உலக யோகா தினத்தை முன்னிட்டு, ஈஷா யோகா மையத்தில் நடந்த பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் சத்குரு பேசியதிலிருந்து சில துளிகள்...

ஈஷாவில் உலக யோகா தினம்

வரும் உலக யோகா தினத்தை கொண்டாட, ஈஷா யோக மையம் இலவச யோக வகுப்புகளை உலகம் முழுக்க வழங்க திட்டமிட்டு, அதனை நிறைவேற்றியும் வருகிறது.

இப்பயிற்சிகளை பொதுமக்களுக்கு அறிமுகப்படுத்தும் பொருட்டு ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பு கோவை ஈஷா யோகா மையத்தில் சத்குரு அவர்களுடன் நடைபெற்றது.

பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசத் துவங்கிய சத்குரு அவர்கள், "உலக யோகா தினம் என்பது ஒரு மகத்தான நாள். நம் தேசத்தில் பிறந்த இக்கலையை உலக நாடுகள் அனைத்திற்கும் கொண்டு சேர்க்கக் கூடிய நேரம், சூழ்நிலை, வாய்ப்பு, முதல்முறையாக அமைந்துள்ளது. உலக தேசங்களின் தலைவர்கள் மனிதனின் உள்நன்மையைப் பற்றி பேசுகிறார்கள். இது மிகவும் முக்கியமான ஒரு படி," எனத் துவங்கினார்.

பத்திரிக்கையாளர்களின் சில கேள்விகளும் சத்குருவின் பதில்களும்

கேள்வி: டிஜிட்டல் துறையின் மூலம் யோகாவை வழங்க உள்ளதாக கூறினீர்கள். என்ன செய்யப் போகிறீர்கள்?

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

சத்குரு: உப-யோகா என்ற பயிற்சியை கற்றுத்தரவிருக்கிறோம். இது யோகா அல்ல. இது துணை யோகா, யோகாவின் கிளை என்று சொல்லலாம். நீங்கள் முறையான யோகப் பயிற்சிகள் கற்றுக் கொள்ள விரும்பினால், உங்களுக்கு உள்ளேயும் வெளியேயும் சரியான சூழ்நிலை அமைந்திருக்க வேண்டும். அதனால் பொதுமக்கள் சுலபமாய் செய்யும் வகையில் உப-யோகா கற்றுத்தருகிறோம்.

5 நிமிடம் செய்யக்கூடிய இந்தப் பயிற்சிகள் ஆரோக்கியம், அமைதி, அன்பு, வெற்றி, ஆனந்தம், ஒருவர் தன் உள்நிலையை அறிதல் என வெவ்வேறு தலைப்புகளில் தனித்தனி பயிற்சிகளாக வழங்கப்படவிருக்கின்றன. ஒவ்வொரு தலைப்பிலும் ஒரு அறிமுக உரை மற்றும் சில எளிமையான யோகப் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. இதற்காக உலகம் முழுவதிலுமிருந்து, 35,600 தன்னார்வத் தொண்டர்கள் பொதுமக்களுக்கு பயிற்சி அளிப்பதற்காக ஈஷா யோக மையத்தால் பயிற்றுவிக்கப்பட்டுள்ளனர்.

கேள்வி: பிரதமரின் இந்த முயற்சி, வருங்காலத்தில் எவ்வகையான மாற்றத்தை ஏற்படுத்தும் என நினைக்கிறீர்கள்?

