Question: சத்குரு, தியானம் செய்வதால் பல பலன்கள் கிடைக்கும் என்று சொல்லியிருக்கிறீர்கள். அப்படியிருக்கையில், குழந்தையில்லாதவர்கள் தியானம் செய்வது கருத்தரிக்க உதவுமா?

சத்குரு:

நீங்கள் தியானம் செய்வது என்பது வேறு. தியானத்தன்மையில் இருப்பது என்பது வேறு. தியானத்தன்மை என்பதொரு செயலல்ல. அதுவொரு நிலை. உங்களிடம் தியானத்தன்மை உருவானால் உங்களின் எல்லா நிலைகளுமே உயர்ந்தவொரு பரிமாணத்தில் இருக்கும். அந்தப் பரிமாணத்தில் நீங்கள் இயங்கத் தொடங்கினால் கருத்தரித்தாலும் கருத்தரிக்காவிட்டாலும் நீங்கள் கவலைப்பட மாட்டீர்கள்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.
நான் மிகவும் அற்புதமான தன்மையில் இருக்கிறேன். என்னைப்போல் இன்னோர் உயிரை இந்த உலகுக்குத் தரவேண்டும் என்னும் எண்ணம் இருந்தால், அவர்கள் கருத்தரிக்க வேண்டும்.

கருத்தரித்தல் என்பது இயற்கையாகவே நிகழுமொரு சம்பவம். இதற்கு அளவு கடந்த முக்கியத்துவம் தரப்படுகிறது. தாய்மைநிலை என்பது உண்மையிலேயே அற்புதமானதுதான். குழந்தைகள் முக்கியமனவர்கள்தான். ஆனால் அதற்கு இன்று தரப்படும் அதீத முக்கியத்துவம், அதன் அடிப்படைத் தன்மையையே அறிந்துகொள்ள முடியாமல் செய்கிறது. கருத்தரித்தல் என்பது இயற்கையாக நடக்க வேண்டியதொரு நிகழ்வு. அது உங்களுக்கு நிகழ வேண்டுமா, வேண்டாமா என்று தேர்வு செய்யும் வாய்ப்பு உங்களுக்கு உள்ளது. ஆனால் அது இயல்பான, இயற்கையான நிகழ்வாகப் பார்க்கப்பட வேண்டுமே தவிர, அதை ஒரு நோய் போலக் கையாளக் கூடாது.

புற்றுநோயை குணப்படுத்த யோகாவில் வழியுண்டா என்று நீங்கள் கேட்டால் அது முற்றிலும் வேறு விஷயம். அதை நான் வேறுவிதமாக அணுகுவேன். ஆனால் கருத்தரித்தலோ கருத்தரிக்காமையோ ஒரு நோயல்ல.

யாருக்கு கருத்தரிக்க உரிமையிருக்கிறது தெரியுமா? நான் மிகவும் அற்புதமான தன்மையில் இருக்கிறேன். என்னைப்போல் இன்னோர் உயிரை இந்த உலகுக்குத் தரவேண்டும் என்னும் எண்ணம் இருந்தால், அவர்கள் கருத்தரிக்க வேண்டும். நீங்கள் உங்கள் வாழ்வை துன்பமயமாக ஆக்கிக் கொண்டிருந்தால், உங்களைப்போல் இன்னோர் உயிரை உருவாக்குவதே ஒரு குற்றம்தான். எனவே உங்களை ஆனந்தமாக அற்புதமாக வைத்துக் கொண்டு பத்து குழந்தைகளைப் பெற்றாலும் தவறே இல்லை.

