புழு-பூச்சிகள் பூமிக்கு ஏன் தேவை?
புழு-பூச்சிகளுக்கு மனித மனதில் மட்டுமல்ல, தோட்டங்களிலும் வயல்வெளிகளிலும் கூட இடம் கொடுக்க முன்வராத நிலை உருவாகியுள்ள இன்றைய சூழலில், புழு-பூச்சிகளின் முக்கியதும் குறித்தும் அவற்றின் சிறப்புகள் குறித்தும் ஒரு பார்வை!
புழு-பூச்சிகளுக்கு மனித மனதில் மட்டுமல்ல, தோட்டங்களிலும் வயல்வெளிகளிலும் கூட இடம் கொடுக்க முன்வராத நிலை உருவாகியுள்ள இன்றைய சூழலில், புழு-பூச்சிகளின் முக்கியதும் குறித்தும் அவற்றின் சிறப்புகள் குறித்தும் ஒரு பார்வை!
மண்புழு முதல் பல்வேறு வகையான வண்டினங்கள் வரை நாம் உயிர் வாழ்வதற்கு காரணமாக இருக்கின்றன என்றால் பலருக்கும் ஆச்சரியமாகத்தான் இருக்கும். மனிதர்களே இந்த பூமிக்கு முக்கியமானவர்கள் என்றும், அவர்களாலேயே இந்த பூமி நிலைத்து இருக்கிறது என்றும் பலர் கருதிக்கொள்கிறார்கள். ஆனால் உண்மையில், புழு-பூச்சிகள் இந்த உலகில் இல்லையென்றால் அடுத்த நான்கு ஆண்டுகளில் இந்த உலகத்தில் மனிதர்கள் வாழமுடியாது என்பதே உண்மை! ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் புழு-பூச்சிகளின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் கூறிய உண்மை இது!
இன்று நாம் செயற்கை உரம், பூச்சிக்கொல்லி, மரபணு மாற்றப்பட்ட பயிர்கள் என நவீன விவசாயம் என்ற பெயரில் பூச்சி இனங்களை அழித்து வருகிறோம். செயற்கை உரத்தில் உள்ள வேதிப்பொருட்கள், தேனீக்கள் மற்றும் பட்டாம் பூச்சிகளின் இனப்பெருக்கத்தை பல்வேறு வகையில் பாதிக்கின்றன. மரபணு மாற்றப்பட்ட விதையால் மகரந்தமில்லாத பூக்கள் பூப்பதால் தேனீக்களும் பட்டாம்பூச்சிகளும் பல்கிப்பெருகுவது தடுக்கப்படுகிறது.
மனிதன் தன் சுயலாபத்திற்காக செய்த பல மாற்றங்கள் பூச்சி இனங்களை அழிக்கின்றன. விவசாய உற்பத்தி குறைந்துவரும் பகுதிகளில் வளர்ப்புத் தேனீக்களைப் பிடித்து வந்து தங்கள் வயல்களில் பறக்கவிட்டு மகரந்தச் சேர்க்கை உண்டாக்க முயற்சிக்கிறார்கள் பலர்.
Subscribe
தேனீக்கள் தேன் கூடுகளில் சேகரிக்கும் தேனில் பல்வேறு வகையான வைட்டமின்களும் மினரல்களும் இரும்புச் சத்தும் மிகுந்துள்ளது அனைவரும் அறிந்ததே! தென்னை, வாழை, பூசணி, ஆப்பிள் போன்ற பல பழ வகைகள் மற்றும் காபி, ஏலக்காய், பருத்தி போன்ற செடிகள் மற்றும் உணவு தானியங்கள் எனப் பலகோடி மகரந்தச் சேர்க்கைகளுக்குக் காரணமாக இருப்பது தேனீக்கள்தான்!
தேன் சேகரிக்கும்போது தேனீக்களின் காலில் ஒட்டிக்கொள்ளும் பூக்களின் மகரந்தம், மற்றொரு பூவில் சென்று அமரும்போது மகரந்தச் சேர்க்கையை உண்டாக்குகிறது. தேனீக்களை நாம் பெருகச் செய்தால் காடு வளர்ப்பு குறித்து கவலைகொள்ளத் தேவையிருக்காது. தேனீக்கள் இருக்கும் இடம் இயற்கையாகவே அடர்ந்த காடுகளாக உருவாகிவிடும்!
பட்டாம் பூச்சியை எடுத்துக்கொண்டாலோ அவை மகரந்தச் சேர்க்கைக்கு உதவுவதோடு மட்டுமல்லாமல், நமக்கு பட்டு நூல்களை தரக்கூடிய ஒரு அற்புத உயிரினமாக உள்ளது. இந்தியாவில் மட்டுமே கிட்டத்தட்ட 1163 வகையான வண்ணத்துப் பூச்சிகள் கண்டறியப்பட்டுள்ளது. இதனில் நமது மேற்கு மலைத்தொடரில் மட்டுமே கிட்டத்தட்ட 334 வகையானவை இருப்பதாகக் கூறப்படுகிறது.
