விவசாயத்தில் சாகுபடி பெருகி நல்ல வருமானம் ஈட்ட வேண்டுமென்றால் மண்வளம் சிறப்பாக இருப்பது மிகவும் அவசியம்! இயற்கைமுறையில் செலவில்லாமல் மண்வளமும் பெருகுவதற்கு கவனிக்க வேண்டிய சில எளிய விஷயங்கள் பற்றி இக்கட்டுரை எடுத்துரைக்கிறது!

வடகிழக்கு பருவமழை தாமதமாக துவங்கி ஓரளவிற்கு மழைப்பொழிவை தந்துகொண்டிருக்கும் இந்த வேளையில், பெரும்பாலும் விவசாயிகள் என்னென்ன பயிர்செய்யலாம் என முடிவுசெய்து வைத்திருக்கக் கூடும். ஆனால், மண்ணிற்கேற்ற பயிர்களை பயிரிடுதல் என்பது கவனிக்க வேண்டிய விஷயமாக உள்ளது. மண்ணில் எத்தகைய கரிம வளம் உள்ளது என்பதைப் பொறுத்து வல்லுநர்கள் இதனை முடிவுசெய்கின்றனர். அப்படியானால் மண்வளம் என்பது கரிம சத்துக்களாலேயே தீர்மானிக்கப்படுவது தெரிகிறது. அத்தகைய கரிம சத்துக்களை மண்ணில் உருவாக்குவதில் இன்றியமையாததாக மட்கு உள்ளது.

மட்கு என்றால் என்ன?

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.
மட்கு பயிர்களின் வேர்களுக்கு ஊட்டச்சத்தை அளிப்பதுடன், நுண்ணுயிர்களுக்கு உணவளிக்கும் பிரதான ஆதாரமாக உள்ளது. மண்ணிற்கு மென்மையான மண்கட்டமைப்பை வழங்குவதுடன், மழைநீரை மண்ணில் உள்ளீர்த்து நீர் தட்டுப்பாட்டினை குறைக்கிறது.

இயற்கை வேளாண் வித்தகர் திரு.சுபாஷ் பாலேக்கர் அவர்கள் மட்கு பற்றி கூறுகையில், "மட்கு மண்ணின் இதயம் போன்றது" என்கிறார். கருஞ்சிவப்பு நிறங்கொண்ட மட்கு எனும் பொருள், தாவரங்களின் இலைதழைகள், விலங்குகள், மண்புழு, பிற நுண்ணியிரிகள் மற்றும் பூச்சிகள் ஆகியவற்றின் இறந்த உடல் அங்கங்கள் சிதைவடைவதால் மண்ணில் உருவாகிறது.

மண்வளம் பெருக வேண்டுமென்றால், மண்ணில் மட்கு உருவாக வேண்டும். ஏனென்றால் மட்கில் கார்பன், நைட்ரஜன் போன்ற கரிம சத்துக்கள் அடங்கியுள்ளன.

மட்கின் முக்கியத்துவம் என்ன?

மட்கு பயிர்களின் வேர்களுக்கு ஊட்டச்சத்தை அளிப்பதுடன், நுண்ணுயிர்களுக்கு உணவளிக்கும் பிரதான ஆதாரமாக உள்ளது. மண்ணிற்கு மென்மையான மண்கட்டமைப்பை வழங்குவதுடன், மழைநீரை மண்ணில் உள்ளீர்த்து நீர் தட்டுப்பாட்டினை குறைக்கிறது. இதைப் பற்றி பாலேக்கர் கூறுகையில், ஒரு கிலோ மட்கு சுமார் 6 லிட்டர் தண்ணீரை உள்ளீர்த்து, 2 லிட்டர் நீரை தன்னுள் இருத்தி வைத்துக்கொண்டு, மீதத்தை தாவர வேர்களுக்கு தரும் என்கிறார். இதனால் மண்ணில் நீர் வளம் பெருகுவது உறுதிசெய்யப்படுகிறது!

மட்கை உருவாக்க என்ன வழி?

மட்கு உருவாக்குதல் குறித்து பாலேக்கர் கூறும்போது, தாள் மூடாக்கு போடுவதால் மட்கு உருவாகும் என்கிறார். அதாவது, இலைதழைகளை போட்டு அதன்மேல் மண்ணை இட்டு மூடும் செயல்முறையே மூடாக்கு. இத்தகைய மூடாக்கு அமைப்பு காடுகளில் இயற்கையாக இருப்பதைப் பார்க்கலாம். ஏனெனில் காடுகளில் மரங்களின் இலை-தழைகள் கீழே விழுகையில் அதனை மண் மூடிக்கொள்கிறது. இதன்மூலம் மட்கு உருவாகிறது. எனவே நம் விவசாய நிலங்களில் மரங்கள் இருப்பது அவசியம் என்பது இதன்மூலம் தெளிவாகிறது.

