பறவைகளுக்கும் மனிதனுக்குமான உறவென்பது நாகரீக வளர்ச்சியின் ஒவ்வொரு நிலையிலும் குறிப்பிடத்தகுந்ததாகவே இருந்து வந்துள்ளது. அரசர்கள் காலத்தில் சில பறவைகளை உளவு பார்க்க உபயோகப்படுத்தினர். அரச செய்திகளை ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டிற்கு கொண்டு சென்றன புறாக்களும் பருந்துகளும். காதலர்கள் கூட பறவைகளை தூது செல்ல பயன்படுத்தியதாக இலக்கியங்களில் பாடப்படுகிறது!

“அன்னச் சேவல் அன்னச் சேவல்
ஆடுகொள் வென்றி அடுபோர் அண்ணல்”

என்ற புறநானூற்றுப் பாடலில், சோழமன்னன் கிள்ளி வளவனுக்கு பிசிராந்தையார் நட்பை வெளிப்படுத்தும் வகையில் அன்னச் சேவலை தூது அனுப்பியதாக சொல்நயத்துடன் பாடப்பட்டுள்ளது. திருவள்ளுவரோ தூதுக்காக ஒரு தனி அதிகாரமே எழுதியுள்ளார். நவீன யுக கவிஞர்களில் பறவைகளைப் பாடாதவர்கள் என்று எவருமில்லை என்றே சொல்ல வேண்டும்.

பறவைகள் மனித இனத்திற்காக மரங்களின் விதைகளை பரப்பும் அற்புதச் செயலை மேற்கொள்கின்றன. இன்னும் சொல்ல வேண்டுமானால், உண்மையில் அவை தனக்கு உணவையும் உறைவிடத்தை தரும் மரங்களுக்கு நன்றி செலுத்தும் வகையில் விதைகளை எச்சம் மூலம் பரப்புகின்றன.

ஆனால், இன்று நமக்கு தெரிந்த பறவை என்றால், பிராய்லர் கோழிகள் என்றாகிவிட்டது. கூடவே கூண்டுகளில் ஜோசியக் கிளிகளை வைத்து சீட்டெடுக்கச் சொல்லும் அவல நிலைதான் உள்ளது.

உலகில் உள்ள 8650 பறவையினங்களில் 1200 இந்தியாவில் காணலாம் என்கிறார்கள். ஒரு காலத்தில் பறவைகளுடன் மிகவும் இணக்கமாக இருந்த மனிதன் தற்போது பறவைகளை ஒரு நுகர்வுப் பொருளாகவோ அல்லது அது மனிதனுக்கு தொடர்பில்லாத ஜீவராசியாகவோ பார்க்கத் துவங்கிவிட்டானோ என்ற சந்தேகம் வந்துள்ளது.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

சரி நாம் ஏன் பறவைகளை கவனிக்க வேண்டும்?

பறவைகளோ அல்லது விலங்குகளோ அல்லது புழு பூச்சிகளோ மனிதர்கள் சிறப்பாக பூமியில் வாழ்வதற்கு மிகவும் முக்கியம் என சமூக ஆர்வலர்கள் மட்டுமல்லாது ஆராய்ச்சியாளர்களும் சொல்கிறார்கள். மனிதர்கள் தாங்கள் மட்டுமே இந்த பூமிக்கு முக்கியமானவர்கள் என்றும், மனித இனத்தால்தான் இந்த பூமி நிலைத்து இருக்கிறது என்றும் நினைத்துக்கொள்கிறார்கள். ஆனால் உண்மையில், புழு-பூச்சிகள் இந்த உலகில் இல்லையென்றால் அடுத்த நான்கு ஆண்டுகளில் இந்த உலகத்தில் மனிதர்கள் வாழமுடியாது என்பதே உண்மை! ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் புழு-பூச்சிகளின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் கூறிய உண்மை இது!

அதுபோலவே பறவை இனங்களும் மனிதர்களின் வாழ்க்கையில் முக்கிய இடம் வகிக்கிறது!

பறவைகள் மனித இனத்திற்காக மரங்களின் விதைகளை பரப்பும் அற்புதச் செயலை மேற்கொள்கின்றன. இன்னும் சொல்ல வேண்டுமானால், உண்மையில் அவை தனக்கு உணவையும் உறைவிடத்தை தரும் மரங்களுக்கு நன்றி செலுத்தும் வகையில் விதைகளை எச்சம் மூலம் பரப்புகின்றன. இதில் மனிதர்களாகிய நாமும் பலனடைகிறோம். நம்மூர்களில் இன்று நாம் பார்க்கும் பல வேம்பு, அத்தி, அரசு, ஆலம், புளியமரம் போன்ற பல மரங்கள் பறவைகளின் எச்சங்களால் தானாக வளர்ந்தவையே!