எனவே கருத்தரிக்கும்போது தியானத் தன்மையில் இருங்கள். கடவுள் உலகைக் காப்பாற்றட்டும் என்று பலர் சொல்வார்கள். இல்லை. நீங்கள்தான் உலகைக் காப்பாற்ற முடியும். கருத்தரிக்காமல் இருப்பதன் மூலம் நீங்கள் உலகைக் காப்பாற்ற முடியும். இன்று மனிதர்கள் சுற்றுச் சூழலைப் பற்றிப் பேசுகிறார்கள். உலகம் வெப்பமயமாதல் பற்றிப் பேசுகிறார்கள். இந்த சிக்கலுக்கெல்லாம் மக்கள் தொகைதான் அடிபபடைக் காரணம்.
இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் உலக மக்கள் தொகை நூற்றறுபது கோடியாக இருந்தது. இப்போது எழுநூறு கோடியாக உயர்ந்திருக்கிறது. ஐ.நா. சபையின் கணக்கீட்டின்படி, 2050ல், உலகமக்கள் தொகை தொள்ளாயிரத்து அறுபது கோடியாக உயர்ந்திருக்கும் என்கிறார்கள். அப்படி ஒருநிலை வருமென்றால் இப்போது நீங்கள் பயன்படுத்தும் இயற்கை வளங்களில் நாற்பது சதவிகிதத்தை மட்டுமே பயன்படுத்த முடியும். நீங்கள் உண்ணும் உணவு, பருகும் நீர், சுவாசிக்கும் காற்று, எல்லாமே நாற்பது சதவிகிதம் குறைவாகத்தான் பயன்படுத்த வேண்டியிருக்கும். நிமிடத்திற்கு பன்னிரண்டிலிருந்து பதினைந்து முறை சுவாசிக்கிறீர்கள் என்றால், ஐம்பது வருடங்கள் கழித்து நிமிடத்துக்கு நான்கு முறையோ ஐந்து முறையோதான் நீங்கள் சுவாசிக்க முடியும். உங்கள் குழந்தைகள் முதியவர்களாகும் போதும், உங்கள் பேரப்பிள்ளைகள் வாழ்வைத் தொடங்கும்போதும் இத்தகைய நிலை ஏற்படக் கூடும். கூடுதல் பிராணவாயுவை சுவாசிக்க உங்கள் நாசிகளின் அளவு இன்னும் பெரிதாய் ஆக்கப்பட வேண்டியிருக்கும்.

1947ல் முப்பது கோடியாக இருந்த இந்திய மக்கள் தொகையை, அறுபதே ஆண்டுகளில் நான்கு மடங்குகளாகப் பெருக்கியிருக்கிறோம். மத்திய அமைச்சர் ஒருவரும் தில்லியின் முதலமைச்சரும் என்னுடன் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்கள். அப்போது ஒரு புள்ளிவிபரத்தை சொன்னார்கள். 1947ல் ஒரு தனிமனிதனின் பயன்பாட்டுக்காக இருந்த தண்ணீரின் அளவு, இன்று இருபது சதவிகிதமாகக் குறைந்துவிட்டது என்றார்கள். இப்போது நீங்கள் பாட்டிலில் தண்ணீரை குடிக்கப் பயன்படுத்துகிறீர்கள். எதிர்காலத்தில் பாட்டில் தண்ணீரை குளிக்கப் பயன்படுத்தும் நிலை உருவாகலாம்.

எனவே மிகவும் உன்னதமான ஓர் உயிரை இந்த உலகுக்குத் தரமுடியும் என்று தோன்றினால் மட்டுமே கருத்தரிப்பது பற்றிக் கவலைப்படுங்கள். கருத்தரிக்கவிட்டால் என் தாய்மை என்னாவது என்னும் எண்ணம் வேண்டாம். தாய்மை என்பது உங்கள் உடற்கூறு சம்பந்தப்பட்டதல்ல. உங்கள் உணர்வு சம்பந்தப்பட்டது. உங்களை சுற்றியிருப்பவர்களை உங்களில் ஒருவராக அரவணைக்கவும் உள்வாங்கவும் முடிந்தால், இந்தப் பிரபஞ்சத்துக்கே நீங்கள் தாயாக உணரலாம்.

1970களிலும் 80களிலும் குடும்பக் கட்டுப்பாட்டுத்துறை என்றொரு துறை இருந்தது. இன்று குடும்ப நல்வாழ்வுத்துறைதான் இருக்கிறது. அப்படியானால் குடும்பக் கட்டுப்பாட்டின் தேவை முடிந்து விட்டதாகப் பொருளில்லை. மக்களுக்கு கட்டுப்பாடு பிடிக்காது. நலவாழ்வுதான் பிடிக்கும். நாமிருவர் நமக்கிருவர் என்று சொன்னார்கள். பிறகு நாமிருவர் நமக்கொருவர் என்றார்கள். இன்று நாமிருவர், நமக்கெதற்கு இன்னொருவர் என்று சொன்னாலும் சொல்வார்கள். இன்னோர் உயிரை உங்களில் ஓர் அங்கமாக உணர்ந்தால் அதுவே தாய்மையின் அற்புதமான தன்மைதான். அதற்கு யாரும் உங்களுக்குத் தடை சொல்லப் போவதில்லை. இன்னொருவரின் உதவியும் அதற்குத் தேவையில்லை.