யோகேஷ்வர லிங்கம் - பிரதிஷ்டை Live Blog - நாள் 1
இதுபோன்ற ஒரு பிரதிஷ்டையில் பங்கு பெறுவது மிகச் சக்தி வாய்ந்தாக இருக்கும். இங்கு வழங்கப்படுவதை, நீங்கள் முயன்று பெறவேண்டுமென்றால், பல பிறவிகளுக்கு அதிதீவிர ஆத்ம சாதனைகள் தேவைப்படும். இங்கோ, அந்தச் சக்தி ஒளிவீசிக் கொண்டிருக்கிறது. இதனை நீங்கள் உள்வாங்கிக் கொண்டால், நீங்களும் அதிர்வுகளோடு ஒளிவீசுவீர்கள்.
யோகேஷ்வர லிங்கம் பிரதிஷ்டையின் இரண்டாம் நாள் மற்றும் மூன்றாம் நாள் பதிவுகளை இங்கே காணலாம்.
பிப்ரவரி 20, 2017 11:05pm
நாளை இன்னும் தீவிரமாக
இன்று முழுவதும் பங்கேற்பாளர்களுக்கு ஒரு குறிப்பிட்ட விதமான முத்ராவினை அளித்த சத்குரு, ஒவ்வொரு நிலையிலும் அதன் தீவிரத்தை உயர்த்திக் கொண்டே செல்கிறார். உணவுண்ட உடலுடன் இதனைச் செய்ய முடியாது, நாளைச் செய்வோம். உயர்ந்த நிலையிலான தீவிரங்களை எட்டுவோம் என்று கூறி, அவர் முன் அமர்த்தப்பட்டிருக்கும் லிங்கத்தை கறுப்பு நிற துணியால் கவர்ந்து, மாலை அணிவித்து விடைபெற்றிருக்கிறார்.
உண்மையில், இங்கு வழங்கப்படும் சாதனா அளவிட முடியாதது. ஒப்பீடு செய்ய இயலாதது. முயன்று, பாடுபட்டு பெற்றதை வாரி இறைத்துக் கொண்டிருக்கிறார். சத்குரு அறையை விட்டுச்சென்ற பின்னும் அறையைவிட்டு விலகாத பங்கேற்பாளர்களை எங்கெங்கும் காணமுடிகிறது.
கருணையுடன் தொடர்பில் இருங்கள். நாளை காலை சந்திப்போம்.
பிப்ரவரி 20, 2017 11:00pm
யோகேஷ்வரருக்கு அநாஹதம் இல்லை!
அவன் அனைவரையும் தனக்குள் ஒரு பாகமாக ஏற்றுக் கொள்கிறான். ஒருவர் மற்றவரை தனக்குள் ஒரு பாகமாக கருதும்போது அங்கே அன்பிற்கு இடம் எங்கே? உணர்ச்சிகளுக்கு இடம் எங்கே? அதற்கு ஒரு பொருளும் இல்லை.
இரண்டு என்ற ஒன்று இருக்கும்போதுதான் ஒன்று இன்னொன்றின் மீது அன்பு செலுத்த முடியும். ஒன்றே ஒன்று மட்டும் இருந்தால் அங்கே அன்பு என்ற ஒன்றிற்கு பொருள் இல்லை.
இதயமில்லா மனிதர்களை உணர்வில்லா முரடர்கள் என்றே பார்க்கிறார்கள். இந்த யோகி, நம்மைத் தாண்டி பல பல பல ஆண்டுகள் வாழப்போகிறான். வருங்காலத்தை சேர்ந்த ஒரு சில மனிதர்களை இவன் பார்க்கப் போகிறான்.
பிப்ரவரி 20, 2017 10:40pm
இதயமில்லா யோகியை பற்றி இதயம் உருகப் பேசுகிறார்...
