ஈஷா ருசி

பூசணி துவையல்

தேவையான பொருட்கள்:

பூசணிக்காய் - 1 துண்டு
கடலைபருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
துவரம்பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
சிவப்பு மிளகாய் - 4
புளி - நெல்லிக்காய் அளவு
தேங்காய் - அரை மூடி
எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
உப்பு - சுவைக்கேற்ப
மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை

தாளிக்க

கடுகு, உளுந்தம்பருப்பு - தலா அரை டீஸ்பூன்
கறிவேப்பிலை - ஒரு இணுக்கு

செய்முறை:

பூசணிக்காயை தோல் சீவி காரட் துருவியில் துருவிக் கொள்ளுங்கள். தேங்காயை பூப்போல துருவி வைக்கவும். பின் துருவிய பூசணி துருவலில் உப்பு சேர்த்து பிசறி ஒரு தட்டில் அமுக்கி தட்டை சாய்த்தார் போல் வைத்தால் நீரெல்லாம் வடிந்துவிடும். இப்படி செய்து சமைப்பதால் சளி பிடிக்காது. (பூசணியில் இருந்து வரும் நீரில் மிளகுதூள் சேர்த்து பழச்சாறாகக் குடிக்கலாம்)

வாணலியை சூடாக்கி, எண்ணெய் விட்டு, கடுகு, உளுந்தம்பருப்பு, கறிவேப்பிலை தாளித்து பின் அதில் கடலைபருப்பு, துவரம்பருப்பு இரண்டையும் மணம் வர வறுத்து, பின் பூசணி துருவல், சிவப்பு மிளகாய், புளி அனைத்தையும் சேர்த்து வதக்கவும். ஆறியதும் துருவிய தேங்காய், உப்பு சேர்த்து அனைத்தையும் ஒன்றாக நைசாக அரைக்கவும். பூசணி துவையல் தயார். மணமும் ருசியும் சத்தும் உள்ளது. நல்லெண்ணெய் ஊற்றி சாதத்தில் கலந்து சாப்பிடலாம். சாம்பார் சாதம், ரசம் சாதத்திற்கும் அருமையான சைட் டிஷ்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.