யோகேஷ்வர லிங்கம் - பிரதிஷ்டை Live Blog - நாள் 2
இதுபோன்ற ஒரு பிரதிஷ்டையில் பங்கு பெறுவது மிகச் சக்தி வாய்ந்தாக இருக்கும். இங்கு வழங்கப்படுவதை, நீங்கள் முயன்று பெறவேண்டுமென்றால், பல பிறவிகளுக்கு அதிதீவிர ஆத்ம சாதனைகள் தேவைப்படும். இங்கோ, அந்தச் சக்தி ஒளிவீசிக் கொண்டிருக்கிறது. இதனை நீங்கள் உள்வாங்கிக் கொண்டால், நீங்களும் அதிர்வுகளோடு ஒளிவீசுவீர்கள்.
யோகேஷ்வர லிங்கம் பிரதிஷ்டையின் முதல் நாள், இரண்டாம் நாள் மற்றும் மூன்றாம் நாள் பதிவுகளை இங்கே காணலாம்.
பிப்ரவரி 22, 2017 12:10am
கென்யாவிலிருந்து கோவை வரை
கென்யாவிலிருந்து தொழில் காரணமாக உகாண்டாவிற்கு வந்தபோது தற்செயலாக ஈஷா கிரியா பயிற்சியை கற்றுக்கொண்டார் பௌலின். அதன் பிறகு ஈஷா யோகா பற்றி தெரிந்து கொள்ள அவருக்கு ஆர்வம் பெருகியது. சில மாதங்களுக்குள் சத்குருவிடம் நேரடியாக ஷாம்பவி தீட்சைப் பெற்றார். தியானலிங்க பிரதிஷ்டைப் பற்றி புத்தகத்தில் படித்த இவர் ஆதியோகி பிரதிஷ்டை வாய்ப்பை தவறவிடக்கூடாது என கோவை நோக்கி பயணம் செய்தார். எனக்கு இந்த இடம் இந்த மக்கள் அனைத்தும் மிகவும் பிடித்திருக்கிறது என்று கூறும் இவர் பிரதிஷ்டைப் பற்றி கூறும்போது...
"மந்திரத்தை தொடர்ந்து உச்சரித்தபோது எனக்குள் ஒரு புது அதிர்வை உணர முடிந்தது. சத்குரு மூச்சுப் பயிற்சியைக் கூறும்போது எனக்கு கை வலிக்க ஆரம்பித்தது. ஆனால், இங்கே இருக்கும் தீவிரமான சக்தியை உணர்ந்தபின், 'என் கையே உடைந்து கீழே விழுந்தாலும் பரவாயில்லை. இந்த மூச்சுப் பயிற்சியை ஒரு நொடியும் விடாமல் செய்வேன்' என்று எனக்குள் சொல்லிக் கொண்டேன். வாழ்நாளில் ஒரே ஒருமுறை மட்டும் கிடைக்கும் வாய்ப்பை எப்படி தவறவிடுவது? அதனால், ஒரே நோக்கமாக என்னை முழுமையாக இதில் ஈடுபடுத்திக் கொண்டேன். பரவசமாய் இருக்கிறது," என்கிறார்.
ஆன்மீகத் தேடலில் இவர்களது தீவிரமும் உறுதியும் நம்மை நெகிழ வைக்கிறது.
பிப்ரவரி 21, 2017 12:00am
பத்து மணிக்கு துவங்கிய நேற்றைய இரவு வகுப்பு 12 மணி வரைத் தொடர்ந்தது.
ஆதியோகி ஆலயம் சக்தியின் உச்சத்தில்
உயிராகி
உருவாகி
தற்போது குருவாகி நிற்கின்றார் யோகேஷ்வரர்.
அவன் உயிர்கொண்ட அந்தத் தருணம் குருபூஜையுடன் நேற்றிரவு முடிந்தது.
பிப்ரவரி 21, 2017 9:43pm
இழந்தேன்
வார்த்தைகளில் அடங்கா சிவனை தன் கவிதைகளில் வெளிப்படுத்துகிறார் சத்குரு!