இதுபோன்றே நாவல், சீத்தா, இலுப்பை, கொடுக்காய் புளி, கொய்யா, சப்போட்டா போன்ற மரங்களிலிருந்து பழங்களைத் தின்னும் பறவைகள் அதன் விதைகளை தான் செல்லும் இடங்களில் இடுகின்றன. மகிழம் செண்பகம் போன்ற பூ மரங்களின் கனிகளை 'புல்புல்' பறவைகள் விரும்பி உண்கின்றன; வேப்பம்பழங்களை விரும்பி உண்ணும் காக்கைகள் மரம்நடும் தன்னார்வத் தொண்டர்களாகவே மாறிவிடுகின்றன. பறவைகளுக்குப் பிடித்த பழங்களான அரசு, ஆலம், அத்தி போன்றவற்றின் விதைகள் வெகுவாக பறவைகளால் பரப்பப்படுகின்றன.

பறவைகள் தாகம் தீர்க்க நாம் செய்ய வேண்டியது என்ன?

இந்த கோடைவெயில் கடுமையாக கொளுத்திவரும் வேளையில் தண்ணீரை தேடி கால்நடைகளும் பறவைகளும் அலையும் நிலை ஏற்பட்டுள்ளது. பறவைகள் தண்ணீர் இல்லாமல் தவித்து வரும் சூழ்நிலையை காண்கிறோம்.

பொதுவாக நம் கலாச்சாரத்தில் காகங்களுக்கு சோறு வைக்கும் பழக்கம் உள்ளது. ஆனால் தற்போது நாம் செய்ய வேண்டிய முக்கியமான வேலை தண்ணீர் வைப்பதுதான்!

ஒரு மண் சட்டியிலோ அல்லது சிறிய குழியை வெட்டியோ பறவைகளுக்கான நீரை வைக்கும்போது அந்த இடத்தை நன்கு பக்குவப்படுத்தி வைத்தோமானால், அவை தண்ணீர் அருந்தும்போது எச்சங்களிலிருந்து அங்கு விழும் விதைகள் நன்கு வளர வாய்ப்புள்ளது. நமது கொல்லைப்புறங்களில் இதுபோன்று ஒரு இடத்தை உருவாக்க முடியும். சற்று பெரிய அளவில் நிலங்கள் உள்ளவர்கள் எச்சங்களிலிருந்து விதைகளைச் சேகரித்து தங்கள் நிலங்களில் நடலாம். அப்படி நடுவதற்கு நிலமோ நேரமோ இல்லாதவர்கள் விதைகளைச் சேகரித்து ஈஷா பசுமைக் கரங்களின் நாற்றுப்பண்ணைகளில் கொடுத்து விடலாம். அவர்கள் அதனை மண்ணில் நட்டு பராமரித்து மரங்கன்றுகளாக வள்ர்த்தெடுப்பார்கள்.

பறவை இனம் விதைகளை ஆங்காங்கே பரப்பினாலும், அவற்றில் வளர்ந்து மரங்களாகும் விதைகள் சொற்பமே! சரியான சூழ்நிலையும் நீர் வசதியும் கிடைக்கும் விதைகள் மட்டுமே பல்வேறு பருவநிலைகளைத் தாக்குப்பிடித்து மரங்களாகின்றன. நாம் இந்த கோடை காலத்தில், தாகத்தில் தவிக்கும் பறவைகளுக்கு நமது சுற்றுப்புறங்களில் தண்ணீர் வைப்பதால் பறவைகளின் தாகத்தை தீர்த்த மகிழ்ச்சி ஒரு புறம் கிடைக்கும் அதே வேளையில், பறவைகள் அங்கு விட்டுச் செல்லும் விதைகளும் நம் நிலங்களில் மரங்களாகும்.

ஈஷா பசுமைக் கரங்கள்

தமிழகத்தின் பசுமைப் பரப்பை அதிகரிப்பதற்காக, சத்குரு அவர்களின் வழிகாட்டுதலில் ஈஷா அறக்கட்டளையானது, ஈஷா பசுமைக் கரங்கள் என்ற திட்டத்தின் மூலம் பல மகத்தான செயல்களை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் ஈஷா பசுமைக் கரங்கள், மண்ணிற்குத் தகுந்த மரக்கன்றுகளை மிகக் குறைந்த விலையில் (1 மரக்கன்று - ரூ.7.00) வழங்கி வருகிறது.

ஈஷா பசுமைக் கரங்களுடன் உங்கள் கரங்களையும் இணைத்திடுங்கள். உங்கள் ஊரின் அருகிலுள்ள ஈஷா நாற்றுப் பண்ணைகளில் உங்களிடமுள்ள விதைகளைக் கொண்டு சேர்க்கலாம். மேலும், குறைந்த விலையில் பல அரிய வகை மரக்கன்றுகளை நீங்கள் அங்கே பெறலாம். 94425 90062 என்ற அலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளவும்.