பிரதமரின் நடவடிக்கை பாராட்டத்தக்கது
பொருளாதாரம் சார்ந்த அனைத்து செயல்களையும் நெறிப்படுத்த தேவையான சரியான நடவடிக்கை இது. இதனால், பாரம்பரிய தொழில்கள் சில காலம் குழப்பத்திற்கு உள்ளாகலாம்.
சத்குரு:
பெரிய தொகைகள் உள்ள ரூபாய் நோட்டுக்களை செயலிழக்கச் செய்த பிரதமரின் சமீபத்திய நடவடிக்கை, குறிப்பிடத்தக்கது, புரட்சிகரமானது, பாராட்டத்தக்கது. தூய்மை இந்தியா பணியின் தெளிவான வெளிப்பாடு இது. சட்டத்தை பின்பற்றும் குடிமக்களுக்கு பரவசத்தையும், தன் தொழிலை சற்றே வஞ்சகமாக நடத்துபவர்களுக்கு பதற்றத்தையும் இது அளித்திருக்கிறது. முன்னெச்சரிக்கை இல்லாமல் இந்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதற்கான அறிகுறிகள் முன்னமே தென்பட்டன. உங்களுக்குத்தான் தெரியுமே, மக்கள் அவற்றை எல்லாம் பொருட்படுத்துவதில்லை.
Subscribe
பொருளாதாரம் சார்ந்த அனைத்து செயல்களையும் நெறிப்படுத்த தேவையான சரியான நடவடிக்கை இது. இதனால், பாரம்பரிய தொழில்கள் சில காலம் குழப்பத்திற்கு உள்ளாகலாம். பொது மக்களில் பலர் தர்மசங்கடத்திற்கு ஆளாகலாம்.
நம் தேசத்தில், கிட்டதட்ட 50 சதவிகித பரிவர்த்தனைகள் வருமான வரியின் ரேடார் பார்வையின் கீழ் வருவதில்லை. மக்கள் தப்பு-தவறுகளில் ஈடுபடுவதால் அல்ல, இதற்கு பல காரணங்கள் உண்டு. தாங்கள் கட்டும் வரிப்பணம், கட்டமைப்புகளாகவோ, சேவைகளாகவோ, வேறு வழிகளிலோ அவர்களுக்கு திரும்பக் கிடைப்பதில்லை என்கிற எண்ணம் மக்களிடம் இருக்கிறது. இதனால், "நான் வரி கட்டத் தேவையில்லை," என்கிற மனப்பான்மை ஏற்பட்டுவிட்டது.
ஆனால், நமது தேசத்தில் இதனைச் சீராக்கும் நேரம் வந்துவிட்டது. இதனால் சிரமங்கள் ஏற்படும், மக்கள் காயப்படுவார்கள், நாம் இவற்றை எதிர்கொள்ள வேண்டித்தான் இருக்கிறது. தேசத்திற்கு கொஞ்சம் சிரமமான அறுவைசிகிச்சை தேவையாய் இருக்கிறது, ஏனெனில், இந்தியாவின் பொருளாதாரம் பூத்துக் குலுங்கப் போகிறது. முழு உலகமும் இந்தியாவை ஒரு சாத்தியமாக பார்த்துக் கொண்டிருக்கிறது.
ஊழல், திறமையின்மை, எடுத்த காரியத்தை முடிக்காமல் அவற்றை சொதப்புவது என நம் செயல்களின் மீதுள்ள பயத்தால் உலகம் இந்தியாவில் முதலீடு செய்வதையும், நம்முடனான நிதி சார்ந்த செயல்பாடுகளையும் தவிர்த்து, ஒதுங்கியே செல்கிறது. தற்சமயம், இந்த கண்ணோட்டத்தில் வேகமாய் மாற்றம் ஏற்பட்டு வருகிறது. நிதி சார்ந்த சந்தைகள் இந்தியாவை நோக்கி திரும்பியிருக்கின்றன. அனைத்துமே மிக மிக விரைவாய் மாறுவதை நீங்கள் காண்பீர்கள். இந்த மலர்ச்சி நிலையாய் இருக்க வேண்டுமென்றால், அனைத்துமே கண்பார்வை பரப்பிற்குள் இருப்பது அவசியம். பூமிக்குள் எதுவும் பதுக்கப்படக் கூடாது. உலகம் நம்முடன் இணைந்து செயல்பட, நம்மை எல்லா நிலைகளிலும் தூய்மை செய்துகொள்வது முக்கியம்.
நம்மை புணர்நிர்மாணம் செய்துகொள்ள வேண்டிய நேரமிது. உலகுடன் முன்னெப்போதும் இல்லாத வகையில், நமக்கு தொடர்பு ஏற்பட்டிருக்கிறது. தேவையான மாற்றங்களை ஏற்படுத்தும் உறுதிகொண்ட தலைமை தற்போது உள்ளது. வருங்காலத்தில் வரவிருக்கும் தலைவர்களும் இப்படிப்பட்ட குணத்துடன்தான் இருக்கப் போகிறார்கள். ஏனெனில், இப்போதிருக்கும் தலைமுறை, வாய் வார்த்தைகளில் ஜாலம் செய்பவர்களுக்கு ஓட்டளிக்க போவதில்லை. செயல்கள் நடைபெற வேண்டும் என்று மக்கள் நினைக்கின்றனர்.
வரும் ஆண்டுகளில், சிறந்த இந்தியாவை, புது இந்தியாவை நாம் காண்போம் என்பது உறுதி. தனிப்பட்ட மனிதர்கள் ஒவ்வொருவரும், அவர் என்ன செய்து கொண்டிருந்தாலும், அவர் கைகளில் என்ன பொறுப்பு இருந்தாலும், அவர்கள் அனைவரும் எழுந்து நின்று இதனை நிகழச் செய்ய வேண்டும். வெறும் அரசாங்கங்களால் இவற்றை செய்ய இயலாது. யாரோ தலைவரால் நடத்த இயலாது. ஒவ்வொரு குடிமகனும் இதனை நிகழச் செய்ய வேண்டும்.