அமெரிக்காவில் நடைபெற்ற சர்வசமய மாநாட்டில் இந்து மதத்தின் பிரதிநிதியாக பேசச் சென்ற சுவாமி விவேகானந்தரின் பேச்சு ஏற்படுத்திய அதிர்வுகள் இன்னும் இந்த பூமிப்பந்தினை விட்டு அகலவில்லை. அவரைப் பற்றி நினைவுகொள்வோம்...

சத்குரு:

இந்தியா ஏழை நாடு, கல்வியறிவில்லாதவர்கள் நிறைந்த நாடு, இவர்களுக்கு கற்றுக்கொடுக்க வேண்டும் என உலகம் நினைத்துக் கொண்டிருந்த காலம் அது. கற்றுக்கொடுக்க வேண்டும் என்ற பிரகடனத்தின் பின்புலமோ இந்தியர்களைத் தரைமட்டமாக்க வேண்டும் என்பதுதான். ஆனால், இந்த உலகம்தான் இந்தியர்களிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும் என்ற புதிய பார்வையை உருவாக்கிய இந்த மனிதரின் குரல் இன்றும் உரக்க ஒலித்துக் கொண்டிருக்கிறது!

"அறுநூற்றி முப்பத்தி மூன்றாவது பக்கத்தில் என்ன இருக்கிறது?" என்றவுடன் விவேகானந்தர் அந்தப் பக்கத்தில் உள்ள வரிகளை அப்படியே கூற அந்த மனிதர் அதிர்ந்து போனார். இப்படியும் மனிதர்கள் இருக்க முடியுமா? இது எப்படி உங்களுக்கு மட்டும் சாத்தியமாயிற்று?" எனக் கேட்டார்.

ஒவ்வொரு மதத்தினரும் எங்கள் மதம்தான் உயர்ந்தது என பேசியபோது உங்கள் அனைவரது மதத்தினையும் ஏற்றுக்கொள்ளும் ஒரு மதத்திலிருந்து நான் வருகிறேன் எனப் பேசி, அனைவரையும் ஏற்றுக்கொள்ளும் இந்தியப் பாரம்பரியத்தை உலகிற்கு பறைசாற்றிய, அன்றைய அவரது பேச்சின் குரல் இன்றும் ஒலித்துக் கொண்டுதான் இருக்கிறது!

இந்தியாவில் இருக்கும் வழக்கங்கள் அனைத்தும் மூடநம்பிக்கை, மேற்கத்திய நாடுகளின் பழக்க வழக்கங்களே நவநாகரிகமானது என நம்மவர்களே நம் பாரம்பரியத்தை புறக்கணித்த அந்நாளில் ஆன்மீகத்தை அறிவியல்பூர்வமாக விளக்கிய அந்த இளைஞனின் குரல் இன்றும் ஒலித்துக் கொண்டுதான் இருக்கிறது!

பன்னெடுங்காலமாக ரிஷிகளும் முனிவர்களும் ஞானோதயம் அடைந்த ஞானிகளும் வளர்த்து வந்த ஞானத்தை இந்த தேசத்திலிருந்து முதல்முறையாக ஒரு சர்வதேச மாநாட்டில் உலகம் அறியச்செய்த அந்த யோகியின் குரல், உலகம் முழுக்க இன்றும் ஒலித்துக் கொண்டுதான் இருக்கிறது!

நரேனாக இருந்தவர் ராமகிருஷ்ணரின் சீடராக விவேகானந்தராக, பின்னாளில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்குச் சென்று பெரும் ஆன்மீக அலையை உருவாக்கினார். கல்லூரி மாணவராக, இளைய தலைமுறையின் பிரதிநிதியாக வலம் வந்த நரேனின் வாழ்வில் மாபெரும் திருப்பத்தை ஏற்படுத்தியது ராமகிருஷ்ணரின் சந்திப்பே!

ராமகிருஷ்ணரின் ஞானோதயத்திற்குப் பிறகு அவரிடம் பல சீடர்கள் வந்து சேர்ந்தனர். ஆனால் மற்ற சீடர்களை விடவும் ராமகிருஷ்ணர் விவேகானந்தர் மீது மிகுந்த பற்று கொண்டிருந்தார்.

விவேகானந்தர் மனதில் பல கேள்விகள் இருந்தன. பல சந்தேகங்கள் இருந்தன. எதையும் காரண அறிவில் ஆராய்ச்சி செய்து, சரி என்று புரிந்த பின்னரே ஒப்புக்கொள்ளும் மனிதராக அவர் இருந்தார். ராமகிருஷ்ணரோ காரண அறிவுக்கு எட்டாத பக்தி உணர்வில் திளைத்திருந்தவர்.

