ஈஷா யோக மையத்தில் வெகுசிறப்பாக நடைபெற்ற ஒன்பதாம்நாள் நவராத்திரி கொண்டாட்டம்... ஒரு பார்வை!

ஈஷா யோக மையத்தில் நவராத்திரி திருவிழா 9 நாட்கள் (அக்டோபர் 2 முதல் 10 வரை) விமரிசையாக கொண்டாடப்பட்டது. பாரம்பரிய இசை, பரதநாட்டியம் என்று மட்டுமல்லாமல், நாட்டுப்புற கலை வடிவங்களும் அரங்கேறின. 9 நாட்கள் திருவிழாவில், இன்றைய ஒன்பதாம்நாள் கொண்டாட்டத்தில் ‘தேவி மற்றும் கொலு’வைப் பற்றி ‘திருநெல்வேலி ஜெயராமன் குழு’வினர் வழங்கிய வில்லுப்பாட்டு இசைநிகழ்ச்சி வெகுசிறப்பாக நடைபெற்றது.

மாலை 6.45 மணியளவில் ஈஷா யோக மையத்திலுள்ள சூரியகுண்டம் முன்பாக துவங்கிய இந்நிகழ்ச்சியை நூற்றுக்கணக்கான மக்கள் கண்டுகளித்தனர்.

வில்லுப்பாட்டு அல்லது வில்லிசை என்பது தமிழர் கலை வடிவங்களில் தொன்மையான ஒன்றாகும். துணை இசைக்கருவிகள் பல இருப்பினும் வில்லே இங்கு முதன்மை பெறுகிறது. முதன்மை கருவியாக வில்லும் துணைக்கருவிகளாகப் உடுக்கை, குடம், தாளம், கட்டை போன்றவையும் பயன்படுத்தப்படும். நாட்டுப்புற பொழுதுபோக்கு கலையான இதில் பாடல் மூலம் கதை சொல்லும் உத்தியை திறம்படக் கையாள்வர்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

திருநெல்வேலி திரு.ஜெயராமன் குழு...

வில்லுப்பாட்டில் திருநெல்வேலி வட்டாரத்திற்கென தனி இடம் எப்போதும் உண்டு! அந்த வகையில் திருநெல்வேலியை அடுத்த கூத்தன்குளம் கிராமத்தைச் சேர்ந்த திரு.ஜெயராமன் அவர்களின் வில்லிசைக் குழு இதில் முன்னணியில் திகழும் குழுவாகும். மதுரை மீனாட்சி அம்மன் கோயில் திருவிழா உட்பட பல்வேறு கோயில் திருவிழாக்களிலும், அகில இந்திய வானொலி போன்ற ஊடகங்களிலும் மற்றும் பல பிரபல கலாச்சார நிகழ்ச்சிகளிலும் இவர்கள் தங்கள் நிகழ்ச்சிகளை வழங்கியுள்ளனர். இக்குழுவில் ஜெ.செல்வக்கனி முன்னணி கலைஞராவார். இவர் தனது 10 வயதில் இந்த கலையைக் கற்றுக்கொண்டு, கடந்த 30 வருடங்களாக மேடை நிகழ்ச்சிகளில் பழமை வாய்ந்த இந்த கலையை புத்துயிரூட்டும்விதமாக தன் வாழ்க்கையை அர்ப்பணித்து வருகிறார்.

தமிழக அரசின் கலை மற்றும் பண்பாட்டுத் துறை இக்குழுவின் கலைச்சேவையை பாராட்டி விருது வழங்கியுள்ளது.

லிங்க பைரவி ஊர்வலம்...

Linga bhairavi maha arati

நவராத்திரியின் இறுதிநாளான இன்றைய ஒன்பதாம் நாளில், லிங்கபைரவி தேவி உற்சவ மூர்த்தியின் ஊர்வலம் கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. லிங்கபைரவியிலிருந்து துவங்கும் இந்த ஊர்வலத்தில், தியானலிங்கம் முன் நடைபெறும் ஆரத்தியில் அக்னி நடனமாடுவது உள்ளம்கவர் அம்சமாக இருக்கும். ஊர்வலம் முடிந்த பின்னர் ஒவ்வொருநாளும் பக்தர்களுக்கு ஈஷா மையம் சார்பில் அன்னதானம் வழங்கப்படுகிறது.

கொலு...

bharatanatyathil-thilaitha-moonram-nal-navarathri-kondattam-12

நவராத்திரி விழாக்காலங்களில் பாரம்பரியமாக வைக்கப்படும் கொலு கண்காட்சியானது, சூரியகுண்டத்தின் மேற்புற பிரகாரத்தில் தேவியின் பலவித ரூபங்களை குறிப்பிடும்படியாக பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.

நவராத்திரி விழாக் காலங்களில் லிங்கபைரவி, முதல் மூன்று நாட்கள் துர்கை அம்சமான குங்கும அலங்காரத்திலும் அடுத்த மூன்று நாட்கள் மஹாலஷ்மி அம்சமான மஞ்சள் அலங்காரத்திலும், இறுதி மூன்று நாட்கள் சரஸ்வதி அம்சமான சந்தன அலங்காரத்திலும் பக்தர்களுக்குக் கண்கொள்ளா விருந்தாக காட்சியளிப்பாள்.

இந்த 9 நாட்களில், தேவிக்கு சிறப்பு அர்ப்பணிப்புகளாக நெய்தீபம், மாங்கல்ய பலசூத்ரா, அபிஷேகம், சமர்ப்பணம் போன்ற அர்ப்பணைகளை செய்வதன் மூலமும், ஒவ்வொரு நாள் மாலை நடக்கவிருக்கும் மஹா ஆரத்தி, ஊர்வலம், மற்றும் சிறப்பு மந்திர உட்சாடனைகளில் பங்குபெறுவதன் மூலமும் அளப்பரிய நன்மைகளைப் பெற முடியும். நவராத்திரி காலத்தில் தேவியை வழிபடுவது, ஒருவர் உலக வாழ்வில் நல்வாழ்வு என்று நினைக்கும் அனைத்தையும் பெற உறுதுணை புரியும். அதனுடன் ஆன்மீகத்தின் உயர்ந்த பரிமாணங்களை எட்டவும் ஒரு வாய்ப்பாக இருக்கும்.

இந்த ஒன்பதுநாட்கள் நவராத்திரி திருவிழாவில் கலந்துகொள்ள, பொதுமக்கள் அனைவருக்கும் அழைப்புவிடுத்துள்ள ஈஷா யோக மையம், கோவையிலிருந்து ஈஷாவிற்கும், நிகழ்ச்சி முடிந்தவுடன் ஈஷாவிலிருந்து கோவைக்கும் இடையிலுள்ள கிராமங்களுக்கும் இலவசப் பேருந்து சேவையையும் வழங்கியுள்ளது.

லிங்கபைரவியில் வித்யாரம்பம்

இருளை வெற்றிகொண்ட நாளான விஜயதசமி விழா நாளை(11-10-2016) லிங்கபைரவியில் சிறப்பாகக் கொண்டாடப்பட உள்ளது. குழந்தைகளுக்கு கல்வியை அறிமுகப்படுத்துவதற்கு மிகவும் உகந்த தினம் விஜயதசமி. லிங்பைரவியில் ஒவ்வொரு வருடமும் இந்நாளில் குழந்தைகளுக்கு முதல் கல்விப் புகட்டும் வித்யாரம்பம் மிக விமரிசையாக கொண்டாடப்படுகிறது.