அரசு மரம் செய்யும் அற்புத மருத்துவம்!
அரசு மரத்தைக் குத்துவதால் வடியும் பாலினை பாதங்களில் உள்ள பித்த வெடிப்புகளில் தடவி வந்தால் குணமாகுமாம். சொல்லியதோடு மட்டுமல்லாமல் தான் சேகரித்து வைத்திருந்த அரசு மரப்பாலை கொடுத்தாள்; உடனே பாதங்களில் தடவிக்கொண்டேன்.
கொல்லைப்புற இரகசியம் - பகுதி 27
டிவியில் பித்த வெடிப்பிற்காக ஒளிபரப்பாகும் விளம்பரங்கள் பொதுவாக பெண்களை மையப்படுத்தியே இருக்கும். தங்கள் பாதங்கள் கூட அழகாக இருக்க வேண்டுமென அழகுணர்ச்சி மிக்கவர்களாக பெண்கள் இருப்பது இயல்பானதுதான். ஆண்கள் இதைப் பற்றியெல்லாம் பெரிதும் அலட்டிக்கொள்வதில்லை. எனக்கு பள்ளிப்பருவத்திலிருந்தே பித்த வெடிப்பு சிலநேரங்களில் குறைவாகவும் ஒருசில நேரங்களில் அதிகமாகவும் பாதங்களில் அப்பிக்கொள்ளும்.
நான் அதற்காக எப்போதும் கவனம் செலுத்தியதில்லை என்றாலும், சென்ற வாரம் பாதத்தில் ஒருபகுதியில் பித்த வெடிப்பினால் வலி உண்டாகும் அளவிற்கு ஆகிவிட்டது. டிவி விளம்பரங்களில் காட்டப்படும் இரசாயன க்ரீம்களை வாங்கிப் பூச எனக்கு விருப்பமில்லை. உடனே கிளம்பினேன் உமையாள் பாட்டி வீட்டிற்கு!
வழக்கம்போல பாட்டி தனது கைவைத்திய மருந்து தயாரிப்பில் மும்முரமய் இருந்தாள். நான் என் வருகையைப் பதிவு செய்ய மெதுவாக செருமினென்.
“வாப்பா... வா! என்ன விஷயம்? இந்த பாட்டியோட வீடு தேடி வரணும்னா எதோ விஷயம் இருந்தாகணுமே?” பாட்டி என்னைக் கேட்டுக்கொண்டே அங்கிருந்த கொட்டான்குச்சியில் சில மருந்துபொருட்களை ஒன்றுசேர்த்து வைத்தாள்.
“என்ன பாட்டி உங்ககிட்ட வரணும்னா காரணத்தோடவா வருவேன். ஒரு பாசம்தான் பாட்டி!” என்றேன் பவ்யமாக.
“அட... சோளியன் குடுமி சும்மா ஆடாதுப்பா... சொல்லு என்ன விஷயம்?” பழமொழி சொல்லி எனைக் காலை வாரிய பாட்டியிடம் விஷயத்தை சொன்னேன்.
Subscribe
பித்த வெடிப்பிற்கு இயற்கை அளித்துள்ள மருந்துகளில் அரசு மரத்துப்பால் மிகச்சிறந்தது என்று எடுத்துரைத்தாள் பாட்டி! அரச மரத்தைக் குத்துவதால் வடியும் பாலினை பாதங்களில் உள்ள பித்த வெடிப்புகளில் தடவி வந்தால் குணமாகுமாம். சொல்லியதோடு மட்டுமல்லாமல் தான் சேகரித்து வைத்திருந்த அரசு மரப்பாலை கொடுத்தாள்; உடனே பாதங்களில் தடவிக்கொண்டேன்.
அரசு மர இலைகள் மற்றும் பட்டைகள் ஆகியவை கைவைத்தியத்தில் முக்கியபங்கு வகிக்கின்றன. தொடர்ந்து இதுகுறித்து பாட்டியிடம் ஆர்வத்துடன் கேட்டபோது...
“அரசு இலைக் கொழுந்த ஒரு கைப்பிடி அளவு எடுத்து பால்ல வேகவச்சு சக்கரை சேத்து சாப்பிட்டா காய்ச்சல் சரியாகும். அரசு விதைய பொடிசெஞ்சு (1-2 கிராம்) சாப்பிட்டு வந்தா மலச்சிக்கல் தீரும், அதோடு பசியும் அதிகரிக்கும்.
அரசு மரப்பட்டையில அநேக பலன் இருக்குதுப்பா... பொறுமையா கேக்குறயா...?”
“சொல்லுங்க பாட்டி...! கேக்குறதுக்குதானே இவ்வளவு தூரம் வந்திருக்கேன்” நான் ஆர்வத்துடன் சொல்ல, பாட்டி தொடர்ந்தாள்.
“அரசு மரப்பட்டைய இடிச்சு பொடியாக்கி, அப்புறம் அத தீயில கருக்கி, அந்த சாம்பலை ஒரு வெருகடி அளவு (இரண்டு விரல்கள் சேர்த்து எடுக்கும் அளவு- Pinch) நீரில் ஊறவச்சு வடிகட்டி குடிச்சா விக்கல் வருவது சரியாகும். அரசு மரப்பட்டைய பொடி செஞ்சு குடிநீர்ல கலந்து தினமும் குடிச்சு வந்தா சொறி-சிரங்கு குணமாகும். இந்த குடிநீர வாய்ப்புண்ணு குணமாக வாய்கொப்பாளிக்கவும் பயன்படுத்தலாம். பெண்கள் வெள்ளைப்படுவதை தடுக்க இந்த குடிநீர சிறுநீர் தாரையை கழுவ உபயோகிக்கலாம். பட்டை தூள் எடுத்து புண்கள்ல பூசி வந்தா புண் ஆறும்.
அப்புறம்... குழந்தைப் பேறு இல்லாத பெண்கள் மாதவிடாய்க்கு முன்ன 3 நாளு இந்த மரத்தில வளரும் புல்லுருவி இலைய அரைச்சு எலுமிச்சம்பழ அளவு சாப்பிட்டு வந்தா கரு உருவாகும் வாய்ப்பு அதிகமாகும்.”
பாட்டி அரசு மரத்தின் பாகங்களால் நமக்கு விளையும் நன்மைகள் குறித்து விளக்கி முடித்ததும் எனக்கு ஒரு டவுட் வந்தது. பாட்டியிடம் கேட்டேன்!
“பாட்டி புத்தருக்கு ஞானம் வந்தது கூட இந்த அரச மரத்தடியிலதான?”
“அதெல்லாம் புத்தருக்குதாம்ப்பா வரும்! நீ போய் உக்காந்தா தூக்கம்தான் வரும்!” பாட்டி என்னை நையாண்டி செய்தபடி தன் வேலையைத் தொடர்ந்தாள்.