பூச்சி இனங்களைக் காப்பதற்கு...
பூச்சி இனங்களைக் காப்பதற்கு நாம் செய்ய வேண்டிய முதல் காரியம், ரசாயனங்கள் பயன்படுத்தும் விவசாய முறையைக் கைவிட்டு, இயற்கையின் பக்கம் திரும்புவதே ஆகும். இயற்கை விவசாயத்தை முன்னெடுத்துச் செல்வதே புழு-பூச்சிகளுக்கு மட்டுமல்லாமல் மனித சமுதாயத்தின் ஆரோக்கியத்திற்கும் உகந்ததாகும்.
நீங்கள் விவசாயிகளாக இல்லாவிட்டாலும் உங்கள் வீட்டைச் சுற்றி பூ மரங்களையும் பூச்செடிகளையும் நட்டு வைக்கலாம். ஒவ்வொரு வகையான பூக்களும் வெவ்வேறு வகையான பட்டாம்பூச்சிகளையும் தேனீக்களையும் வண்டுகளையும் ஈர்க்கவல்லது.
உங்கள் வீட்டைச் சுற்றி பட்டாம்பூச்சிகளும் தேனீக்களும் ரீங்காரமிடும் வண்டுகளும் வந்துசேரும்போது, அது நீங்கள் இயற்கையோடு ஒன்றிவாழ்வதற்கு அறிகுறியாகிறது. உங்கள் குழந்தைகள் பட்டாம்பூச்சிகளின் வண்ணத்தில் லயிப்பதற்கும் வண்டினங்களின் சத்தத்தை ரசிப்பதற்குமான வாய்ப்பை நீங்கள் ஏற்படுத்தி தரும்போது, அவர்கள் இயல்பாகவே இயற்கையின்மீது ஆர்வம் கொண்டவர்களாக வளர்வதற்கு ஒரு வாய்ப்பாக அமையும்.
ஈஷா பசுமைக் கரங்கள் திட்டம்!
இயற்கையின் பாதைக்கு இந்திய விவசாயிகளைத் திருப்பும் முயற்சியில் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக்கொண்டுள்ள இயற்கை வேளாண் விஞ்ஞானி திரு.சுபாஷ் பாலேக்கர் அவர்களின் 8 நாட்கள் பயிற்சி வகுப்பு, ஈஷா பசுமைக் கரங்கள் திட்டத்தின் தன்னார்வத் தொண்டர்களின் ஏற்பாட்டில் திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் வெகு சிறப்பாக நிகழ்ந்தது. பயிற்சியில் கலந்துகொண்ட அனைவருக்கும் தொடர்ந்து ஆலோசனைகளும் வழிகாட்டுதலும் வழங்கப்பட்டு வருகிறது.
ஈஷா பசுமைக் கரங்கள் திட்டம், தமிழகத்தின் பசுமைப் பரப்பை அதிகரிக்கும் நோக்கில் தமிழகத்தில் மொத்தம் 33 நாற்றுப் பண்ணைகளை உருவாக்கியுள்ளது. எளிதில் வளரக்கூடிய செண்பகம், மகிழம், மந்தாரை, ஜக்ரண்டா, அவலாண்டா, லகஸ்ட்ரோமியா போன்ற அழகிய வண்ணப்பூக்கள் பூக்கும் மரக்கன்றுகள் மற்றும் பலா, எலுமிச்சை, நாவல் போன்ற பழ மரக்கன்றுகளும் ஈஷா நாற்றுப்பண்ணைகளில் இதற்காகப் பிரத்யேகமாக தயார் செய்து தரப்படுகிறது.
மேலும் பல்வேறு மர வகைகள் ஈஷா நாற்றுப்பண்ணைகளில் மிகக் குறைந்த விலைகளில் (ரூ.7) விநியோகம் செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது. திருமணங்கள் போன்ற சுபநிகழ்ச்சிகளுக்காக நீங்கள் முன்கூட்டியே ஆர்டர் செய்து மரக்கன்றுகளைப் பெற முடியும்.
உங்கள் ஊருக்கு அருகிலுள்ள ஈஷா நாற்றுப் பண்ணைகளில் மரக்கன்றுகளைப் பெறுவதற்கும், ஈஷா பசுமைக் கரங்களின் பிற செயல்பாடுகள் குறித்து மேலும் தகவல்களைப் பெறவும் கீழ்க்கண்ட எண்ணைத் தொடர்பு கொள்ளவும்.
தொ. பே. 94425 90062