10ஆம் வகுப்பில் ஈஷா வித்யா சாதனை
10ஆம் வகுப்பில் ஈஷா வித்யா சாதனை, சம்ஸ்கிருதி மாணவர்களின் பரதநாட்டிய நிகழ்ச்சி, புதிய ஈஷா கிராம மருத்துவமனை திறப்பு போன்ற இன்னும் சில அறிந்துகொள்ள வேண்டிய ஈஷா நிகழ்வுகளின் தொகுப்பு இங்கே!
10ஆம் வகுப்பில் ஈஷா வித்யா சாதனை, சம்ஸ்கிருதி மாணவர்களின் பரதநாட்டிய நிகழ்ச்சி, புதிய ஈஷா கிராம மருத்துவமனை திறப்பு போன்ற இன்னும் சில அறிந்துகொள்ள வேண்டிய ஈஷா நிகழ்வுகளின் தொகுப்பு இங்கே!
10ஆம் வகுப்பில் ஈஷா வித்யா சாதானை!
நடந்து முடிந்த 10ஆம் வகுப்பு தேர்வில் கலந்துகொண்ட ஏழு ஈஷா வித்யா பள்ளிகளின் மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்று “100% தேர்ச்சி” என்ற சாதனையைப் புரிந்துள்ளனர். இதில் பழங்குடி இன மாணவர்கள் சிலரும் ஈஷா வித்யாவில் பயின்று தேர்ச்சி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒவ்வொரு பள்ளியிலும் மாணவர்கள் பெற்றுள்ள முதல் மதிப்பெண்கள் வருமாறு:
தூத்துக்குடி-492
கோவை-491
ஈரோடு-489
சேலம் வனவாசி-488
விழுப்புரம்-484
கடலூர்-476
நாகர்கோயில்-471
Subscribe
முதல் மதிப்பெண் பெற்ற தூத்துக்குடி ஈஷா வித்யா பள்ளி மாணவி சுபாஷினி கூறியபோது:
“நான் 3ஆம் வகுப்பிலிருந்து ஈஷா வித்யாவில் பயின்று வருகிறேன். எனது ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர் மற்றும் பெற்றோர்கள் என ஆண்டுமுழுக்க எனக்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். சத்குருவிற்கும் எனது கல்விக்கு நன்கொடை வழங்கிய நன்கொடையாளருக்கும் எனது நன்றிகள்! அனைத்திற்கும் மேலாக, ஈஷா வித்யாவில் உள்ள கற்பித்தல் வழிமுறை நான் இந்த மதிப்பெண் பெறுவதற்கு முக்கிய காரணமாகும்.”
துவங்கியது 8 நாட்கள் ஹத யோகா நிகழ்ச்சி!
ஈஷாவில் 8 நாட்கள் ஹத யோகா நிகழ்ச்சி மே 26 அன்று துவங்கியது. ஜூன் 2ஆம் தேதி வரை 8 நாட்கள் நிகழும் இந்த நிகழ்ச்சியில் ஆங்கிலத்திலிருந்து ஜெர்மன், ப்ரெஞ்ச், ஸ்பானிஷ், மண்டரின், ரஷ்யன், அரபிக், இந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் நேரடி மொழிபெயர்ப்பு வழங்கப்படுகிறது. இதில் 38 நாடுகளிலிருந்து வந்துள்ள 2000க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டுள்ளனர். உலக யோகா தினத்திற்காக ஈஷா மேற்கொண்டுள்ள உலக அளவிலான ஒரு முயற்சியாக இந்நிகழ்ச்சி அமைகிறது. சத்குருவுடன் கேள்வி-பதில் நேரம் இந்நிகழ்ச்சியின் இறுதியில் முத்தாய்ப்பாய் அமைகிறது!
சம்ஸ்கிருதி மாணவர்களுக்கு ரமா வைத்தியநாதனின் நாட்டிய பயிற்சி!
