சிவன் - என்றுமே நிரந்தர Fashion!

பகுதி 5

நெருப்புக் குழம்புகளாய் தகிக்கும் மனிதர்களைப் பற்றி கேள்விப் பட்டிருக்கிறீர்களா? அகஸ்தியரின் பட்டறையில் இருந்து வந்தவர்களை அப்படித்தான் சொல்ல வேண்டும். அகஸ்தியர் காட்டிச் சென்ற வழியில் உருவானவர்கள் அவர்கள்! அதுமட்டுமா? இந்தியாவின் பாரம்பரிய, கலாச்சார பழக்கவழக்கங்களாய் நாம் இன்றும் பின்பற்றும் பலவற்றிலும் ஒளிந்திருக்கிறார் அந்த மாபெரும் யோகி. தொடர்ந்து வாசியுங்கள்…

சத்குரு:

சிவன் தன் ஏழு சீடர்களுக்கும் யோகாவைக் கற்பித்துக் கொண்டிருந்தபோது, பல சிக்கலான விஷயங்களைக் கற்றுக் கொடுத்தாலும், மாதக்கணக்கில், வருடக்கணக்கில் அவர் பேசவே இல்லை. ஏழு சீடர்களும், ஏழு விதமான முறைகளில், ஏழு வகையான யோக முறைகளைக் கற்றுக் கொண்டிருந்தனர். வாய் திறக்காமல் இந்த ஞானம் எப்படி பரிமாறப்பட்டது? அதுவும் எழுவருக்கும் ஒரே நேரத்தில் ஒவ்வொரு விதமான ஞானம்?

ஆன்மீக வழிமுறைகளை ஒவ்வொரு மனிதனுடைய அன்றாட வாழ்வின் அங்கமாக மாற்றினார் அகஸ்திய முனி. இப்பகுதியில் மானிடர்கள் வாழ்ந்த எந்த ஒரு இடத்தையும் அகஸ்தியர் விட்டுவிடவில்லை

இது மனதைப் படித்து அறிவதும் கூட அல்ல. ஆனால், சிவனின் விழிப்புணர்வில் இருப்பதை அவர்கள் நேரிடையாக அறிந்தார்கள்.

சப்தத்தில், நான்கு விதங்கள் உண்டு. நாம் பேசும்போது கேட்கும் சப்தம் ‘வைகாரி’. வெளியில் காண்பவற்றை நாம் அடையாளம் காணும்போது, நம் மனதில் எழும் குரல் ‘மத்யமா’. வெளி உந்துதல் இன்றி உங்கள் மனம் தானாய் சிந்திக்கும் சப்தம் ‘பஷ்யந்தி’. அடுத்தது ‘பரவாக்’. ‘வாக்’ என்றால் குரல், ‘பர’ என்றால் தெய்வீகம் அல்லது படைப்பின் மூலம். ‘பரவாக்’ என்றால் படைப்பவனின் குரல். படைப்பிற்கும், படைத்தவனுக்கும் அடிப்படையாக இருக்கும் அதிர்வு. இப்படித்தான் சிவன், தன் ஏழு சீடர்களுக்கும், ஏழு வகையான யோக முறைகளை ஒரே நேரத்தில் வழங்கிக் கொண்டிருந்தார்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

இந்தப் பரிமாற்றம், பல காலம் நீடித்தது. பல வருடங்கள் கழித்து இந்தப் பரிமாற்றம் நிறைவுற்றபோது, ஆதியோகி இவர்கள் எழுவரையும் உலகின் வெவ்வேறு மூலைக்குச் சென்று அனைவருக்கும் யோக விஞ்ஞானத்தை வழங்குமாறு பணித்தார்.

ஒருவர் 'கஜகஸ்தானை'ச் சுற்றி இருக்கும் 'மத்திய ஆசியா'விற்குச் சென்றார். ஒருவர் வட ஆப்பிரிக்கா, மற்றும் 'மத்திய கிழக்கு'ப் பகுதிக்குச் சென்றார். அப்பகுதியில் இன்றும் கூட இக்கலைகளைச் சொல்லித் தரும் அமைப்புகள் உள்ளன. ஒருவர் தென் அமெரிக்காவுக்குச் சென்றார். அந்த கலாச்சாரம் இதை மிக ஆழமாக உள்வாங்கிக் கொண்டதோடு, இதைப் பல வழிகளில் உபயோகிக்கவும் செய்தது. ஒருவர் சீனா, ஜப்பான் உள்ளடங்கிய 'கிழக்கு ஆசியப்' பகுதிக்குச் சென்றார். அவர் என்ன செய்தார் என்பதற்கான குறிப்புகள் எதுவும் கிடைக்கவில்லை என்றாலும், தன் வாழ்க்கை முழுவதும் கண்மூடி அமர்ந்து மிக நுட்பமான நிலையில் செயல்களைச் செய்தார்.

