கர்நாடகத்தின் புரட்சியாளர் ! பகுதி 6

ராகவேந்திரரை காவல்துறை கைது செய்ததேன்? இதற்கான பதில் நகைச்சுவையானதாக அமைகிறது. யோகப் பயிற்சிகளை ஊர் ஊராக சென்று வழங்கும் ராகவேந்திராவிடம் 'பெண்களை நீங்க யோகாவில் சேர்ப்பீங்களா?' என மக்கள் கூட்டத்தில் கேள்வி வந்தபோது, அவரின் பதில் என்னவாக இருந்தது? தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள்!

‘ஸ்ரீராகவேந்திரா B.P.C. கி ஜெய்’ என்ற மக்களின் உற்சாக முழக்கங்கள் அடங்குவதற்கு முன்பாகவே, ராகவேந்திரரின் கைகளில் விலங்குகள்! வரவேற்க வந்த ஊர் மக்களுக்கும் ஒன்றும் புரியவில்லை, திகைத்து நின்றனர். மக்களால் பாராட்டப்படுவது ராகவேந்திரருக்குப் புதிதல்ல. ஆனால், கைகளில் விலங்கு....?

காவல் அதிகாரி இந்த முறை விலங்குடன் வரவில்லை. அதற்குப் பதிலாக தன் மகள் வசுந்தராவைப் பயிற்சியில் சேர்ப்பதற்காக அழைத்து வந்திருந்தார்.

எந்த ஒரு கேள்வியும் இன்றித் தன் கைகளில் விலங்கிட்ட காவல் அதிகாரியைப் பார்த்து ராகவேந்திரர் கேட்டார், “என்னை ஏன் கைது செய்கிறீர்கள்? நான் என்ன குற்றம் செய்தேன்?”

“நீங்கள் B.P.C. யில் இருந்து, அதாவது Bombay Provincial Congressல் இருந்துதானே வருகிறீர்கள்? இங்கே மக்களைக் கூட்டிவைத்து பிரிட்டிஷ் அரசுக்கு எதிராகக் கலகம் செய்யத்தானே வந்திருக்கிறீர்கள்?”

ராகவேந்திரர், காவல் அதிகாரியைப் பார்த்து அமைதியாகக் கூறினார், “ஐயா, B.P.C. என்பது நான் வாங்கியுள்ள பட்டம். அதாவது Bachelor of Physical Culture. மற்றபடி எனக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இந்த ஊரில் ஒரு யோக சாலையை ஆரம்பித்து மக்களுக்கு யோகப் பயிற்சிகளைக் கற்றுக்கொடுக்கவே வந்திருக்கிறேன்.”

காவல் அதிகாரிக்குத் தனது தவறு புரிந்தது. ராகவேந்திரரிடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டார்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

அதற்குப் பிறகு ராகவேந்திரர் மேளதாளங்களோடு பத்கல் நகருக்குள் ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவர் பேசுவதற்காக ஒரு பொதுக்கூட்டம் ஏற்பாடாகி இருந்தது. இவ்வளவு நாள் இதுபோன்ற பெரிய கூட்டங்களில் ஸ்வாமி சிவானந்தா பேசுவதும் ராகவேந்திரர் யோகப் பயிற்சிகளைச் செய்து காண்பிப்பதும்தான் நடந்து வந்தது. இதுபோன்ற பெரிய கூட்டத்தில் குரு இன்றித் தனியாகப் பேசுவது ராகவேந்திரருக்கு இதுவே முதல்முறை.

ராகவேந்திரர் அந்தக் கூட்டத்தில் பேசியபோது, “இப்போதுள்ள மக்கள் முகத்தில் உள்ள சோர்வையும் சோகத்தையும் பாருங்கள். 25 வயது முடிவதற்குள்ளாகவே மிகவும் சோர்ந்துவிடுகிறார்கள். வாழ்க்கையில் எந்த உற்சாகமும் இருப்பதில்லை. நமது முன்னோர்கள் இப்படி வாழவில்லை.

நாம் ஒவ்வொன்றுக்கும் ஆங்கிலேயர்களைக் குற்றம் சுமத்துவது முட்டாள்தனம். ஆனால், அறிவுள்ள இந்த பத்கல் நகர மக்கள் இளைஞர்களுக்கு யோகப் பயிற்சி அளிப்பதில் ஆர்வம் உள்ளவர்களாக இருக்கிறார்கள். இந்த நகரில் உள்ள அனைத்து இளைஞர்களும் இதைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்,” என்று கூறினார்.

கூட்டத்தில் இருந்து ஒரு கேள்வி எழுந்தது. “பெண்களை இந்தப் பயிற்சியில் அனுமதிப்பீர்களா?”

“ஏன் கூடாது? ஆண் பெண் யார் வேண்டுமானாலும் இந்தப் பயிற்சியைக் கற்றுக்கொள்ள முடியும்”. என்றார் ராகவேந்திரர்.