"இதயமில்லா இந்த யோகி, இவன் அனைத்தையும் தன்னுள் இணைத்துக்கொள்ளும் தன்மையுடையவன். அனைவரையும் தன்னுள் இணைத்துக் கொண்டபின் யாருடனாவது காதலில் விழத்தேவைதான் என்ன? நமக்கு அன்பின் தூய்மைதான் வேண்டும். வெறும் இணைத்துக்கொள்ளும் தன்மை அதுவே இவனது குணம்."
சத்குரு இதனை சொன்னவுடன் ஆண்கள் புறமிருந்து பலத்த கைதட்டல்கள் எழ, ஒரு பக்கம் மட்டுமிருந்து மட்டும் கைதட்டல்கள் எழுகிறதே என கிண்டலாக அவர் சொல்லி முடிக்கும் முன், கரவொலியால் அரங்கம் அதிர்ந்தது.
பிப்ரவரி 20, 2017 10:30pm
ஈஷா யோக மையத்தில் காவல் பணியில்...
"என்னைப் பொருத்தவரை ஆதியோகியின் முகம் சத்குருவின் முகம்தான். இரண்டிற்கும் வித்தியாசம் இல்லை. கடந்த ஓராண்டாக நான் இங்கு பணி செய்கிறேன். இந்த ஒரு வருடத்தில் என் வாழ்க்கை பரிபூரணமாய் மாறியிருக்கிறது. சத்குருவின் இந்த இடத்தில் வாழ்வது எனக்கு கிடைத்த வரம் என்றே நினைக்கிறேன்," என்று மலர்ச்சியான முகத்துடன் பகிர்கிறார் ராமசந்திரன் அண்ணா. ஈஷா செக்யூரிட்டியை சேர்ந்தவர்.
பிப்ரவரி 20, 2017 10:15pm
யோகேஷ்வரரை பற்றி...
இந்த லிங்கம் குறிப்பாக சாதனாவிற்காக உருவாக்கப்பட்டிருக்கிறது. இவருக்கு மூலாதாரா, ஸ்வாதிஷ்டானா, மணிபூரகா, விஷுத்தி, ஆக்ஞா சக்கரங்கள் உள்ளன. அனாஹதம் கிடையாது. இவர் இதயமில்லா யோகி என்று யோகேஷ்வர லிங்கத்தின் தன்மையைப் பற்றி பேசத் துவங்கியிருக்கிறார் சத்குரு.
பிப்ரவரி 20, 2017 10:00pm
9.30 மணிக்கு துவங்கியது...
இருளில் நிகழ்ந்தது அந்த அருள்
விழியில் விழுந்த நெருப்பின் ஒளி
உயிரை விழுங்கும் அதிர்வில்
எங்கெங்கும் பற்றி எரிகிறது சிவனென்னும் தீ
மாலை 4 மணிக்கு முடிந்தது கடந்த செஷன். மாலை 4 மணிக்கு இரவு உணவு. 8 மணிக்கு ஒரு பானம். மீண்டும் 9.30 மணிக்கு கூடியிருக்கிறார்கள். சத்குரு மேடையில்.
சத்குரு வந்ததும், ஒரு ப்ராசஸை துவங்க, அறை முழுவதும் தீவிரமான ஒரு நிச்சலனம். நம் உயிரினில் ஊடுருவிப் பரவும் ஒரு நிச்சலனம். அறை முழுவதும் பங்கேற்பாளர்களின் பரவசக் குரல்கள் தீவிரமாய் ஒலிக்கத் துவங்கியது.
இருட்டறையில் கையில் தீயுடன், பிரம்மச்சாரிகள் உள்வர, மதியம் ஒளியைப் பற்றி பேசிய சத்குரு, நெருப்பொளியில் சில செயல்முறைகளை துவங்கினார். சவுன்ட்ஸ் ஆப் ஈஷாவின் "நாகேந்த்ர ஹாராய..." உச்சஸ்தாயியில் ஒலிக்க தீவிரமும் மக்களின் உணர்வும் உச்சஸ்தாயியை எட்டியது.
கண்திறந்து சத்குரு அவர்களை பார்த்த வண்ணம் அமர்ந்திருக்கின்றனர்.
இப்போது... வடிவியல் - உடல், மனம், சக்தி, வடிவியல் பற்றி பேசத் துவங்கியிருக்கிறார்.
