உலகின் பல மரபுகளிலும் கலாச்சாரங்களிலும் எண்ணெய் கொண்டு ஏற்றப்படும் தீபங்கள் ஒரு முக்கிய அங்கமாய் இருந்தன - மின்சார விளக்குகள் பிரபலமாகும் வரை. மனித குல நாகரீகத்தில் செம்பு காலம் என அறியப்படுகிற கி.மு. 4500 - 3300 ஆண்டுகளிலேயே முதன்முதலாக எண்ணெய் விளக்குகளின் பயன்பாடு இருந்து வந்துள்ளதைப் பற்றி நாம் அறிகிறோம். ஆனால் இன்று சிலரது இல்லங்களில் மட்டுமே அவை உபயோகிக்கப்படுகின்றன - அதிலும் பெரும்பாலும் காட்சி பொருளாக மட்டுமே.

ஆனால் எளிமையான ஒரு எண்ணெய் தீபத்திற்கு அழகாக சுடர் விட்டு பிரகாசிப்பதைத் தவிர வேறு பல அம்சங்கள் இருப்பதையும், உங்கள் இல்லங்களில் நேர்மறையான சக்தி சூழலை எவ்வாறு உருவாக்கிக்கொள்வது என்பதையும் நமக்கு விளக்குகிறார் சத்குரு.

சத்குரு: ஒளி என்பது நமக்கு முக்கியமான ஒன்று, ஏனெனில் நமது கண்களின் பார்வைத் திறன் அப்படித்தான் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. ஒருவேளை நமது பார்வைக்கருவி வேறுவிதமாக, உதாரணத்திற்கு ஒரு ஆந்தைக்கு உரியது போல் வடிவமைக்கப்பட்டிருந்தால், ஒளி என்பது நமக்கு அவ்வளவு ஒன்றும் மதிப்பானதாக இருக்காது.

நல்லதொரு சூழ்நிலை அமைய, முதலில் நீங்கள் ஒரு விளக்கை ஏற்றுவது என்பது கலாச்சாரத்தில் ஒரு அங்கமாகவே இருக்கிறது.

இன்று உங்களிடம் மின்சார விளக்குகள் உள்ளன. எனவே எண்ணெய் விளக்கு எதற்கு என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால், சில நூறு வருடங்களுக்கு முந்தைய சூழலை கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள், விளக்கு இல்லாமல் வீட்டுக்குள் எந்த ஒரு வேலையும் செய்திருக்க முடியாது. வரலாற்று ரீதியாக விளக்கு என்பது நம் இல்லங்களில் இன்றியமையாத ஒரு பகுதியாக இருந்திருக்கிறது. அதற்கு இரண்டு காரணங்கள் உண்டு. ஒன்று, மின்சார விளக்குகள் இல்லை. இரண்டு, தங்கள் வீடுகளை மக்கள் கரிம பொருட்களைக் கொண்டு கட்டியதால் பெரிய சாளரங்களை‌ அமைக்க முடியவில்லை. பொதுவாகவே பண்டைய காலங்களில் வீடுகள் உட்புறத்தில் இருட்டாகவே இருந்தன. இன்றும் கூட கிராமங்களில் உள்ள பழைய வீடுகள் மற்றும் குடிசைப் பகுதிகளின் உட்புறத்தில் இருட்டாகவே இருப்பதை நீங்கள் காண முடியும். எனவே பகலிலும் கூட ஒரு விளக்கு ஏற்றப்பட்டு, அதை மையமாக வைத்து வீட்டின் வழிபடும் இடம் அமைக்கப்பட்டது.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

நல்லதொரு சூழ்நிலை அமைய, முதலில் நீங்கள் ஒரு விளக்கை ஏற்றுவது என்பது கலாச்சாரத்தில் ஒரு அங்கமாகவே இருக்கிறது. ஆனால், நமது இன்றைய பல பிரச்சனைகளின் காரணமாக, நம் நகங்கள் நீளமாக வளர்க்கப்பட்டு சாயம் பூசி அழகூட்டப்பட்டு இருப்பதினாலும் கூட நம்மால் இதை செய்ய முடியாமல் மாற்றாக மின்சார விளக்குகளை உபயோகிக்கிறோம். ஆனால் விளக்கேற்றும் வழக்கம் உள்ளவர்கள் கவனித்துப் பாருங்கள், நீங்கள் வெறுமனே அருகில் இருந்தாலே அந்த விளக்கு குறிப்பிட்ட வித்தியாசத்தை ஏற்படுத்துவதை உணர முடியும். நீங்கள் எந்த கடவுளையும் நம்ப வேண்டும் என்ற அவசியம் இல்லை. சூழ்நிலை இருளாக இல்லாவிட்டாலும், விளக்கின் வெளிச்சம் உங்கள்‌ பார்வைத்திறனுக்கு தேவைப்படவில்லை என்றாலும், அது உங்களுக்குள் ஏதோ ஒரு வித்தியாசத்தை உருவாக்குகிறது என்பதை நீங்கள் கவனித்ததுண்டா? இதற்கு காரணம் யாதெனில், நீங்கள் விளக்கை ஏற்றிய அந்த கணம், சுடர் மட்டும் எரிவதில்லை, அந்த சுடரைச் சுற்றி ஒரு குறிப்பிட்ட ஈத்தர் மண்டலம் (etheric layer - ஆகாய ஆற்றல்) இயற்கையாகவே நிகழ்கிறது.