அடுத்தநாள் காலை 7 மணிக்கு ‘ஸ்ரீ மாருதி யோக சாலை’ என்ற பெயருடன் யோகப் பயிற்சிக்கூடம் ஆரம்பிக்கப்பட்டது. பயிற்சியில் சேர்வதற்காக இளைஞர்கள் வந்திருந்தனர். அவர்களுடன் அந்த காவல் அதிகாரியும் காத்திருந்தார். ஊர் மக்கள் மத்தியில் ஒரே சலசலப்பு. ‘இன்றும் ஏதாவது பிரச்சனை செய்யப் போகிறாரா’ என்று குழப்பம். ஆனால் காவல் அதிகாரி இந்த முறை விலங்குடன் வரவில்லை. அதற்குப் பதிலாக தன் மகள் வசுந்தராவைப் பயிற்சியில் சேர்ப்பதற்காக அழைத்து வந்திருந்தார்.

காட்டுச் சாலைகளில் குதிரைச் சவாரி செய்யும்போது மரத்தின் கீழ்க் கிளைகளை எம்பி எம்பிப் பிடித்து ரசிப்பார்.

இந்தப் பயிற்சி மிக நன்றாகச் செல்வதை உணர்ந்த ஊர் மக்கள், மற்றும் ஒரு 7 நாள் வகுப்பு தொடங்கக் கேட்டனர். மேலும் ஒரு வகுப்பு வேண்டுமானால் தனது குருவிடம் அனுமதி கேட்க வேண்டும் என்றார் ராகவேந்திரர்.

ஊர் மக்கள் பரோடாவில் உள்ள ஸ்வாமி சிவானந்தாவுக்கு ஒரு தந்தி அனுப்பினர். அந்த நாட்களில் இப்போது இருப்பது போன்று இவ்வளவு தொலைபேசி வசதி கிடையாது. ஸ்வாமியும் ஊர் ஊராகப் போய்க்கொண்டு இருப்பார். ஆனால், அதிர்ஷ்டவசமாக சிவானந்தரிடம் இருந்து உடனடியாகப் பதில் தந்தி வந்தது. ராகவேந்திரர் அந்த ஊரில் 21 நாட்கள் தங்கிப் பயிற்சியளிக்க அனுமதித்திருந்தார்.

இதுபோன்றே ராகவேந்திரர் கர்நாடகாவின் தொலை தூரப் பகுதிகள் உள்பட நூற்றுக்கணக்கான கிராமங்கள், நகரங்களைச் சுற்றி வந்தார். பல ஊர்களில் அவருக்கு ஆசிரமம் கட்டிக் கொடுப்பதாகவும் அங்கேயே நிரந்தரமாகத் தங்க வேண்டுமெனவும் கேட்டுக் கொள்வார்கள். ஆனால், ஒரு ஊரில் 21 நாட்களுக்கு மேல் தங்க தனக்கு அனுமதி கிடையாது என்று சொல்லி அந்த வேண்டுகோள்களை மறுப்பார்.

ராகவேந்திரர் தனது பயிற்சி வகுப்புகளில் மிகவும் கண்டிப்பாக நடந்துகொண்டார். அதேநேரத்தில் பயிற்சி பெறுபவர்களுடன் சேர்ந்து ஊருக்குள் பிற சேவைகள் செய்யப் போகும்போது, கலகலப்பாக இருப்பார். வாழ்க்கையை எப்போதும் அனுபவித்து ரசிப்பார். எப்போதும் பயப்படக் கூடாது என அறிவுறுத்துவார்.

ராகவேந்திரருக்கு குதிரை சவாரி பிடித்தமான ஒன்று. காட்டுச் சாலைகளில் குதிரைச் சவாரி செய்யும்போது மரத்தின் கீழ்க் கிளைகளை எம்பி எம்பிப் பிடித்து ரசிப்பார். அப்படி ஒருமுறை காட்டுப் பகுதி வழியாகக் குதிரை மேல் சென்றுகொண்டு இருந்தபோது எட்டிப் பிடிக்கும் உயரத்தில் ஒரு கிளை வந்தது. குதிரையின் மேல் இருந்தவாறு கிளையை எம்பிப் பிடித்தார். பிறகு தனது கால்களால் குதிரையின் வயிற்றை நெருக்கி குதிரையையும் அலாக்காகத் தூக்கினார். அந்தக் கிளையைப் பிடித்தபடி ராகவேந்திரர் தொங்கினார்.

அடுத்த வாரம்...

ஆளில்லா காட்டுப் பாதையின் குதிரை சவாரி, முரட்டுத்தனமான கோவில் காளையை அடக்கி பணமுடிப்பை எடுத்தல் என அதிரடியாகத் திருப்பங்களுடன் தொடரும் ராகவேந்திர ராவின் வாழ்க்கைப் பயணத்தில் மல்லாடிஹள்ளி கிராமம் எப்படி நுழைந்தது?! அடுத்த வாரம் பார்ப்போம்!

கர்நாடகத்தின் புரட்சியாளர்! தொடரின் பிற பதிவுகள்