ஈஷா ருசி

பூசணி அடை

தேவையான பொருட்கள்:

பூசணிக்காய் - 2 துண்டு
கடலைப்பருப்பு - 200 கிராம்
பச்சரிசி - 200 கிராம்
தேங்காய் - 1
மிளகு, சீரகம் - 1 டீஸ்பூன்
சிவப்பு மிளகாய் - 6
எண்ணெய் - 50 மி.லி
உப்பு - சுவைக்கேற்ப
மல்லி, கறிவேப்பிலை - சிறிதளவு

செய்முறை:

பூசணிக்காயை சுத்தம் செய்து சின்ன துண்டுகளாக்கிக் கொள்ளவும். அரிசி, கடலைப்பருப்பை ஒருமணி நேரம் ஊறவைத்து கழுவிக் கொள்ளவும். தேங்காயை துருவி வைக்கவும். வாணலியை அடுப்பில் வைத்து சூடேற்றி, அதில் பூசணி துண்டுகளை போட்டு வதக்கவும். (எண்ணெய் விடக்கூடாது. வெறும் வாணலியில் வதக்கவும்)

நன்கு நீர் சுண்டியதும் எடுத்து ஆறவிடவும். பின்பு ஊறிய கடலைப்பருப்பு, பூசணித் துண்டுகள், தேங்காய்பூ, சிவப்பு மிளகாய், மிளகு சீரகம் அனைத்தையும் ஒன்றாய் நைசாய் கெட்டியாய் அரைக்கவும். பின்பு தேவையான உப்பு, மல்லி கறிவேப்பிலை சேர்த்து கலந்துவிடவும். அடைமாவு பக்குவத்தில் இல்லையென்றால் சிறிது தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம். பின்பு தோசை கல்லில் எண்ணெய் தடவி அடைகளாக வார்க்கவும். சுற்றிலும் எண்ணெய் விட்டு மொறுமொறுவென எடுக்கவும். புதினா சட்னியுடன் மிக நன்றாக இருக்கும்.

பூசணிக்காயை நீர் சுண்ட வதக்கியதாலும், மிளகு சேர்த்திருப்பதாலும் அனைவரும் சாப்பிடலாம், சளி பிடிக்காது.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.