ஈத்தர் மண்டலம் எங்கு இருக்கிறதோ அங்கே தகவல் தொடர்பு எளிதாக நிகழும். நீங்கள் உங்கள் வாழ்க்கையில் எப்போதாவது இரவில் பெரிதாக நெருப்பு மூட்டி அதைச் சுற்றி அமர்ந்து கதை பேசியிருக்கிறீர்களா? நீங்கள் அப்படி செய்திருந்தால், அப்போது அங்கே சொல்லப்படும் கதைகள் எப்போதுமே மக்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவதை கண்டிருப்பீர்கள். இதை நீங்கள் கவனித்ததுண்டா? பழங்காலத்தில் கதை சொல்பவர்கள் இதை நன்கு அறிந்திருந்தனர் - எரியும் சுடரொளியைச் சுற்றி அமர்ந்திருப்பவர்களுக்கு சொல்லப்படும் கதைகள்தான், மிக அழுத்தமாக பதிவதாக இருந்தன. அந்த‌ சூழலில் ஒருவரின்‌ உள்வாங்கிக் கொள்ளும் தன்மை சிறந்து விளங்கும்.

எரியும் சுடரொளியைச் சுற்றி அமர்ந்திருப்பவர்களுக்கு சொல்லப்படும் கதைகள்தான் மிக அழுத்தமாக பதிவதாக இருந்தன...

எனவே நீங்கள் ஏதாவது துவங்க வேண்டும் என்று விரும்பினால் அல்லது ஒரு குறிப்பிட்ட சூழலை உருவாக்க வேண்டும் என்று விரும்பினால், ஒரு விளக்கு ஏற்றப்படுகிறது. விளக்கை ஏற்றுவதால் ஒளி நிறைவது மட்டுமல்லாமல், அந்த இடத்தை ஒருவிதமான சக்தி நிலை நிரப்புவதை உணர்ந்ததால் வந்த புரிதல் இது. எண்ணெய் விளக்கு ஏற்றுவதால் சில தாக்கங்கள் ஏற்படும். சில வகையான தாவர எண்ணெய், அதிலும் குறிப்பாக நல்லெண்ணெய், விளக்கெண்ணெய் அல்லது நெய் உபயோகித்து விளக்கு ஏற்றினால், அந்த சூழலே நேர்மறையாக திகழும். தனக்கேயுரிய சக்தி வளையத்தை அது கொண்டிருக்கும்.

நெருப்பு என்பதே ஒளிக்கு மூலமாக இருப்பதுடன் பல வழிகளிலும் உயிரின் மூலப்பொருளாகவும் இருக்கிறது.

நெருப்பு என்பதே ஒளிக்கு மூலமாக இருப்பதுடன் பல வழிகளிலும் உயிரின் மூலப்பொருளாகவும் இருக்கிறது. நாம் எப்போதுமே நெருப்பை உயிரின் அடிப்படை மூலப்பொருளாக - ஒரு குறியீடாக பார்க்கிறோம். இன்னும் சொல்வதானால், உங்கள் உயிர் என்பது நெருப்பு என்றே பல மொழிகளிலும் குறிக்கப்படுகிறது. உங்களுக்குள் இருக்கும் 'உயிரின் நெருப்பு' உங்களை உந்தி செலுத்துகிறது. இந்த பூமிப்பந்தில் உள்ள உயிர்களுக்கு மூலசக்தியான சூரியன் ஒரு எரியும் நெருப்பு பந்துதானே?! நீங்கள் ஒரு மின்சார விளக்கை எரிய வைத்தாலும் சரி அல்லது வீடுகளில் எந்த வகையான அடுப்பை உபயோகித்து சமைத்தாலும் சரி அல்லது உங்கள் வாகனத்தை இயக்கும் என்ஜினாக (Internal Combustion Engine) இருந்தாலும் சரி - இவை அனைத்துமே நெருப்புதானே?! இந்த உலகில் உயிரை செலுத்தும் எல்லாமும் நெருப்புதான். எனவே நெருப்பு என்பது உயிர் மூலமாக பார்க்கப்படுகிறது. மேலும் அது தன்னைச் சுற்றி ஒரு சக்தி வளையத்தை உருவாக்கிக் கொள்கிறது. எல்லாவற்றிற்கும் மேலாக அது தேவையான சூழலையும் உருவாக்குகிறது. எனவே நீங்கள் உங்கள் நாளை துவங்கும்முன் காலையில் விளக்கு ஏற்றுவதே, அந்த தன்மையை உங்களுக்குள்ளும் கொண்டு வரவேண்டும் என்பதற்காகத்தான். இது ஒரு அடையாளக் குறியீடு; இயற்கையாகவே உங்களுக்குள் இருக்கும் உள்நிலை தன்மையை தூண்டுவதற்கான ஒரு வழி.

cuppini @Flickr