ஈஷா யோகா கற்றுக்கொண்ட இராஜஸ்தான் அமைச்சரவை!
இராஜஸ்தான் மாநில அமைச்சரவைக்கு சத்குருவே நேரடியாக வழங்கிய இன்னர் இஞ்சினியரிங் வகுப்பு பற்றிய சில துளிகள் இங்கே!
இராஜஸ்தான் மாநில அமைச்சரவைக்கு சத்குருவே நேரடியாக வழங்கிய இன்னர் இஞ்சினியரிங் வகுப்பு பற்றிய சில துளிகள் இங்கே!
ஒரு மாநிலத்தை ஆளக்கூடிய ஆட்சிப் பொறுப்பில் இருப்பவர்கள் உள்நிலையில் சமநிலையும் தெளிவும் கொண்டிருப்பது மிகவும் முக்கியமானதாகிறது. பலவித நெருக்கடிகளும் அழுத்தமும் நிறைந்த சூழலில் பணிபுரியும் உயர்மட்ட அதிகாரிகள் சிறப்பாக செயல்படத் தேவையுள்ளது. இவர்களின் செயல்பாடுகளே பலகோடி மக்களின் வாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியதாக இருக்கும் என்பதைக் கருத்தில் கொண்டு ஆட்சி-அதிகாரத்தில் உள்ள மக்களுக்கு ஈஷா யோகாவை கொண்டுசேர்க்க தன்னாலான முயற்சிகளை ஈஷா மேற்கொண்டு வருகிறது.
அந்த வகையில் இராஜஸ்தான் மாநில முதல்வர் திருமதி.வசுந்தரா ராஜே அவர்கள், சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் ஆகியோர்களுக்கு மே 20 மற்றும் 21ம் தேதிகளில் ஈஷா இன்னர் இஞ்சினியரிங் வகுப்பு நிகழ்த்தப்பட்டது. இவ்வகுப்பினை சத்குருவே நேரடியாக வழங்கியுள்ளார்.
Subscribe
ஜெய்ப்பூரில் சித்தப்புராவில் அமைந்துள்ள சுற்றுலா-கலந்துரையாடல் மையத்தில் நிகழ்ந்த நிகழ்ச்சியின் துவக்கவிழாவில், இராஜஸ்தான் முதல்வர் திருமதி.வசுந்தரா இராஜே அவர்கள் பேசுகையில், மக்கள் பிரதிநிதிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் உயர்மட்ட அதிகாரிகளுக்கு இந்த யோகா நிகழ்ச்சி நேர்மறை எண்ணங்களை அதிகரிக்கச் செய்து, அவர்களின் வாழ்க்கையில் புதியதொரு உறுதியையும் உத்வேகத்தையும் உண்டாக்குமென நம்பிக்கைத் தெரிவித்தார். இதனால் அவர்களால் மாநில வளர்ச்சியில் இன்னும் சிறப்பான பங்களிப்பை வழங்க முடியும் என்றார்.
சுற்றுச்சூழல், ஆரோக்கியம், கல்வி மற்றும் கிராமப்புற வளர்ச்சி ஆகிய துறைகளில் வளர்ச்சியை ஏற்படுத்துவதற்கு சத்குரு வழங்கும் இந்த யோகா வகுப்பு உதவும் என்று தெரிவித்த முதல்வர், அழுத்தம் மிகுந்த அரசியல் சூழலிலிருந்து விடுவித்து, ஆனந்தமான சூழலை வழங்குவதற்கான செயல்திட்டமாக இந்நிகழ்ச்சி உள்ளதாகக் கூறினார்.
நிகழ்ச்சியில் சத்குரு பேசும்போது, நாம் நமக்குள்ளே ஆனந்தமாகவும் சிறப்பாகவும் இருப்பதற்கான உறுதியைப் பெற வேண்டும் எனத் தெரிவித்தார். உள்நிலையில் நாம் ஆனந்தத்தை உணரும்போதுதான் அதனை நம்மைச் சுற்றியுள்ள மற்றவர்களுக்கும் பகிரமுடியும் என்றார். ஆனந்தமாக இருக்கும்போது உச்சபட்ச சாத்தியத்தில் நாம் பணிபுரியும் வாய்ப்புள்ளதை சுட்டிக்காட்டி, நம் உள்நிலையில் ஆனந்தமாக இருப்பதற்காகத்தான் இந்த இன்னர் இஞ்சினியரிங் வகுப்பு என விளக்கினார்.
