சத்குரு:

இளமையாய் இருக்கும்போது எல்லோருக்குமே நிறைய கனவுகள் இருக்கும். சில இலட்சியங்கள், எதிர்காலத்தில் என்னவாக வேண்டும் என்பது பற்றிய கற்பனைகள், வாழ்க்கையை எந்த விதத்தில் அமைத்துக் கொள்ளலாம் என்பதைப் பற்றிய எண்ணங்கள் என நிறைய கனவுகள் இருக்கும். ஆனால் எல்லோருக்கும் அதே மாதிரியான கனவுகள் ஏற்படுவது கிடையாது.

ஏனெனில் கனவு காண்பதற்குக் கூட கொஞ்சம் துணிச்சல் வேண்டும். நிறையப் பேர் தங்கள் கனவுகள் நனவாகுமோ, இல்லையோ என்கிற அச்சத்திலேயே கனவு காண்பதை நிறுத்திக் கொண்டு விட்டார்கள்.

ஏனெனில் கனவு காண்பதற்குக் கூட கொஞ்சம் துணிச்சல் வேண்டும். நிறையப் பேர் தங்கள் கனவுகள் நனவாகுமோ, இல்லையோ என்கிற அச்சத்திலேயே கனவு காண்பதை நிறுத்திக் கொண்டு விட்டார்கள்.

18-லிருந்து 20 வயதில் பார்த்தால் மிகப்பெரிய லட்சியக் கனவுகள் மனதுக்குள் குடி கொண்டிருக்கும். 25 வயது எட்டுவதற்குள் நிறையப் பேர் தங்கள் கனவுகளை சராசரி தேவைகளாகச் சுருக்கிக்கொண்டு விட்டார்கள். அதுவும் அவரவர்களின் தனிப்பட்ட ஆசைகளைச் சார்ந்த தேவைகளாகவே இருக்கின்றன. அவர்களைக் கேட்டால் இதுதான் எதார்த்தம் என்று சொல்வார்கள். இதற்குப் பெயர் எதார்த்தமல்ல, கோழைத்தனம். கனவுகளை நனவாக்கத் தெரியாத கோழைத்தனம்.

35 வயது ஆகிறபோது நிறையப் பேரிடம் கனவுகளே இருப்பதில்லை. தொந்தரவு இல்லாமல் வாழ்ந்தால் போதும் என்கிற நிலைக்கு வந்துவிடுகிறார்கள். ஒரு தலைமுறை, கனவுகளை இழக்கிறபோது எத்தனைதான் நற்பணிகள் செய்தாலும் இந்தச் சமூகம் என்னென்ன அதிசயங்களைக் கண்டுபிடித்தாலும் அவற்றின் பயனை யாரும் அனுபவிக்க முடியாது. நீங்கள் எந்தவொரு சமூகத்தையும், எந்த ஒரு நாட்டையும் பாருங்கள். மனதில் மிக வலிமையான கனவுளை சுமந்து கொண்டு வாழ்ந்தவர்களின் வாழ்க்கைதான் தீவிரத்தன்மையும், அர்த்தமும் நிறைந்ததாக இருக்கிறது.

அவர்களிடம் ஒரு மகத்தான சக்தி இருந்திருக்கிறது. நமது நாட்டிலேயே சில ஆண்டுகளுக்கு முன்பு எத்தனையோ பேர் இந்த நாட்டிற்காக தங்கள் உயிரைத் துச்சமாக மதித்து தூக்கி எறியத் தயாராக இருந்தார்கள். ஏனெனில் சுதந்திர இந்தியா பற்றி அவ்வளவு வலிமையான கனவு அவர்களுக்கு இருந்தது.

உங்களுடைய கனவுகளையே நினைத்துப் பாருங்கள். உங்களில் ஒருவருக்கொருவர் காணுகிற கனவுகளில் அப்படியொன்றும் பெரிய வேறுபாடு கிடையாது. தனிப்பட்ட சுயநலத்தை தள்ளிவிட்டுப் பார்த்தால் எல்லோருடைய கனவுகளின் அடிப்படையும் ஏறக்குறைய ஒன்றாகவே இருக்கிறது. கனவு, உங்களுடைய கனவு, அவருடைய கனவு, இன்னொருவருடைய கனவு இதற்கெல்லாம் பெரிய வேறுபாடு இல்லை.

