வாழ்வில் ஏதோ ஒன்றைச் செய்ய வேண்டும் என்று நாம் நினைப்பதில் இரண்டு அம்சங்கள் இருக்கின்றன. ஒன்று, நம் ஆசை. ஒவ்வொருவருக்கும் தம் வாழ்வில் நிறைவேற்றிக் கொள்வதெற்கென்று ஆசைகள் இருக்கும். மற்றொன்று, ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இருக்கும் இயல்பான ஏக்கம். இந்த ஏக்கம் இயற்கையாகவே ஒவ்வொரு மனிதருக்குள்ளும் இருக்கிறது. ஆன்மீகம் நடப்பது ஆசையால் அல்ல, இந்த இயற்கையான ஏக்கத்தால். இந்த ஏக்கத்திற்கு உள்ள ஒரு முக்கிய குணம் என்னவென்றால் வெறும் ஏக்க உணர்வே கூட ஒரு தித்திப்பான அனுபவமாக இருக்கும். ஒருவர் ‘நான் காதலில் இருக்கிறேன்’ என்று சொன்னால் ‘நான் ஏக்கத்தில் இருக்கிறேன்’ என்றுதான் பொருள். அப்படி இருப்பதே காதலில் இருப்பவர்களுக்கு ஒரு இனிமையான அனுபவத்தைத் தருகிறது. அது ஒரு தித்திப்பான ஏக்கம். இந்த ஏக்கம் என்பது வாழ்வின் இயல்பு.

இன்னும் சொல்லப்போனால், வாழ்க்கை என்பதே ஏக்கம்தான். அந்த ஏக்கம் இல்லாமல், இங்கே வாழ்வதற்கு அர்த்தம் இருக்காது என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். உள்ளிருக்கும் இந்த சக்திவாய்ந்த ஏக்கத்தோடு தொடர்பில் இல்லாவிட்டால், வாழ்வதற்கு எவ்விதக் காரணமும் இருக்காது. இந்த ஏக்கம் இல்லாவிட்டால், ‘அடுத்த நாள் காலை’ என்பது ஆவலுடன் எதிர்பார்க்கக் கூடிய விஷயமாக இருக்காது. வாழ்வின் அடிப்படையும், வாழ்வின் சாரமும் இந்த ஏக்கம்தான். பாவஸ்பந்தனா வகுப்பில் (ஈஷாவில் நடைபெறும் உயர்நிலை வகுப்பு) நாம் செய்வதெல்லாம் உங்களை அந்த அடிப்படை ஏக்கத்தோடு தொடர்புகொள்ளச் செய்வதுதான். அந்த அடிப்படை ஏக்கம் எதற்காகவும் அல்லது யாருக்காகவும் அல்ல, அது வெறுமனே ஒரு ஏக்கம். அந்த ஏக்கம் ‘உங்களை’யும் விட மிகப் பெரியதானது. இந்த உடல், தன்னில் அடக்கி வைக்கமுடியாத ஏக்கம் அது. தன் தந்திரங்களால் மனமும் கூட ஏமாற்ற முடியாத ஏக்கம் அது. இந்த ஏக்கம் எத்தனை பெரியது எனில், யாரும் அதை நிறைவேற்ற முடியும் என்று நினைப்பதுகூட இல்லை... காரணம், அது அவர்களையும் விடப் பெரியது. இந்த ஏக்கத்தோடு வாழ்ந்திருப்பதே ஒரு அழகான அனுபவம். காதல் என்றாலும், பக்தி என்றாலும், தியானம் என்றாலும், அவையெல்லாம் இந்த அடிப்படையான ஏக்கத்தோடு முழுவதுமாய் ஐக்கியமாவதைத்தான் குறிக்கின்றன, ஏனெனில் வாழ்வு என்பதே இந்த ஏக்கம்தான்.