"இனிமையான ஒலிகளை கேட்ட பின்னர்
அருமையான ஒளிகளை கண்ட பின்னர்
அற்புத உணர்ச்சிகளை உணர்ந்த பின்னர்
என் அறிவை முழுமையாய் இழந்தேன் அவனுக்காக
ஒன்றுமாய் இல்லாதவன் - இருந்தும் இருப்பவன்
வேறு ஒருவரையும் போன்றவன் அல்லன் அவன்!"
-சத்குரு
பிப்ரவரி 21, 2017 9:39pm
களைக்கட்டியது யக்ஷா
கலைஞர்கள் Dr. மஞ்சுநாத் மற்றும் நாகராஜ் இருவரும், மைசூர் சகோதரர்கள் என்றும் அறியப்படுகிறார்கள். தங்கள் வயலினிசை ஞானத்தால், ரசிகர்களும், விமர்சகர்களும் ஒருங்கே வியக்கும் வண்ணம், இசை உலகில் புயலாக நுழைந்தபோது இவர்களுக்கு வயது 8.
இவர்கள் வயலின் வாசிக்க ஆதியோகியின் பின் ஆயிரம் விளக்குகள் சுடர்விட ரம்யமான மாலைப் பொழுது அருமையான வயலின் இசையில் கழிந்தது.
சாதாரணமாக பாடல் முடிந்தபிறகு மக்கள் கைத்தட்டுவார்கள். ஆனால், இந்த கலைஞர்கள் வாசிக்கும்போதே மக்கள் இடையிடையே எழுந்துநின்று கைத்தட்டல்களைப் பெற்றனர்.
முதல்முறையாக யக்ஷா நிகழ்ச்சியில் நம் ஈஷாவின் trend ஆன பாடல் "அலை அலை" யின் ராகத்தை வயலினில் இசைக்க, கூட்டம் எழுந்து ஆடி ஆரவாரமாய் கைத்தட்டியது.
முடிந்ததும் "once more" என்று அனைவரும் குரல்கொடுக்க கலைஞர் மீண்டும் அந்தப் பாடலை இசைக்க அங்கே மகிழ்ச்சி வெள்ளம்!
பிப்ரவரி 21, 2017 9:00pm
தற்போது ஈஷா யோக மையத்தில் இருக்கும் சூழ்நிலையை விவரிப்பது சற்று கடினமே!
இன்றிரவு நடக்கும் பிரதிஷ்டை மிகவும் முக்கியமானது என்று சத்குரு கூறிய போது, "முடிந்தால் தீர்த்தகுண்டத்தில் குளித்துவிட்டு வரலாம். அமைதியாக சாதனாவிலிருந்து உங்களைத் தயார் செய்து வரலாம் என்றார்"
ஒருபுறம் தன் உயிர் கொண்டு கல்லை கடவுளாக்கும் நம் குரு! மறுபுறம் தன்னையே அவர் பாதத்தில் சமர்ப்பித்து இரவு பகலாக செயலில் ஈடுபட்டிருக்கும் தன்னார்வத் தொண்டர்கள்! இப்படி இருக்க பங்கேற்பாளர்களும் அதே தீவிரத்தில் இருப்பது மிக மிக ஆச்சர்யமான ஒன்றாக இருக்கிறது.
இடைவேளையின் போதும் இடைவிடாத சாதனாவில் பங்கேற்பாளர்கள்.
வெளிநாடுகளில் மிக உயர்ந்த வாழ்க்கைத் தரத்திற்கு பழகியவர்கள்கூட இங்கே கூட்டத்தின் காரணமாக சில சிரமங்களுக்குள்ளானாலும் எவரும் எதையும் பொருட்படுத்தவில்லை.
தியானலிங்கத்தில் அமர்ந்து தியானம்! 2 மணிநேரம் வரிசையில் நின்றால்தான் தீர்த்தகுண்டத்தில் நீராட முடியும் என்ற நிலையிலும் தீர்த்தக்குண்டத்தின் முன் மணிக்கணக்கில் நிற்கும் பங்கேற்பாளர்கள்.
ஆங்காங்கே அமர்ந்து சுகக்கிரியா தியானம் என்று தீவிரமாக இருக்கும் பங்கேற்பாளர்கள் இதுவரை எங்கும் கண்டிராத அதிசயம்.
