சிவனை புரிந்துகொள்ள முடியவில்லையே?!
சிவனை எப்படி புரிந்துகொள்வது? - இது நேற்றைய தரிசனத்தில் சத்குருவிடம் கேட்கப்பட்ட ஒரு கேள்வி. சத்குரு என்ன பதில் கூறினார் என்பதையும் இன்னும் பல சுவையான தரிசன நிகழ்வுகளையும் அறிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள்!
சிவனை எப்படி புரிந்துகொள்வது? - இது நேற்றைய தரிசனத்தில் சத்குருவிடம் கேட்கப்பட்ட ஒரு கேள்வி. சத்குரு என்ன பதில் கூறினார் என்பதையும் இன்னும் பல சுவையான தரிசன நிகழ்வுகளையும் அறிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள்!
மாலை 6.10 மணிக்கு துவங்கிய தரிசன நிகழ்ச்சியில் ஆதிசங்கரர் இயற்றிய "நிர்வாண ஷடகம்" பதிகத்திலிருந்து மந்திர உச்சாடனையை ஈஷா பிரம்மச்சாரிகள் பாடினர். அதனைத் தொடர்ந்து ஈஷா சம்ஸ்கிருதி மாணவர்களின் களரி விளையாட்டு காண்போரை மெய்சிலிர்க்க வைத்தது. உடலை வில்லாக்கி களரி செய்தது மட்டுமல்லாமல், கம்பு சண்டையும் கைச்சண்டையும் பத்தடி உயர மண்பானையை காலால் தாவி உடைத்தும் காட்டிய அவர்கள், களரி விளையாட்டின் உயர்வை தங்கள் பயிற்சிகளால் புரிய வைத்தனர்.
'பாரதம்' ஒரு உன்னதக் கலாச்சாரம்!
சத்சங்கத்தின்போது சத்குரு பேசுகையில்,
"குஜராத்தில் சபர்மதி துறைமுகம் 9500 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்டது. தமிழ்நாட்டில் 'பூம்புகார்' துறைமுகம் 11,000 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்டது. இந்த துறைமுகங்களெல்லாம் தட்பவெப்ப மாறுதல்களுக்குத் தகுந்தவாறு மிகவும் மதிநுட்பத்துடன் கட்டப்பட்டுள்ளன. முதன்முதலில் வெளிநாடுகளுக்கு சென்று வியாபாரம் செய்தவர்கள் இந்தியர்கள். இதையெல்லாம் ஏன் சொல்கிறேன் என்றால், ஆன்மீகம் என்றால் தேங்கிப்போவது, ஓரிடத்தில் உட்கார்ந்து கொள்வது என்று நினைத்துக்கொள்கிறார்கள். ஆன்மீகம் என்பது அனைத்தையும் வெல்லக்கூடியது. இந்திய மக்களின் அடிப்படையாக இருந்த ஆன்மீகமே அவர்கள் சிறப்பான செயல்களைச் செய்வதற்கு காரணமாய் இருந்தது.
Subscribe
இமயமலையிலிருந்து இந்துசாகரம் வரையுள்ள நிலப்பகுதியை 'இந்துஸ்தான்' என அழைத்தனர். 'இந்து' என்பது மதத்தைக் குறிப்பதல்ல. அது நில அமைப்பைக் குறிப்பது. பாரதம் என்பது நாடாக பார்க்கப்படவில்லை, ஒரு கலாச்சாரமாகப் பார்க்கப்படுகிறது"
இப்படி தன் உரையைத் துவங்கிய சத்குரு ஈஷா சம்ஸ்கிருதி மாணவர்களைப் பற்றிக் குறிப்பிடுகையில்,
"நீங்கள் குழந்தை பிறந்தவுடன் டாக்டராகவோ இஞ்சினியராகவோ உருவாக்கிவிட வேண்டும் என நினைக்கிறீர்கள். அவர்களின் பிழைப்பைப் பற்றிய நோக்கத்திலேயே நீங்கள் செயல்படுகிறீர்கள். ஆனால், ஈஷா சம்ஸ்கிருதி குழந்தைகள் வாழ்க்கைக்காக ஏங்குவதற்காக உருவாக்கப்படவில்லை. இவர்கள் வாழ்க்கையை உருவாக்குவார்கள். நம் உடலில் உள்ள ஒவ்வொரு செல்லும் பயன்படுத்தப்பட வேண்டும். அந்த நோக்கத்தில்தான் இவர்களுக்கு களரி போன்ற கலைகள் கற்பிக்கப்படுகின்றன." என்றார்.
கேள்வி நேரம்...
சிவனை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லையே?!
சிவனை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. நீங்கள் என் குழப்பத்தை நீங்கி புரியவைக்க முடியுமா என கேட்ட ஒரு பெண் மணிக்கு பதில் கூறுகையில்,
"ஏதாவது ஒரு எல்லைக்குள் உள்ள ஒன்றை உங்களால் புரிந்துகொள்ள முடியும். எதுவுமே இல்லாத ஒன்றை எப்படி உங்களால் புரிந்துகொள்ள முடியும். புரிந்துகொள்வது என்பது எதையாவது ஒன்றைப்பற்றி முடிவுக்கு வருவது. நீங்கள் முடிவுக்கு வந்துவிட்டால் பின் தேடுதல் இருக்காது."
என்று கூறினார்.
நம் கலாச்சாரத்திற்காக என்ன செய்ய வேண்டும்?
இவ்வளவு உயர்ந்த நம் கலாச்சாரத்திற்காக நாம என்ன செய்ய வேண்டும்? என்று ஒருவர் கேட்க,
"நமது கலாச்சாரத்தின் தோற்றம் மற்றும் வரவாறு குறித்து புத்தகங்களில் முழுமையாக எழுதப்பட வேண்டும். அந்தக் காலத்தில் தமிழ் நாட்டு அரசன் ஒருவன் இங்கிருந்து சென்று, கம்போடியாவில் அனைவரும் வியக்கும் வகையில் ஒரு கோயிலைக் கட்டியிருக்கிறான். இந்த வரலாற்றுச் செய்தி இதுவரை எந்தப் பாடப் புத்தகத்திலும் குறிப்பிடப்படவில்லை. லெபனான் நாட்டில் நம் நாட்டு யானைகளும் சிற்பிகளும் சென்று அனைவரும் பிரம்மிக்கும் வகையில் கோயிலைக் கட்டியுள்ளனர். இவையெல்லாம் நம் யாருக்கும் இங்கே தெரியவில்லை."
என்று கூறிய சத்குரு, நம் கலாச்சாரத்தின் வரலாறு எழுத்துக்களால் பதியப்படவேண்டியதன் அவசியத்தை பகிர்ந்தார்.
இறுதியில் ஒரு இந்தி மெல்லிசையை இசைக் குழுவினர் அரங்கேற்ற அனைவருக்கும் அருள் வழங்கி விடைபெற்றார் சத்குரு.