இந்த இளைஞனுக்குள்ளே இருக்கும் ஏதோ ஒன்று ராமகிருஷ்ணருக்கு புரிந்தது. தனது சக்தியை உள்வாங்கிக்கொள்ளும் திறமையை அவர் அந்த இளைஞனிடம் கண்டார். இதனை உலகிற்கு பரிமாறிடும் ஊடகமாக அம்மனிதரின் உள்நிலை இருப்பதை உணர்ந்தார். தனது செய்தியை உலகிற்கு கொண்டு செல்ல விவேகானந்தர்தான் சரியான நபர் என்று அவரைத் தேர்ந்தெடுத்தார்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

சுடர்விடும் அறிவும், சுதந்திரம் தேடும் இளவயதும் ஒரே சமயத்தில் விவேகானந்தரிடம் இருந்தது. "கடவுள் இருக்கிறாரா? இந்தக் கட்டுக்கதையை நான் ஏன் நம்பிட வேண்டும்? எதையும் கண்களால் காணாமல் நம்ப மாட்டேன்!" என்ற இவரது கேள்விக்கு பலராலும் விடையளிக்க இயலவில்லை!

இதைப் போலத்தான் துவங்கியது இன்னுமொரு கேள்வி! மிகவும் ஆழமான கேள்வி! ஆனால், மிகச் சாதாரணமாக கேட்கப்பட்டது. சற்றும் எதிர்பாராத பதில் கிடைத்தபோது, அவரது வாழ்க்கை முற்றிலுமாக புரண்டது!

"கடவுள்! கடவுள்!" என்று சொல்கிறீர்களே அதன் பொருள் என்ன? அதற்கு சாட்சி என்ன?" மற்ற ஆன்மீகவாதிகளைப் போலவே இந்தவொரு யோகியிடத்திலும் மாபெரும் விளக்கம் கிடைக்கும் என எதிர்பார்த்தார் நரேன்.

"நானே அதற்கு சாட்சி! இதைவிட உனக்கு வேறு என்ன சாட்சி வேண்டும்? நான் இங்கு இருக்கிறேன்," என்றார் அந்த யோகி.

முற்றிலும் எதிர்பாரா இந்த பதிலைக் கேட்டதும் நரேனால் வாதிட முடியவில்லை. கேள்விகள் கேட்க இயலவில்லை. வாயடைத்துப் போனார். ஆனால், ராமகிருஷ்ணரின் இந்த பதில் அவரை நிலைகொள்ளாமல் போகச் செய்தது. அவரிடமிருந்து இதற்கான பதிலை பெற்றுவிட வேண்டும் என்ற நோக்கத்தில் மீண்டும் மீண்டும் ராமகிருஷ்ணரிடம் சென்றார், பிற்காலத்தில் விவேகானந்தர் என வழங்கப்பட்ட நரேன்.

"கடவுள்! கடவுள்! என்று பேசுகிறீர்களே, உங்களால் எனக்கு அதைக் காட்ட முடியுமா?" என்றார் விவேகானந்தர்.

ராமகிருஷ்ணர், "உனக்கு அதைக் காணும் துணிச்சல் இருக்கிறதா?" என்றார்.

துணிவுமிகுந்த அந்த இளைஞனோ "ஆம், காத்திருக்கிறேன், எனக்கு அதைக் காட்டுங்கள்," என்றார்.

"கடவுள்! கடவுள்! என்று பேசுகிறீர்களே, உங்களால் எனக்கு அதைக் காட்ட முடியுமா?" என்றார் விவேகானந்தர்.

திடீரென எவரும் எதிர்பாரா வண்ணம் ராமகிருஷ்ணர் தனது கால்களை விவேகானந்தரின் நெஞ்சுப் பகுதியில் வைத்தார். அங்கே என்ன நடந்தது என எவருக்கும் புரியவில்லை.

விவேகானந்தர் கற்ற எல்லா கல்வியும் அந்தக் கணம் பொய்யாகியது. இவர் மனதில் இருந்த எல்லா கேள்விகளும் அந்தக் கணம் மறைந்து போனது. குருவின் ஸ்பரிசம் நெஞ்சுப் பகுதியில் பட சொல்லொணா புதிய அனுபவத்தை உணர்ந்தார். வெடித்திடும் அந்த ஆனந்தநிலைக்கு பொருள் தெரியாமல் தவித்தார். கண்களில் கண்ணீர் மல்க வார்த்தைகளின்றி உரைந்தார்.

