இரயில், பேருந்து, உணவு... கூடவே அகண்ட கங்கையின் பிரம்மாண்டமும்...
சென்ற முறை கிடைத்த அந்த அனுபவம் இந்த முறையும் அமையுமா? எனது பேருந்தினுள் திரும்பி நோட்டமிட்டேன். இன்னும் கொஞ்ச நேரத்தில் இவர்கள் யார் யார் என தெரிந்துவிடும். அதன் பின் இனி பதினைந்து நாட்களும் இவர்கள்தான் அப்பா, அம்மா, நண்பர்கள், உற்றார் உறவுகள் எல்லாம்.
இமயத்தை அடைந்த இமாலய அனுபவங்கள்! - எழுத்தாளர் அஜயன் பாலா -பகுதி 2
திரு. அஜயன் பாலா:
செப்டம்பர் 17 அதிகாலை பொழுது பிரம்மாண்டமான டெல்லி ரயில் நிலையத்தின் ஒரு பிளாட்பாரத்தினுள் பாம்பை போல வளைந்து கொண்டே தடதடக்க ஊடுருவுகிறது. நாங்கள் பயணிக்கும் கிரான்ட் ட்ரங்க் எக்ஸ்பிரஸ் ரயிலின் ஐன்னலுக்கு வெளியே சிவப்பு உடையணிந்து போர்ட்டர்கள் எங்கள் பெட்டிக்குள் தாவி ஏற ஓடி வந்து கொண்டிருக்கின்றனர். பிளாட்பாரத்தில் அறிவிப்பாளினியின் குரல் ரயில் வருகை பற்றி இந்தியில் அலறி சூழலை பரபரப்பாக்கிக் கொண்டிருந்தது. நாங்கள் அனைவரும் அவசர அவசரமாக இருக்கை அடியிலிருந்து பெட்டிகளை வெளியே இழுக்க, ஒரு நிமிஷம் எல்லோரும் இங்க கவனிக்கலாம்... ஒரு குரல்.
அனைவரும் திரும்ப அங்கு காவி உடையில் மழிக்கப்பட்ட தலையும் சிரித்த முகமுமாக ஈஷாவின் பிரம்மச்சாரி ஒருவர் பேச துவங்கினார்.
லக்கேஜ் சுமக்க முடியாதவர்கள் தனியாக போர்ட்டர் வைக்க வேண்டாம். ஈஷா தன்னார்வலர்களிடம் பேர் கொடுத்தால் அனைவருக்கும் சேர்த்து மொத்தமாக பேசிக்கொள்ளலாம் எனக்கூற சற்று வயதானவர்கள் மற்றும் தொந்தி தள்ளியவர்களின் முகத்தில் மகிழ்ச்சி ரேகை பளிச்சிட்டது.
வண்டி முழுவதுமாய் நின்றதும் அனைவரும் இறங்கி அவரவர் சுமைகளுடன் ஸ்டேஷனுக்கு வெளியே வந்தபோது அங்கு எங்களை போல பெட்டி படுக்கை சகிதம் இன்னும் பலர் காத்திருந்தனர். அவர்கள் வேறு யாருமல்ல, ஆந்திரா, கர்நாடகா, மும்பை என பல்வேறு மாநிலங்களிலிருந்து எங்களோடு தியான யாத்திரையில் பங்கேற்க முன்னதாக வந்திருப்பவர்கள்.
தலை எண்ணி பார்த்தபோது ஆண்களும் பெண்களுமாய் கணக்கு 200 யை தொட்டது. அதில் கருகருமுடி, காதோரம் மட்டும் வெள்ளை, மற்றும் முழு வெள்ளை என வெவ்வேறு வயதினர் கலந்திருந்தனர். அவர்களுள் காய்கறி மண்டி ஓனர் முதற்கொண்டு கம்ப்யூட்டர் இஞ்சினியர், கல்லூரி மாணவர் மற்றும் இல்லத்தரசிகள், ஸ்கூல் டீச்சர் என பலதரப்பட்டவர்கள் அடக்கம். அனைவரது முகத்திலும் இமயமலையில் ஏறப்போகும் உற்சாகம் கண்சிமிட்டியது. பயணத்தின் களைப்பு காணவில்லை.
Subscribe
அம்பது ப்ளஸ் ஆட்களிடம்தான் கூடுதல் மகிழ்ச்சியும் துடிப்பும் தெறித்தது.
