வேளாண்காடு வளர்ப்பு - விவசாயியின் வளமும் பெருகும், நதிகளும் மீண்டு வரும்
விவசாய கடன் தள்ளுபடி விவசாயிகளின் இன்னல்களை அதிகரிக்கத்தான் செய்கிறது. வேளாண்காடு வளர்ப்பு மூலம் விவசாயிகள் தங்கள் வருமானத்தைப் பெருக்கி கடன்களிலிருந்து வெளிவர முடியும். இதன் மூலம் நமது ஆறுகளும் புத்துயிர் பெறும்.
விவசாயக்கடன் தள்ளுபடி - விவசாயிகளின் சாவுமணி
கர்நாடகத்தில் 71% விவசாயிகள் வாராக்கடனில் இருக்கிறார்கள். அவ்வாறே தமிழ்நாட்டில் 82% விவசாயிகள் இருக்கிறார்கள். வாராக்கடன் என்பது கடன் வாங்குபவர் அக்கடனை திருப்பி செலுத்தும் நிலையில் இல்லாமல் இருப்பது. இது எவ்வாறெனில், நீங்கள் பத்து ரூபாய் சம்பாதிக்கிறீர்கள், ஆனால் நூறு ரூபாய் கடன் வாங்கியுள்ளீர்கள். இதை திருப்பி செலுத்த முடியாத சூழ்நிலையில் உள்ளீர்கள் என்று அறிவோம். மேலும் வட்டியும் அதிகரித்துக்கொண்டே வருகிறது. விவசாயியினால் செய்ய முடிந்த ஒரே செயல், கட்டத் தவறி ஓடிப் போவதோ, தன் நிலத்தை விற்பதோ அல்லது மரத்தில் தூக்கில் தொங்குவதோதான். கடந்த பதினைந்து வருடங்களில் மூன்று லட்சத்துக்கும் மேலான விவசாயிகள் தற்கொலை செய்து மாண்டுள்ளனர். இதுவரை சுதந்திர இந்தியாவில் நடந்த நாலு யுத்தங்களில் - மூன்று பாகிஸ்தானோடு, ஒன்று சீனத்தோடு - இரண்டு தரப்பிலும் சேர்த்து இத்தனை பேர் மடிந்து போகவில்லை.1969-ஆம் ஆண்டுக்கு முன்னால் வங்கிகள் தேசியமயமாக்கப்படுவதற்கு முன்னால் பெரும்பாலான வங்கிகள் தனியார் வங்கிகளாகவே இருந்தன. ஒரு தனியார் வங்கியாளர் விவசாயிக்கு கடன் கொடுக்கமாட்டார். வியாபாரிக்கோ அல்லது தன் உடைமையை அடமானம் வைக்கக் கூடியவருக்கோ அல்லது லாபம் வருமென தெரியும் தொழிலுக்கோதான் அவர் கடன் வழங்குவார். விவசாயி பணம் சம்பாதிக்காமல் போகக்கூடும்; அவருக்கு ஏன் கடன் வழங்குவார்?
எனவே, சிறிய முதலீடு கொண்ட சில கூட்டுறவு வங்கிகளைத் தவிர்த்து கிராம மக்களுக்கு யாரும் கடன் வழங்க முன்வரவில்லை. இதனாலேயே மத்திய அரசு வங்கிகளை தேசியமயமாக்கியது. வேறுவகையில் சொன்னால், நீங்கள் ஒரு வங்கியை நடத்திக் கொண்டிருந்தால், அதில் சில ஆயிரம் கோடி பணம் இருந்தால், எந்த ஒரு இழப்பீடும் கொடுக்காமல் அரசு அத்தகைய வங்கிகளை அபகரித்துக் கொண்டது. கிராம மக்கள் வங்கிகளிலிருந்து பயன்பெறும் வண்ணமே அத்தகைய கொடிய செயலை இந்த தேசம் புரிந்தது. அதனால் ஒரு பெரிய மாற்றம் உருவானது - இந்நாட்டில் அது ஒரு பெரும் புரட்சியாக இருந்தது.
