Question: சத்குரு, நாம் ஏன் கோயிலில் பிரதக்ஷணம் செய்கிறோம்?ஆனால் பிரதோஷ நாட்களில் மட்டும் ஏன் கோயிலில் திசைமாற்றி அப்பிரதக்ஷணமாகச் சுற்றுகிறோம்?

சத்குரு:

பிரதக்ஷணம் என்றால் வலம் வருதல். அதாவது கடிகார முள்ளின் திசையில் சுற்றுவது. உலகின் வடக்கு அரைக்கோளத்தில், அதாவது பூமத்திய ரேகையின் வடக்கு பகுதியில் இயற்கையிலேயே குறிப்பிட்ட சூழல் உள்ளது. வடக்கு அரைக்கோளத்தில் நீங்கள் ஒரு குழாயைத் திறந்தால், வாளியில் நீர் விழும்போது, அது வலதுபுறமாக சுழித்து விழும்.இதை நீங்கள் கவனித்து இருக்கிறீர்களா?பலரும் இதை கவனித்து இருக்கமாட்டார்கள்.நீர் மட்டுமல்ல. இப்பகுதியில் இயற்கையிலேயே எல்லாமே பிரதக்ஷணமாக சுற்றுகிறது. ஆனால் தெற்கு அரைக்கோளப் பகுதியில், நீங்கள் குழாயைத் திறந்தால் அப்போது நீர் அப்பிரதக்ஷணமாக விழும்.

எனவே, வடக்கு அரைக்கோளத்தில் ஒரு சக்தியான இடம் இருக்கும்போது, அதன் முழுப் பயனையும் நீங்கள் பெற வேண்டும் என்றால், நீங்கள் அந்த இடத்தை பிரதக்ஷணமாகச் சுற்றவேண்டும். இன்னும் அதிக பலன் வேண்டும் என்றால் உங்கள் தலை ஈரமாக இருக்க வேண்டும்.இன்னும் அதிக பலன் வேண்டும் என்றால் உங்கள் உடையும் ஈரமாக இருக்க வேண்டும்.இன்னும் இன்னும் அதிக பலன் வேண்டும் என்றால் நீங்கள் உடை உடுத்தக் கூடாது. ஆனால் உடை இல்லாமல் வலம் வருவதை விட, ஈர உடையுடன் வலம் வருவது நல்லது. ஏனென்றால் ஈர உடல் விரைவில் காய்ந்துவிடும்; அதுவே உடை ஈரமாக இருந்தால் அதிக நேரம் அந்த ஈரம் தங்கும். ஈர ஆடையுடன் ஒரு சக்தியான இடத்தை சுற்றிவந்தால் நீங்கள் அங்குள்ள சக்தியை அதிகமாக உள்வாங்கிக் கொள்வீர்கள். உங்கள் உள்வாங்கும் தன்மையை அதிகப்படுத்தும் வழியே, இந்த ஈர உடை பிரதக்ஷணம்.

வடக்கு அரைக்கோளத்தில் ஒரு சக்தியான இடம் இருக்கும்போது, அதன் முழுப் பயனையும் நீங்கள் பெற வேண்டும் என்றால், நீங்கள் அந்த இடத்தை பிரதக்ஷணமாகச் சுற்றவேண்டும்.
எனவே நீங்கள் பிரதக்ஷணம் செய்யும்போது, இயற்கையின் சுழற்சியுடன் இணைத்து சுற்றுகிறீர்கள். மேலும் பிரதிஷ்டை செய்யப்பட்ட எந்த ஒரு இடமும் ஒரு நீர்ச்சுழலைப் போல செயல்படுகிறது. இந்தச் சுழல், அதிர்வுகளை வெளிப்படுத்துவதாகவும் அதே சமயம் ஒருவரை உள்ளே ஈர்ப்பதாகவும் இருக்கிறது.எனவே இறைத்தன்மையும் உங்கள் தன்மையும், ஒன்றோடு ஒன்று கலந்துவிடுகிறது.

