ஸ்கோர் என்ன ஆச்சு? மிகவும் பதட்டத்துடன் தொலைக்காட்சி அலைவரிசைகளுக்குள் வலம் வரும் கிரிக்கெட் விசிறியா நீங்கள்? கடந்த ஒலிம்பிக்குக்குப் பின் பி.வி.சிந்துவின் அசுர ஆட்டத்திற்குப் பின் பேட்மின்டன் விசிறியாய் மாறியவரா நீங்கள்?

எது எப்படி இருந்தாலும் சரி, இனி நம்ம கருப்பாயி அக்காவின் throwவும் குப்பம்மாள் அக்காவின் catchசும் தான் ஊரெங்கும் பரபரப்பான பேச்சு. நஞ்சுண்டாபுரம் அணியின் வீரமும் கலிதீர்த்தாள் குப்பத்தின் உற்சாகமும்தான் இனி நாம் முணுமுணுத்திடும் கதைகள்.

இது அமைதியாக நிகழும் ஒரு புரட்சியா? அல்லது கிராமத்து மக்களின் அகங்களில் நிகழும் மறுமலர்ச்சியா? ஆம், இது கிராமத்து மக்களின் வாழ்வில் புத்துணர்ச்சி ஊட்டி, அவர்களை வளர்ச்சிப் பாதையில் எடுத்துச்செல்ல சத்குரு அவர்களின் ஒரு வித்தியாசமான முயற்சி.

கடந்த வருடம் கிராமப்புற மக்களின் உற்சாகத்தையும், இறுதிச்சுற்றின்போது அவர்களின் ஆரவாரத்தையும் கண்டு அதிசயித்துப்போன மாண்புமிகு புதுச்சேரி துணைநிலை ஆளுநர் திருமதி. கிரண் பேடி அவர்கள், “இதை தேசிய முன்னுதாரணமாய் (National model) கொண்டு வர வேண்டும்,” என்று கூறினார்.

Games1
games2games1games3
games4

இந்தத் திட்டத்தின் மூலம் எளிதில் கிராம வளர்ச்சி நிகழும் என்று எண்ணிய மாண்புமிகு ஆந்திர முதல்வர் திரு. சந்திரபாபு நாயுடு அவர்கள் ஆந்திர மாநிலத்திலும் கிராமோத்சவ விளையாட்டுகளைத் துவக்கிட வழிவகைச் செய்தார்.

2003ஆம் ஆண்டு வெறும் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவிற்கு ஒரு சில தன்னார்வ தொண்டர்களைக் கொண்டு இந்தத் திட்டம் துவங்கப்பட்டது.

“அக்கா, அண்ணா, விளையாட வர்றீங்களா?” என வீடு வீடாகச் சென்று கிராம மக்களை அழைத்தனர் நம் தன்னார்வத் தொண்டர்கள். இப்படித்தான் ஒவ்வொரு அணியாய் உருவாக்கினர். இன்று 400 அணிகள் கொண்ட கிராமோத்சவம் அன்று இப்படித்தான் துவங்கியது.

அன்று வீட்டை விட்டு வெளியே வரவும் தயங்கிய கிராமப் பெண்கள் இன்று பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்கள் முன் பந்தினை சுழற்றுவது மிகப் பெரிய சாதனையே!

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

பண்ணையாரும் விளையாடுகிறார்! பண்ணையில் வேலை செய்பவரும் விளையாடுகிறார்! இந்த விளையாட்டு சாதி, மதம், சமூக அந்தஸ்து என்ற பல எல்லைகளைக் கடந்து மக்களை ஒற்றுமைப்படுத்துகிறது.

இது ஒரு தனிமனிதனை தனக்குள் இருக்கும் தடைகளை உடைத்து தன்னம்பிக்கை கொண்டவனாய் மாற்றுகிறது. மது போன்ற தீய பழக்கங்களிலிருந்து இளைஞர்களை விடுவித்து அவர்களை வளர்ச்சிப் பாதையில் எடுத்துச் செல்கிறது.

இது உருவாக்கிடும் சமூக மறுமலர்ச்சி, தேசத்தின் வளர்ச்சிக்கே ஒரு அடிகோலாய் அமைகிறது. சமூகத்தில் இது ஏற்படுத்தி வரும் மாற்றங்களைக் கண்ட சோழ மண்டலம் நிதி நிறுவனம் இவ்வருடம் ஈஷாவுடன் கைகோர்த்தது.