ஈஷா வெறும் தலைவலிக்காகவும் மூட்டுவலிக்காகவும் யோகப் பயிற்சி செய்யும் மனிதர்களை உருவாக்கவில்லை. பணத்திற்காகவும் புகழுக்காகவும் மனிதன் எத்தனையோ சிரமங்களை அனுபவிக்கிறார். ஆனால், இது அதுபோன்ற ஒரு பலனைக் கொடுக்கும் செயல்முறை அல்ல. இது வேடிக்கை பொழுது போக்கும் அல்ல.
உறுதியாக இந்தப் பாதையில் செல்லும் இத்தனை ஆயிரம் பேரை ஈஷா உருவாக்கியிருக்கிறது.
இது வரலாறு. நம்ப இயலாத வரலாறு.
பிப்ரவரி 21, 2017 6:30pm
Subscribe
அமெரிக்காவிலிருந்து வந்திருக்கும் ப்ரிகெட் வாக்கரை சந்தித்தோம். இவர் நியூஜெர்ஸியில் ஒரு மருத்துவமனையில் மேலாளராக பணிபுரிகிறார். தனது வேலையிலிருந்து விடுப்பு எடுத்து இந்தியா வந்திருக்கும் இவரை இந்தப் பிரதிஷ்டை பற்றி உங்கள் அனுபவம் என்ன என்று கேட்டவுடன்...
"Amazing power" என்று ஆரம்பித்தவர் எனக்கு என்ன வார்த்தைகளை உபயோகிப்பது எனத் தெரியவில்லை. truly uplifting energy என்றார். இரண்டு நாள்தான் ஆகியிருக்கிறது. அதற்குள் எனக்குள் மிகப் பெரிய மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. என்னுடைய உண்மையான தன்மையுடன் என்னைத் தொடர்பு கொள்ளச் செய்கிறது," என்றார்.
பிப்ரவரி 21, 2017 3:40pm
முக்கியமான ஒரு தருணம்
இன்று இரவு உணவிற்கு பின் நடக்கும் நிகழ்வு மிக மிக முக்கியமானது. இதனை நீங்கள் முழுமையாய் உணரவேண்டும் என்று நான் விரும்புகிறேன். முழுமையாக இதற்கு உங்களை கொடுங்கள் என்று கூறி மேடையை விட்டு இறங்கியிருக்கிறார்.
ஒரு நீண்ட இடைவேளைக்கு பின், இரவு 10 மணிக்கு அடுத்த செஷன் துவங்கவிருக்கிறது.
பிப்ரவரி 21, 2017 2:30pm
மிகத் தீவிரமாய்
இடைவேளைக்குப் பின் சத்குரு வந்தவுடன் துவங்கியது மந்திர உச்சாடனம். அதனைத் தொடர்ந்து சாதானா தீவிரமடைகிறது.
பிப்ரவரி 21, 2017 12:00pm
உலகம் செய்யாதது!
இந்தப் பிரதிஷ்டை பற்றி ஒரு வரி சொல்லுங்களேன் என்றதும்...
"உலகில் யாரும் செய்யாதது. யாராலும் நினைத்துக்கூட பார்க்க முடியாத ஒன்று, இதை காண்பது என் வாழ்நாளில் நான் செய்த பாக்கியம். நான் திருச்சியில் நவதானிய மண்டி வைத்திருக்கிறேன். 99 ஆம் ஆண்டிலிருந்து ஈஷாவில் தன்னார்வத் தொண்டு செய்து கொண்டிருக்கிறேன்.
சந்திரகுண்ட பிரதிஷ்டையின்போது வெகு சிலர் மட்டும் இருந்தோம். அப்போது திருச்சியில் எங்கள் வீட்டிலேயே சமைத்து, இங்குள்ளோருக்கு பரிமாறினோம். இப்போது இருக்கும் இந்த கடல்போன்ற கூட்டத்தை அன்று நாங்கள் கற்பனைகூட செய்து பார்க்கவில்லை.
தற்போது உலகெங்கிலும் இருந்து மக்கள் வந்திருப்பது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது," என்கிறார் திரு. கருப்பையா.
