ஈஷா சமுதாய கல்லூரி… கிராமப்புற இளைஞர்களுக்கான வாய்ப்பு!
ஈஷா கல்வி அறக்கட்டளை சார்பில் கிராமப்புற இளைஞர்களுக்கு தொழிற்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு அளிக்கும் விதமாக ஈஷா சமுதாயக் கல்லூரி கோவையில் தொடங்கப்பட உள்ளது. இதுகுறித்து விரிவாக அறிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள்!
விரைவில் கோவையில் தொடங்கப்படவுள்ள ஈஷா சமுதாயக் கல்லூரியில் வெல்டிங் டெக்னாலஜி, இண்ட்ஸ்ட்ரியல் ஃபிட்டர், பியூட்டிசியன், ஃபேசன் டிசைன் மற்றும் கார்மெண்ட் மேக்கிங், ரெஃபிரிஜிரேஷன் மற்றும் ஏர் கண்டிசனிங் டெக்னிசியன், ஆட்டோமோட்டிவ் சர்வீஸ் டெக்னிசியன், பிளம்பிங், டிடிபி ஆப்ரேட்டர், கம்யூட்டர் அப்ளிகேசன்ஸ், கம்யூட்டர் ஹார்ட்வேர் சர்வீஸிங், ஜெனரல் டியூட்டி அசிசிஸ்டண்ட், மல்டி குசன் குக், மெக்கானிக் (எலக்ட்ரிக்கல்/ எலக்ட்ரானிக்ஸ் / இன்ஸ்ட்ரூமெண்டேசன்), ஏர்லி சைல்ட்குட் கேர் மற்றும் கல்வி ஆகிய 14 வகையான தொழில்முறை பட்டயப் படிப்பு (Vocational Diploma) பாடப் பிரிவுகளை தொடங்குவதற்கு தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம் அங்கீகாரம் வழங்கி உள்ளது.
படிப்பின்போது தொழிற்கல்வி களப் பயிற்சிக்காக (இண்டர்ன்சிப்) சில தொழிற்சாலைகளுடன் கைகோர்த்துள்ளது ஈஷா. மேலும், படித்து முடித்தபிறகு அந்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்க வழிசெய்யும் விதமாக பல தொழிற்சாலைகளுடன் இணைந்து செயலாற்றவும் உள்ளது.
இதுதொடர்பாக சத்குரு தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,”ஈஷா சமுதாய கல்லூரிக்கு தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தின் அங்கீகாரம் கிடைத்திருப்பது புதியதொரு ஆரம்பம். இந்தியாவின் மக்கள் வளத்தினால் பயனடைய, தமிழகத்தில் பின்தங்கிய இளைஞர்களுக்கு திறன் வளர்ச்சி பயிற்சியளிக்கப்படுகிறது. திறமைமிக்க, ஊக்கமிக்க, ஒருநோக்குடைய இளைஞர்களை உருவாக்குவதே தற்போதைய தேவை” என்று குறிப்பிட்டுள்ளார்.
ஏற்கனவே, பொருளாதாரத்தில் பின்தங்கிய கிராமப்புற குழந்தைகளுக்கு தரமான கல்வி அளிக்கும் விதமாக தமிழகத்தில் 8 ஈஷா வித்யா பள்ளிகளையும், ஆந்திராவில் ஒரு பள்ளியையும் ஈஷா நடத்தி வருகிறது. இங்கு கல்வி பயிலும் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்களில் சுமார் 61 சதவீதம் பேர் இலவச கல்வி பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
Subscribe