யாரையாவது பார்த்து நீங்கள் எத்தகைய உலகத்தில் வாழ விரும்புகிறீர்கள் என்று கேட்டால், "அமைதியான உலகத்தில் வாழ விரும்புகிறேன்" என்றுதான் சொல்வார்கள். அப்படியென்றால் அனைவருக்கும் ஒரே கனவுதான் இருக்கிறது.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

இன்று ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான பணிகளைச் செய்து வருகிறீர்கள். சிலபேர் கல்வி கற்றுக் கொண்டிருக்கிறீர்கள். சிலபேர் திருமணம் செய்து கொண்டிருக்கிறீர்கள். சிலபேர் குழந்தை பெற்றுக் கொண்டிருக்கிறீர்கள். பலரும் பலவிதமான பணிகளைச் செய்து கொண்டிருக்கிறீர்கள்.

இவற்றைச் செய்வதெல்லாம் மகிழ்ச்சிக்காத்தான். ஒருவர், "மகிழ்ச்சிக்கு இதுதான் வழி" என்று ஒரு காரியத்தை செய்கிறார். இன்னொருவர், "மகிழ்ச்சிக்கு இதுதான் வழி" என்று வேறொரு காரியத்தைச் செய்கிறார்.

பல இளைஞர்கள் 18 வயதிலேயே வாழ்க்கை குறித்தும், மரணம் குறித்தும், 60 வயது ஆனவரைப் போல அச்சப்படுகிறார்கள். "எனக்கு இப்படி நடந்துவிட்டால் என்ன செய்வது? அப்படி நடந்துவிட்டால் என்ன செய்வது?" என்று எல்லாம் கவலைப்படுகிறார்கள். எதுவுமே நிகழாவிட்டால் உங்களுக்கு வாழ்க்கை என்ற ஒன்றே இல்லை. வாழ்க்கை என்றால் ஏதாவது ஒன்று நிகழ்ந்தாக வேண்டும். எதிர்பாராத ஒன்று ஏற்படுமேயானால் அதற்குப் பெயர்தான் வாழ்க்கை.

அப்படியானால் ஒவ்வொரு மனிதரும் மகிழ்ச்சியாக இருக்கத்தான் விரும்புகிறார்கள், இல்லையா?

இப்போது மகிழ்ச்சிக்காக நீங்கள் பின்பற்றுகிற வழிகள் மகிழ்ச்சியை எட்டுவதற்காக. நீங்கள் செய்கிற காரியங்கள் எல்லாம் வெவ்வேறாக இருக்கலாம். ஆனால் அடிப்படையில் அனைவரும் தேடுவது மகிழ்ச்சிதான்.

எனவே மகிழ்ச்சி பொதுவான கனவு, அமைதி எல்லோருக்கும் தேவையாய் இருக்கிறது. மகிழ்ச்சி அனைவருக்கும் தேவையாய் இருக்கிறது. அன்பு எல்லோருக்கும் தேவையாய் இருக்கிறது. நீங்கள் பிறர் மீது அன்பு செலுத்தவும், உங்கள் மீது பிறர் அன்பு செலுத்த வேண்டுமென்றும் விரும்புகிறீர்கள். இது ஒவ்வொருவரிடமும் உள்ளது.

ஆனால் இந்தக் கனவுகளை சின்னச்சின்ன ஆதாயங்களுக்காக அடகு வைத்துவிடுகிறீர்கள். ஏனெனில் இந்தக் கனவுகளை எட்டுவது சாத்தியமில்லை என்று கருதி சின்னச் சின்ன சுய இலாபங்களிலேயே அமைதி அடைந்துவிடுகிறீர்கள். இது வெறும் கோழைத்தனம். குறிப்பாக, இளமையில் கனவுகளை கைவிடலாகாது. கோழைத்தனம் கூடவே கூடாது. இளைஞர்களுக்கு இருக்கிற சக்திக்கு அவர்களைக் கோழைத்தனம் நெருங்கவே கூடாது.

பல இளைஞர்கள் 18 வயதிலேயே வாழ்க்கை குறித்தும், மரணம் குறித்தும், 60 வயது ஆனவரைப் போல அச்சப்படுகிறார்கள். "எனக்கு இப்படி நடந்துவிட்டால் என்ன செய்வது? அப்படி நடந்துவிட்டால் என்ன செய்வது?" என்று எல்லாம் கவலைப்படுகிறார்கள். எதுவுமே நிகழாவிட்டால் உங்களுக்கு வாழ்க்கை என்ற ஒன்றே இல்லை. வாழ்க்கை என்றால் ஏதாவது ஒன்று நிகழ்ந்தாக வேண்டும். எதிர்பாராத ஒன்று ஏற்படுமேயானால் அதற்குப் பெயர்தான் வாழ்க்கை.

