மரம் நடுவது யாருடைய வேலை?
இந்த வேலையை அரசாங்கத்து வேலையாகவோ அல்லது ஈஷா வேலையாகவோ யாரும் எடுத்துக்கொள்ள வேண்டாம். இந்த உலகில் யார் யார் சுவாசிக்க வேண்டியிருக்கிறதோ அவர்கள் எல்லோருக்கும் பொதுவான வேலைதான் இது. எனவே உற்சாகமாக முழு ஈடுபாடாக அனைவரும் இந்தப் பணியில் கைகோர்க்க வேண்டும்.
சத்குரு:
இந்த வேலையை அரசாங்கத்து வேலையாகவோ அல்லது ஈஷா வேலையாகவோ யாரும் எடுத்துக்கொள்ள வேண்டாம். இந்த உலகில் யார் யார் சுவாசிக்க வேண்டியிருக்கிறதோ அவர்கள் எல்லோருக்கும் பொதுவான வேலைதான் இது. எனவே உற்சாகமாக முழு ஈடுபாடாக அனைவரும் இந்தப் பணியில் கைகோர்க்க வேண்டும்.
நீங்கள் எந்த ஒரு செயலைச் செய்து கொண்டிருப்பவரானாலும் நீங்கள் மரங்களை நட வேண்டும். ஏனென்றால், உங்களால் ஆக்ஸிஜனும், நீரும், உணவும் இல்லாமல் வாழ முடியாது. இந்தியக் கலாச்சாரத்தில் மரங்களுக்கென்று கோவில்கள் இருப்பதும், மக்கள் அவற்றை வணங்குவதும், மிகவும் சாதாரணமான நடைமுறையாகும். அது கலாச்சாரம் மட்டும் பற்றியதல்ல. அது ஒருவிதமான உணர்தலிலும், புரிதலிலும் எழுந்தது. நம் வாழ்க்கைக்கு ஊட்டமளிக்கின்ற எதுவுமே வணங்குதலுக்குரியது என்று நாம் இங்கு நன்கு உணர்ந்திருக்கிறோம்.
மரங்கள் மனித வாழ்க்கையைப் பராமரிப்பதில் மிகப்பெரும் பங்கு வகிப்பதால், மக்கள் அவற்றை வணங்கினார்கள். ஒருகாலத்தில் ஒவ்வொரு கிராமமும் ஒரு மரத்தை வணங்கி வந்தது. ஆனால், மரங்களையே அகற்றி விடுமளவுக்கு இன்று நாம் உணர்வற்றுப் போய்விட்டோம்.
மரம் நடுவது என்பது இயற்கையைப் பராமரிப்பது பற்றியதல்ல. நீங்கள் ஒன்றும் இயற்கையைப் பராமரிக்க வேண்டியதில்லை. இயற்கைதான் உங்களைப் பராமரிக்கிறது. இயற்கைக்கு நாம் ஊட்டமளிப்பதாக நினைக்கிறோம். ஆனால் நாம் இயற்கையை அழித்துக் கொண்டும், துஷ்பிரயோகம் செய்து கொண்டும் இருக்கிறோம். எனவே அதனை ஈடு செய்யும் நடவடிக்கைகளை உடனே மேற்கொள்ள வேண்டும். ஆனால் தேவையான அளவு நடவடிக்கைகள் இன்னமும் மேற்கொள்ளப்பட வில்லை. இந்த பூமியின் வளங்களை நாம் துஷ்பிரயோகம் செய்து வருவதன் வேகம் மிக அதிகம் என்பதால், அதனை ஈடுசெய்யும் செயல்களின் அளவும் மிக அதிகமாக இருக்க வேண்டியது அவசியமாக உள்ளது. உண்மையிலேயே மிகவும் முக்கியமான செயல்பாடுகளை நாம் மேற்கொள்ளவில்லை என்றால், நாம் ஒரு தீர்வைக் காணப்போவது கிடையாது.
ஆகவே, நீங்கள் பிரச்சனையின் ஒரு பகுதியாக இருக்கப் போகிறீர்களா அல்லது தீர்வின் ஒரு பகுதியாக இருக்கப் போகிறீர்களா என்று தீர்மானித்துக் கொள்ளுங்கள். அடுத்துவரும் தலைமுறைக்கு பதில் சொல்லவேண்டிய நிலைமையில் நாம் இருக்கிறோம். நமக்கு புத்திசாலித்தனம் இருக்குமானால், தீர்விற்கான முனைப்பில் நாம் இறங்க முடியுமானால், உடனடியாகத் தகுந்த செயல்களைச் செய்யவேண்டும். இந்த பூமியில் வாழ்வதற்கான அதிகபட்ச புத்திசாலித்தனமான வழி இதுவாகத்தான் இருக்கும் என்பதை இந்த தலைமுறையைச் சேர்ந்த நபர் என்ற வகையில் நான் சிந்திக்கிறேன்.
Subscribe