பிப்ரவரி 21, 2017 1:10pm
கைகளாக இருந்து அர்ப்பணித்துக் கொள்ள விரும்புகிறேன்
மிகவும் பரபரப்பான வாழ்க்கை சூழலில் இருந்து, சென்னை இன்ஜினியர் வித்யாலக்ஷ்மி. இந்த பிரதிஷ்டையில் கலந்துகொள்ள வந்திருக்கிறார்.
"பிரதிஷ்டை என்றால் என்னவென்று தெரியாது. அதனால் எந்த எதிர்ப்பார்ப்பும் இல்லை. சத்குரு சொல்வதை மட்டும் செய்கிறேன். அவர் அனைத்தையும் பார்த்துக்கொள்கிறார். ஒவ்வொரு செயல்முறையிலும் நம்மை ஒரு தாய்போல பார்த்துக்கொள்கிறார்.
இந்த அறையில் இருக்கும் தீவிரத்தை பார்க்கும்போது இந்த உலகில் இதைவிட வேறு எதுவும் முக்கியம் இல்லை என்று தோன்றுகிறது.
அவர் செய்வது எனக்கு புரியவில்லை என்றாலும் இந்த உலக நன்மைக்காக ஏதோ ஒன்றை செய்கிறார் என்பதை உணர முடிகிறது. அந்த பணியில் அவரது கைகளாக இருந்து என்னை அர்ப்பணித்துக் கொள்ள விரும்புகிறேன்," என்கிறார்.
பிப்ரவரி 21, 2017 1:00pm
தீவிரமாக பிரதிஷ்டை நிகழ்வுகள் நடந்து கொண்டிருக்கும்போது, அதுவரை பேசாத சத்குரு, வீல் சேர் பயன்படுத்தும் பங்கேற்பாளர் ஒருவரிடம் நின்று பேசினார். அருகிலிருந்த ஸ்வாமியிடம் இவருக்கு தண்ணீர் தேவைப்படுகிறது, கொண்டுவந்து தாருங்கள் என்றார்.
12,000 த்திற்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்களில் ஒருவருக்கு தண்ணீர் தேவை. மிகத் தீவிரமான சூழ்நிலையில் இப்படி ஒரு மனிதர் மீதும் தனிப்பட்ட கவனம் செலுத்த முடிகிறது. இதயமில்லா யோகியின் பிரதிஷ்டையில், இதயத்தை தொடும் காட்சி.
பிப்ரவரி 21, 2017 12:45pm
நன்றியுணர்வில் மக்கள்
தன் சக்தியை இன்று காற்றில் வீசி எறிந்திருக்கிறார். தப்பித்துக்கொள்ள இயலாது இதன் தாக்கத்தினை.
"இதயம் நொறுங்கும் சாதனா
இடைவிடாமல் பல பிறவிகள்
வாட்டி வதைத்த வெயிலும்
கடுமையான குளிரும், கூடவே வந்த தோழர்கள்
பட்டினியுடன் பல நாட்கள்
உறக்கமின்றி கழிந்த இரவுகள்
இன்னும் என்னென்ன வேதனைகள் கொண்டாய்?
ஷம்போ!
எதற்காக இதனை எமக்கு எளிதாக வழங்குகிறாய்?"
பங்கேற்பாளர்கள் நன்றி உணர்வில்...
பிப்ரவரி 21, 2017 12:00pm
உயிர் வேள்வி
முதலில், லிங்கத்தின் மீது ஒரு சொம்பினை கவிழ்த்தினார். அதில் ஏதோ கரைத்து வைக்கப்பட்டிருக்க, சொம்பினை சத்குரு அவர்கள் நீக்கியபோது லிங்கம் முழுவதும் பரவியது. அடுத்து மற்றொரு சொம்பினை லிங்கத்தின் மீது வைத்தார். மூன்று திசைகளில் ஒரு புனிதமான நூலால் ஒரு செம்பு பாத்திரத்துடன் லிங்கம் இணைக்கப்பட்டிருக்கிறது.
