சத்குரு: சத்குரு ஸ்ரீ பிரம்மா கோயம்பத்தூரிலிருந்து இதை நோக்கி தன் செயலைத் துவங்கினார், ஆனால் மக்களிடமிருந்து பல சமுதாய எதிர்ப்புகளை சந்தித்து, இங்கிருந்து துரத்தி வெளியேற்றப்பட்டார். தன் குருவின் விருப்பத்தை நிறைவேற்ற முடியாமல், பெருந்துயரத்துடனும் கோபத்துடனும் கோயம்பத்தூரை விட்டு வெளியேறினார். கோபத்தில் ஏதும் இலக்கில்லாமல், மனம் போன போக்கில் நடந்தார். அவருடைய தீவிரத்தைக் கண்டு, விபூதி என்ற ஒரே ஒரு சீடரைத் தவிர, யாரலும் அவரை அண்ட முடியவில்லை

சத்குரு ஸ்ரீபிரம்மா நெருப்பைப்போல இருந்தார் - அணையாத நெருப்பாக.

அவர், மக்களிடம் இனிமையாக இருந்ததால், அவர்கள், அவரிடம் அன்பாக இருந்தார்கள் என்றில்லை. அவர் மீது அன்பு செலுத்தாமல் இருக்க முடியாத காரணத்தால், அவர்கள் அவரை நேசித்தனர். ஆயிரக்கணக்கானவர்கள் அவர்பால் ஈர்க்கப்பட்டனர். குறுகிய கால அவகாசத்திற்குள், அவர் தமிழ்நாட்டில் 70- நிறுவனங்களை உருவாக்கினார். பெரும்பாலும் அவர் பயணத்திலேயே இருந்ததால், மிகக் குறைந்த காலமே ஒரு இடத்தில் கழித்தார். ஆனால் அவர் எங்கு சென்றாலும், மக்கள் அவருக்கு நிலங்களையும், பொருளையும் அள்ளி வழங்கியதால், அவரால் பல நிறுவனங்களை அமைக்க முடிந்தது. அவர்கள் இப்படி வழங்கியதன் காரணம், அவர்களால் அவர் மீது அன்பு செலுத்தாமல் இருக்க முடியவில்லை என்பதுதானே தவிர, அவர், அவர்களிடம் இனிமையாக இருந்தார் என்பதல்ல.

ஏழாவது மலையின் சக்திநிலை மிகவும் வித்தியாசமாக இருப்பதற்குக் காரணம், சத்குரு ஸ்ரீபிரம்மா அங்கே தனது உடலை விட்டார். தியானலிங்கத்தை பிரதிஷ்டை செய்வது அவருடைய வாழ்வின் ஒரே நோக்கமாக இருந்தது. ஆனால் அதற்கான எல்லா உள்நிலைத் திறன்களை அவர் பெற்றிருந்தபோதும், சமூகத்தைக் கையாளும் திறன் இல்லாமை அவரது நோக்கத்தைக் குலைத்துவிட்டது. சமூகம் அவருக்கெதிராகத் திரும்பியதுடன் அவர் அதைச் செய்ய விடாமல் செய்தது. இது நிகழ்ந்தபோது, அவர் நோக்கம் தோல்வி அடைந்தற்குக் காரணத்தை அறிய விழைந்தார். அவருடைய சக்தி நிலையில் ஏதேனும் தவறு இருக்கிறதா என்று அவர் பரிசோதித்தார். அதனால், அவர் ஏழு சக்கரங்கள் வழியாக உடலை விட்டு நீங்கினார்.

இது ஒவ்வொருவருக்கும் பொருந்துவதாகும் - உங்கள் வாழ்வில் ஏதோ ஒன்று வேலை செய்யாமல் போனால், உங்களிடம் ஏதாவது தவறு இருக்கிறதா என்று முதலில் உங்களையே பரிசோதித்துக் கொள்ள வேண்டும். பெரும்பாலான மனிதர்களிடம் பிரச்சனையாக இருப்பது, ஏதோ ஒன்று பலனளிக்கவில்லை என்றால், யாரோ ஒருவர் மீது பழி சுமத்துவதுதான் அவர்கள் செய்யும் முதல் விஷயம். முதலில் உங்களைத்தான் நீங்கள் கவனிக்க வேண்டும். உங்களுடைய வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்திலும் முழுமையான கவனம் செலுத்தி, இது ஏன் வெற்றிகரமான முறையில் நிகழவில்லை என்று பாருங்கள். உங்களிடம் ஏதோ ஒன்று சரியாக இல்லாமல் இருக்கலாம். இந்த சோதனையைச் செய்து, உங்களிடம் எல்லாமே சரியாக இருக்கிறது என்று உறுதி செய்துகொண்ட பிறகு, தவறு உண்டாக்கக் கூடிய வேறு ஏதாவது அம்சம் இருக்கிறதா என்று நீங்கள் பார்க்க வேண்டும்.