Subscribe
ஆனால், இன்று விவசாயிகளின் வாராக்கடன்களுக்கு தீர்வாக அரசியல் கட்சிகள் தேர்தலில் வெற்றி பெரும் நோக்கத்தோடு கடன் தள்ளுபடி கொடுக்கிறார்கள். எனவே, ஒரு வங்கியாளர் என்ற முறையில் நீங்கள் கடன் கொடுக்க வேண்டும், ஆனால் அந்த கடன் திருப்பி செலுத்தப்படமாட்டாது. எத்தனை நாட்கள் இத்தகைய பரிவர்த்தனை நிகழ முடியும்? நான் உங்களுக்கு நூறு ரூபாய் கொடுக்கிறேன் என்று வைத்துக்கொள்ளுங்கள், வேறொருவர் வந்து அதை நீங்கள் திருப்பித் தர வேண்டாம் என்று கூறினால் நான் என் நூறு ரூபாயை இழந்துவிட்டேன். அடுத்த முறை "நான் மடிந்துகொண்டிருக்கிறேன்" என்று நீங்கள் கூறினாலும் நான் ஒரு பத்து ரூபாய் உங்களுக்குத் தர மாட்டேன். இந்த வகையில்தானே தற்பொழுது இச்சமுதாயம் இயங்கிக் கொண்டிருக்கிறது? நீங்கள் எனக்கு திருப்பித் தரப்போவதில்லை என தீர்மானமாக தெரியும் பட்சத்தில் நீங்கள் மிக மோசமான நெருக்கடியில் இருக்கிறீர்கள் என சொன்னாலும் நான் உங்களுக்கு ஒரு ரூபாய் கூடக் கொடுக்கப்போவதில்லை.
என்ன நடக்குமென்றால், வங்கிகள் நிரப்புவதற்கு புதிய படிவங்களை கண்டுபிடிப்பார்கள்; உங்கள் பாட்டன் முப்பாட்டன் என உங்களுக்கு முந்தைய பத்து தலைமுறையின் பெயர்களையோ அல்லது அதுபோன்ற வேறு ஏதாவது கொடுக்கச் சொல்லி பணிப்பார்கள். இதன் மூலம் சட்டமுறைப்படி அந்த விவசாயி கடன் பெற முடியாதபடி செய்துவிடுவார்கள். கடன் தள்ளுபடி என்பது அத்தகைய நிலையைதான் உருவாக்கும். மறுபடியும் நாம் விவசாயிகளை முறையான வங்கிகளிலிருந்து வட்டிக்கடைக்காரரிடம் தள்ளுகிறோம். வட்டிக்கடையில் வருடத்திற்கு அறுபது முதல் எழுபது சதவிகிதம் என வட்டி வசூலிப்பார்கள். அவர்களிடம் இருந்து ஒரு நூறு ரூபாய் கடன் வாங்கினாலும் காலத்திற்கும் அவருக்கு அடிமையாய் இருக்க வேண்டியதுதான். இது விவசாயிகளுக்கு ஒரு முடிவான சாவுமணி.
வங்கிகள் தேசியமயமாக்கப்பட்டு கிராமப்புற பொருளாதாரத்தை வங்கிகளின் பணம் கொண்டு சிறக்கச் செய்த அந்த தனித்துவமான முயற்சி இப்பொழுது அழிந்துவருகிறது. இத்தகைய நிலை வேளாண்காடு வளர்ப்பின் மூலம் வெகுவாக மாறும். விவசாயிகள் வேளாண்காடு வளர்ப்பை மேற்கொள்ள அரசு ஒரு முறை மானியம் வழங்கினால் போதும் அதற்குப் பின் அவர் கடன் வாங்கும் நிலையில் இருக்கமாட்டார்.
மரத்தை வெட்ட வேண்டுமெனில் மரம் வளர்க்க வேண்டும்
வேளாண்காடு வளர்ப்போ மரப்பயிர் வேளாண் முறையோ ஒரு புதிய கருத்தோ திட்டமோ அல்ல. தென்னிந்தியாவில் எந்த ஒரு விவசாய நிலத்திலும் குறைந்தது இருபத்தைந்து முதல் ஐம்பது மரங்கள் நிலத்தின் வரப்புகளிலாவது இருந்த காலங்கள் உண்டு. கர்நாடகத்தில் தன் மகனோ மகளோ பிறக்கும்போது ஒரு மரம் நட்டு அந்த மரத்துக்கு அந்த குழந்தையின் பெயரை சூட்டும் வழக்கம் இருந்ததை நான் பார்த்திருக்கிறேன். உதாரணத்திற்கு அந்த மகள் வளர்ந்து 18-20 வயது ஆகும்போது அந்த மரமும் வளர்ந்து பழுத்திருக்கும். அம்மரத்தை அப்போது வெட்டினால் அவளின் கல்யாண செலவுகள் சரிசெய்யப்படும். ஒருவேளை அந்த மகன் பல்கலைக்கழகம் சென்று பயில விரும்பினால் அவனுக்குரிய மரம் அந்த செலவுக்கு ஈடாகும். பணம் தேவைப்படும்போது ஒரு விவசாயி செய்ய வேண்டியதெல்லாம் ஒரு மரத்தை வெட்டவேண்டியதுதான்.
