ஈஷா யோக மையத்தில் வெகுசிறப்பாக நடைபெற்ற ஏழாம்நாள் நவராத்திரி கொண்டாட்டம்... ஒரு பார்வை!

ஈஷா யோக மையத்தில் நவராத்திரி திருவிழா 9 நாட்கள் (அக்டோபர் 2 முதல் 10 வரை) விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. பாரம்பரிய இசை, பரதநாட்டியம் என்று மட்டுமல்லாமல், நாட்டுப்புற கலை வடிவங்களும் அரங்கேறி வருகிறது. 9 நாட்கள் திருவிழாவில், இன்றைய ஏழாம்நாள் கொண்டாட்டத்தில் திரு.ஆர்.கே.முருகையன் அவர்களின் முத்தமிழ் கலை மன்ற குழுவினரின் தெருக்கூத்து நிகழ்ச்சி வெகுசிறப்பாக நடைபெற்றது.

மாலை 6.45 மணியளவில் ஈஷா யோக மையத்திலுள்ள சூரியகுண்டம் முன்பாக துவங்கிய இந்நிகழ்ச்சியை நூற்றுக்கணக்கான மக்கள் கண்டுகளித்தனர்.

திரைச்சீலை போன்ற நாகரிகச் சாயல்களன்றி மூன்று பக்கமும் மக்கள் சூழ்ந்திருக்க தெருவில் நடத்தப்படும் கூத்து என்பதால் ‘தெருக்கூத்து’ என்று அழைக்கப்படுகிறது. தமிழர்களின் நாட்டுப்புற கலைவடிவத்தில் பழமையானது இக்கலை. கதை சொல்லல், நாடகம், ஆடல், பாடல் என பலதரப்பட்ட அம்சங்கள் இதில் வழங்கப்படும். புராண கதைகள் முதல் தற்போது சீர்திருத்தக் கதை மற்றும் விழிப்புணர்வுக் கதைகள் கூட தெருக்கூத்தில் மையப்பொருளாக கையாளப்படுகின்றன.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

கலை நண்மணி திரு.முருகையன் பற்றி...

திருவண்ணாமலையை அடுத்த நல்லவன்பாளையத்தை சேர்ந்த திரு.ஆர்.கே.முருகையன் அவர்கள் ‘முத்தமிழ் கலை மன்றம்’ என்ற அமைப்பைத் தொடங்கி, தெருக்கூத்து நிகழ்ச்சியை பல்வேறு இடங்களில் சிறப்பாக வழங்கி வருகிறார். இவரது ‘எமலோக தர்பார்’ என்ற தெருக்கூத்து நிகழ்ச்சி சுமார் இரண்டாயிரம் இடங்களில் நடைபெற்ற சிறப்புக்குரியது. ஆண்டுதோறும் ஜவ்வாதுமலை மற்றும் கல்வராயன் மலை கோடை விழாக்களிலும் மற்றும் திருவண்ணாமலை தீபத் திருவிழாவிலும், அரசு பொருட்காட்சிகளிலும் இவரது தெருக்கூத்து நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெறுகின்றன. அருணை தமிழ் சங்கத்தின் என்.எஸ்.கலைவாணர் விருது, தமிழக அரசின் கலைபண்பாட்டுத் துறை மற்றும் திருவண்ணாமலை மாவட்ட கலை மன்றம் இணைந்து வழங்கும் சிறந்த நாடகக் கலைஞருக்கான ‘கலை நண்மணி விருது’ என பல்வேறு விருதுகளுக்கு சொந்தக்காரர் திரு.முருகையா!

லிங்க பைரவி ஊர்வலம்...

bharatanatyathil-thilaitha-moonram-nal-navarathri-kondattam-9

நவராத்திரியின் ஏழாம் நாளான இன்று, லிங்கபைரவி தேவி உற்சவ மூர்த்தியின் ஊர்வலம் கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. லிங்கபைரவியிலிருந்து துவங்கும் இந்த ஊர்வலத்தில், தியானலிங்கம் முன் நடைபெறும் ஆரத்தியில் அக்னி நடனமாடுவது உள்ளம்கவர் அம்சமாக இருக்கும். ஊர்வலம் முடிந்த பின்னர் ஒவ்வொருநாளும் பக்தர்களுக்கு ஈஷா மையம் சார்பில் அன்னதானம் வழங்கப்படுகிறது.

கொலு...

bharatanatyathil-thilaitha-moonram-nal-navarathri-kondattam-12

நவராத்திரி விழாக்காலங்களில் பாரம்பரியமாக வைக்கப்படும் கொலு கண்காட்சியானது, சூரியகுண்டத்தின் மேற்புற பிரகாரத்தில் தேவியின் பலவித ரூபங்களை குறிப்பிடும்படியாக பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.

நவராத்திரி விழாக் காலங்களில் லிங்கபைரவி, முதல் மூன்று நாட்கள் துர்கை அம்சமான குங்கும அலங்காரத்திலும் அடுத்த மூன்று நாட்கள் மஹாலஷ்மி அம்சமான மஞ்சள் அலங்காரத்திலும், இறுதி மூன்று நாட்கள் சரஸ்வதி அம்சமான சந்தன அலங்காரத்திலும் பக்தர்களுக்குக் கண்கொள்ளா விருந்தாக காட்சியளிப்பாள்.

இந்த 9 நாட்களில், தேவிக்கு சிறப்பு அர்ப்பணிப்புகளாக நெய்தீபம், மாங்கல்ய பலசூத்ரா, அபிஷேகம், சமர்ப்பணம் போன்ற அர்ப்பணைகளை செய்வதன் மூலமும், ஒவ்வொரு நாள் மாலை நடக்கவிருக்கும் மஹா ஆரத்தி, ஊர்வலம், மற்றும் சிறப்பு மந்திர உட்சாடனைகளில் பங்குபெறுவதன் மூலமும் அளப்பரிய நன்மைகளைப் பெற முடியும். நவராத்திரி காலத்தில் தேவியை வழிபடுவது, ஒருவர் உலக வாழ்வில் நல்வாழ்வு என்று நினைக்கும் அனைத்தையும் பெற உறுதுணை புரியும். அதனுடன் ஆன்மீகத்தின் உயர்ந்த பரிமாணங்களை எட்டவும் ஒரு வாய்ப்பாக இருக்கும்.

இந்த ஒன்பதுநாட்கள் நவராத்திரி திருவிழாவில் கலந்துகொள்ள, பொதுமக்கள் அனைவருக்கும் அழைப்புவிடுத்துள்ள ஈஷா யோக மையம், கோவையிலிருந்து ஈஷாவிற்கும், நிகழ்ச்சி முடிந்தவுடன் ஈஷாவிலிருந்து கோவைக்கும் இடையிலுள்ள கிராமங்களுக்கும் இலவசப் பேருந்து சேவையையும் வழங்கியுள்ளது.

நாளை (09-10-2016)

எட்டாம்நாள் விழாவான நாளை நண்பர்கள் பம்பை-சிலம்பு குழுவினரின் பம்பை ஆட்டம் நடைபெறவுள்ளது.