நம் கலாச்சாரத்தில் நாம் கடவுளைச் சந்திக்க விரும்புவதில்லை; அந்த கடவுளாகவே மாறிவிட விரும்புகிறோம். இது பேராசைதான், இல்லையா? நாம் கடவுளை உணர்ந்து, அவனாகவே மாறிவிட விரும்புகிறோம். கடவுளை காண்பதில் நாட்டம் கொள்வதில்லை. அதனால் தான் தியானத்தில் கண்களை மூடிக் கொள்கிறோம். கடவுளாகவே ஆகி விட விழைகிறோம்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

எனவே பிரதிஷ்டை செய்யப்பட்ட இடத்தில் இருப்பதே, இறைமைக்கும் மனிதருக்குமான இந்தப் பரிமாற்றம் நிகழவேண்டும் என்பதற்காகத்தான். அப்போது உங்கள் உடல் இறைமையின் உறைவிடமாகிவிடும். உங்கள் உடலை நீங்கள் ஒரு மிருகம் போலவும் வைத்துக் கொள்ளமுடியும். புனிதமாக, இறைத் தன்மை கொண்டதாகவும் ஆக்கிக் கொள்ளமுடியும்.

எனவே பிரதிஷ்டை செய்யப்பட்ட இடத்தை பிரதக்ஷணமாக சுற்றி வருவது, மேற்கூறிய வாய்ப்பை ஏற்படுத்தத்தான். குறிப்பாக பூமத்திய ரேகை முதல் முப்பத்தியிரண்டு டிகிரி அட்சரேகை வரையில் இந்தத்தன்மை மிகவும் தீவிரமாக உள்ளது. எனவேதான் முப்பத்தியிரண்டு டிகிரி அட்சரேகை வரையிலான பரப்பில் அதிக கோயில்கள் அமைந்துள்ளன. இன்னும் கவனித்துப் பார்த்தால், வடக்கு நோக்கிச் செல்லச் செல்ல அங்குள்ள கோயில்கள், அதிகமாக பக்தியை மையமாகக் கொண்டிருக்கும். ஆனால் தென்திசையில், பக்தி என்பது இருந்தாலும், தென்னாட்டுக் கோயில்கள் விஞ்ஞானப்பூர்வமாகவும் பிரம்மாண்டமாகவும் வடிவமைக்கப்பட்டிருக்கும். அவற்றைக் கட்டிமுடிக்க தலைமுறை தலைமுறையாகக் கூட வேலை செய்திருப்பார்கள். இப்படித்தான் கோயில் என்னும் கலாச்சாரம் உருவானது. இக்கோயில்களின் பிரம்மாண்டம் என்பது வெறும் தற்பெருமைக் கதை அல்ல. இப்படி இருந்தால்தான் அது மக்களுக்கு வேலை செய்யும் என்பதை தெரிந்தே உருவாக்கினார்கள்.

பிரதோஷம் பற்றிச் சொல்லவேண்டும் என்றால், அது ஒரு மாதத்தின் பதிமூன்றாவது நாள். சிவராத்திரிக்கு முந்தைய நாள். அப்போது கோயிலில் அப்பிரதக்ஷணமாகச் சுற்றுவதாகச் சொல்கிறீர்கள். அது அப்பிரதக்ஷணம் அல்ல. அன்று நிலவு மெல்லிய பிறை வடிவத்தில் உள்ளது. எனவே அவர்களும் அந்த பிறைவடிவில் சுற்றுகிறார்கள். அன்று கோயிலில் இருக்கும் லிங்கத்தைப் பிறையின் பாதையில் நடந்து சுற்றுகிறார்கள். இதற்கு யோகத்தில் ‘சோம ரேகை’ என்று பெயர். அன்று நிலவு ஒரு குறிப்பிட்ட தன்மையில் இருக்கிறது.