இவ்வுலகின் நலிவடைந்த நாடுகளை விட, செல்வச் செழிப்போடு இருக்கும் முழு வளர்ச்சி பெற்ற நாடுகளே அதிகக் கவலையில் உழல்கின்றன. அடுத்த வேளை உணவு கிடைக்குமா கிடைக்காதா, என்ற நிலையில் இருப்பவர்கள்தான் கவலையில் உழலவேண்டும். ஆனால் நிதர்சனம் அதுவல்ல. நன்றாக உண்டு வாழ்பவர்கள்தான் அதிகமாக கவலையில் உழல்கிறார்கள். இதற்குக் காரணம், வாழ்வென்றால் என்னவென்று புரியாமல், வாழ்வதற்கு முயற்சி நடந்துகொண்டிருக்கிறது. சிறுவயதில், ‘உங்களுடையது’ என்று ஒன்றுமே இருக்கவில்லை, என்றாலும் நீங்கள் நன்றாகவே வாழ்ந்தீர்கள். ஒரு பேச்சிற்கு உங்களின் இந்த சிறுவயதை, அதாவது ‘என்னுடையது’ என்று உங்களிடம் எதுவும் இல்லாத வயதை, ‘ஏழ்மைக் காலம்’ என்று வைத்துக் கொள்வோம். ஏனெனில் அந்த வயதில் உண்மையில் உங்களுக்கென்று சொந்தமாக ஏதும் இல்லை. ஆனால் உங்களுக்கென்று ஒரு வயது வந்தபோது, நீங்களும் சில பொறுப்புகளை ஏற்றுக்கொண்டு செயல்படத் துவங்கியபோது உங்களுக்குள் கவலைகள் ஆரம்பித்தன.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

அப்படியென்றால், பொருள்வளம் பெறுவது தவறா? நிச்சயமாக இல்லை. செல்வச்செழிப்பு என்பது வரம்தான், ஆனால் வரத்தையும் சாபமாக மாற்றிக் கொள்வதில் நாம் கைதேர்ந்த வல்லுநர்களாக இருக்கும்போது, செல்வம் ஒரு பெரும் பிரச்சினையாக இருக்கிறது. எதைக் கொடுத்தாலும், அதை நீங்கள் சாபமாக மாற்றிக் கொள்கிறீர்கள். ஏனென்றால் உங்களுக்குள் இருக்கும் வாழ்வின் அடிப்படை ஏக்கத்தில் இருந்து விலகி, ஆசைகளால் நீங்கள் வழிநடத்தப்படுகிறீர்கள். ஆசைகளால் செலுத்தப்படும்போது, கவலைதான் உங்கள் நிலையாக இருக்கும். இக்கவலையைத் தொடர்ந்து நீங்கள் உருவாக்கிக் கொண்டே இருந்தால், நீங்கள் பாதிப்படையும் நாள் வெகுதூரத்தில் இல்லை. பாதிப்பு எப்படியும் வரும்.

ஆசையின் வலையில் சிக்கினால், வாழ்வின் அடிப்படை ஏக்கத்தோடு ஒன்றியிருப்பதை விட்டுவிட்டு, இன்னும் ‘கொஞ்சம் அதிகமாக’ இருக்கவே விரும்புவீர்கள். ஆனால் வாழ்வின் அடிப்படை ஏக்கமோ, எல்லையற்றது கிடைக்கும்வரை தணியாது. அதனால் இந்த அடிப்படை ஏக்கத்தோடு ஒன்றியிருந்தால், நீங்கள் இயல்பிலேயே ஆன்மீகப் பாதையில்தான் இருப்பீர்கள். ஆனால் இப்போதிருக்கும் பிரச்சினை, சமூகத்தின் சிந்தனையால் வளர்க்கப்பட்ட நீங்கள், பெரிய கார் ஒன்றை வாங்கிவிட்டால், அந்த ஏக்கம் தணிந்துவிடும் என்று நினைக்கிறீர்கள்!

ஆசைகள் எல்லாம் உருவாக்கப்படுபவை. உருவாக்கப்பட்டவற்றோடு கொஞ்சம் விளையாடுவதில் தவறில்லை, ஆனால் அதையே வாழ்க்கையாக மாற்றிக் கொண்டால், படுகுழியை நோக்கித்தான் செல்வீர்கள். சுற்றுச்சூழல் சீர்கேடும், பொருளாதாரச் சரிவும்தான் படுகுழி என்று எண்ண வேண்டாம். ‘ஆனந்தமாக வாழ்வது எப்படி, சந்தோஷமாய் இருப்பது எப்படி’ என்றே தெரியவில்லை என்றால், நீங்கள் படுகுழியில் இருப்பதாகத்தானே பொருள்?