சத்குரு ஸ்ரீபிரம்மா அளவு கடந்த சக்திபடைத்தவராக,அதிசயிக்கத்தக்கவராக வாழ்ந்தார். அவர் செய்தவற்றுள் சில விஷயங்கள் குறித்து நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். பூட்டப்பட்ட சிறைக்கதவு மூலம் வெளியேறி நடந்தது அல்லது ஒரு சிறுவனை ஏரியின் மீது நடக்கச் செய்தது போன்றவை அவை. அதைப் போன்ற விஷயங்கள் அவரைச் சுற்றி தினமும் நிகழ்ந்தன. மக்கள் அவரைக் கடவுள் போலவே பார்த்தனர், ஆனால் அவரிடம் மிகுந்த அச்சம் கொண்டிருந்தனர், ஏனென்றால் அவர் எப்போதும் கோபத்தில் இருப்பதாகவே தோன்றினார். அவர் யாருடனும் கோபமாக இல்லை - அவர் வெறுமனே மிக தீவிரமானவராக இருந்தார். சத்குரு ஸ்ரீபிரம்மா நெருப்பைப் போல இருந்தார் - வெறுமனே நெருப்பாக.

இறுதியாக அவர் ஏழாவது மலைக்குச் செல்வதற்கு முன்னர், அங்கு கூடியிருந்த மக்களிடம் “இவன் திரும்ப வருவான்", என்று கூறி தன் உடலை விட்டார். ஏழு சக்கரங்கள் வழியாகவும் உடலை விடும் ஒருவர் சக்ரேஷ்வரர் என்று குறிக்கப்பிடப்படுகிறார். அவரது சக்தி உடலின் மீது அவருக்கு முழுமையான ஆளுமை உள்ளது என்பது இதன் பொருள். இன்றைக்கும் கூட, சுமார் எழுபது வருடங்களுக்குப் பிறகும், அங்கு நிலவும் சக்தியானது நேற்று நிகழ்ந்தது போல, உயிர்ப்புடன் இருக்கிறது. உங்களை அறைந்து வீழ்த்துமளவுக்கு, சக்தியானது அங்கு கட்டற்ற தீவிரத்துடன் உள்ளது.

இந்த வெள்ளியங்கிரி மலைகள் பூமியிலுள்ள அரிதான இடங்களுள் ஒன்றாகும் - வேறு எங்குமே இந்த விதமான சக்தியை நீங்கள் உணரந்திருக்க மாட்டீர்கள்.

இந்த முறை, சமூகத்தைக் கையாளும் நமது திறன் முன்னேற்றமடைந்துள்ளது. சமூகத்தில் செயல்படுவதற்குத் தேவையான அளவுக்கு நான் என்னைத் தன்னுணர்வுடன் மாற்றியமைத்துக்கொண்டேன். அப்போது நம்மிடம் இல்லாத சமூகத்தைக் கையாளும் திறமைகள் இன்றைக்கு நம்மிடம் இருக்கின்றன. அன்றைக்கு அவருடைய சக்தி நிலையின் தீவிரத்தின் காரணமாக, மற்ற விஷயங்கள் அவருக்கு முக்கியமாகத் தோன்றவில்லை. சமூகத்தில் மக்கள் நினைப்பதைப் பற்றி அவர் பொருட்படுத்தவில்லை. ஆனாலும் அறியாமையின் ஆற்றலை குறைத்து மதிப்பிடவேண்டாம். அறிவு, ஆற்றல் வாய்ந்தது, ஆனால் அறியாமைக்கு அதனை விட அதிகமான ஆற்றல் உண்டு.

மக்களின் அறியாமையால் உலகில் பல விஷயங்கள் முன் நகர்ந்து செல்வதில்லை. நீங்கள் எவ்வளவுதான் முயற்சித்தாலும்,அறியாமை என்பது ஒரு நங்கூரம் போன்றது - மிகப்பரிய கப்பலைக்கூட அது நகரவிடாது. இந்த முறை,அறியாமையை மரியாதையுடன் நடத்தி, ஆரம்பத்திலிருந்தே அது குறித்து கவனம் எடுத்துக்கொண்டேன். அவர் அறியாமையை அலட்சியமாக நடத்தினார். யாராவது முட்டாள்தனமாக எதையாவது கூறினால், அவர் அவர்களை எட்டி உதைத்தார். அவர் ஜனநாயக செயல்முறையைப் புரிந்துகொள்ளவில்லை. அதில் பெரும்பான்மையானோர் அறிவீனர்கள் என்பதுடன், அவர்களிடம்தான் அதிகாரமும் இருக்கிறது.

அவர் சக்தியின் தீவிரத்தினால், எல்லாம் நிகழ்ந்துவிடும் என்று எண்ணிய காரணத்தால், அவர் அதை அலட்சியம் செய்துவிட்டார். அது பலனளிக்காத நிலையில், அவருடைய சக்தியின் தன்மையைப் பரிசோதித்துப் பார்க்க, ஏழு சக்கரங்களின் வழியாக தனது உடலைவிட்டு நீங்கினார். இது அரியதொரு நிகழ்வு. இந்த வெள்ளியங்கிரி மலைகள் உலகிலுள்ள அரிய இடங்களுள் ஒன்று - இந்த விதமான சக்தியை நீங்கள் வேறெங்குமே உணர மாட்டீர்கள்.