பிப்ரவரி 20, 2017 9:50pm
நான் ஒரு புழு பூச்சியைப் போல...
ஆதியோகி ஆலயத்தில் எந்தவொரு அசைவும் இல்லாமல் அமைதியாக உட்கார்ந்திருந்தார் இந்தப் பங்கேற்பாளர்.
"இந்த பிரதிஷ்டை பற்றி உங்கள் அனுபவத்தைக் கூறுங்கள்!" என்றோம்.
"இதற்கு முன் நீங்கள் பிரதிஷ்டையில் கலந்திருக்கிறீர்களா?"
"நான் தியானலிங்க பிரதிஷ்டையிலிருந்து இருக்கிறேன்," என எதிர்பாரா பதில் வந்தது.
"தியானலிங்க பிரதிஷ்டையையும் யோகேஷ்வர பிரதிஷ்டையையும் எவ்வாறு ஒப்பிட்டுப் பார்க்கிறீர்கள்?"
"ஒப்பிடும் அளவிற்கு எனக்கு ஒன்றும் தெரியாது. அவர் முன் நான் ஒரு புழு பூச்சியைப்போல கொடுத்திடும் குறிப்புகளை மட்டும் செய்துவிட்டு அவருடன் சும்மா இருக்கிறேன்."
"தியானலிங்க பிரதிஷ்டை அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ளுங்களேன்," என்றபோது
"அப்போது லிங்கம் முதுக்குப்புறம் இருப்பதுபோல திரும்பி அமர்ந்திருந்தோம். விளக்குகள் அணைக்கப்பட்டிருந்தது. 7 மணியிலிருந்து 12.30 மணி வரை தொடர்ந்து அப்படியே அமர்ந்திருந்தோம். அப்போது விளக்கு எரிந்தது. கண்களைத் திறந்து பார்த்தபோது சத்குரு அப்படியே லிங்கத்தின் மீது விழுந்து கிடந்தார். 10 பேர் சேர்ந்து அவரை தூக்கிச் சென்றனர். அதன் பிறகு 3 நாட்கள் தொடர்ந்து ஆம் நமஹ ஷிவாய மந்திரத்தை 24 நான்கு மணி நேரமும் தியானலிங்க வளாகத்தில் உச்சாடனம் செய்தோம். மூன்று நாட்கள் கழித்து மஹாராஜனை போல வந்தார் எங்கள் குரு," என தன் வாழ்வில் மறக்க இயலா அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டார் பெயர் சொல்ல விரும்பா இந்த பங்கேற்பாளர்.
பிப்ரவரி 20, 2017 9:10pm
அளவிடமுடியாத கருணை
சத்குருவைப் பற்றி என்ன சொல்வது ஆழமான அன்பா அளவிட முடியாத கருணையா? கடல் போன்ற அவரின் தன்மையை அவர் கூறுவதுபோல சாதரணமாக இங்கே காற்றில் பரவ விட்டிருக்கிறார். அது மட்டுமல்லாமல் அதில் நம்மையும் பங்கேற்க வைத்திருக்கிறார். ஈஷா யோக மையத்தில் அந்த அளவு வசதி இல்லையென்றாலும் எல்லா எல்லையும் கடந்து இந்த நிகழ்வு நடக்கிறது. இதையெண்ணி நன்றியுணர்வுடன் இருக்க வேண்டும் என நினைக்கிறேன்," என்கிறார் பூனாவைச் சேர்ந்த ஒரு பள்ளியின் தலைமை ஆசிரியர் திருமதி. அஸாலியா.
பிப்ரவரி 20, 2017 8:00pm
Subscribe
நான் பல முறை ஆதியோகி ஆலயத்திற்கு வந்திருக்கிறேன். இந்த அறையில் அமர்ந்து பயிற்சிகள் செய்திருக்கிறேன். இந்த அறையின் சக்தியை உணர்ந்திருக்கிறேன். ஆனால், ஆதியோகி லிங்கம் எப்படி உருவாக்கப்பட்டது எனத் தெரியாது.
