சமாதிநிலை நமது இலக்கல்ல, ஏன்?
சமாதிநிலை என்பது முக்திக்கான வழியா அல்லது திசைமாறிச் செல்லவைப்பதா? சமாதிநிலை வழங்கும் சாத்தியங்களையும் அதிலுள்ள அபாயத்தையும் சத்குரு விளக்குகிறார்.
சமாதிநிலை என்பது முக்திக்கான வழியா அல்லது திசைமாறிச் செல்லவைப்பதா? சமாதிநிலை வழங்கும் சாத்தியங்களையும் அதிலுள்ள அபாயத்தையும் சத்குரு விளக்குகிறார்.
Subscribe
சத்குரு:
இது உங்களுக்குத் தெரியுமா? ஞானோதயத்திற்கு முன்பு, கௌதம புத்தர் எட்டுவிதமான சமாதி நிலைகளையும் அனுபவித்துணர்ந்து, அவற்றை ஒதுக்கிவிட்டார். அவற்றில் எதுவும் ஞானோதயத்திற்கு நெருக்கமாக அவரை கொண்டுசெல்லாது என்பதை அவர் உணர்ந்தார். அவற்றின் மூலம் உயர்ந்த அனுபவநிலைகளுக்கு நகர்ந்து நீங்கள் அதிகமாக சிக்கிப்போவீர்கள். இப்போது நீங்கள் தியானம் செய்யும்போது, உங்கள் கால்வலி உங்களுக்கு நிதர்சனத்தை நினைவுபடுத்தும். ஆனால் அந்த சமாதிநிலைகளில் வலியைக்கூட உணரமாட்டீர்கள், ஒருவிதத்தில் அது அதிக ஆபத்தானது.
நீங்கள் உருவாக்கிய உலகில் சிக்கிக்கொள்வீர்கள்
பல யோகிகள் அவர்களுக்கென ஒரு உலகம் உருவாக்கி அதில் சிக்கிக்கொள்கின்றனர். பல யோகிகள் தங்களைச் சுற்றி ஒரு உலகத்தையே உருவாக்கியுள்ளார்கள். ஒரு யோகி குகைக்குள் சென்று அவருக்கென ஒரு பிரபஞ்சத்தை உருவாக்கி அதில் வாழ்கிறார். இது வேடிக்கை விஷயமல்ல. அவர் விரும்புவது அனைத்தையும் அதில் உருவாக்குகிறார், அவர் விரும்பும் கோள்கள், அவர் விரும்பும் பூமி, அவர் விரும்பும் எல்லாவற்றையும் உருவாக்கி அதில் ஆனந்தமாக வாழ்கிறார். ஒரு குகைக்குள் ஒரு பிரபஞ்சமே உள்ளடங்கியிருக்கும். ஒரு அணுவுக்குள் ஒரு பிரபஞ்சத்தையே உள்ளடக்க முடியும், ஏனென்றால் "இங்கு, அங்கு", "இவ்வளவு அவ்வளவு" போன்றவை அனைத்தும் மனதின் உருவாக்கங்கள்.
இப்படி பல யோகிகள் இருக்கிறார்கள், ஆனால் ஞானோதயத்தைப் பொருத்தவரை அவர்களும் உங்களைப்போலத்தான் இருக்கிறார்கள். அவர்கள் வேறு உலகில் வாழ்கின்றனர், அவ்வளவுதான். அவர்கள் உங்களைவிட அதிகம் சிக்கியிருக்க வாய்ப்பிருக்கிறது, ஏனென்றால் அவர்களே அந்த உலகைப் படைத்தவராகவும் இருக்கின்றனர். படைக்கும் கலையை கற்றவர்களாக இருந்தாலும், அது முக்திக்கு வழிவகுப்பதில்லை. அது வேறு விதமாய் செயல்செய்யும் முறையாக மட்டுமே உள்ளது.
ஒரு ஓவியர் சுவரில் சித்திரம் தீட்டுகிறார். ஒரு யோகி அதை அப்படியே உருவாக்குகிறார். ஒரு ஓவியரின் படைப்பு இருபரிமாணம் கொண்டது, ஒரு யோகியின் படைப்போ முப்பரிமாணம் கொண்டது. இது இன்னும் ஏமாற்றமானது. ஒரு ஓவியர் தான் உருவாக்கும் உலகின் மீதுள்ள ஆழமான ஈடுபாட்டால், அது நிஜம் என்று நம்பத் துவங்கலாம், அவருக்கு அது நிஜமாகவே இருக்கிறது. ஒரு கவிஞர் தான் எழுதுவதை உண்மையென நம்புகிறார். அதேபோல, தான் வரையும் ஓவியத்தில் ஆழமாய் ஈடுபட்டிருக்கும் ஒரு ஓவியர், தான் வரைவது உண்மையென நம்புகிறார். இருபரிமாணம் கொண்டவையே இப்படி இருக்கும்போது, உங்களைச் சுற்றி முப்பரிமாணம் கொண்டவற்றை உருவாக்கினால், நிச்சயம் அதில் அதிகம் சிக்கிப்போவீர்கள்.
இலக்கை நிர்ணயிப்பது
பல்வேறு நிலைகளுக்குச் செல்வது முக்கியமல்ல. அவை உங்களை முக்திக்கு இட்டுச்செல்லாது. நிறையபேரை சமாதி நிலைகளுக்குக் கொண்டுசெல்ல போதுமான சக்தி எங்களிடம் உள்ளது. சமாதிநிலையில் நீங்கள் மூன்று முதல் ஆறு மாதங்களுக்கு இருக்கவேண்டும் என்றால் அது சாத்தியம்தான், ஆனால் எதற்காக அப்படிச் செய்யவேண்டும்? அது கரைந்துபோவதற்கு வழிசெய்வதில்லை, இன்னொரு விதமான கர்மவினையாகவே மாறுகிறது.
இலக்கை முடிவுசெய்துவிட்டால், உங்கள் வாழ்வில் ஞானோதயம்தான் மிக முக்கியமானது என்று நீங்கள் நிர்ணயித்துவிட்டால், உங்களை அந்த இலக்கிற்கு ஒருபடியாவது நெருக்கமாக எடுத்துச்செல்லாத எதுவும் அர்த்தமற்றது. எவரெஸ்ட் மலைச்சிகரத்திற்கு ஏற விரும்பும் ஒருவர், தேவையற்ற ஒருபடி கூட எடுக்கமாட்டார். மலை உச்சியை அடைவதற்கே சக்தி முழுவதையும் செலவுசெய்வார், ஒருதுளியும் வீண்செய்யமாட்டார். உங்கள் தற்போதைய உள்நிலையைக் கடந்துசெல்ல நீங்கள் முற்படும்போது, உங்களிடம் இருப்பதன் ஒவ்வொரு துளியும் தேவைப்படும்.