சர்ச் பிஷப் ஒருவர் இறக்கும் தருவாயில் இருந்தார். தனது வழக்கறிஞரையும், கணக்காளரையும் வரச்சொல்லி செய்தி அனுப்பினார். இருவரும் வந்தனர். இறக்கும் தருவாயில் இருப்பவர் உயில் எழுதுவதும், முக்கியமாய் விட்டுப்போன கணக்குகளை தன் கணக்காளரிடம் சொல்லி சரிசெய்ய முனைவதும் நடப்பதுதானே! இவர்கள் இருவரும் வந்ததும், பிஷப் அவர்களை படுக்கையின் இருபக்கத்திலும் நிற்குமாறு பணித்தார். இருவரும் நின்றார்கள். பிஷப் நிம்மதி அடைந்தவராய் கண்களை மூடி அமைதியாய் இருந்தார். அரைமணி நேரம் சென்றது. பிஷப் இவர்கள் வந்ததை மறந்துவிட்டாரோ, இல்லை சுயநினைவை இழக்கிறாரோ என்றெண்ணி, வக்கீலும், கணக்கரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு, “நாங்கள் வந்துவிட்டோம் ஃபாதர், எங்களிடம் ஏதேனும் சொல்ல விரும்புகிறீர்களா?” என்று கேட்டனர். அவர்களைப் பார்த்து இனிமையாய் சிரித்தவாறே பிஷப் கூறினார், “இல்லை. எதுவும் இல்லை” என்று. “பிறகு ஏன் எங்களை வரச்சொல்லி அழைத்தீர்கள்? உயில் எதுவும் எழுத வேண்டாமா?”. அதற்கு பிஷப்போ, “இல்லை. உயில் எதுவும் எழுதவேண்டாம். என்னிடம் சொத்தோ, பணமோ எதுவும் இல்லை. அதனால் உயில் எழுதவும், கணக்கு சரிபார்க்கவும் எனக்குத் தேவையில்லை” என்றார். அதிர்ச்சியுற்ற அவர்கள் இருவரும், “பின் ஏன் எங்களை வரச்சொல்லி அழைத்தீர்கள்?” என்று கேட்டனர். அதற்கு பிஷப் கூறினார், “இயேசுவைப் போன்றே, இரு திருடர்களுக்கு நடுவில் நான் இறக்க விரும்புகிறேன்”.

உங்கள் ஆசைகள் வாழ்வைப் பற்றிய உங்கள் கண்ணோட்டத்தை முற்றிலுமாய் சிதைத்துவிடும். ஏனெனில், உங்களைச் சுற்றி பற்பல விஷயங்கள் நடந்து கொண்டிருக்கிறது. வாழ்வின் வெவ்வேறு கட்டங்களில், மக்கள் செய்யும் வெவ்வேறு விஷயங்கள் உங்களைக் கவர்வதாய் இருக்கும். அதையே நீங்களும் செய்ய முற்படுவீர்கள். இப்படியே அது, இது என்று செய்துகொண்டே செல்கையில், வாழ்வின் அடிப்படை ஏக்கத்தை விட்டு வெகுதூரம் தள்ளிச் சென்றிருப்பீர்கள். ‘ஆன்மீகம்’ என்று சொல்லும்போது, இன்னுமொரு வேதாந்தமோ, பாடமோ உங்களுக்கு நாங்கள் வழங்கவில்லை. உங்கள் வாழ்வின் மையம் அல்லது வாழ்வின் அடிப்படை நோக்கி உங்கள் கவனத்தை திருப்புவதைப் பற்றியே நாங்கள் பேசிக் கொண்டிருக்கிறோம். இந்த ஒரு உயிர் (உங்கள் உயிர்) அற்புதமாக இருக்கவேண்டும் என்றெண்ணித்தானே, திருமணம் செய்து, பிள்ளைகள் பெற்று, வேலைக்குச் சென்று என்று இன்னும் பற்பல விஷயங்கள் செய்து கொண்டிருக்கிறீர்கள். ஆனால் இந்த விஷயம் மறக்கப்பட்டு விட்டதே? இது மறந்து போகக் காரணம், ஆசை எனும் வலையில் சிக்கி வாழும்போது, உங்கள் இரசாயனம் முற்றிலுமாய் குழம்பிப் போகிறது. ஆம், இந்த மாயத் தோற்றத்தின் சக்தியை குறைவாக மதிப்பீடு செய்யாதீர்கள்.

