Question: என் நட்சத்திரத்துக்கு ஏற்ற தொழில் எது என்று பல ஜோசியர்களிடம் கேட்டு, அதன்படி வேறு வேறு தொழில்களைச் செய்து பார்த்துவிட்டேன். ஆனாலும், எதிலும் வெற்றிபெற முடியாமல், மீண்டும் மீண்டும் நஷ்டங்களையே சந்திக்கிறேன். ஒருவேளை, என் ஜாதகமே தப்பாக இருக்குமா?

சத்குரு:

சங்கரன்பிள்ளை தன் மூன்று நண்பர்களுடன் கூட்டு சேர்ந்து, பல தொழில்களை செய்து பார்த்தார். எந்தத் தொழில் செய்தாலும் நஷ்டமாகிக் கொண்டே இருந்தது.

நீச்சல் தெரியாமல் தண்ணீரில் குதித்தால், எப்போதாவது ஒருமுறை தற்செயலாக தப்பிக்கலாம். ஆனால் அதை உங்கள் நட்சத்திரப் பலன் என்று கருதி, மறுபடியும் முயற்சி செய்தால், உயிருக்கு உத்தரவாதம் கிடையாது.

சங்கரன்பிள்ளை நண்பர்களிடம் பேசினார்... "நகரத்தில் எல்லோரும் பிரமாதமாகச் சம்பாதிக்கிறார்கள். ஆட்டோக்களை விட டாக்ஸியில் செல்வதையே விரும்புகிறார்கள். நாம் ஒரு டாக்ஸி வாங்கிவிடலாமே?" என்றார்.

நண்பர்கள் சம்மதித்தனர். கையில் இருக்கும் பணத்தையெல்லாம் திரட்டி, ஒரு கார் வாங்கினார்கள். டாக்ஸிக்குரிய மஞ்சள் கறுப்பு வண்ணம் அடித்தார்கள். டாக்ஸியை ரயில்வே ஸ்டேஷன் வாசலில் நிறுத்திவிட்டுக் காத்திருந்தார்கள். எத்தனையோ பயணிகள் வந்தார்கள். வேறு வேறு வாகனங்கள் பிடித்துப் போனார்கள். இவர்களுடைய டாக்ஸி பக்கம் யாருமே வரவில்லை.

"ரயிலில் வருபவர்கள் கஞ்சப் பயல்கள். ஏர்போர்ட்டில் சவாரி கிடைக்கும்" என்றார் சங்கரன்பிள்ளை. விமான நிலையத்தின் வாசலிலும் நிறுத்திக் காத்திருந்தார்கள். அங்கேயும் ஒரு வாடிக்கையாளர் கூட வரவில்லை. பெரிய பெரிய ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ் வாசல்களிலும் வண்டியை நிறுத்திப் பார்த்தார்கள். மற்ற வண்டிகள் எல்லாம் நிரம்பினவே தவிர, இந்த வண்டிக்கு யாருமே வரவில்லை. அங்கே, இங்கே அலைந்து பார்த்ததில் பெட்ரோல்தான் தண்ணீர் போல் செலவானது.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

கடைசியில் ஒரு கிளி ஜோசியரிடம் வண்டியைக் கொண்டு போய் நிறுத்தினார், சங்கரன்பிள்ளை. தங்கள் பிரச்சனையைச் சொன்னார். கூண்டுக்குள் இருந்த கிளி சிரித்தது. "அட முட்டாள்களே, பார்ட்னர்கள் நான்கு பேரும் எப்போதுமே வண்டியில் உட்கார்ந்திருந்தால், டாக்ஸி நிரம்பிவிட்டது என்றுதானே எவனும் நினைப்பான்? எந்த வாடிக்கையாளன் வருவான்? இதற்குப் போய் ஜோசியரிடம் வந்து நிற்கிறீர்களே?"

இப்படித் தொழில் செய்தால், எந்த நட்சத்திரத்தால்தான் சங்கரன்பிள்ளையின் தலையெழுத்தைச் சரி செய்ய முடியும்?

எந்தத் தொழில் செய்வதானாலும், முதலில் அதை எல்லாக் கோணங்களில் இருந்தும் கவனித்து, தொழில் நுணுக்கங்களைப் புரிந்து கொள்ள வேண்டும். அதை விட்டுவிட்டு வெறுமனே நட்சத்திரம் பார்த்துத் தொழில் துவங்கினால் எப்படி வெற்றி கிடைக்கும்? அப்படியே வெற்றி கிடைத்தாலும், அது தற்செயலாகத்தான் இருக்குமே தவிர, உங்கள் திறமையினால் பெற்றதாக இருக்காது.

நீச்சல் தெரியாமல் தண்ணீரில் குதித்தால், எப்போதாவது ஒருமுறை தற்செயலாக தப்பிக்கலாம். ஆனால் அதை உங்கள் நட்சத்திரப் பலன் என்று கருதி, மறுபடியும் முயற்சி செய்தால், உயிருக்கு உத்தரவாதம் கிடையாது. அதேபோல, தற்செயலாகக் கிடைத்த வெற்றி நிலைத்திருக்கும் என்பதற்கும் உத்தரவாதம் இல்லை.

திறமையைப் பயன்படுத்தாமல், வேறு காரணங்களால் மேலே வந்தவர்கள், அந்த நிலை எப்போதும் பறிபோகுமோ என்ற அச்சத்தில்தான் வாழ வேண்டியிருக்கும். வெளியில் காலெடுத்து வைப்பதற்குக்கூட நாள் நட்சத்திரம் பார்க்கத் தோன்றும்.