சென்னையில் ரயில் புறப்படும்போது யார் என்ன என விவரம் தெரியாமல் நெடுநேரம் பேசாமல் விழித்துக்கொண்டிருந்த பலரும் இப்போது பெட்டி தூக்க ஒரு கை கொடுக்கலாம், அப்புறம் எப்படி உடம்பை கரைக்கிறது என ஜாலியாக கமெண்ட் அடிக்கும் அளவுக்கு நெருங்கிவிட்டிருந்தனர். சற்று நேரத்தில் போர்ட்டர்களும் சுமைகளுடன் அங்கு வந்து சேர நாங்கள் நின்ற இடம் நோக்கி சற்று நேரத்தில் எட்டு வெள்ளை நிற பேருந்துகள் வரிசையாக வந்து நின்றது. ஒருங்கிணைப்பாளர்கள் ஏற்கனவே பிரித்து வைத்திருந்த அட்டவணைப்படி அனைவரும் தங்களுக்காக ஒதுக்கப்பட்ட பேருந்தின் பின்புறம் தங்கள் லக்கேஜுகளை ஏற்றிவிட்டு பேருந்தில் ஏறி தங்களது இருக்கைகளில் அமரத் துவங்கினர்.
நானும் எனது பேருந்தின் பின்புற டிக்கியில் பெட்டியை ஏற்றிவிட்டு கேமரா, ஸ்வெட்டர் உள்ளிட்ட தேவையான பொருட்களுடன் கூடிய சிறிய கைப்பையுடன் எனது பேருந்தில் ஏறி இருக்கையில் அமர்ந்துகொண்டேன். வண்டியில் ஏறியதும் சிலர் இடத்தை பிடித்துவிட்ட மகிழ்ச்சியில் பக்கத்து இருக்கைக்கு தங்களது நண்பர்களை கூவி அழைத்துக் கொண்டிருந்தனர். நான் ஜன்னல் பக்கமாக பார்வையை திருப்பினேன். டெல்லி சோம்பல் முறித்துக் கொண்டிருந்தது. வாகனங்கள் நகர்ந்துகொண்டிருக்க நினைவுகளோ பின்னோக்கி நகரத் துவங்கின.
இரண்டு வருடங்களுக்கு முன் இதேபோல தியான யாத்திரை சம்பவங்கள் மனதுக்குள் நிழலாடியது. மின்னல் வெட்டுக்களை போல பல காட்சிகள் பல முகங்கள் மனதுக்குள் வந்து போயின. அடுத்த நிமிடம் மகிழ்ச்சி மேகங்கள் மனதுக்குள் நுழைந்து என்னை ஆகாயத்துக்கு அள்ளிச்சென்றன. அதற்கு காரணம் என்னுடன் அப்போது ஆறாம் எண் பேருந்தில் பயணித்த 27 நண்பர்கள் அனைவருமே ஆயிரம் வாலா அதிரடி நகைச்சுவையாளர்கள். இத்தோடு பயணம் முழுக்க பாட்டு, கைத்தட்டல், விளையாட்டு என அலுப்பில்லாமல் பதினைந்து நாட்களும் மனதை மலர்ச்சியுடன் இருக்க செய்தவர்கள். நான் மட்டுமல்ல என்னுடன் அந்த யாத்திரையில் பயணித்த அனைவருக்கும் இதே அனுபவம்தான்.
உண்மையில் இமயமலையின் அருள் நிறை அழகை முழுவதுமாக ஒருவன் உள்வாங்க வேண்டுமானால் அதற்கு அவனுக்கு அவசியம் தேவையானது இத்தகைய மலர்ச்சியான மனநிலை. மிகவும் திறந்த மனநிலையில் அந்த பேரழகை ஒருவன் காணும்போதுதான் மனம் எல்லையற்ற ஆனந்த அலைக்குள் நுழையமுடியும். இல்லாமல் இவ்வளவு தூரம் வந்துவிட்டு வீட்டில் பீரோவை பூட்டினோமா, லீவு லெட்டர் மேனேஜர் கையில் கிடைத்திருக்குமா, பையன் ஒழுங்காக பள்ளிக்கூடத்துக்கு போனானா? என யோசித்துக் கொண்டிருந்தால் அவ்வளவுதான். இமயமலைக்கும், நம்ம ஊர் மலைக்கும் வித்தியாசம் இல்லை, இரண்டும் ஒன்றுதான்.
சென்ற முறை கிடைத்த அந்த அனுபவம் இந்த முறையும் அமையுமா? எனது பேருந்தினுள் திரும்பி நோட்டமிட்டேன். இன்னும் கொஞ்ச நேரத்தில் இவர்கள் யார் யார் என தெரிந்துவிடும். அதன் பின் இனி பதினைந்து நாட்களும் இவர்கள்தான் அப்பா, அம்மா, நண்பர்கள், உற்றார் உறவுகள் எல்லாம். இரவானாலும் பகலானாலும் ஊன் உறக்கம் எதுவானாலும் இவர்களுடன் தான்.