மேலும் அதிகாரிகளிடத்தில் சத்குரு பேசுகையில், நீங்கள் அரசாங்கத்தின் மிக முக்கியமான ஒரு அம்சமாக இருக்கிறீர்கள், அபரிமிதமான அதிகாரம் உங்கள் கைகளில் உள்ளது, எனவே நீங்களும் மன அழுத்தமின்றி ஆனந்தமாக இருப்பது மிக முக்கியம் என்று கூறினார்.
உள்நிலை வளர்ச்சிக்கு உதவி, நல்வாழ்விற்கு வித்திடும் இன்னர் இஞ்சினியங் எனப்படும் இந்த யோகா வகுப்பு, மே 20ம் தேதி காலை 8 மணிக்கு துவங்கி மறுநாள் மாலை 7.30 மணி வரை இரண்டு நாட்கள் நடைபெற்றது. இதில், இராஜஸ்தான் மாநில முதல்வர் உட்பட, சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்களோடு, சுமார் 600 IPS, IFS மற்றும் சீனியர் RAS அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
இன்னர் இஞ்சினியரிங் வகுப்பில் கலந்துகொள்ளும் முதல்வர் அலுவலக அதிகாரி ஒருவர் கூறுகையில், “கடுமையான வேலைப்பளு மற்றும் அழுத்தத்தில் பணிபுரியும் எங்களுக்கு இந்த யோகா நிகழ்ச்சி எங்களது வாழ்க்கைமுறையை சிறப்பானதாக்கிக்கொள்ள உதவும்” என்றார்.
இவ்வகுப்பில் கலந்துகொள்வதன் மூலம், "ஆரோக்கியம் மேம்படுவதோடு, சமநிலையான சக்திமிக்க வாழ்வைப் பெற முடியும்," என முதல்வர் அலுவலக அதிகாரப்பூர்வ அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ஜனவரி 2013ல், இதே நிகழ்ச்சியை ஆந்திர பிரதேச அரசாங்கத்திற்காக சத்குரு வழங்கினார். முதல்வர் சந்திரபாபு நாயுடு அவர்களோடு அரசு அதிகாரிகள் மற்றும் சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
உலக அளவில் மிகப் பிரசித்தி பெற்ற ஈஷா யோகா நிகழ்ச்சிகள் பணியாளர் மற்றும் பயிற்சி துறை , IAS அலுவலர்களின் பயிற்சிக் காலத்தில் மேற்கொள்ளப்படும் அதிகாரப்பூர்வமான ஒரு பயிற்சியாக இணைக்கப்பட்டுள்ளது. சிவில் சர்வீஸ் பயிற்சியின் ஒரு அங்கமாக இந்த யோகா நிகழ்ச்சிகளை ஈஷா அறக்கட்டளை தொடர்ந்து வழங்கி வருகிறது.
மத்திய அரசின் ஆயுஷ் அமைச்சகத்தின் முக்கிய அங்கமாக விளங்கும் ஈஷா அறக்கட்டளை, உலக யோகா தினத்திற்காக இலவச யோகா நிகழ்ச்சிகளை வழங்கும் செயலில் முழுவீச்சில் இறங்கியுள்ளது. யோகா, பலகோடி மக்களை சென்றடைவதற்கான நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. இதன்படி, இந்தியா முழுவதும் 30,000க்கும் மேற்பட்ட பள்ளிகளிலுள்ள சுமார் 1.5 கோடி குழந்தைகளுக்கு யோகா சொல்லிக் கொடுப்பதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றன. மேலும், ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவிலுள்ள பயிற்சி நிறுவனங்களில் பயிலும் 1.5 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் இலவச யோகா வகுப்பினை வழங்கிட ஈஷா அறக்கட்டளை திட்டமிட்டுள்ளது.