எனவே இன்றைய இளைஞர்களுக்கு, வாழ்க்கைப் பற்றிய நம்பிக்கை கனவுகள், இலட்சியங்கள், அதேநேரம் அச்சம், பதட்டம் அனைத்தும் ஒன்றாக இருப்பதைப் பார்க்கிறோம். உங்களை நீங்களே சில கேள்விகளை இப்போது கேட்டுக் கொள்ளுங்கள்.

"வாழ்க்கையில் செய்ய விரும்புவதை அது எதுவாக இருந்தாலும் சரி, அதனை முழுமையாக, எவ்வளவு சிறப்பாக முடியுமோ, அவ்வளவு சிறப்பாக செய்ய முடியுமா?" என்று உங்களை நீங்களே கேட்டுக் கொள்ளுங்கள். முதலில், "நீங்கள் யார்?" என்று கூடத் தெரிந்துகொள்ளாமல் வாழ்க்கைக்கு என்ன செய்ய முடியும் என்பதை உணர்ந்து செயல்பட முடியுமா? இப்போது உங்களைப் பற்றி நீங்கள் தெரிந்து வைத்துக் கொண்டிருக்கிற விஷயங்கள் அனைத்துமே மற்றவரோடு ஒப்பிட்டு நீங்களே எடுத்திருக்கிற முடிவுகள்தான்.

உதாரணத்திற்கு "நான் உயரமானவன்" என்று ஒருவர் சொல்கிறார் என்றால் தன்னை உயரம் என்று அவர் எப்படி சொல்கிறார்? தன்னைவிட குள்ளமானவர்களோடு ஒப்பிடுகிறபோது, தான் உயரம் என்று சொல்கிறார். அவர் ஒரு ஆறடி உயரம் இருக்கிறார் என்று வைத்துக்கொள்வோம். அவரைச் சுற்றி சமூகத்திலிருக்கிற நிறைய பேர் ஐந்தடி, ஐந்தரையடி உயரத்துடன் இருக்கிறார்கள். எனவே, தான் உயரம் என்கிற எண்ணம் அவருக்கு இருக்கிறது. எல்லாருமே 7-அடி உயரத்திற்கு மேல் இருக்கிற சமூகத்துக்குள் அவர் சென்றால், மிகவும் குள்ளமாகத் தன்னை உணருவார். அப்படியென்றால், தன்னைப் பற்றி அவருக்கு இருந்த மதிப்பீடு ஒப்பீட்டில் விளைந்த மதிப்பீடே தவிர உண்மையான மதிப்பீடு அல்ல.

நீங்கள் இந்த உலகத்தில் என்னென்னவோ தெரிந்து வைத்துக் கொண்டிருக்கிறீர்கள். இந்த உலகத்தைப் பற்றி மட்டுமல்ல, வேறு உலகங்களைப் பற்றிக் கூட நிறைய விவரங்கள் உங்களுக்குத் தெரியும். சொர்க்கலோகம் எங்கே இருக்கிறது என்பதைக் கூடத் தெரிந்து வைத்திருக்கிறீர்கள்.

ஆனால் இப்பொழுது உங்களுக்குள் என்ன நிகழ்கிறது என்பதுதான் உங்களிடையே பல பேருக்கும் தெரிவதில்லை. இந்தத் தெளிவின்மைதான் நம் தேசியப் பிரச்சினை. உங்களுக்குள் என்ன நடக்கிறது என்றே உங்களுக்குத் தெரியவில்லை. உங்களைப் பற்றி ஒரு முழுமையான தெளிவு உங்களுக்கு இருக்கும் என்று சொன்னால் நம் கடவுளைப் பற்றி எதுவும் தெரியாமல் இருந்தாலும் கூட உங்களால் மிக அர்த்தமுள்ள வாழ்க்கையை வாழ்ந்துவிட முடியும்.

இப்போது மகிழ்ச்சிக்காக நீங்கள் பின்பற்றுகிற வழிகள் மகிழ்ச்சியை எட்டுவதற்காக. நீங்கள் செய்கிற காரியங்கள் எல்லாம் வெவ்வேறாக இருக்கலாம். ஆனால் அடிப்படையில் அனைவரும் தேடுவது மகிழ்ச்சிதான்.