இப்படித்தான் சத்குரு ஒவ்வொன்றையும் உயிரைக் கொடுத்து உருவாக்கியிருக்கிறார் என்று இப்போதுதான் புரிந்து கொள்கிறேன். இது நான் முதல் முதலில் கலந்துகொள்ளும் பிரதிஷ்டை. நான் சென்னையிலிருந்து கிளம்பும்போது எனக்கு காய்ச்சல். மூன்று நாட்களாக நான் சரியாக சாப்பிடவே இல்லை. இப்போது இங்கே வந்ததும் அந்த காய்ச்சல் எங்கே போனது என்றே தெரியவில்லை. வகுப்பு இடைவேளையில்கூட ஓய்வெடுக்க விருப்பம் இல்லை. தன்னார்வத் தொண்டில் ஈடுபடுகிறேன்," என்கிறார் சென்னையில் சுயதொழில் புரியும் திருமதி. சத்யா
பிப்ரவரி 20, 2017 4:10pm
மாயை!
சத்குரு ஐம்புலன்களைப் பற்றியும் அதன் மூலமாக நாம் கிரகிக்கும் ஒளி, ஒலி, வாசனை, தொடு உணர்வு, சுவை பற்றி பேசினார்.
ஒளி பற்றி சத்குரு பேசுகையில் வண்ணங்களைப் பற்றிக் கூறினார்.
"நாம் எதனை சிகப்பு என்று சொல்கிறோமோ அது சிகப்பு இல்லை. அந்தப் பொருள் சிகப்பை மட்டும் பிரதிபலிக்கும் தன்மை வாய்ந்தது. அதனால்தான் நாம் எதை எப்படி பார்க்கிறோமோ அது உண்மையில் அந்தத் தன்மையில் இல்லை என்பதை குறிப்பதற்காக மாயை என்று கூறுகிறார்கள்.
வெள்ளை நிறத்திற்கு வண்ணங்களை பிரதிபலிக்கும் தன்மை இருப்பதால் நாம் வெளி உலகத்திற்கு செல்லும்போது வெள்ளை நிற ஆடைகளை அணிய வேண்டும். கோயில்கள் மற்றும் சக்திவாய்ந்த தலங்களுக்குச் செல்லும்போது கருநிற ஆடையை அணிய வேண்டும்.
ஆனால், மேற்கத்திய கலாச்சாரத்தில் இப்படி ஒரு வழக்கம் இருக்கிறது. இறந்தவர் வீட்டிற்குச் செல்லும்போது கருப்பு ஆடையை அணிந்து செல்கிறார்கள். இறப்பின்போது, வெள்ளை நிற ஆடையை அணிய வேண்டும். மேற்கத்திய மக்கள் இந்த வழக்கத்தை மட்டும் மாற்றிக் கொண்டால் 15 முதல் 20 சதவீதமான உளவியல் பிரச்சனைகள் குறைந்துவிடும்," என்றார்.
பிப்ரவரி 20, 2017 3:05pm
பலனில்லா விளையாட்டு விளையாட தயாரா?
"வாருங்கள்! உருவில்லா ஒன்றின் பெயரில்லா பேரானந்தத்தை அறிவீர்
நிறைவின் ஆனந்தம் அல்ல இது
தன்னை வீழ்த்திக் கொள்ளும் விளையாட்டு இது
பலனில்லா இந்த விளையாட்டை விளையாடிடும்
ஆட்டத்திற்கு நீங்கள் தயாரா?"
-சத்குரு
பிப்ரவரி 20, 2017 1:15pm
மண்ணாகிப் போகும் முன்
"யோகா என்பது சங்கமம். இந்த பிரபஞ்சத்துடன் ஒன்றாக கரைந்து போதல். உங்கள் இறப்பிற்குப் பின் மண்ணுடன் கலந்து போகிறீர்கள். அதுவும் யோகாதான். ஆனால், அதனை யோகி விழிப்புணர்வாய் செய்கிறான். இறந்தபின் எப்படியும் மண்ணுடன் கலக்கிறீர்கள். அதனை தற்போதே புரிந்து கொள்வதற்காகத்தான் யோகேஷ்வரர்," என்றார் சத்குரு.