பிரதோஷம் என்றால் பேரானந்தமும் எழுச்சியும் அடைவதற்கான நாள். எனவே அன்று சோம ரேகையில் நடந்தால் நீங்கள் அசைவற்ற தன்மையும் எழுச்சியும் ஆனந்தமும் கொண்டவராக ஆகிவிடுவீர்கள்.
ஒரு சக்தியான கோயிலில், சோம ரேகை இயல்பாகவே அமைந்து விடுகிறது. ‘சோம’ என்றால் நிலவு. ‘சோம’ என்றால் எழுச்சியூட்டும் வடிவம் என்றும் பொருள்.எனவே பிரதோஷம் என்றால் பேரானந்தமும் எழுச்சியும் அடைவதற்கான நாள். எனவே அன்று சோம ரேகையில் நடந்தால் நீங்கள் அசைவற்ற தன்மையும் எழுச்சியும் ஆனந்தமும் கொண்டவராக ஆகிவிடுவீர்கள். இத்தகைய விஷயம் சராசரி மக்களுக்கும் தெரிந்திருக்கிறது என்பது மகிழ்ச்சிதான். ஆனால் முழுவட்ட அப்பிரதக்ஷணம் செல்வது சரியான முறை அல்ல. பொதுவாக, மக்களிடம் சோம ரேகையை பார்க்கும் அளவுக்கு நுட்பம் இப்போதெல்லாம் இருப்பதில்லை.

பிரதோஷம் முக்கியமான ஒரு நாள். மறு இரவு சிவராத்திரி என்பதால், சிவன் போலவே அசைவற்ற தன்மையாக ஆவதற்கு முயற்சிக்கிறோம்.இயற்கையே உங்களுக்கான வாய்ப்பை வாரி வழங்குகிறது, அதுவும் இலவசமாக!பூக்களையும் இலைகளையும் பறிக்க வேண்டாம்! பூஜைப் பொருட்களை வாங்கவேண்டாம்! வெறுமனே நீங்கள் இயற்கையுடன் ஒத்திசைவுடன் இருந்தால் நீங்கள் அந்நாளில் பேரானந்தம், அசைவற்ற தன்மை மற்றும் விழிப்புணர்வு போன்றவற்றை ஒருசேர உணரமுடியும்.பிரதோஷம் என்பது வெற்றி கொள்ளும் நாள் அல்ல. அது நிலவின் பாகமாகவே ஆகும் நாள். ஒரு யோகியின் அசைவற்ற தன்மையின் சமநிலையும், அதே சமயம் பித்தனைப் போன்ற பேரானந்தமும் ஒருசேர உணரும் வாய்ப்பே இந்நாள்.

இந்த இரண்டும் சேர்ந்ததுதானே வாழ்க்கை!

ஆதியோகி பிரதட்சணம்

மிகவும் ஆற்றல்வாய்ந்த ஒரு சக்திமூலத்தை தனக்குள் உள்வாங்கிக் கொள்ள, அதனை வலம் வருவதை பிரததட்சணம் என்கிறோம். நம் கலாச்சாரத்தில் இது தொன்றுதொட்டு நிலவிவரும் ஒரு வழக்கமாக இருந்து வருகிறது. 11 டிகிரி அட்சரேகையில் அமைந்துள்ள ஈஷா யோக மையத்தில், இப்படி செய்வது இன்னும் கூடுதல் சக்திவாய்ந்ததாகும். ஆதியோகியின் அருளை அனைவரும் பெற்று, அதன்மூலம் ஆன்ம விடுதலைக்கான தனிமனிதரின் தேடுதலைத் துரிதப்படுத்த, சத்குருவால் வடிவமைக்கப்பட்ட இந்த பிரதட்சணம் உறுதுணையாய் இருக்கிறது.

இந்த ஆதியோகி பிரதட்சணத்தை செய்வதற்கு அரிசி, தூபம், பச்சை பயிறு, கருப்பு எள்ளு ஆகிய அர்ப்பணிப்புகளை ஒரு துணிப்பையில் பெற்றுக்கொள்ளவும் (ஆதியோகியின் உருவப்படம் போடப்பட்ட துணிப்பை விற்பனைக்குக் கிடைக்கும்). பிரதட்சணத்தைத் தொடங்குவதற்கு முன், ஆதியோகியின் முன், மூன்று சுற்று ‘யோக யோக யோகேஷ்வராய’ உச்சாடனம் செய்யவேண்டும். பின், யோகேஷ்வர லிங்கத்திற்கு தண்ணீர் அர்ப்பணம் செய்யவேண்டும் மஹாசிவராத்திரி நாளன்று, இதனைச் செய்ய இயலாது). அதன்பின் ஆண்கள் சூர்யகுண்டத்திற்கு செல்லவேண்டும். சூர்யகுண்டத்திலிருந்து பெறப்படும் ஒரு சொம்பு தண்ணீர் அவர்களின் தலை மீது ஊற்றப்படும்.