நினைவுக்கு வந்தபோது எட்டு பேருந்துகளும் ஒன்றன்பின் ஒன்றாக வரிசையாக ரயில்நிலையத்தை விட்டு வெளியேறி ஹரித்துவார் செல்லும் வழியில் சீறிக்கொண்டிருந்தன. வழிநெடுக இரண்டு பக்கமும் உயரமான மரங்கள் நம்மை வரவேற்க, அகண்ட தார்சாலையில் பேருந்துகள் இமயமலையை காணும் ஆவலில், ஒன்றை ஒன்று விரைந்து முந்திக்கொண்டு சென்று கொண்டிருந்தன.
ஹரித்துவார், ஹரியின் நுழைவாயில். டெல்லியிலிருந்து 200 கி.மீ. தொலைவிலிருக்கும் ஹரித்துவார் தான் இமயமலைக்குள் நுழைவதற்கான பொது வாயில். இமயமலையின் நான்கு புனிதத்தலங்களான கங்கோத்ரி, யமுனோத்ரி, கேதார்நாத் மற்றும் பத்ரிநாத் ஆகிய இயற்கையின் பிரம்மாண்டங்களை தரிசிக்க இதுதான் ஒரே வழி. கங்கை எனும் புனித நதி கோமுக்கில் பாகீரதியாக பிறந்து கங்கோத்ரியில் பிரவாகமாகி பின் இமயமலையில் வெவ்வேறு பெயர்களுடன் உலாவந்து இறுதியில் இங்குதான் பூமியை முதலில் தொட்டு கங்கை எனும் பெயரை பெறுகிறது. அதனால் இந்தியாவின் மிக முக்கிய புனிதத்தலமாக கருதப்படும் இடம் ஹரித்துவார்.
டெல்லியிலிருந்து கிட்டத்தட்ட 6 மணி நேர பேருந்து பயணம். காலையில் வயித்துக்கு எதுவும் ஈயாமல் பயணம் கிளம்பியதால் பசி வயித்தை கிள்ளியது. நல்லவேளையாக ஹரித்துவாருக்கு 80 கிமீ முன்பாகவே ஓரிடத்தில் வண்டி ஒரு விடுதியில் நிறுத்தப்பட திரும்ப அரை மணிநேரம் கழித்து அனைவரும் வண்டிக்குள் ஏறியபோது வயிறு கொஞ்சம் வெளியே தள்ளியிருந்தது. பஃபே எனப்படும் சுய சேவையில் ஜஸ்கீரிம் கோக் உள்ளிட்ட பலவிதமான வெஜிடேரியன் உணவுகள். காலையிலிருந்து எதுவும் சாப்பிடாத காரணத்தால் பலரும் தங்கள் திறமையை முழுவதுமாக காண்பித்து கொண்டிருந்தனர். பேருந்து மீண்டும் புறப்பட்டு மாலை 4 மணிக்கு ஹரித்துவாரை அடைய துவங்கியதுமே பேருந்தில் பரபரப்பு. அனைவரும் கையில் கேமராவை தூக்கிக்கொண்டு ஜன்னலுக்கு பாய்ந்தனர். அப்படி என்னடா விசேஷம் என நானும் பார்க்க, அட என் கண்முன் பெரும் பிரமாண்டம். கண்கள் விக்கித்து உறையும் அளவுக்கு அகண்ட கங்கை பெருக்கெடுத்துக்கொண்டு ஓடிக் கொண்டிருந்தது.
நதியின் நடுவில் நட்ட நடுநாயகமாய் கிட்டத்தட்ட 50 அடி உயரத்துக்கு சடைவிரிகோலமும், பம்பை உடுக்கை சகிதம் கழுத்தில் பாம்பும், உடம்பில் புலித்தோலும் அணிந்து, கையில் சூலத்துடன் சிவபெருமான் காட்சியளிக்க, அனைவரும் விழிகள் விரித்து அசந்து போய் பார்த்துக்கொண்டிருந்தனர்.
அடுத்த பதிவில் ஈஷாவில் வழங்கப்படும் சிக்ஸ் பேக் சிகிச்சை பற்றி கூறுகிறார் எழுத்தாளர்... என்ன அது? தெரிந்துகொள்ள காத்திருங்கள்!
குறிப்பு: ஈஷாவுடன் இமாலயம் செல்ல வாருங்கள். வரும் செப் 15 அன்று துவங்கவுள்ள இந்த இமாலயப் பயணத்தில் நீங்களும் பங்குகொள்ள முன்பதிவுகள் அவசியம்.
தொடர்புக்கு: 94 88 111 333, 94 88 111 555
வலைதளம்: www.sacredwalks.org