நேரம் இல்லை எனச் சொல்பவர்களுக்கான டிப்ஸ்...
மனித மனம் மிகப் பெரும் சக்தி வாய்ந்தது. அதை முறையாகப் பயன்படுத்துவது எப்படி என்று அறிந்து கொண்டு விட்டீர்களென்றால், அற்புதமான பல செயல்களைப் புரிவீர்கள்.
சத்குரு:
Subscribe
நேற்று என்னவெல்லாம் செய்தீர்கள் என்று ஒன்று விடாமல், உங்களால் பட்டியலிட முடியுமா? முடியாது. ஏனென்றால், அதில் இரண்டு அல்லது மூன்று சதவீத வேலையைத்தான் நீங்கள் கவனத்தில் பதித்துச் செய்தீர்கள். மற்றச் செயல்கள் எல்லாம் கவனமின்றி, உங்கள் மனம் ஒருமுகப்படாமல் செய்யப்பட்டவை.
நீங்கள் வேலை மும்முரத்தில் இருப்பதை விட குருட்டுச் சிந்தனையில் இருக்கும் நேரமே அதிகம். அப்புறம் எப்படி நேரம் போதுமானதாக இருக்க முடியும்?
மனித மனம் மிகப் பெரும் சக்தி வாய்ந்தது. அதை முறையாகப் பயன்படுத்துவது எப்படி என்று அறிந்து கொண்டு விட்டீர்களென்றால், அற்புதமான பல செயல்களைப் புரிவீர்கள். நேரம் என்பது இரண்டாம் பட்சம்தான். இப்போது கிடைக்கும் நேரத்தின் பெரும்பகுதியில் என்ன செய்கிறோம் என்பதையே உணராமல் செய்து கொண்டிருப்பதால் சரியான பலனின்றிப் போகிறது.
ஆண்ட்ரூ கார்னகி (Andrew Carnegie) பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? அமெரிக்காவின் மிகப் பெரும் பணக்காரர்களில் ஒருவராக இருந்தவர். அவர் மிகக் குறுகிய காலத்தில் மிகப்பெரும் பணக்காரரானது அமெரிக்க அரசுக்கு சந்தேகத்தைக் கிளப்பியது. புலன் விசாரணைகள் நடத்தியும் அவர்களால் குற்றங்கள் எதையும் கண்டுபிடிக்க முடியவில்லை. பாராளுமன்ற உறுப்பினர்கள் அவரை நேரடியாகச் சந்தித்தனர். ‘எப்படி இவ்வளவு குறுகிய காலத்தில் இவ்வளவு பணம் சேர்த்தீர்கள்?’ என்று கேட்டனர்.
கார்னகி சொன்னார்: ‘என்னால் தொடர்ந்து ஐந்து நிமிடங்களுக்கு மனதை ஒருமுகப்படுத்தி வைத்திருக்க முடியும். உங்களால் முடியுமா என்று பாருங்கள்.’ அவர்கள் முயற்சி செய்தார்கள், தோற்றுப் போனார்கள்.
கார்னகி சொன்னார்: ‘உங்களால் ஐந்து நிமிடங்களுக்குக் கூட மனதை ஒருமுகப்படுத்தி வைக்க முடியவில்லை. இப்படிப்பட்ட மனதுடன் இருக்கும் நீங்கள் அமெரிக்காவை ஆள்வது எப்படிச் சரியாக இருக்கும்?’
உங்கள் மனம் மிக அற்புதமானதோர் கருவி. நீங்கள் சொன்னதிலிருந்து தவறாமல், முழுமையாகச் செயல்பட உங்கள் மனதைத் தயார்ப்படுத்திவிட்டால், எந்தத் தொழிலையும் எந்த சிரமும் இல்லாமல், மிக எளிதாக செய்து முடிக்க இயலும். அதற்கப்புறமும் நிறைய நேரம் மிச்சம் இருக்கும்.