அப்துல்கலாம் அவர்களின் பிறந்தநாளை மரங்கள் நட்டு கொண்டாடிய பள்ளி மாணவர்கள் மற்றும் சிலம்பாட்டப் போட்டியில் சாதித்த ஈஷா மாணவர்கள் என இரு அழகிய நிகழ்வுகளின் தொகுப்பு இங்கே!

கலாமின் பிறந்தநாளில் மாணவர்கள் நட்ட மரக்கன்றுகள்!

இளைஞர்களின் எழுச்சி நாயகனாகத் திகழும் மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர்.APJ அப்துல்கலாம் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு, திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 'ஆரஞ்ச் இன்டர்நேஷனல் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளி'யின் மாணவர்கள், தங்கள் பள்ளியில் ஆளுக்கொரு மரம் நட்டனர். இந்நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற பசுமைக் கரங்களின் மண்டல ஒருங்கிணைப்பாளர் ஸ்வாமி.சர்விகா அவர்கள், இயற்கையை பாதுகாக்கவேண்டிய அவசியம் குறித்தும், அதனோடு நமக்கு இருக்கும் ஆழமான தொடர்பு குறித்தும் பேசினார். இந்நிகழ்ச்சியை ஒருங்கிணைத்த பள்ளியின் சேர்மன் திரு.சிவக்குமார் அவர்களுக்கும் நன்றி தெரிவித்துப் பாராட்டினார்.

சிலம்பாட்டப் போட்டியில் ஈஷா மாணவர்கள் வெற்றி!

சேலத்தில் மண்டல அளவில் நடைபெற்ற பள்ளி மாணவர்களுக்கான சிலம்பப் போட்டியில், 6 மாவட்டங்களிலிருந்து மொத்தம் 26 குழுக்கள் கலந்துகொண்டன. இதில் நம் ஈஷா வித்யா மாணவர்கள் 6 பேர் (தர்மபுரி மாணவர்கள்: 5, சேலம்: 1) வேறு பள்ளி மாணவர்கள் 9 பேருடன் இணைந்து, 'ஜெய் ஆஞ்சனேயா' என்ற குழுவாய் போட்டியிட்டனர். இரண்டு நாட்கள் நடைபெற்ற இப்போட்டியில் இந்த அணி முதற்பரிசை தட்டிச் சென்றது. பரிசுபெற்ற நம் ஈஷா வித்யா மாணவர்கள்: கார்த்திகேயன், கிரிதரன், கிருஷ்ணகாந்த், மஹாகணேஷ், முனீஸ் மற்றும் கோகர்மேஷ்வர்நாத். இதில் மூன்று பேர் உதவித் தொகை பெற்று படிக்கும் மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மாணவர்களுக்கான தனிநபர் பரிசுகளையும், குழுவிற்கான வெற்றிக் கோப்பையையும் சேலம் காவல்துறை துணை ஆணையர் திரு. C.R.நாகராஜன் அவர்கள் வழங்கினார்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.