பிப்ரவரி 20, 2017 12:05pm
ஒரே அதிர்வில்
ஒவ்வொரு இடத்திற்கும் ஓரு அதிர்வு இருக்கிறது. ஒரு இடத்தின் சக்தி அதிர்வுகளை ஒரு குறிப்பிட்டத் தன்மையில் வைப்பதற்கு மந்திர உச்சரிப்பு உதவுகிறது. அனைத்துப் பங்கேற்பாளர்களும் சேர்ந்து மந்திரத்தை உச்சரிக்க ஆதியோகி ஆலயம் ஒரே அதிர்வில்.
பிப்ரவரி 20, 2017 11:45am
யோகேஷ்வர லிங்கம்
பல நாடுகள் பல கலாச்சாரம் பல மதம் பல மொழிகளைச் சேர்ந்தவர்கள், ஆனால் ஒரே நோக்கம் அசைவில்லா நோக்கம். யோகேஷ்வர லிங்கத்தை உயிர்பெறச் செய்வதே!
தீவிரமான செயல்முறையில் சத்குரு!
பிப்ரவரி 20, 2017 11:15am
சத்குரு ஸ்ரீ பிரம்மா
ஆதியோகி ஆலயத்தை இந்தப் பிரதிஷ்டைக்காக முழுவீச்சில் தன்னார்வத் தொண்டர்கள் தயார்செய்தனர். ஆதியோகி ஆலயத்தில் சத்குரு ஸ்ரீ பிரம்மாவின் புகைப்படம் வைக்கப்பட்டிருக்கிறது.
ஆதியோகி ஆலயம் மிக உயர்ந்தத் தீவிரத்தன்மையில் இருக்கிறது.
சற்றுமுன் அறைக்குள் வந்த சத்குரு அவர்கள் பிரதிஷ்டை செயல்முறையை துவங்கியிருக்கிறார்.
பிப்ரவரி 20, 2017 10:45am
சத்குரு ஆதியோகி ஆலயத்தில்
"ஆதியோகி கடந்த காலத்தை சேர்ந்தவர் அல்ல, அவர் நிகழ்காலத்திற்கு உரியவர். அவரை எதிர்காலத்திலும் இருப்பவராக செய்திட விரும்புகிறேன்," என்ற சத்குருவின் வீடியோ பதிவுமுடிந்ததும் சத்குரு ஆதியோகி ஆலயத்திற்குள் வந்தார்.
"குருசரண க்ருதம்வா" என்று துவங்கிய அவரது குரல் ஒலிக்கையில், நான்கு திசையில் "சம்போ" என்று எதிரொலிகள்.
சுடர்விடும் நெருப்பு மட்டுமல்ல. இங்கு சக்திநிலையும் பற்றி எரிகிறது.
பிப்ரவரி 20, 2017 10:00am
நெஞ்சத்தில் பெருமையுடன் திடமாய் பாறைப்போல் இருந்தேன்
அழைக்காமல் அவர் வந்தார்
உயிர்கள் அனைத்திற்கும், ஒரு பாறைக்கும்கூட
என் இதயம் துடித்திட, கசிந்துருகிடச் செய்தார்.
-சத்குரு
பிப்ரவரி 19, 2017 9:50pm
உயிர் கொண்டு உருவாகி
சத்குரு யோகேஷ்வரரை பற்றிப் பேசும்போது, "கடந்த 2 மாதமாக லிங்கத்திற்குள் அபரிமிதமான உயிர்சக்தி விதைக்கப்பட்டிருக்கிறது," என்றார்.
மேலும்...
"நீங்கள் பார்வையாளர்கள் மட்டுமல்ல. இந்த பிரதிஷ்டையில் பங்கேற்கவும் செய்வீர்கள். இந்தப் பிரதிஷ்டையை மிகவும் நெருக்கமாக இருக்கும் வெகு சிலரை மட்டுமே கொண்டு செய்வது சிறந்தது. இவ்வளவு பெரிய கூட்டத்தினை கொண்டு இப்படி ஒரு செயல்முறையில் இறங்குவது பைத்தியத்தியக்காரத்தனமான முயற்சி.
