ஈஷா யோக மையத்தில் வெகுசிறப்பாக நடைபெற்ற ஆறாம்நாள் நவராத்திரி கொண்டாட்டம்... ஒரு பார்வை!

ஈஷா யோக மையத்தில் நவராத்திரி திருவிழா 9 நாட்கள் (அக்டோபர் 2 முதல் 10 வரை) விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. பாரம்பரிய இசை, பரதநாட்டியம் என்று மட்டுமல்லாமல், நாட்டுப்புற கலை வடிவங்களும் அரங்கேறவிருக்கிறது. 9 நாட்கள் திருவிழாவில், இன்றைய ஆறாம்நாள் கொண்டாட்டத்தில் திரு. சூர்யபிரகாஷ் அவர்களின் பாரம்பரிய கர்நாடக இசை நடையில் குரலிசை நிகழ்ச்சி நடைபெற்றது.

மாலை 6.45 மணியளவில் ஈஷா யோக மையத்திலுள்ள சூரியகுண்டம் முன்பாக துவங்கிய இந்நிகழ்ச்சியை நூற்றுக்கணக்கான மக்கள் கண்டுகளித்தனர். மனதை மயக்கும் பல தெய்வீக கீர்த்தனங்களை இனிய ராகங்களில் உற்சாகம் குறையாமல் திரு.R.சூர்யபிராகாஷ் வழங்கிய அந்த இசை விருந்து அனைவரையும் வெகுவாக ரசிக்க வைத்தது.

இசையுலகில் நீங்கா இடம் பிடித்த சூர்யபிரகாஷ்...

கர்நாடக இசையுலகில் பெரிதும் போற்றத்தக்க வித்வானாக விளங்கும் திரு.R.சூர்யபிரகாஷ் அவர்கள் உலகமெங்கும் உள்ள இசை இரசிகர்கள் மத்தியில் தனக்கென தனி இடம் பிடித்தவராவார். 7வயது முதலே தனது மாமா திருக்கோடிக்காவல் இராஜாமணி மற்றும் M.A.வேணுகோபாலன் ஆகிய இருவரிடமும் இசைப்பயிற்ச்சி மேற்கொண்டு வந்ததால் இசையில் பலமான அடித்தளம் கிடைக்கப்பெற்றார். அதன்பின் சுமார் 10 வருடங்கள் ‘கான கலாதரா’ திரு.மதுரை மணி ஐயரின் சிஷ்யரும் மருமகனுமான சங்கீத கலாநிதி திரு.T.V.சங்கரநாராயணன் அவர்களிடம் இசைப்பயிற்சி மேற்கொண்டார்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

அகில இந்திய வானெலியின் A கிரேடு கலைஞரான சூர்யபிரகாஷ் அவர்களின் இசை கச்சேரிகள் அவரது உற்சாகம் ததும்பும் தன்மையாலும், உயர்ந்த பாரம்பரிய இசை நடையாலும் கவனிக்கப்படுகின்றன. சென்னை டிசம்பர் இசைத் திருவிழா, தியாகராஜர் ஆராதனை, சிகாகோ தியாகராஜர் உத்சவம், ஃபெஸ்டிவல் ஆஃப் ஆசியா, தியாகராஜர் திருவிழா-டர்பன் என இந்தியா மட்டுமல்லாது உலகம் முழுக்க பல்வேறு நாடுகளில் கடந்த 20 வருடங்களாக இசைநிகழ்ச்சிகளை தொடர்ந்து வழங்கி வருகிறார். மேலும் கோஸ்மிக், கர்நாட்டிகா மற்றும் கலாக்கேந்திரா ஆகிய நிறுவனங்களுக்கு பல்வேறு இசைத்தொகுப்புகளை வழங்கியுள்ளார்.

டாக்டர்.பாலமுரளி கிருஷ்ணா அவர்களிடமிருந்து “கான கலா பிபஞ்சி” என்ற பட்டம், சென்னை மியூசிக் அகாசமியிடமிருந்தும் சிறந்த இசைகச்சேரிக்கான பரிசு என இவர் எண்ணற்ற விருதுகளுக்கும் பரிசுகளுக்கும் சொந்தக்காரர்.