ஒருவர் ஆதியோகியுடன் அங்கேயே உட்கார்ந்துவிட்டார். அவர் ஏற்றிருந்த வழியில், அவர் முழுமையாய் சலனமற்று எள்ளளவும் அசைவின்றி அப்படியே அமர்ந்துவிட்டார். இமாலய மலையெங்கும் அவரது சக்தி எதிரொலித்தது. ஆறாமவர் இமாலய மலையைவிட்டு இறங்கி, அதன் அடிவாரத்தில், இன்று 'காஷ்மீரி சைவம்' என்றழைக்கப்படும், சைவ முறையை ஆரம்பித்தார்.

ஏழாமவர் இந்திய தீபகற்பத்தின் தென் பகுதிக்கு வந்தார். நமக்கு இவர் மிக மிக முக்கியமானவர். இவர்தான் அகஸ்திய முனிவர். சப்தரிஷி ஏழ்வரிலும், ஆன்மீக வழிமுறையை வாழ்வின் தினசரி அங்கமாக மாற்றியதில், அகஸ்திய முனிவரின் வேலைதான் மிகக் கச்சிதமாக வேலை செய்தது எனலாம். காரணம், இவர் சொல்லிக் கொடுத்தவை ஒரு கோட்பாடாகவோ, தத்துவமாகவோ, பயிற்சியாகவோ இல்லாமல், வாழ்க்கை முறையாகவே மாறியது.

அவர் செய்த செயல்களின் பலனைத்தான் இன்றளவிலும் இந்தியர்கள் அமோகமாக அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆம், அவர் வழங்கிய முறைகளை பின்பற்றித்தான் நெருப்புக் குழம்புகள் போல் நூற்றுக்கணக்கான யோகிகள் இந்தியாவில் தோன்றினர்.

ஆன்மீக வழிமுறைகளை ஒவ்வொரு மனிதனுடைய அன்றாட வாழ்வின் அங்கமாக மாற்றினார் அகஸ்திய முனி. இப்பகுதியில் மானிடர்கள் வாழ்ந்த எந்த ஒரு இடத்தையும் அகஸ்தியர் விட்டுவிடவில்லை என்பர். அவர் செய்துவிட்டுப் போன வேலையின் சுவடுகளை இன்றளவிலும் ஒவ்வொரு இந்தியக் குடும்பத்திலும் நாம் காண முடியும். அவர்களுக்கே தெரியாமல் ஏதோ ஒரு யோகமுறையை அவர்கள் கடைபிடித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள் என்றாலும், ஒருசில இடங்களில் அது உருக்குலைந்தும் காணப்படுகிறது. ஒரு இந்தியக் குடும்பத்தை கூர்ந்து கவனித்தால், அவர்கள் அமரும் விதம், உண்ணும் விதம், பாரம்பரியத்தின் பெயர் சொல்லி வாழ்விலே அவர்கள் செய்யும் எல்லா செயல்களுமே அகஸ்தியர் பதித்துப்போன முத்திரையின் சுவடுகள்தான்.

குறிப்பு:

ஜூலை 9ம் தேதி, ஈஷா யோக மையத்தில் குரு பௌர்ணமி கொண்டாட்டம் நடைபெறவுள்ளது. ஆதியோகிக்கு அர்ப்பணிப்பாய், நமது நன்றியை அவருக்கு வெளிப்படுத்த இந்நாள் ஒரு நல்ல வாய்ப்பு. குருவின் அருளில், இத்தினத்தை கொண்டாடிட தங்களை அன்புடன் அழைக்கிறோம்.

மேலும் விபரங்களுக்கு: AnandaAlai.com/guru-purnima

அடுத்த பதிவில்...

 

'போதையில் சிவன்'


சிவன் - என்றுமே நிரந்தர Fashion! தொடரின் பிற பதிவுகள்

ஓவியர் பிரியேந்த்ர சுக்லா அவர்களுக்கு நன்றிகள்