நான் இருக்கும்போது நீங்கள் இது போன்றதொரு பிரதிஷ்டையில் கலந்து கொள்ளாவிட்டால் எப்போது இந்த அனுபவத்தை உணரப் போகிறீர்கள். நீங்கள் எனக்கு மிக மிக நெருக்கமானவர்கள் என நான் யூகித்துக் கொள்ளும் அளவிற்கு நான் பைத்தியமாக இருக்கிறேன்.
இங்கே நீங்கள் அமரும்போது புதியவர் போல அமரக்கூடாது. எனக்கு நெருக்கமானவராக அமரவேண்டும். என்னுடைய திட்டமிட்டு நிர்வகிக்கப்படும் பைத்தியக்காரத்தனத்தால் நான் இந்தப் பிரதிஷ்டையை உங்கள் அனைவர் முன்னும் செய்கிறேன்," என்றார்.
பிப்ரவரி 19, 2017 9:00pm
ஆலயம் முழுக்க நிறைந்த தீவிரம்!
மேள தாளத்துடன் ஈஷா பிரம்மச்சாரிகள் சம்ஸ்கிருதி மாணவர்கள் புடைசூழ ஆதியோகி ஆலயத்தில் பிரவேசித்தார் யோகேஷ்வரர்.
பிரம்மச்சாரிகள் யோகேஷ்வரரை வண்டியிலிருந்து அவரது இருக்கையில் அமர்த்திக் கொண்டிருந்தனர். சவுண்ட்ஸ் ஆப் ஈஷா "குருபாதுகாப்யா" பாடிக் கொண்டிருந்தனர்.
சத்குரு முற்றிலும் வேறு ஒரு நிலையில் இருந்தார்.
அவர் முகத்தில் இருந்த தீவிரமும் கருணையும் ஆதியோகி ஆலயம் முழுக்க நிறைந்தது.
பிப்ரவரி 19, 2017 8:45pm
ஆதியோகி ஆலயத்தில் யோகேஷ்வர லிங்கம்:
ஆதியோகி ஆலயத்தில் வெறும் தலைகள் மட்டுமே தெரிந்தன. இவ்வளவு கூட்டம் இருப்பினும் எந்த குறிப்புகளும் கொடுக்கத் தேவைப்படவில்லை. அனைவரும் தீவிரத்தின் உச்சத்தில் இருந்தனர்.
"யோக யோக யோகேஷ்வராய!" மந்திர உச்சரிப்பில் சுமார் 13,000 தியான அன்பர்கள். ஆதியோகி ஆலயம் மந்திர உச்சாடனையில் அதிர்ந்தது.
காங்கேயம் காளை அசைந்து வர, சத்குரு அதில் அமர்ந்து வர, யோகேஷ்வர லிங்கம் பின்னால் அசைவின்றி வர அனைவரும் பலத்த கை தட்டல்களுடன் வரவேற்றனர்.
என் கேள்விகளுக்கு இவரே பதில்!
19 வயது துடிப்பு மிக்க அந்த இளைஞர் டெல்லியில் design engineering படித்துக் கொண்டிருந்தார். ஆனால் சிறுவயதிலிருந்தே இசைதான் அவரது ஆர்வம். எதிர்பாராத விதமாக ஏற்பட்ட அந்த கோர விபத்தில் தன் இரு கண்களையும் இழந்தார். திடீரென இருண்டது வாழ்க்கை.
"விரக்தியும் கோபமும் என்னை வெறித்தனமான மனிதனாக மாற்றியது," என்கிறார் ஈஷான். "ஏன்" இது அவர் எப்போதும் கேட்கும் கேள்வி. நான்கு சுவருக்குள் கழிந்த அந்த 2 வருடங்களில் அவரது ஒரே துணை தாய். அவரது ஒரே நம்பிக்கை சத்குருவின் குரல்.
