வாழ்க்கையில் நன்றாக, சந்தோஷமாக இருக்கவே அனைவரும் விரும்புவோம். அப்படியிருந்தும் சில சூழ்நிலைகளால் சிக்கல் ஏற்பட்டு வாழ்க்கையின் நோக்கத்தையே நாம் மறந்துவிடுவோம். நாம் எங்கே தவறு செய்கிறோம், அதற்கு என்ன செய்யலாம் என்பதை சத்குருவிடம் கேட்டறிவோம்...

சத்குரு:

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

மனிதர்களுக்கு உறவுகள் வழியே சிக்கல்கள் ஏன் ஏற்படுகின்றன? அவர்கள் தங்கள் வாழ்வை மேம்படுத்திக் கொள்ள உறவுகளைப் பயன்படுத்துவதில்லை. மாறாக, வாழ்க்கையிலிருக்கும் இடைவெளிகளை நிரப்புவதற்கே உறவுகளைப் பயன்படுத்துகிறார்கள். நீங்கள் மகிழ்ச்சியாக இருந்தாலும், அதனை யாருடனாவது பகிர்ந்து கொள்ள வேண்டியிருக்கிறது. வருத்தமாக இருந்தாலும் அதனை யாருடனாவது பகிர்ந்து கொள்ள வேண்டியிருக்கிறது.

வீதி முனைகளில் நின்று கவனிப்பீர்களேயானால் நிமிடத்திற்கு நூற்றுக் கணக்கானவர்கள் உங்களைக் கடந்து செல்வார்கள். அவர்களில் பெரும்பாலானவர்கள் வாடிய முகங்களுடன்தான் ஓடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு என்னாயிற்று? இத்தனைக்கும் உங்கள் முன்னோர்களைக் காட்டிலும் ஆடம்பரமான வாழ்க்கையைத்தான் வாழ்கிறீர்கள்.

உலகமே துன்பமயமாக இருந்தாலும், உள்நிலை அனுபவத்தில் ஆனந்தமாய் இருக்கிற வாய்ப்பு எப்போதுமே இருக்கிறது.

இந்தியாவில் மட்டுமல்ல. ஒருமுறை பிரான்ஸ்டன் பல்கலைக் கழகத்தில் பேசுகிறபோது கூட இதே கேள்வியைத்தான் கேட்டேன். 'முப்பது வயதைக் கடந்தவர்களெல்லாம் தொங்கிய முகத்துடன் திரிந்து கொண்டிருக்கிறார்களே, ஏன்?' என்று கேட்டேன். ஒரு பெண் எழுந்து பதில் சொன்னாள், 'அவர்களுக்கெல்லாம் திருமணமாகி இருக்கும்' என்று.

மனிதர்கள் தங்கள் மகிழ்ச்சியைப் பெருக்கிக் கொள்ளத் திருமணம் செய்து கொள்வார்களேயானால் அது மிகவும் நல்ல விஷயம். மாறாக, தங்கள் துயரங்களைப் பெருக்கிக் கொள்ள திருமணம் செய்து கொள்வது மிகவும் மோசமான சூழ்நிலை. உறவுகள் என்பவை மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்ளும் வழிமுறைகளாக விளங்கும் வரை சிக்கல் இல்லை. பிறரிடம் இருந்து எதையாவது பிடுங்கிக் கொள்வது என்பதாக இருக்கும் என்றால் எப்போதும் சிக்கல்தான். அந்தச் சூழலை நீங்கள் எவ்வளவுதான் திறன்பட நிர்வகித்தாலும் தொல்லைகள் இருந்து கொண்டுதான் இருக்கும். நீங்கள் எம்.பி.ஏ படித்திருக்கலாம். தொழிலில் பெரிய நிர்வாகியாக விளங்கலாம். ஆனால் உங்கள் உறவுகளை நிர்வகிக்க அது உதவுவதில்லை. உங்கள் உறவு என்பது பக்கத்திலிருக்கும் மனிதருக்கான ஓர் அர்ப்பணிப்பாக விளங்குமென்றால் அது மிகவும் அற்புதமாக இருக்கும்.

உலகியல் சார்ந்த தேவைகளைப் பொறுத்த வரையில் அனைவருமே ஒருவரையொருவர் சார்ந்துதான் வாழ வேண்டியிருக்கிறது. ஆனால் உங்கள் அனுபவத்தின் தன்மையைப் பொறுத்தவரை நீங்கள் யாரையும் சார்ந்திருக்க வேண்டிய அவசியமில்லை. உங்கள் அனுபவம் உங்கள் அளவில் முழுமையானதாக இருக்கலாம். உலகமே துன்பமயமாக இருந்தாலும், உள்நிலை அனுபவத்தில் ஆனந்தமாய் இருக்கிற வாய்ப்பு எப்போதுமே இருக்கிறது. உங்கள் அனுபவங்கள் வெளிச்சூழலுக்கு அடிமையாக்கப்பட்டோ, அடகு வைக்கப்பட்டோ இருந்தால்தான் அது சாத்தியமில்லை. 1940-களில் நீங்கள் ஒரு கார் வாங்கினால் கூடவே நீங்கள் இரண்டு வேலைக்காரர்களை நியமிக்க வேண்டும். ஏனென்றால், அவர்கள் தள்ளி விட்டால்தான் கார் கிளம்பும். 1950-களில் வந்த கார்களுக்கு ஒரு வேலைக்காரர் போதும். அவர் முடுக்கிவிட்டாலே கார் கிளம்பும். இப்போது வருகிற கார்களெல்லாம் விசையைப் பொருத்தியதும், தாமாகவே கிளம்புகின்றன. உங்கள் மகிழ்ச்சி என்கிற வாகனத்திற்கோ யாராவது வந்து தள்ளிவிட வேண்டிய தேவை இருக்கிறது. உங்கள் மகிழ்ச்சியைத் தானியங்கியாக நீங்கள் மாற்றிக் கொள்ள வேண்டியது அவசியம். இல்லையென்றால் தள்ளிவிட யாருமில்லாதபோது நீங்கள் தவித்துப் போவீர்கள்.

உங்கள் மகிழ்ச்சியும், ஆனந்தமும் உங்களைச் சார்ந்தே இருக்கும்போது உங்களைச் சுற்றியிருப்பவர்களுடன் அருமையான உறவுகளை உங்களால் வளர்த்துக் கொள்ள முடியும். உங்கள் வாழ்க்கையைப் பார்த்தே சொல்லுங்கள். எப்போதும் மகிழ்ச்சியாய் இருக்கிறவர்களோடு வாழ விரும்புவீர்களா? எப்போதும் சோகமாக இருக்கிறவர்களோடு வாழ விரும்புவீர்களா? மகிழ்ச்சியாக இருப்பவரோடுதான் வாழ விரும்புவீர்கள். மறந்து விடாதீர்கள். அனைவருமே அதைத்தான் விரும்புகிறார்கள். நீங்கள் எப்போதும் ஆனந்தமாக இருந்தால் எல்லாரும் உங்களோடு உறவு கொள்ளத்தான் விரும்புவார்கள். யாரிடமாவது எதையாவது கசக்கிப் பிழிய வேண்டும் என்று நீங்கள் கருதினால், நேற்று உங்களை மிகவும் நேசிப்பதாகச் சொன்னவர்கள் கூட இன்று உங்களிடமிருந்து விலகியிருக்கவே விரும்புவார்கள்.