சத்குரு தீவிரமாய் ஏதோ ஒரு ப்ராசஸ் செய்ய, அறை முழுவதும் பரவசக் குரல்கள் நீண்ட நேரமாய், இடைவிடாமல் ஒலித்துக் கொண்டிருக்கிறது. சவுன்ட்ஸ் ஆப் ஈஷாவின் மத்தள இசை பிரம்மாண்டமாய் அறையை நிரப்பிக் கொண்டிருக்கிறது.
மேடையில் மக்களை பார்த்தவாறு நடந்துகொண்டிருக்கிறார். காலையிலிருந்து அவர் வார்த்தைகளால் ஒன்றும் பேசவில்லை. மௌனத்தில் தான் இருந்து, நமக்கும் மௌனத்தின் சுவை அளித்துக் கொண்டிருக்கிறார். அவர் பேசவேண்டாம் என்றே இருக்கிறது.
"நமாமீஷ ஈஷான..." என்ற பாடல் ஒலித்துக் கொண்டிருக்கிறது.
பிப்ரவரி 21, 2017 11:15am
பிரதமரின் Twitter பதிவு
On Mahashivratri, will be in Coimbatore to join the programme organised by @ishafoundation at the Isha Yoga Center. @SadhguruJV #Adiyogi pic.twitter.com/SZnaHbrlij
— Narendra Modi (@narendramodi) February 21, 2017
On the App, share your views with me for the programme on 24th. I may refer to some of them in my speech. https://t.co/TYuxNO0R6P
— Narendra Modi (@narendramodi) February 21, 2017
பாரதப் பிரதமர் மோடி அவர்கள் தனது Twitter பக்கத்தில், தான் மஹாசிவராத்திரி அன்று கோவை ஈஷா யோக மையத்திற்கு செல்லவிருப்பதாக பதிவிட்டிருக்கிறார். இதனைப் பலரும் வரவேற்று, பதிவுகளை லைக் செய்தும் retweet செய்தும் வருகின்றனர்.
மேலும், உங்கள் கருத்துக்களை என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நான் அந்தக் கருத்துக்களை என் பேச்சில் அன்று சேர்த்துக் கொள்வேன் என்று தெரிவித்திருக்கிறார் பிரதமர். இந்த வாய்ப்பை தாங்கள் பயன்படுத்தி நரேந்திர மோடி அவர்களுடன் தங்களது கருத்துக்களைப் பகிரலாம்.
பிப்ரவரி 21, 2017 11:05am
யோகேஷ்வரரை பிரதிஷ்டை செய்யும் சக்ரேஷ்வரர்
நேற்று இரவு நேர செஷனில் பேசிய சத்குரு அவர்கள் மிக மிக பிரம்மாண்டமான யோகிகள் இந்த மண்ணில் வாழ்ந்திருக்கிறார்கள். தங்களுடைய 7 சக்கரங்களின் மீதும் முழு ஆளுமை எடுத்து, சக்ரேஷ்வராய் வாழ்ந்தவர்கள் அவர்கள். யோகி மத்ஸ்யேந்திரநாத், சத்குரு ஸ்ரீ பிரம்மா போன்றோர் சிவனை போலவே இந்த பூமியில் நடமாடியவர்கள் என்றார்.
இன்று, இப்போது... பரிபூரண யோகியாய், யோகேஷ்வரர் பிரதிஷ்டையில் கண்களை மூடி மோனநிலையில் அமர்ந்திருக்கிறார். போன முறை இங்கு வந்தபோது சக்ரேஷ்வரராய் வந்தவரின் தன்மை, இன்று சற்றும் குறையாமல் நம்மை உலுக்கிப் போட்டுக் கொண்டிருக்கிறது.
பிப்ரவரி 21, 2017 10:55am
உணரக் கிடைத்தவர்கள் பாக்கியவான்கள்
ஆதிகுருவே என் அகண்ட பரிபூரணமே என்ற பாடல் இடைவிடாமல் ஒலித்துக் கொண்டிருக்க, அறை முழுவதும் சத்குருவின் இருப்பு நிறைந்தது. அவரின் அருள் உணர்ந்தவர்களாய் மக்கள் அமர்ந்திருக்கின்றனர்.