ஈஷானின் தாய் பேசத் துவங்கினார்...
"என்னிடம் எப்போதும் ஏதாவது ஒரு கேள்வி கேட்டுக் கொண்டே இருப்பான், வாழ்வு பற்றிய அவனது கேள்விகளுக்கு சத்குரு மட்டுமே பதிலளிக்க முடியும் என்று கூறிவிட்டேன். தொடர்ந்து சத்குருவின் பேச்சை Youtubeல் கேட்டுக் கொண்டே இருப்பான்," என்றார்.
ஈஷான் தனது அனுபவத்தை கூறும்போது...
ஷாம்பவி என்னை wildlife லிருந்து how life என்ற mode ற்கு மாற்றிவிட்டது. பின்னர் பாவஸ்பந்தனா வந்தேன். பாவஸ்பந்தனாவை உலகிலேயே மிகப் பெரிய ஒன்றாக நினைக்கிறேன்.
சத்குரு இந்த பிரதிஷ்டை பற்றிச் சொன்னபோது வாழ்நாளில் ஒரு வாய்ப்பு என்று கூறியதால் கலந்துகொள்ள வந்திருக்கிறேன். என் மனதிற்கு மிகவும் பிடித்த இசையைப் பயில நொய்டா இசைக் கல்லூரியில் சேர்ந்திருக்கிறேன்," என்று கூறும் ஈஷானின் முகத்தில் ஆனந்தமே தெரிகிறது.
பிப்ரவரி 19, 2017 6:40pm
கடல் தாண்டிய தேடல்!
மாரிக்கோ ஹோவார்ட் கிஷி:
ஜப்பானிய பெண்மணி - தற்போது லண்டனில் உள்ள கிங்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் வேதியல் விரிவுரையாளர். தன் பல்கலைக்கழகத்தில் இரண்டு வாரம் விடுப்பு எடுத்து இந்தியாவை நோக்கி பயணம் செய்தார்.
"நான் ஈஷா யோகா வகுப்பு செய்த பின்னர் எனக்குள் பெரும் மாற்றம் ஏற்பட்டது. எனது தோழிகள் நிக்கோலாவும் க்ளாரியும் என்னைப் போலவே ஈஷாவின் ஷாம்பவி பயிற்சியை உணர்ந்தனர். நாங்கள் மூவரும் சேர்ந்து இந்தியா செல்ல முடிவெடுத்தோம்.
இந்தப் பயிற்சி என்னை தூய்மை செய்கிறது. எனது அகங்காரத்தை அழிக்கிறது. இங்கிருக்கும் "புதுவித சக்தி!" இதை எப்படிச் சொல்வது என எனக்குத் தெரியவில்லை. இதைத் தேடித்தான் நான் இங்கு வந்திருக்கிறேன்," என்கிறார்.
நகுயென் பௌ லௌன்:
நகுயென் பௌ லௌன்- பால்மனம் மாறா வியட்நாமிய பெண். சிங்கப்பூரில் இருக்கும் ஒரு பள்ளியில் 11 ஆம் வகுப்பு படிக்கும் இவர் இன்னர் இன்ஞ்சினியரிங் வகுப்பு செய்த பின்னர் ஈஷாவைப் பற்றி மேலும் அறிந்துகொள்ள ஆர்வம் கொண்டார்.
"சிங்கப்பூரில் சத்சங்கம், தன்னார்வத் தொண்டர்கள் சந்திப்பு என ஈஷாவுடன் தொடர்பில் இருப்பதற்கு பல வழிகள் உள்ளன. தியானலிங்கத்தைப் பற்றி பல பதிவுகளைப் படித்திருக்கிறேன். தியானலிங்கத்தைப் பார்க்க வேண்டும் என்பது என் பல நாள் ஆசை!