லிங்க பைரவி ஊர்வலம்...

bharatanatyathil-thilaitha-moonram-nal-navarathri-kondattam-9

நவராத்திரியின் ஆறாம் நாளான இன்று, லிங்கபைரவி தேவி உற்சவ மூர்த்தியின் ஊர்வலம் கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. லிங்கபைரவியிலிருந்து துவங்கும் இந்த ஊர்வலத்தில், தியானலிங்கம் முன் நடைபெறும் ஆரத்தியில் அக்னி நடனமாடுவது உள்ளம்கவர் அம்சமாக இருக்கும். ஊர்வலம் முடிந்த பின்னர் ஒவ்வொருநாளும் பக்தர்களுக்கு ஈஷா மையம் சார்பில் அன்னதானம் வழங்கப்படுகிறது.

கொலு...

bharatanatyathil-thilaitha-moonram-nal-navarathri-kondattam-12

நவராத்திரி விழாக்காலங்களில் பாரம்பரியமாக வைக்கப்படும் கொலு கண்காட்சியானது, சூரியகுண்டத்தின் மேற்புற பிரகாரத்தில் தேவியின் பலவித ரூபங்களை குறிப்பிடும்படியாக பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.

நவராத்திரி விழாக் காலங்களில் லிங்கபைரவி, முதல் மூன்று நாட்கள் துர்கை அம்சமான குங்கும அலங்காரத்திலும் அடுத்த மூன்று நாட்கள் மஹாலஷ்மி அம்சமான மஞ்சள் அலங்காரத்திலும், இறுதி மூன்று நாட்கள் சரஸ்வதி அம்சமான சந்தன அலங்காரத்திலும் பக்தர்களுக்குக் கண்கொள்ளா விருந்தாக காட்சியளிப்பாள்.

இந்த 9 நாட்களில், தேவிக்கு சிறப்பு அர்ப்பணிப்புகளாக நெய்தீபம், மாங்கல்ய பலசூத்ரா, அபிஷேகம், சமர்ப்பணம் போன்ற அர்ப்பணைகளை செய்வதன் மூலமும், ஒவ்வொரு நாள் மாலை நடக்கவிருக்கும் மஹா ஆரத்தி, ஊர்வலம், மற்றும் சிறப்பு மந்திர உட்சாடனைகளில் பங்குபெறுவதன் மூலமும் அளப்பரிய நன்மைகளைப் பெற முடியும். நவராத்திரி காலத்தில் தேவியை வழிபடுவது, ஒருவர் உலக வாழ்வில் நல்வாழ்வு என்று நினைக்கும் அனைத்தையும் பெற உறுதுணை புரியும். அதனுடன் ஆன்மீகத்தின் உயர்ந்த பரிமாணங்களை எட்டவும் ஒரு வாய்ப்பாக இருக்கும்.

இந்த ஒன்பதுநாட்கள் நவராத்திரி திருவிழாவில் கலந்துகொள்ள, பொதுமக்கள் அனைவருக்கும் அழைப்புவிடுத்துள்ள ஈஷா யோக மையம், கோவையிலிருந்து ஈஷாவிற்கும், நிகழ்ச்சி முடிந்தவுடன் ஈஷாவிலிருந்து கோவைக்கும் இடையிலுள்ள கிராமங்களுக்கும் இலவசப் பேருந்து சேவையையும் வழங்கியுள்ளது.

நாளை (08-10-2016)

  • ஏழாம்நாள் விழாவான நாளை முத்தமிழ் கலை மன்றம் வழங்கும் தெருக்கூத்து நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.
  • நவராத்திரி நாட்களில் அக்டோபர் 2,5,8 ஆகிய நாட்களில் மாலை 5:30 முதல் 6:10 வரை லிங்கபைரவியில் நடைபெறும் நவராத்திரி சிறப்பு பூஜையின் நேரடி இணைய ஒளிபரப்பில் இணைந்து, தேவியின் அருள்மழையில் நனைந்திடுங்கள்!