வேப்பமரம் தமிழர்களுக்கு ஒன்றும் அறிமுகப்படுத்த வேண்டிய மரமல்ல! ஆனால், வேம்பின் பயன்களையும், வேப்ப மரத்தின் முக்கியத்துவத்தையும் நினைவூட்டுவது தற்போது அவசியமாகிறது! வேப்ப மரத்தின் அருமை உணர்த்துவதற்காக இங்கே சில வரிகள்!

நம் தேசத்தில் பாரம்பரிமாக, குறிப்பாக தமிழகத்தில் பல்வேறு ஆன்மீக சடங்குகளில் மட்டுமல்லாது, நோய்தீர்க்கும் மூலிகையாகவும் அதிகமாகப் பயன்படுத்தப்பட்டு வருவது வேம்பு! வயிற்றிலிருக்கும் பூச்சியை வெளியேற்றுவதற்கு சிறுபிள்ளைகளை மடக்கிப்பிடித்து, சங்கில் வைத்து வேப்பிலைச் சாற்றை ஊற்றிவிடும் அக்காமார்களை இன்றும் நம் கிராமங்களில் பார்க்கமுடியும்.

வேப்பமரம் நட்டு வைத்தால், வைத்தியர் தேவையில்லை!, Veppamaram nattu vaithal vaithiyar thevaiyillai

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

வேப்பிலையைப் பற்றி சத்குரு அவர்கள் சொல்லும்போது, அபாரமான சக்தியைக் கொண்டது வேப்பிலை என்று குறிப்பிடுகிறார். ஈஷா யோகா மையத்தில் தினமும் காலையில் யோகப் பயிற்சிகளுக்கு முன்பு அனைவரும் சுண்டைக்காய் அளவு வேப்பிலை மற்றும் மஞ்சள் உருண்டைகளை உட்கொள்கின்றனர்.

வேப்பிலைகள் மட்டுமல்லாமல், வேப்ப மரத்தின் பூ, காய், பட்டை என அனைத்து பாகங்களும் மருத்துவ பயன் கொண்டவையே!

கிராமங்களில் இன்றும் பூராண்-தேள் போன்ற விஷக்கடிகளுக்கு கூட, கடிபட்ட இடத்தில் வேப்பங்குலைகளை வருடி ‘பார்வை பார்த்தல்’ என்ற பெயரில் வைத்தியம் செய்வார்கள். ஆனால், இதெல்லாம் மூடநம்பிக்கைகள் என பொத்தாம் பொதுவாக ஒதுக்கி வைத்துவிட முடியுமா என்பதை அறிவியலும் மக்களும்தான் முடிவு செய்ய வேண்டும்!

ஏதோவொரு காரணத்தால் உடல் மற்றும் மனநிலையில் சோர்வு அல்லது பாதிப்பு ஏற்படும்போது அந்த மனிதருக்கு வேப்பிலை படுக்கையில் இருக்கும்போது, அவருக்குள் ஒருவித புத்துணர்ச்சி பிறக்கிறது. மேலும், வேப்ப மரம் தரும் நிழல் ஆரோக்கியம் தருவதாகவும் இருக்கிறது. நம் ஊர் அம்மன் கோயில்களில் வேப்பிலைகள் பிரசாதமாகவும் வழங்கப்படுகிறது.

வேப்பிலைகள் மட்டுமல்லாமல், வேப்ப மரத்தின் பூ, காய், பட்டை என அனைத்து பாகங்களும் மருத்துவ பயன் கொண்டவையே! தொற்றுநோய்கள் கிராமங்களைக் காட்டிலும் நகரங்களில் விரைவாகப் பரவுவதற்கு காரணம், வேப்பமரங்கள் குறைவாக இருப்பதுதான். வேப்பமரத்திலிருந்து வீசும் காற்று ஒருவித மருத்துவகுணம் வாய்ந்ததாகும். இதன்மூலம் சுற்றுச்சூழலிலுள்ள தீங்கு விளைவிக்கும் பாக்டீரியா மற்றும் வைரஸ் போன்ற நுண்ணுயிரிகள் அழிக்கப்படுவதாகவும் நம்பப்படுகிறது. நம் அனைவரின் வீட்டின் முன்பும் ஒரு வேப்பமரம் இருப்பது அனைவரின் வீட்டின் முன்பும் ஒரு மருத்துவர் இருப்பதற்கு சமம்தான்.