“நீங்கள் உங்கள் வயலின் நடுவிலுள்ள ஒரு பெரும் மரம் ஒன்றை வெட்டினால், அதன்பின் 5 - 10 ஆண்டுகளுக்கு தொடர்ந்து மரம் இருந்த இடத்தில் விளையும் பயிர்களுக்கு எந்தவிதமான எருவோ அல்லது உரமோ போடத் தேவையில்லை! உரங்கள் இடாமலே அந்த இடத்திலுள்ள பயிர்கள் செழித்து நல்ல விளைச்சல் தரும். அதேபோல மரம் இருந்திராத பிற இடங்களின் விளைச்சலை இதனோடு ஒப்பிட்டால் அது குறைவாகவே இருக்கும்.” என்கிறார் சுபாஷ் பாலேக்கர் அவர்கள்.

"நதிகளை மீட்போம்" பேரணியில் சத்குரு வலியுறுத்திய கருத்துக்களில் இதுவும் முக்கியமானது. நமது நிலங்களில் மரங்களின் இலை-தழைகள் விழவேண்டும்; அப்போதுதான் மண்வளம் பெருகும் என சத்குரு தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளார். இதற்காக விவசாய நிலங்களில் மரம் நடப்படுதல் அவசியம் என்ற கருத்தையும் அவர் முன்வைத்தார். விவசாயிகள் பயிறுவகை பயிர்களிலிருந்து மரப்பயிர் விவசாயத்திற்கு மாறும்போது வருமானமும் பல மடங்கு அதிகமாகும் என்பதற்கும் பல்வேறு சான்றுகள் உள்ளன.

எனவே தங்கள் நிலங்களில் மண்வளமும் நீர்வளமும் பெருக வேண்டும் என நினைக்கும் விவசாயிகள் தங்கள் நிலங்களில் மரங்களை நடுதல் அவசியமாகிறது!

ஈஷாவின் வேளாண்காடுகள் உருவாக்கம்!

விவசாயிகள் தங்கள் நிலத்தில் நீர் இல்லை; வேலைக்கு ஆட்கள் இல்லை; விற்ற பொருட்களுக்கு விலை இல்லை, இப்படி பல்வேறு காரணங்களால் விவசாயத்தை கைவிட நினைக்கிறார்கள். இந்நிலைக்கு ஒரு நல்ல தீர்வாக வேளாண் காடுகள் வளர்ப்பு உள்ளது. ஈஷா பசுமைக் கரங்கள் திட்டத்திலுள்ள வேளாண் வல்லுனர்கள், மண்ணிற்குத் தகுந்த மரக்கன்றுகளை நடுவதற்கு ஆலோசனைகளையும் மரம் வளர்ப்பதற்குத் தேவையான வழிமுறைகளையும் களைகளை கட்டுப்படுத்துவதற்கான நுட்பங்களையும் நேரில் வந்து அளிக்கிறார்கள்.

முதலில் மண் பரிசோதனை செய்து அதற்கேற்ற மரங்களை வழங்கும் பசுமைக் கரங்களின் தன்னார்வத்தொண்டர்கள், ஊடுபயிர் நடுவதிலும் தங்கள் ஆலோசனையை வழங்கி ஒத்துழைப்பு தருகின்றனர். லாபம் தரும் ஊடுபயிர்கள் என்னென்ன என்பதை கூறி வழிநடத்துவதோடு, சொட்டுநீர் பாசனம் அமைப்பதற்கும் தங்கள் வழிகாட்டுதலை வழங்குகிறார்கள்.

ஈஷா நாற்றுப்பண்ணைகள்

தமிழகத்தின் பசுமைப் பரப்பை அதிகரிக்கும் நோக்கில் தமிழகத்தில் மொத்தம் 33 நாற்றுப் பண்ணைகளை ஈஷா பசுமைக்கரங்கள் உருவாக்கியுள்ளது. எளிதில் வளரக்கூடிய செண்பகம், மகிழம், மந்தாரை, ஜக்ரண்டா, அவலாண்டா, லகஸ்ட்ரோமியா போன்ற அழகிய வண்ணப்பூக்கள் பூக்கும் மரக்கன்றுகள் மற்றும் பலா, எலுமிச்சை, நாவல் போன்ற பழ மரக்கன்றுகளும் ஈஷா நாற்றுப் பண்ணைகளில் பிரத்யேகமாக தயார் செய்து தரப்படுகிறது. மேலும் டிம்பர் வேல்யூ உள்ள மரவகைகளும் இங்கு கிடைக்கின்றன. உங்கள் ஊருக்கு அருகிலுள்ள ஈஷா நாற்றுப் பண்ணைகளில் மரக்கன்றுகளைப் பெறுவதற்கும், மரம் நடுதல் தொடர்பான வழிகாட்டுதல்களைப் பெறுவதற்கும் கீழ்க்கண்ட எண்ணைத் தொடர்பு கொள்ளவும். தொ. பே: 94425 90062