“ஈஷா சோழா கோப்பை” யை கைப்பற்றப்போவது யார்? கடந்த மூன்று மாதங்களாக இதற்கான முன்னேற்பாடுகள் நடைபெற்று வருகிறது. விளையாட்டு வீரர்கள் கடந்த ஒரு வருடமாகவே தன்னைப் பயிற்சியில் ஈடுபடுத்தி வருகிறார்கள். பண்ணையாரும் விளையாடுகிறார்! பண்ணையில் வேலை செய்பவரும் விளையாடுகிறார்! இந்த விளையாட்டு சாதி, மதம், சமூக அந்தஸ்து என்ற பல எல்லைகளைக் கடந்து மக்களை ஒற்றுமைப்படுத்துகிறது.

புதுச்சேரி மற்றும் தமிழகத்தில் கோவை, ஈரோடு, நாமக்கல், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம், வேலூர், திருநெல்வேலி, திருச்சி, விருதாச்சலம், காஞ்சிபுரம், புதுக்கோட்டை போன்ற 15 நகரங்களின் கிராமப்புற அணிகளுக்கிடையே பல போட்டிகள் நடத்தப்பட்டன.

இறுதிப் போட்டிக்கென ஒவ்வொரு நகரத்திலிருந்தும் ஒரு அணி என 16 அணிகள் தேர்ந்தெடுக்கப்பட்டன.

காலிறுதி, அரையிறுதி போட்டிகளுக்கு பின் பிரம்மாண்டமான இறுதிப்போட்டி கோவை ஈஷா யோக மையத்தில் ஆதியோகி திருவுருவத்தின் முன் நடந்தது. சத்குரு அவர்கள் முதல் பந்தினை அடித்துத் துவங்க ஆரவாரத்துடனும், உற்சாகத்துடனும் துவங்கியது இறுதிப்போட்டி!

சோழ மண்டலம் குழுமத்தின் நிர்வாக இயக்குநர் திரு. சுதிர் அவர்கள் மற்றும் ஹிந்துஸ்தானி இசைக்கலைஞர் திரு. மோஹித் சௌஹான் அவர்களும் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தனர்.

மேலும், ஈஷா யோக மையத்தில் யோகா பயிற்சி பெற்றுக் கொண்டிருக்கும் இந்திய எல்லை பாதுகாப்பு படையினரும் போட்டியை கண்டுகளித்தனர்.

வாலிபால் இறுதி ஆட்டத்தில் கோவை நஞ்சுண்டாபுரம் மற்றும் புதுச்சேரி கலிதீர்த்தாள் குப்பம் அணிகள் மோதின. வாலிபால் போட்டியில் கோவை நஞ்சுண்டாபுரம் அணி 2க்கு 1 என்ற செட் அடிப்படையில் புதுச்சேரி கலிதீர்த்தாள் குப்பம் அணியை வென்றது.

வாலிபால் போட்டியில் நஞ்சுண்டாபுரம் அணி முதல் இடத்தையும், கலிதீர்த்தாள் குப்பம் அணி இரண்டாவது இடத்தையும், மத்வராயபுரம் அணி மூன்றாவது இடத்தையும், கோபி சாவக்காட்டுப்பாளையம் அணி நான்காவது இடத்தையும் பிடித்தன.

எறிபந்து போட்டியில் கோவை பீளமேடு அணி முதல் இடத்தை பிடித்து வெற்றி பெற்றது. இரண்டாவது இடத்தை கோபி முருகன்புதூர் அணியும், மூன்றாவது இடத்தை கோவை சின்னியம்பாளயம் அணியும், நான்காவது இடத்தை கடலூர் திருச்சோபுரம் அணியும் பெற்றது.

வெற்றி பெற்றவர்கள் முகத்தில் இருக்கும் அதே உற்சாகமும் ஆனந்தமும் தோல்வியைச் சந்தித்தவர் முகத்திலும் இருப்பதுதான் இந்த நிகழ்ச்சியின் தனித்துவம்.

கிராமத்து மக்களுக்குள் ஒளிந்திருக்கும் திறமைகள் வெளிப்படும் அதேநேரத்தில், அவர்களுக்குள் தன்னம்பிக்கையும், உற்சாகமும் பெருகுகிறது. அது மட்டுமல்ல, மெல்ல அழிந்து வரும் நாட்டுப்புறக் கலைகளுக்கு மறுமலர்ச்சி ஏற்படுத்தும் வண்ணம் நாட்டுப்புற இசை மற்றும் நடன நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

“ஒரு பந்து உலகையே மாற்றிட வல்லது,” என்கிறார் சத்குரு.

இளைஞர்கள் உற்சாகம் கொண்டால் இந்த தேசம் வளர்ச்சிப் பாதையில் செல்வதை எவராலும் தடுக்க இயலாது.

கிராமப் புத்துணர்வு இயக்கத்தின் செயல்பாடுகளால், அடுத்த ஆண்டு மேலும் பல புதிய அணிகளுடன் சந்திப்போம்!