சத்குரு: இந்த யோகா தினம் என்பது ஒரு துவக்கம் மட்டுமே. தற்போது வழிகாட்டும் திசை மட்டுமே உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால், இது இத்துடன் நின்றுவிடப் போவதில்லை. ஏனென்றால் யோகா தினம் என்பது, யோகாவைப் பற்றியதோ, பிரதமரைப் பற்றியதோ, இந்தியாவைப் பற்றியதோ அல்ல, இது தனிமனித நல்வாழ்வைப் பற்றியது. உதாரணமாக நீங்கள் சந்தோஷமாக இருந்தால், உங்களுடன் இருப்பவர்களிடமும் அதே சந்தோஷத்துடன் பேசுவீர்கள். கோபமாகவோ, வெறுப்பாகவோ இருந்தால் அதையே பிறரிடமும் காண்பிப்பீர்கள். எனவே, நாம் ஒரு ஆனந்தமான உலகம் உருவாக்க, தனி மனிதனிடமும் அதை ஏற்படுத்த வேண்டும். அதை விடுத்து உலக அமைதியைப் பற்றி பேசுவது என்பது வெறும் பேச்சு மட்டும்தான். எனவே, இந்த அமைதி, ஆனந்தத்தை ஒரு தனி மனிதனுக்குள் உருவாக்க ஒரு கருவி தேவை. அதுதான் யோகா. பிரதமரின் இந்த முயற்சி ஒரு விதை மட்டுமே. இது வருங்காலத்தில் பெரும் விருட்சமாக வளரும்.

கேள்வி: உலக நாடுகள் பலவும் யோகா மீது ஆர்வம் காட்டுவது எதனால்?

சத்குரு: தற்போதைய நிலையில், உலக மக்கள் தாங்களாகவே சிந்தித்து செயல்பட ஆரம்பித்துவிட்டனர். என் பிரச்சனைக்கு மேலே பார்த்து கடவுளிடம் கேட்டால் தீர்வு கிடைக்கும் என்ற காலம் போய் அனைவரும் தாமாகவே சிந்திக்க துவங்கிவிட்டனர். எல்லோருக்கும் அறிவியல் ரீதியான தீர்வு தேவைப்படுகிறது. இதுவரை தனிமனிதருடைய உள்நிலை சார்ந்த விஷயங்களுக்கு விஞ்ஞானப்பூர்வமான தீர்வு எங்கும் வழங்கப்படவில்லை. உதாரணமாக, அமைதி பறிபோயிருந்தால், அதற்கான விஞ்ஞானப்பூர்வமான தீர்வினை யாரும் இதுவரை வழங்கியதில்லை. யோக விஞ்ஞானம் மட்டுமே இதற்கு விடை சொல்கிறது. இதனை அனைவரும் புரிந்துகொள்ள துவங்கிவிட்டனர். உலகம் முழுவதிலுமுள்ள மக்கள், தங்கள் கலாச்சாரம், மதம், நாடு ஆகியவற்றை தாண்டி யோகாவை ஏற்றுக்கொள்ளும் மனப்பான்மை ஏற்பட்டுள்ளது.

கேள்வி: உலகில் பல யோகா அமைப்புகள் உள்ளன. இதில் ஈஷா யோகாவின் தனித்துவம் என்ன?

சத்குரு: தற்போது யோகா என்றால் நாம் உடலை வளைத்து செய்யும் ஆசனங்கள் என்றே புரிந்து வைத்துள்ளோம். அப்படி இல்லை. பதஞ்சலி முனிவர் எழுதியுள்ள இருநூற்றிற்கும் மேற்பட்ட யோக சூத்திரங்களில் ஒரே ஒரு சூத்திரத்தில் மட்டுமே யோகாசனங்களைப் பற்றி எழுதியுள்ளார். அதை வைத்துக்கொண்டு பலர் பலவிதமான மாற்றங்களைச் செய்துவிட்டனர். ஆனால், ஈஷா யோகா என்பது குறிப்பிட்ட ஒருவிதமான பயிற்சி மட்டும் இல்லை. நீங்கள் சுவாசிக்கும் முறையை, உணவு உண்ணும் முறையை, உங்கள் தொழிலையே எப்படி யோகாவாக மாற்றிக் கொள்வது என்பதையே ஈஷா யோகா எளிய கருவிகளாக வழங்குகிறது. நம்மைச் சுற்றி நடக்கும் அத்தனை விஷயங்களையும் எப்படி உங்கள் வளர்ச்சிக்காக பயன்படுத்திக் கொள்வது என்பதைப் பற்றியதே ஈஷா யோகா.

