பழங்குடி மாணவர்களுக்கு ஈஷா கல்வி உதவித் தொகை
'கற்றனைத் தூறும் அறிவு' என்று கல்வியின் சிறப்பை வள்ளுவர் கூறுகிறார். வறுமையும் ஏழ்மையும் அந்த கல்வியை பெறுவதற்கு தடையாக இருக்கக்கூடாது என்பதற்காக ஈஷா செய்துவரும் சில செயல்கள் குறித்து சில வரிகள்!
ஈஷா அவுட்ரீச் சார்பில் மாணவர்களுக்கு 2017 - 2018ம் ஆண்டுக்கான கல்வி உதவித்தொகை வழங்கும் விழா ஜனவரி 27ம் தேதி ( சனிக்கிழமை ) ஈஷா யோக மையத்தில் நடைபெற்றது. ஈஷா யோக மையத்தின் சுற்றுப்புற மற்றும் பழங்குடியின கிராமங்களின் மாணவர்களுக்கு 2011ம் ஆண்டு முதல் ஈஷா அவுட்ரீச் சார்பில் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.
இவ்வாண்டு சுமார் 60 மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டது. இதில் 12 பேர் பள்ளி படிப்பிற்கான உதவித்தொகையும், 41 மாணவர்கள் கல்லூரி படிப்பிற்கான உதவித்தொகையும், 7 மாணவர்கள் பாலிடெக்னிக் (தொழிற்கல்வி)க்கான உதவித்தொகையும் பெற்றனர்.
இவர்கள் மடக்காடு, தானிக்கண்டி, முள்ளாங்காடு, பட்டியார்க்கோவில்பதி, சாடிவயல்பதி, நல்லூர்வயல்பதி, வெள்ளப்பதி, சிங்கபதி, சர்க்கார்போரதி உள்ளிட்ட பழங்குடி கிராமங்களைச் சேர்ந்தவர்களும் மத்வராயபுரம், தேவராயபுரம், தென்னமநல்லூர், தொண்டாமுத்தூர், விராலியூர், வடிவேலம்பாளையம், பூலுவப்பட்டி, முகாசிமங்கலம், நாதேகௌண்டன்புதூர், சந்தேகெளண்டன்பாளையம் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்தவர்களும் ஆவார்கள்.
ஈஷா அவுட்ரீச், ஈஷா யோக மையத்தின் சுற்றுப்புற கிராமவாசிகளின் நல்வாழ்விற்காக பல்வேறு நலத்திட்டங்களை நடத்தி வருகிறது. இலவச மருத்துவம், இலவச கண் சிகிச்சை முகாம், பெண்கள் மற்றும் கர்ப்பிணி பெண்களுக்கு இலவச ரத்தசோகை தடுப்பு முகாம் போன்றவற்றை தொடர்ந்து நடத்தி வருகின்றது. கிராமப்புற குழந்தைகளுக்கு தரமான கல்வியை வழங்கும் நோக்கத்துடன் ஈஷா வித்யா பள்ளி செயல்பட்டு வருகிறது. பொருளாதார சூழ்நிலையால் கல்வியைத் தொடர சிரமப்படும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கி உதவுகிறது.
Subscribe