பரதநாட்டியத்தில் புகழ்பெற்ற நடனக் கலைஞரான திருமதி. ரமா வைத்தியநாதன் அவர்கள் ஈஷா சம்ஸ்கிருதி மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி வகுப்பை வழங்குவதற்காக ஈஷாவிற்கு வருகை தந்தார். மே 26 அன்று தியானலிங்கத்தின் முன்னுள்ள நந்திக்கு அருகில் ஈஷா சம்ஸ்கிருதி மாணவர்கள் திருமதி.ரமா வைத்தியநாதன் அவர்களின் நடன அமைப்பில் ‘அர்தநாரி அஷ்டகம்’ எனும் நாட்டியத்தை தேர்ந்த முக அபிநயங்களுடன் வெளிப்படுத்தினர்.
மரபின்மைந்தன் முத்தையாவின் கவிதைநூல் வெளியீடு!
"இணைவெளி" எனும் தலைப்பில் மரபின்மைந்தன் முத்தையாவின் கவிதைநூல் மலேசியத் தலைநகராகிய கோலாலம்பூரில் மே 23ஆம் தேதி மாலை ம.இ.கா.தலைமையகத்தில் உள்ள நேதாஜி அரங்கில் வெளியிடப்பட்டது. இந்நூல் மரபின் மைந்தன் முத்தையாவின் 60ஆவது புத்தகம் ஆகும். மலேசிய அரசின் இளைஞர் நலத்துறை துணை அமைச்சர் டத்தோ.மு.சரவணன் தலைமையேற்று நூலினை வெளியிட்டார்.
விழாவில் மலேசியாவில் வாழும் ஈஷா அன்பர்கள் திரளாகக் கலந்து கொண்டனர். சிறப்பு விருந்தினர்கள் அனைவருக்கும் தியானலிங்கத் திருவுருவப் படம் நினைவுப் பரிசாக வழங்கப்பட்டது.
முன்னதாக மரபின்மைந்தன் முத்தையா மே22ஆம் நாள் கிள்ளாங்கில் மலேசியாவில் உள்ள ஈஷா தியான அன்பர்கள் மத்தியில் சத்குரு குறித்து உரை நிகழ்த்தினார்.
புதிய ஈஷா கிராம மருத்துவமனை திறப்பு!
மே 21ம் தேதியன்று ஈஷா யோகா மையத்திற்கு அருகிலுள்ள செக்போஸ்ட் எனும் இடத்தில், முட்டத்துவயல் கிராமத்தில் புதிய ஈஷா கிராம மருத்துவமனை திறக்கப்பட்டது. இதன்மூலம் ஈஷாவிற்கு அருகிலுள்ள கிராமங்களான, முள்ளாங்காடு, முட்டத்துவயல், செம்மேடு, இருட்டுப்பள்ளம் போன்ற கிராம மக்கள் பலனடைவார்கள். இங்கு மருத்துவ ஆலோசனை இலவசமாக வழங்கப்படும் (மருந்து-மாத்திரைகளுக்கு மட்டுமே கட்டணம் பெறப்படும்). தினமும் மாலை 3 மணி முதல் இரவு 7 மணிவரை மருத்துவமனை திறந்திருக்கும்.
மலைவாழ் மக்களுக்கு ஈஷா மரக்கன்றுகள்!
சேலம் அருகிலுள்ள ஜருகுமலையைச் சார்ந்த மலைவாழ் பழங்குடி இன மக்கள் ஈஷா நர்சரியிலிருந்து மரக்கன்றுகளைப் பெற்றுச் சென்றனர். ஜருகுமலை சேலம் மாவட்டத்தின் தென்பகுதியில் அமைந்துள்ள சிறிய கிராமமாகும். 1200 மக்கள் மட்டுமே வசிக்கும் இந்த பகுதி கிராம மக்களுக்கு அடிப்படை வசதிகள் கிடைப்பதில்கூட பலவித சிரமங்கள் உள்ளன. சுதந்திரத்திற்குப் பின் 60 ஆண்டுகள் கழித்தே இங்கு மின்வசதி கிடைக்கப்பெற்றது. இந்த ஜருகுமலை மக்கள் ஈஷா நாற்றுப்பண்ணைகளில் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டுள்ளதைப் பார்க்கும்போது மனதிற்கு மகிழ்ச்சி தருவதாய் உள்ளது.