கேள்வி: பத்திரிக்கை, ஊடகத் துறைக்கு யோகா எப்படி உதவும் என்று நினைக்கிறீர்கள்?

சத்குரு: பத்திரிக்கை, ஊடகத் துறைக்கு மட்டுமல்ல, அனைவருக்குமே யோகா உதவும். ஏனென்றால், நாம் செய்யும் செயல் ஒவ்வொன்றையுமே எப்படி நம் வளர்ச்சிக்காக மாற்றுவது என்பதே ஈஷா யோகா என்று நான் குறிப்பிட்டேன். அதே போல், உங்கள் ஜெர்னலிசம் தொழிலையே யோகாவாக மாற்ற முடியும். ஆரம்பத்தில் 5 நிமிட உபயோகாவைக் கற்றுக் கொள்ளுங்கள். பிறகு அது உங்களுக்கு வேலை செய்தால் அடுத்ததை சொல்லிக் கொடுக்கலாம். ஊடகங்கள் தங்கள் அலுவலகங்களில் விரும்பினால் இந்த இலவச யோக வகுப்புகளை ஏற்பாடு செய்யலாம். வகுப்பினை ஈஷா மையம் நடத்திக் கொடுக்கும்.

கேள்வி: யோகா தினத்திற்கு இளைஞர்களுக்கு நீங்கள் சொல்லும் செய்தி என்ன?

சத்குரு: இளைஞர் என்று நாம் சொல்லும்போது, ஒரு மனிதன் உருவாகிக் கொண்டிருக்கிறான் அல்லது மனித வாழ்க்கை உருவாகிக் கொண்டிருக்கிறது என்று அர்த்தம். ஒரு மனிதர் தன்னை எவ்வாறு உருவாக்கிக் கொள்கிறார் என்பது மிக முக்கியம். வாழ்க்கையில், தினசரி ஏதோ ஒரு பிரச்சனை ஏற்படுகிறது. வெளி பிரச்சனைகளை நாம் எப்படியோ சமாளித்துக் கொள்ளலாம். ஆனால், 99 சதவிகித மக்கள் தாங்களே ஒரு பிரச்சனையாக இருக்கிறார்கள். இதோ, இந்த "மனிதரையே"- உங்களையே உங்களால் சரி செய்ய முடியாத பட்சத்தில் உலகில் உள்ள பிற பிரச்சனைகளை எப்படி சமாளிப்பீர்கள்? அதனால் இளைஞர்கள் ஒவ்வொருவரும், "உலகில் எவ்வித பிரச்சனை இருந்தாலும் அதை எப்படி சரி செய்வது என்று நான் பார்ப்பேன், நானே ஒரு பிரச்சனையாக இருக்க மாட்டேன்" என்ற உறுதியுடன் இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.

இன்னும் சில கேள்விகள், சுவாரஸ்யமான பதில்கள் என நீண்ட பத்திரிக்கையாளர் சந்திப்பின் முடிவில் ஒரு பத்திரிக்கை அன்பர், பத்திரிக்கையாளர்களுக்கு நீங்கள் யோகா சொல்லிக் கொடுப்பீர்களா என கேட்க, "தில்லியில் உள்ள அனைத்து பத்திரிக்கை நிறுவனங்களுக்கும் ஈஷா இலவச யோக வகுப்புகளை ஒருங்கிணைத்து நடத்தி வருகிறது, உங்களுக்கும் அதனை நடத்திக் கொடுப்பதில் பெருமகிழ்ச்சி அடைவோம். அனைவரும் ஒரு நாள் குறித்து, ஈஷா யோக மையத்திற்கு வாருங்கள் அல்லது உங்கள் நிறுவனத்திலும் இதனை நடத்தலாம். ஈஷா யோக மையம் பத்திரிக்கை அன்பர்களுக்கு யோகா சொல்லிக் கொடுக்கும்" என அறிவித்து, "யோகா செய்ய வாருங்கள்" என வரவேற்றார்.