அங்கிருந்து த்ருமூர்த்தி பேனல் இருக்கும் இடத்திற்கு சென்று, அங்கு வைக்கப்பட்டுள்ள உருளியில்/தூப மண்டபத்தில் தூபத்தை அர்ப்பணிக்கவும். தேவி கோவிலுக்குச் சென்று அங்கு பச்சைப்பயிறை அர்ப்பணிக்கவும். பெண்கள் சந்திரக்குண்டத்திற்கு செல்லவேண்டும். சந்திரக்குண்டத்திலிருந்து பெறப்படும் ஒரு சொம்பு தண்ணீர் அவர்கள் தலை மீது ஊற்றப்படும். அங்கிருந்து தியானலிங்கத்திற்கு சென்று, கருப்பு எள்ளை அங்கு அர்ப்பணிக்கவும். அதற்குபின், ஆதியோகிக்கு திரும்பச் செல்லவும். ஆதியோகியின் முன் அரிசியை அர்ப்பணித்து பிரதட்சணத்தை நிறைவுசெய்யவும். இது ஒரு சுற்று பிரதட்சணம்.

ஒவ்வொரு சுற்றிற்கும் அரிசி, தூபம், பச்சை பயிறு, கருப்பு எள்ளு ஆகியவற்றை அர்ப்பணம் செய்யவேண்டும். ஒரு வருடத்திற்கு எத்தனை சுற்று பிரதட்சணம் செய்யவேண்டும் என்பதை ஒருவர் தேர்வுசெய்து கொள்ளமுடியும். 1, 3, 5, 7, 9, 12, 18, 21, 24, 33, 48, 64, 84, 96, 108, 208, 308, 408, 508, 608, 708, 808, 909 or 1008 போன்ற எண்ணிக்கைகளில், சுற்றுகள் அமையவேண்டும். ஒரு வருடத்திற்கு எத்தனைச் சுற்றுகள் செய்ய ஒருவர் முடிவுசெய்கிறாரோ, அத்தனை சுற்றுக்களையும் ஒரு வருடத்திற்குள் நிறைவுசெய்ய வேண்டும்.

பிரதட்சணையை நிறைவுசெய்யும் வரை, " யோக யோக யோகீஷ்வராய '' ; என்ற மந்திரத்தை உச்சரித்துக்கொண்டே செல்லவேண்டும்.

யோக யோக யோகேஷ்வராயா
பூத பூத பூதேஷ்வராயா
கால கால காலேஷ்வராயா
சிவ சிவ சர்வேஷ்வராயா
ஷம்போ ஷம்போ மஹாதேவாயா

தினமும் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை, எந்நேரத்தில் வேண்டுமென்றாலும் பிரதட்சணம் செய்யமுடியும். மஹாசிவராத்திரி நாளன்று, காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை மட்டுமே பிரதட்சணம் செய்யமுடியும்.

கவனிக்க வேண்டியவை:
 நீங்கள் எத்தனை சுற்று பிரதட்சணம் செய்யப் போகிறீர்களோ, அதற்குத் தேவையான அர்ப்பணப் பொருட்களை தயார்செய்து வைத்துக் கொள்ளவும்.
 ஆண்கள் பிரதட்சணத்தை துவங்கும் முன், தங்களது மேல் ஆடையைக் கழற்றிவிட வேண்டும்.
 பிரதட்சணம் செய்யும்போது காலணிகள் அணியக்கூடாது.
 பிரதட்சணம் செய்யும்போது, மற்றவர்களிடம் தொடர்பு கொள்வதைத் தவிர்க்கவும்.