அடுத்து சுமார் 12 மணி நேரம் வரை விவேகானந்தர் அந்த நிலையிலிருந்து எழவில்லை. மீண்டும் எழுந்தபோது அவர் பழைய மனிதரில்லை!

ராமகிருஷ்ணர் மஹாசமாதி அடைந்தவுடன் விவேகானந்தர் ராமகிருஷ்ண மடத்தை நிறுவினார். விவேகானந்தரும் ராமகிருஷ்ணரின் 8 சீடர்களும் ஒன்றாக இணைந்து தன் குருவின் செய்தியை உலகம் முழுக்க கொண்டு செல்ல தேவையான பணிகளைத் துவங்கினர்.

தன் குருவுக்கோ எழுதப் படித்திடத் தெரியாது. அவருக்கென ஒரு கொள்கையோ செயல்திட்டமோ கிடையாது. இந்த உலகில் எந்தச் செயலும் செய்திட இயலாது. அமைதியான சாதுவாக ஓரிடத்தில் தெய்வம் போல் அமர்ந்திருந்தார். அவரது சீடர்களோ நெருப்பைப் போன்ற மனிதர்கள். அவர்களது தீவிரமான செயலால் உலகம் முழுக்க ராமகிருஷ்ணரின் செய்தி எடுத்துச் செல்லப்பட்டது.

ஜெர்மானிய அறிஞர் ஒருவர் விவேகானந்தருக்கு அழைப்பு விடுத்ததால் அவர் அந்நாட்டிற்கு சென்றிருந்தார். ஒரு குறிப்பிட்ட புத்தகத்தைப் பற்றி சூடான உரையாடல் நிகழ்ந்து கொண்டிருந்தது. "இது மிக அற்புதமான புத்தகம்," என்றும் "ஆனால் புரிந்து கொள்வதும் மிகக் கடினம்," என்றும் அந்த புத்தகத்தைப் பற்றி அந்த ஜெர்மானியர் பேசிக் கொண்டிருந்தார்.

"என்னிடம் அந்தப் புத்தகத்தை ஒரு மணி நேரம் கொடுங்கள்," என்றார் விவேகானந்தர்.

"என்ன? பல வாரங்களாக படித்துக் கொண்டிருக்கிறேன். என்னாலேயே இந்தப் புத்தகத்தை புரிந்துகொள்ள முடியவில்லை. அதிலும் இது ஜெர்மானிய மொழிப் புத்தகம். உங்களுக்கு இந்த மொழியும் தெரியாது. ஒரு மணி நேரத்தில் நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்," எனக் கூறி நகைத்தார்.

விவேகானந்தர் அந்தப் புத்தகத்தை வாங்கி, தன் கைகளில் வைத்திருந்துவிட்டு, ஒரு மணி நேரத்தில் அந்த நண்பரிடம் திருப்பிக் கொடுத்தார். "இதில் ஒன்றும் இல்லை" என்றார்.

அந்த ஜெர்மானியருக்கோ கோபம் தலைக்கு ஏறியது. "இதை நீங்கள் திறந்துகூட பார்க்கவில்லை. அதற்குள் இதில் ஒன்றும் இல்லை என்று எப்படி கூறமுடியும்?" என்றார்.

"நீங்கள் இந்த புத்தகத்திலிருந்து என்னிடம் எதை வேண்டுமானாலும் கேளுங்கள்," என்றார் விவேகானந்தர்.

"அறுநூற்றி முப்பத்தி மூன்றாவது பக்கத்தில் என்ன இருக்கிறது?" என்றவுடன் விவேகானந்தர் அந்தப் பக்கத்தில் உள்ள வரிகளை அப்படியே கூற அந்த மனிதர் அதிர்ந்து போனார். இப்படியும் மனிதர்கள் இருக்க முடியுமா? இது எப்படி உங்களுக்கு மட்டும் சாத்தியமாயிற்று?" எனக் கேட்டார்.

அதற்கு விவேகானந்தர், "அதனால் தான் நான் விவேகானந்தர்" என்றார். விவேக் என்றால் புரிந்துகொள்ளுதல் - ஞானம். விவேகானந்தர் அந்தப் புத்தகத்தை தன் கைகளில் வைத்து அதனைப் படித்துக் கொண்டிருக்கவில்லை, புத்தகம் எழுதியவரின் மனதைப் படித்துக் கொண்டிருந்தார். இதனை நாம் உள்ளுணர்வு என அழைக்க முடியாது. இது முற்றிலும் வித்தியாசமான ஒரு கிரகிப்புத்திறன்.