யோக சூத்திரத்தில் இதற்கென ஒரு உதாரணம் உண்டு. ஒரு கயிற்றை எடுத்து, ‘பாம்பு, பாம்பு’ என்று கத்திக் கொண்டு உங்கள் மீது வீசினால், படபடப்பு, பயம் போன்றவற்றின் இரசாயனங்கள் உங்களுக்குள் உருவாகும். அது உங்களுக்கு உண்மையாய் நிகழ்ந்த உணர்வு, அனுபவம்தானே? இதுவே ஒரு பாம்பை, ‘இந்தக் கயிற்றைப் பிடி’ என்று சொல்லி உங்கள் கையில் கொடுத்தால், அது பாம்பு என்று தெரியவரும் வரை நீங்கள் நன்றாகத்தான் இருப்பீர்கள். இந்த ‘மாயை’யின் சக்தியையும், அது உங்கள் உடலின் இரசாயனத்தில் ஏற்படுத்தக் கூடிய தாக்கத்தையும் நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். உங்கள் மனத்தில் நீங்கள் உருவாக்கும் ஒவ்வொரு உருவமும் உங்கள் உடல் இரசாயனத்தை பெரும் அளவுகளில் பாதிக்கிறது.

திரைப்படத்தில் தோன்றும் நிஜமற்ற உருவங்களைப் பார்த்து தீவிரமாய் காதல் வயப்படும் மக்கள் தங்களைச் சுற்றி இருக்கும் நிஜ மனிதர்களிடம் சரியாக பேசிக்கூட இருக்கமாட்டார்கள். இதுதான் மாயையின் சக்தி. திரைப்படம் என்பது வெளிப்படையான மாயை. ஆனால் ஆசை என்பது, தொடர்ந்து ஓடிக்கொண்டே இருக்கும் மாபெரும் மாயை. தேவையான விழிப்புணர்வை ஒருவர் வளர்த்துக் கொள்ளவில்லை எனில், நம்மிடம் இருக்கும் திறனெல்லாம் அற்புதமான வரமாய் இருப்பதற்கு பதிலாக, ஆபத்து விளைவிக்கக் கூடிய சாபமாய் மாறிவிடும்.

உண்மையிலேயே அதிசயமான, அற்புதமான ஒன்றாக இருக்கும் மனம், இன்று துயரத்தை உற்பத்தி செய்யும் ஒரு கருவியாய் ஆகிவிட்டது. மனிதனின் எல்லாத் துயரங்களும் இந்த மனதில்தான் உருவாக்கப்படுகிறது. அப்படி நிகழ்வதற்கு வெளித்துணை எதுவும் தேவையில்லை. ஆம், வெறுமனே ஒரு இடத்தில் உட்கார்ந்து கொண்டே உங்களை நீங்கள் பித்துப்பிடித்த நிலைக்கு அனுப்ப முடியும். வாழ்வின் ஒவ்வொரு நொடியும் ஆனந்தமாக இருப்பதும், மகிழ்ச்சியாக இருப்பதும், பொருள்நிலை தாண்டிய பரிமாணங்களில் வாழ்வை உணர்வதும் ஒன்றும் அதிசயம் அல்ல. அவை ஒவ்வொரு மனிதனிற்கும் சாத்தியமானதுதான். ஆன்மீகம் என்பது நீங்கள் அசாதாரணமாக மாறுவதற்கு அல்ல, மனிதனாய் இருப்பதே அசாதாரணம் என்பதை நீங்கள் உணர்வதற்காக!