ஆனால், உங்களுக்கு கடவுள் எங்கே வசிக்கிறார் என்று தெரியும். அவருடைய குழந்தைகளின் பெயர் தெரியும். அவருக்கு காலை உணவாக என்ன பிடிக்கும் என்று தெரியும். கடவுளின் பிறந்தநாள் கூட தெரியும். நீங்கள் எங்கே இருக்கிறீர்கள், உங்களுக்கு இருக்கிற ஆற்றல் என்ன என்பதுதான் தெரியாது. தன்னைத் தெரிந்து கொள்ளாமல் இந்த உலகம் முழுவதையும் தெரிந்து வைத்துக்கொள்வதால் ஒரு பயனும் கிடையாது. இது வெட்ட வெளியில் ஒரு பைத்தியக்காரன் கட்டிக்கொண்டே போகிற கற்பனைக் கோட்டைகளுக்குச் சமம். நீங்கள் நிறைய செயல் செய்துகொண்டே இருக்கிறீர்கள். இந்த பூமி உருண்டை தாங்க முடியாத அளவுக்கு நீங்கள் அதிவேகமாக செயல்பட்டுக் கொண்டு வருகிறீர்கள்.

ஒரு மனிதன் உள்நிலை வளர்ச்சி அடையாதபோது, பெறுகிற பணம், பொருள், வசதிகள் எல்லாமே பயனற்றதாகிவிடுகிறது. உங்கள் வாழ்க்கையில் வந்து சேர்கிற வசதிகளை எல்லாம் உங்களால் அனுபவிக்க முடியாது. இன்று பலபேர் தங்கள் வெற்றிகளை சுமந்து கொண்டிருக்கிறார்களே தவிர வெற்றிகளால் மகிழ்ந்து கொண்டிருக்கவில்லை.

வெற்றிகள் வரவர பாரங்களும், சுமைகளும்தான் பலருக்கு அதிகரிக்கிறது. அப்படியானால் வெற்றிகள் அவர்களுக்கு வேண்டிய மகிழ்ச்சியை, தேடிய மகிழ்ச்சியைத் தரவில்லை என்றுதானே அர்த்தம். நீங்கள் உங்களைப் பற்றி ஒரு புரிதலை ஏற்படுத்திக் கொண்டால் ஒழிய 'நீங்கள் யார்?' என்று அனுபவரீதியாக அறிந்தாலே தவிர, இந்த உலகத்துக்கு நீங்கள் எதை எதையோ செய்ய முயற்சிப்பது எந்தப் பலனையும் தராது.

மற்றவர்களோடு ஒப்பிட்டு நீங்கள் வெற்றி பெற்றதாக கருதிக் கொண்டிருப்பீர்கள். ஆனால் தனிப்பட்ட முறையில் ஒவ்வொருவரும் மிகப்பெரிய தோல்வியை சந்தித்திருப்பீர்கள். மனிதவடிவில் இந்த மண்ணுக்கு வந்த பிறகு வேறு எந்த உயிரினத்துக்கும் இல்லாத மகத்தான ஆற்றல், மகத்தான சக்தி, உங்களிடம் இருக்கிறது. பிறப்புக்கும், இறப்புக்கும் நடுவில், அற்புதமான பல திருப்பங்கள் அமைந்தாலே ஒழிய வாழ்க்கை பயனுள்ளது என்று சொல்லிவிட முடியாது.

ஒவ்வொரு மனிதரும் தனக்குள்ளேயே ஓர் அற்புதத்தை நிகழ்த்துகிற வல்லமை படைத்தவர்தான். தனக்குள் அது நிகழ்ந்துவிட்டால் கண்டிப்பாக வெளிச்சூழலிலும் அது நிகழ்ந்தே தீரும். வாழ்க்கை முழுவதும் ஒருவர் கண்மூடி அமர்ந்துவிட்டால் கூட இந்த உலகத்தை அவரால் இன்னும் அழகாக்க முடியும்.

எனவே, உள்நோக்கிப் பாருங்கள். உங்கள் உடலையும், மனதையும் மேல்நிலைக்குக் கொண்டு செல்லுங்கள். இந்த உடலையும், மனதையும் முற்றிலும் புதிய பரிணாமத்திற்குக் கொண்டு போய், அவற்றை எப்படியெல்லாம் பயன்படுத்த முடியும் என்று பாருங்கள்.