பாடல் துவங்கி கொஞ்ச நேரம் கழித்து உள்நுழைந்த சத்குரு முற்றிலும் வித்தியாசமான ஒரு நிலையில், படைப்பவராய் நிற்கிறார். இவரைப் பார்க்கும்போதே மூச்சு சற்று நேரம் நின்றுதான் துவங்குகிறது. நேராக லிங்கத்திற்கு சென்றவர், நேரடியாக பிரதிஷ்டை செயல்முறையை செய்யத் துவங்கியுள்ளார்.
தீவிரமான சில விஷயங்களை செய்து முடித்தபின், மக்கள் கூட்டத்திற்குள் இறங்கி நடக்கத் துவங்கியிருக்கிறார். தீவிரமான பக்தி, உயரத்திற்கு எழுப்பப்பட்ட சக்திநிலையில் இங்குள்ளவர்கள்.
இதை உணரத்தான் முடியும், உணரக் கிடைத்தவர்கள் பாக்கியவான்கள்.
பிப்ரவரி 21, 2017 10:15am
நஞ்சுண்ட நீலகண்டன்
மூன்று நாட்கள் பிரதிஷ்டை. முதல் நாள் மிகுந்த தீவிரத்துடன் நடந்து முடிந்தது. நேற்று அவர் சொன்ன அந்த தீவிரத்தின் சுவையை ருசிக்க மக்கள் இன்று காத்திருக்கின்றனர்.
இதே ஆதியோகி ஆலயத்தில், ஆதியோகி ஆலயப் பிரதிஷ்டையின்போது சத்குரு அவர்கள் நாகப் பாம்பு நஞ்சினை பருகினார். அதுகுறித்து அவர் பேசிய வீடியோ தற்சமயம் ஒளிப்பரப்படுகிறது.
நான்காம் திருமுறையில் வரும் இந்த பாடலை, இந்த சூழ்நிலையில் நினைவுகூறாமல் இருக்க முடியவில்லை...
கண்காள் காண்மின்களோ - கடல்
நஞ்சுண்ட கண்டன்றன்னை
எண்டோள் வீசிநின் றாடும்பி ரான்றன்னைக்
கண்காள் காண்மின்களோ.
பொழிப்புரை:
கண்களே! கடல்விடத்தை உண்ட நீலகண்டனாய் எட்டுத் தோள்களையும் வீசிக் கொண்டு நின்ற நிலையில் ஆடும் பெருமானை நீங்கள் காணுங்கள்.
பிப்ரவரி 21, 2017 10:00am
பாக்கியம் செய்திருக்கிறேன்
இன்னும் சற்று நேரத்தில் துவங்கவிருக்கும் இரண்டாம் நாள் யோகேஷ்வரர் பிரதிஷ்டைக்கு ஆதியோகி ஆலயம் தயாராகிக் கொண்டிருக்கிறது. நேற்று இரவு உறங்கச் செல்லும்போது மணி 12. புத்துணர்வுடன் அதிகாலையிலேயே எழுந்து பயிற்சிகளை முடித்துவிட்டு தன் இருக்கையில் வந்து அமர்ந்து காத்திருக்கும் மக்களைப் பார்த்தோம்.
"எப்படி இருக்கிறீர்கள்? நேற்றும் இரவு தூங்கினீர்களா? குளிர் எப்படி இருந்தது?"
"இப்படி கேட்டவுடன் எனக்கு எந்த சிரமும் இல்லை," என்று இரு கைகளையும் கூப்பி வணங்கினார்.
இத்தனை ஆயிரம் மக்களை வைத்து இப்படி ஒரு நிகழ்ச்சியை நடத்தச் செய்வது எளிதல்ல. இவ்வளவு செயல்கள் செய்தபோதும் இங்கே தன்னார்வத் தொண்டர்கள் முகத்தில் புன்னகையே இருக்கிறது. என்னால் எப்படி இதுபோல் நாள் முழுக்க உட்கார முடிகிறது என்று எனக்கே தெரியவில்லை. இந்த இடத்தில் இருப்பது நான் செய்த பாக்கியம் என்கிறார் பெங்களூரைச் சேர்ந்த பள்ளி ஆசிரியர் திருமதி ராஜலக்ஷ்மி.