திறமையினால் மேலே வந்தவர்களுக்கு இந்த அச்சம் இருக்காது. எதிர்பாராத காரணத்தால், சறுக்கல் வந்தால்கூட, மறுபடி எப்படி எழுவது, எப்படி நிமிர்வது, எப்படி வளர்வது என்று அவர்களுக்குத் தெரியும்.

உங்களுக்கு ஒரு தொழில் செய்ய விருப்பம் வந்தால், அந்தத் தொழிலில் அடிப்படை நுணுக்கங்களை முழுமையாக முதலில் புரிந்து கொள்ளுங்கள். அதை விடுத்து, வேறு யாரோ நான்கு பேர் செய்வதைப் பார்த்து ஆசைப்பட்டு நீங்களும் அதே தொழில் செய்தாலோ, உங்கள் நட்சத்திரப் பலன்களைக் கேட்டு அதன்படி தொழில் ஆரம்பித்தாலோ வெற்றி நிரந்தரமாக இருக்காது.

நான் சில வருடங்களுக்கு முன்பு மங்களூர் போயிருந்தேன். அங்கே ஹோமியோபதி டாக்டர் ஒருவரைச் சந்தித்தேன். 'இங்கு எல்லாவிதமான பாம்புகளின் விஷத்தையும் முறிக்க வல்ல மருந்து கிடைக்கும்' என்று விளம்பரம் செய்திருந்தார்.

எந்தத் துறையானாலும், எந்தத் தொழிலானாலும், எதைக் கற்க விரும்பினாலும், அதன் அடிப்படை நுணுக்கங்களைப் புரிந்து கொண்டால்தான் வெற்ற¤ கிடைக்கும்.

ஆச்சர்யமானேன். எனக்குப் பாம்புகளைப் பற்றி ஓரளவு தெரியும். 'நாகப்பாம்பு போன்ற பாம்புகள் கடித்தால், விஷம் நம் ரத்த ஓட்டம், இதயத் துடிப்பு, சுவாசம் எல்லாவற்றையும் நிறுத்தி மரணத்தைக் கொண்டுவரும். கட்டுவிரியன் போன்ற பாம்புகள் கடித்தால், விஷம் நரம்புக்குள் சென்று உறுப்புகள் செயலிழக்கும். உயிர் போகும். இரண்டும் வேறு வேறு விதமான விஷங்களாயிற்றே? இரண்டுக்கும் ஒரே மருந்து எப்படிச் செயல்பட முடியும்?" என்று கேட்டேன்.

அவர் சிரித்தார். "இந்திய தேசத்தில், நூற்றில் தொண்ணூறு பாம்புகளுக்கு விஷமே இல்லை. அந்தப் பாம்புகள் கடித்திருந்தால், இந்த மருந்து பிரச்சனை இல்லாமல் வேலை செய்துவிடும். இங்கே வரும் கேஸ்களில் தொண்ணூறு சதவிகிதம் பேர் அப்படிப் பிழைத்து விடுவார்கள். மிச்சமிருக்கும் பத்து சதவிகிதத்துக்குள்தானே தப்பாகிவிட வாய்ப்பிருக்கிறது! வெற்றி விகிதம் என்று பார்த்தால் தொண்ணூறு சதவிகிதமாயிற்றே?"

இப்படித் தொண்ணூறு சதவிகித வெற்றி போதும் என்று சமாதானம் செய்து கொள்பவரா நீங்கள்? தற்செயலாக உயிருடன் இருப்பது போதுமா உங்களுக்கு? ஒரு நோக்கத்துடன் வாழ வேண்டாமா?

நீங்கள் கவனிக்காத மிச்சமுள்ள பத்து சதவிகிதத்தில்தான் உண்மையான வாழ்க்கையே இருக்கிறது. அந்தப் பத்து சதவிகிதத்தை நீங்கள் விரும்பியபடி நடத்திக் கொள்வதற்குத்தான் உண்மையான திறமை வேண்டியிருக்கிறது.

ஒவ்வொரு அடியையும் ஒரு நோக்கத்துடன் எடுத்து வையுங்கள்.

எந்தத் துறையானாலும், எந்தத் தொழிலானாலும், எதைக் கற்க விரும்பினாலும், அதன் அடிப்படை நுணுக்கங்களைப் புரிந்து கொண்டால்தான் வெற்றி கிடைக்கும். இது நீங்கள் உணர வேண்டிய ரகசியம்.

இதையெல்லாம் செய்யாமல்... எதையோ, எப்படியோ செய்தாலும் நட்சத்திரங்கள் வெற்றியைக் கொண்டு வந்து தந்துவிடும் என்று நம்புவது கேவலம். நீங்கள் நூறு சதவிகிதத்தையும் எதிர்பார்த்துத் திட்டமிடுங்கள். திறமையைப் பயன்படுத்துங்கள், சூழ்நிலைகளைப் புரிந்து அவற்றுக்குத் தக்கவாறு கவனமாக விழிப்பு உணர்வுடன் செயலாற்றுங்கள். எல்லா நட்சத்திரங்களும் உங்களுக்குச் சாதகமாக வேலை செய்யத் துவங்கிவிடும்!

tim geers @ flickr