இன்று உலகில் மர வணிகம் இருபத்தைந்தாயிரம் கோடி அமெரிக்க டாலர்களுக்கும் மேல். இந்த நிலையில் இந்தியா உலகின் எந்த பகுதிக்காவது மரக்கட்டைகளை ஏற்றுமதி செய்கிறதா? இல்லை. ஆனால், வெளிநாடுகளில் இருந்து ஒரு லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள மரப்பொருட்களை நாம் இறக்குமதி செய்து கொண்டிருக்கிறோம்.
இதற்கான காரணம் இந்திய விவசாயி யாரும் மர வளர்ப்பில் ஈடுபட விரும்பவில்லை. அப்படியே அவர் வளர்த்தாலும் அதை அவரால் வெட்ட இயலாது. நம்மிடம் அத்தகைய மூடத்தனமான சுற்றுச்சூழல் சட்டம் உள்ளது. அந்த சட்டத்தை நாம் மாற்றியமைக்க வேண்டும். மத்தியஅரசின் கடந்த ஆட்சியில் பதினெட்டு மர இனங்கள் இந்த சட்டத்தில் இருந்து விடுவிக்கப்பட்டன. அந்த மரங்களை நாம் வளர்த்து வெட்டி விற்க முடியும். ஆனாலும் உயர் மதிப்புடைய சந்தனம், செஞ்சந்தனம், தேக்கு மற்றும் தோதகத்தி மரம் (ரோஸ்வுட்) ஆகியவற்றை வெட்ட முடியாது. விவசாயி தன் நிலத்தில் எதை பயிரிட்டாலும் அவரால் அதை வெட்டி விற்கும் வகையால் சட்டம் இயற்றப்பட வேண்டும் என நான் விரும்புகிறேன்.
இப்போது மரம் வெட்டுவதை நான் ஆதரிப்பதாகக் கூறி சிலர் என்னை எதிர்த்து பிரசாரம் செய்யலாம். ஆமாம், மரம் வெட்டுவதை நான் ஆதரிக்கிறேன். ஆனால், மரம் வெட்டுவதற்கு முதலில் நீங்கள் மரம் வளர்க்க வேண்டும்தானே? நீங்கள் ஒரு கோடி மரங்கள் நட்டால் அதில் சிலவற்றை நீங்கள் வெட்டிக்கொள்ளலாம். மாறாக மரம் வெட்டுவதற்கு தடை விதித்தால் நீங்கள் மரம் நடக்கூட மாட்டீர்கள்.
காவிரி கூக்குரல் - சூழலியளுக்கும் பொருளாதாரத்துக்குமான ஒரு திருமணம்
கடந்த இருபத்தைந்து ஆண்டுகளில் படிப்படியாக ஆறுகள் வற்றி வருவதை மிக அக்கறையோடு நான் கவனித்துக் கொண்டு வருகிறேன். ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு இருந்த அளவில் காவிரி ஆறு இப்போது நாற்பது சதவிகிதம்தான் இருக்கிறது. இதற்கான தீர்வு காவிரி ஆற்றுப்படுகையில் வேளாண்காடு வளர்ப்பு மூலம் தேவையான அளவு பசுமைப்படுக்கை அமைப்பதுதான்.
"காவேரி கூக்குரல்" தொடங்குவதற்கான சாராம்சம் இதுவே. அது சூழலியளுக்கும் பொருளாதாரத்துக்குமான திருமணம். விவசாயிகளை வேளாண்காடு வளர்ப்பு மேற்கொள்ள செய்து 242 கோடி மரங்களை காவிரி ஆற்றுப்படுகையில் நடச்செய்ய வேண்டும் என்றே நாம் எண்ணுகிறோம். இது ஆற்றுப்படுகையின் மூன்றில் ஒரு பகுதியில் பசுமைப்படுக்கையை நிரப்பி காவிரி ஆற்றை புத்துயிர் கொள்ளச் செய்யும். தமிழ்நாட்டில் 69,760 விவசாயிகளை வேளாண்காடு வளர்ப்பு மேற்கொள்ளச் செய்துள்ளோம். அதனால் அவரது வருமானம் ஐந்து முதல் ஏழு வருடங்களில் முந்நூறு முதல் எண்ணூறு சதவிகிதம் உயர்ந்துள்ளது. இதை காவிரி ஆற்றுப்படுகையில் செயற்படுத்தத்தக்க ஒரு பெரிய அளவிலான திட்டமாக நிரூபித்தால் மற்ற ஆறுகளுக்கும் இதே செயல்முறையை நாம் கையாளலாம். மேலும், வேளாண்காடு வளர்ப்பு ஒரு பொருளாதார ரீதியாக வெற்றியடையக்கூடிய திட்டமாக நிரூபித்தால் மற்ற எல்லா இடங்களிலும் அது நிகழும்.