கோடை காலத்தில் வேப்ப மரங்கள் தழைத்து வளருகின்றன. தழைத்து நிற்கும் பசுமையான வேப்பமரங்களை தினந்தோறும் பார்க்கும்போது கண்களுக்கு குளிர்ச்சி உணடாகுமென நாட்டு வைத்தியத்தில் சொல்கிறார்கள். இப்படியாக நாம் வேப்ப மரங்கள் உள்ள சூழலில் வாழ்வதால் உண்டாகும் நன்மைகளை சொல்லிக்கொண்டே போகலாம். அதில் முக்கியமாகச் சொல்ல வேண்டியது, அக்னி நட்சத்திரம் போன்ற சூழ்நிலையில் வேப்ப மரங்கள் தரும் குளிர்ச்சியான நிழல் ஒரு வரபிரசாதம்! கொளுத்தும் வெயிலில் நூறு மீட்டர் நடப்பதற்குள் அங்கே இடையில் ஒரு வேப்பமரம் ரோட்டோரமாக நின்றிருந்தால், அதைவிட ஒரு சொர்க்கம் இருக்காது என்பது அனுபவித்து பார்த்தவர்களுக்கு நன்றாக விளங்கும்.

நாம் ஆளுக்கொரு வேம்பு நட்டு வளர்த்தால், ஆரோக்கியமான வருங்கால தலைமுறைகளைப் பெறமுடியும் என்பது உறுதி. தமிழகத்தின் பருவநிலையும் மண்ணும் வேம்பு வளர்வதற்கு உகந்ததாக அமைந்துள்ளதால், வேப்ப மரங்களைப் பராமரிப்பதற்கு பெரிதாக நாம் மெனக்கெடத் தேவையில்லை.

ஈஷா பசுமைக் கரங்கள் திட்டம்

ஈஷா அறக்கட்டளை பசுமைக் கரங்கள் திட்டம் மூலம், தமிழகத்தின் பசுமைப் பரப்பை அதிகரிக்கும் நோக்கில் பல்வேறு செயல்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் மொத்தம் 33 நாற்றுப் பண்ணைகளை உருவாக்கியுள்ள பசுமைக் கரங்களின் தன்னார்வத் தொண்டர்கள், எளிதில் வளரக்கூடிய செண்பகம், மகிழம், மந்தாரை, ஜக்ரண்டா, அவலாண்டா, லகஸ்ட்ரோமியா போன்ற அழகிய வண்ணப்பூக்கள் பூக்கும் மரக்கன்றுகள் மற்றும் பலா, எலுமிச்சை, நாவல் போன்ற பழ மரக்கன்றுகளும் ஈஷா நாற்றுப்பண்ணைகளில் பிரத்யேகமாக தயார் செய்து வழங்குகிறார்கள்.

வேம்பு, புங்கன், வாகை, தேக்கு, கல்தேக்கு, செஞ்சந்தனம் மற்றும் மலைவேம்பு போன்ற மரப்பயிர் வகைகளும் உற்பத்தி செய்யப்படுகின்றன. இவையனைத்தும் மிகக் குறைந்த விலையில் (ரூ.7) விநியோகம் செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.

உங்கள் ஊரின் அருகிலுள்ள ஈஷா நாற்றுப் பண்ணைகளில் குறைந்த விலையில் பல அரிய வகை மரக்கன்றுகளைப் பெறுவதற்கு 94425 90062 என்ற அலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளவும்.