சத்குரு யோகீஷ்வராய லிங்கம் பிரதிஷ்டை பற்றி பேசும்போது அதனை பார்க்க நான் இந்தியா செல்ல வேண்டும் என்று என் பெற்றோர்களிடம் கூறினேன். முதலில் அவர்கள் ஒப்புக் கொள்ளவில்லை. 'சிங்கப்பூரிலிருந்து 20 பேர் இந்தியா போகிறார்கள். அவர்களுடன் சேர்ந்து போகிறேன்,' என்று கூறி என் பெற்றோர்களை சம்மதிக்க வைத்து நான் வந்து விட்டேன்," என்கிறார்
பிப்ரவரி 19, 2017 6:00pm
யோகேஷ்வராய லிங்க பிரதிஷ்டை
தியானலிங்க பிரதிஷ்டையை தவறவிட்டவர்கள் இன்றும் அதைப் பற்றி குறைபட்டுக் கொண்டிருக்க, "இது தியானலிங்கப் பிரதிஷ்டையைப் போலவே இருக்கும். இது அந்த அளவு இல்லையென்றாலும் அதே விதமாய் அதன் சுவை இருக்கும்," என்கிறார் சத்குரு. இந்த லிங்கத்தின் தன்மை முக்தி நோக்கியதாக இருக்கும். இதனால் பலரும் இந்த பிரதிஷ்டைக்கு இன்று வருகை தந்திருக்கிறார்கள்.
72 நாடுகளிலிருந்து இதனைக் காண மக்கள் வந்துள்ளனர். "முக்தி" என்ற சொல் பற்றி நம் கலாச்சாரத்தில் கேள்விப்படாதவர்கள் இருக்க வாய்ப்பில்லை. ஆனால், பிற தேசத்திலிருந்து மக்கள் முக்தி தேடி நம் தேசம் நோக்கி வந்தவண்ணம் இருப்பது மிக வியப்பாக இருக்கிறது.
இனி யோகேஷ்வராய லிங்கப் பிரத்ஷ்டையில் பிரத்யேகத் தொகுப்புகளை உங்களுக்கு வழங்க இருக்கிறோம். தொடர்பில் இருங்கள்!
பிப்ரவரி 19, 2017 5:00pm
"இதுபோன்ற ஒரு பிரதிஷ்டையில் பங்குபெறுவது மிகச் சக்திவாய்ந்தாக இருக்கும். இங்கு வழங்கப்படுவதை, நீங்கள் முயன்று பெறவேண்டுமென்றால், பல பிறவிகளுக்கு ஆதிதீவிர ஆத்ம சாதனைகள் தேவைப்படும். இங்கோ, அந்தச் சக்தி ஒளிவீசிக் கொண்டிருக்கிறது. இதனை நீங்கள் உள்வாங்கிக் கொண்டால், நீங்களும் அதிர்வுகளோடு ஒளி வீசுவீர்கள்."
- சத்குரு
112 அடி உயரமுள்ள ஆதியோகி சிலையுடன், யோகேஷ்வர லிங்கத்தையும் சத்குரு அவர்கள் மஹாசிவராத்திரி அன்று பிரதிஷ்டை செய்வார். இன்றிலிருந்து 3 நாட்களுக்கு அதற்கான தயாரிப்புகள் 12,000 த்திற்கும் மேற்பட்ட மக்களின் முன்னிலையில் துவங்கியுள்ளது. வாழ்வையே மாற்றியமைக்கும் ஒரு நிகழ்வில் 70 நாடுகளைச் சேர்ந்த மக்கள் பங்கேற்று வருகின்றனர். தொலைவிருந்தாலும் அருகிலிருந்து இந்நிகழ்வை கவனிக்க ஒரு வாய்ப்பாய் இந்த நேரடி வர்ணனை உங்களுக்காக விரியும். தொடர்பில் இருங்கள், அருளில் தோய்ந்திடுங்கள்.
ஆன்மீக சாத்தியங்களில் திளைத்திருக்க வேண்டிய தருணமிது
கருணையின் வெள்ளத்தில் மூழ்கவேண்டிய இடம் இது
வாருங்கள்! முக்திக்கான கதவுகள் திறக்கப்படுகிறது, பங்கேற்றிடுங்கள்!