிவினைகளைக் கடந்து, உயர்ந்து, இணைவது, அளப்பரிய சந்தோஷத்தை அளிக்கிறது. இதைத்தான் நாம் இந்த "நதிகள் மீட்போம்" விழிப்புணர்வு பேரணியில் காண்கிறோம்.

இப்போது குஜராத்திலுள்ள அஹமதாபாத்தில் இருக்கிறோம். ரேலி தொடும் எட்டாவது மாநிலம் இது. 16 மாநிலங்களை அடையவேண்டும் எனும் நமது திட்டத்தின் சரிபாதி தூரம் இது. நேரம், சக்தி, அமைப்புமுறை இவற்றை எல்லாம் பார்க்கும்போது இது சற்றே சவாலானதுதான், ஆனால் கொண்டாட்டமாய் நடக்கிறது. முற்றிலும் எதிர்பார்க்காத இடத்தில் எல்லாம் மக்கள் தங்கள் கைகளில் பதாகைகளை வைத்து நிற்பது ஆழமாய் நம் நெஞ்சங்களை தொடுகிறது. மனித மனங்களில் தீப்பற்றி எரியச் செய்யும்போது, எத்தனை எத்தனை அழகான அம்சங்களாய் அது வெளிப்படுகிறது! "நதிகளை மீட்போம்" விழிப்புணர்வு பேரணி முழுவதும் இதுபோன்ற காட்சிகளை நாம் கண்டு வருகிறோம்.

கடந்த இரு வாரங்களில் நாம் கண்ட அற்புதமான பல விஷயங்களில் ஒன்று "மராத்தி மிர்ச்சி." 7 வயது பெண் குழந்தை ஒருத்தி, கூடியிருந்தோரிடம் உற்சாகமாய், உணர்ச்சிகரமாய் முறையிட்டாள். அறிவார்ந்ததாய், மாசற்றதாய் அவளுடைய பேச்சு இருந்தது (அந்த வீடியோவை இங்கு பகிர்கிறோம்). மனித உற்சாகத்தின் முற்றிலும் ஆச்சரியமூட்டும் பல வெளிப்பாடுகளில் இதுவும் ஒன்று. நமக்குக் கிடைத்த பெருமை இது.

நம் அணியினர் அனைவரும் ஓயாமல், நம்பமுடியாத அளவுக்கு ரேலியில் செயலாற்றி வருகின்றனர். நான் ஏற்கனவே சொல்லியதுபோல், "இங்கு ஈஷாவில் உள்ள நாம், அதிஅற்புதமான விஷயங்களை செய்யும் மூடர்கள்தான். இதுதான் விழிப்புணர்வு-நிலையின் சக்தி." தன்னிடம் உள்ள அனைத்தையும் கொடுத்தபின்னும், தனக்கு பிரதிபலனாக என்ன கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு இல்லாமல் இருப்பவரை முட்டாள் என நினைக்கிறோம். இல்லையா? இதுபோன்ற முட்டாள்கள் மத்தியில் இருப்பதை நான் மிகவும் விரும்புகிறேன். இதுபோன்ற முட்டாள்கள்தான் ஜாம்பவான்களாய் வளர்கிறார்கள். இந்த முட்டாள்கள்தான் உலகை மாற்றும் வல்லமை உடையவர்கள்.

வேகத்தை குறைக்க வேண்டாம். எரிபொருள் தடையில்லாமல் பாயட்டும். "நதிகள் மீட்போம்" விழிப்புணர்வு இயக்கம் முழு வீச்சில் நிகழட்டும்.

இதனை நாம் நிகழச் செய்வோம்.

Love & Grace